Monday, April 30, 2012

எது ஆன்மீகம்...? போலி பரப்புரைகளுக்கு ஒரு சவுக்கடி...!

' உங்கள் சாத்திரங்களைக் கங்கையில் எறிந்துவிட்டு பாமர ஏழை மக்களுக்கு உண்ண உணவும்,உடுக்க உடையும் சம்பாதிப்பது எப்படி என்று கற்றுக் கொடுங்கள்.அவர்களுடைய உலக வாழ்க்கைத் தேவைகள் தீர்க்கப் பட்டாலொழிய நீங்கள் கூறும் ஆன்மீகக் கருத்துக்களை அவர்கள் காது கொடுத்துக் கேட்க மாட்டார்கள்.

- விவேகானந்தர் 




சித்தாந்தங்களும், தத்துவங்களும், கோட்பாடுகளும் கடந்த தனிமனித ஆன்ம விழிப்பே....சமூகத்தை சீர்திருத்துமென்ற கருத்தினை வலுவாய் பதிந்தபடி கட்டுரையைத் தொடர்கிறோம்.

அது என்ன ஆன்ம விழிப்பு...?

இது கடவுளோடு சம்பந்தப்பட்டதா? மதத்தோடு தொடர்புடையதா? சடங்குகளின் மீது சவாரி செய்வதா? சாதிப் பிரிவுகளுக்குள் சம்மணமிட்டு அமர்ந்து கொள்வதா? அரசியல் சித்தாந்தங்களின் மீதேறி நின்று பயணிப்பதா? இது கொள்கையா? கோட்பாடா? தத்துவமா? பொழுது போக்கா? வாழ்க்கையோடு தொடர்புள்ளதா? தொடர்பற்றதா?

இப்படியாய் எழும் எல்லா கேள்விகளையும் வேரோடு பறித்து எறியுங்கள்...!

ஏனென்றால் ஆன்மீகம் என்ற வார்த்தைப் படிமத்தை நாம் கையாளும் போது பலருக்கு மதவாதிகள் புகுத்தி வைத்திருக்கும் பல சடங்குகள் தங்களின் மனக்கண் முன்னால் வந்து கரகாட்டம் ஆடத்தொடங்கும். ஆன்மீகம் என்ற வார்த்தைப் படிமாணத்தைக் கடவுள் தேடல் என்ற வார்த்தையோடு முடிச்சிட்டு வைத்திருக்கும் பொது புத்திகள், ஆன்மீகம் என்றால் ஏதோ ஒரு மதம் தொடர்புடையது அல்லது ஏதோ ஒரு மதம் சார்ந்து கடவுளைத் தேடுவது என்றெல்லாம்  தொடர்ச்சியான கற்பிதங்களை புறத்தில் செய்தியாகவும், எண்ணங்களின் மூலம் அதிர்வுகளாகவும், ஜீன்களின் மூலம் குணாதிசயங்களாகவும் தொடர்ந்து பரப்பி வந்து கொண்டே இருப்பதின் விளைவுதான்...

ஆன்மீகம் என்றாலே அது மதம் சம்பந்தப்பட்டது என்ற எண்ணம் நமக்குள் எழுவதற்கு காரணம். மிகைப்பட்ட பேர்கள் ஆன்மீகம் என்ற சொன்ன மாத்திரத்திலேயே அது வாழ்க்கைக்கு எதிரானது என்று எண்ணி அது பற்றி பேசவே பயந்து அது என்னவோ வயதான காலத்தில் மரணத்தின் போது கற்றுக் கொள்ளும் பாடம் என்று காத தூரம் போய்விடுகிறார்கள்.

இன்னும் சிலரோ நாங்கள் கடவுளே இல்லை என்று கூறுபவர்கள். எங்களுக்கும் ஆன்மீகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாங்கள் இருக்கிறோம், வாழ்கிறோம் இந்த ஆன்மீகம் என்பது எல்லாம் பொய் என்று சொல்கிறார்கள்...ஏனென்றால் ஆன்மீகம் என்றால் அவர்களின் பார்வையிலும் மறைமுகமாய் கடவுள் என்னும் கற்பனை  கதாபாத்திரத்தின் அரியாசனம் என்றுதான் அவர்களும் நினைக்கிறார்கள்...!

அன்பான புரிந்துணர்வு கொண்ட உறவுகளே...

ஆன்மீகம் என்பது கடவுள் தேடல் அல்ல; ஆன்மீகம் என்பது கற்பனையில் ஏதோ எண்ணிக் கொண்டு எங்கோ நகர்வது அல்ல்; ஆன்மீகம் என்பது வானிலிருந்து தேவதூதர்கள் வந்து தன் வாழ்க்கையைச் சீராக்குவார்கள் என்று நம்பும் மூடப்போக்கல்ல;ஆன்மீகம் என்பது சாமியார்களின் காலடியில் கவிழ்ந்து கிடப்பது அல்ல; ஆன்மீகம் என்பது கட்டிடங்களுக்குள் கடவுள் தேடும் முயற்சியல்ல; ஆன்மீகம் என்பது ஏதோ ஒரு சில புத்தகங்களில் ஒளிந்திருக்கும் இறுதி உண்மையல்ல.....

இன்னும் சொல்லப் போனால் ஆன்மீகம் என்பது வாழ்க்கையை மறுப்பது அல்ல; அது வாழ்க்கையை முழுமையாய் ஏற்பது;

எப்படியான வாழ்க்கை நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறதோ எது, எது  நமது தேவைகள் என்று பிறப்பிலிருந்தே நமக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறதோ அதை மறுக்காமல் ஏற்று அதை முழுமையாய் நிகழ்த்திக் காட்டுவதே ஆன்மீகம். அப்படியான செயல்களைச் செய்யும் போது இந்த செயலைச் செய்து நான் வெற்றி பெற என்னைச் சுற்றி ஏராளமான மனிதர்கள் எனக்கு  உதவியிருக்கிறார்கள், இயற்கை எனக்கு உதவியிருக்கிறது, பல சூழல்கள் உதவியிருக்கிறது, என்னால் மட்டும் இது விளைந்தது அல்ல; என் செயல்களின் விளைவுகள் கூட்டு முயற்சி என்ற தெளிவினை உள்வாங்கிக் கொண்டு நகரும் போது...

இதை நான் தான் செய்தேன் மேலும் என்னால் மட்டுமே செய்ய முடியும் என்பன போன்ற மாயக்கட்டுக்கள் தானே உடைந்து போகும். செய்யும் செயல், அதனை எப்படி செய்வது? அதன் விளைவுகள் எப்படியிருக்கும்? என்றெல்லாம் உணர்ந்து தனக்கும் தன்னைச் சுற்றி இருக்கும் சூழலுக்கும் குந்தகம் இல்லாமல் வாழும் ஒரு வாழ்க்கைதான் விழிப்புணர்வான வாழ்க்கை. மனிதர்களை எதிர்கொள்ளும் போது எதிராளியின் மனோநிலையிலும் நின்று அவர்களின் கருத்துகளை ஆராயத் தொடங்கும் போதுதான் அவர்களின் புரிதலும் முரண்களும் நமக்குத் தெளிவாய் தெரிகின்றன.

நாம் எப்போதும் நமது நியாயங்கள், நமது தேவைகள், நமது புரிதல்கள் இவைதான்  உலகின் இறுதி உண்மைகள் என்று எண்ணி விடுகிறோம். இது ஒரு மிகப் பெரிய மாயை. நாம் ஏற்றிருக்கும் கோட்பாடுகளும், சித்தாந்தங்களும், புரிதல்களும் நமது சூழலினால் நமக்கு வசதியானவையாகத் தோன்றுகின்றன. அது எல்லோருக்கும் வசதியாய் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் இருக்கும் அறியாமையை நாம் விளங்கிக் கொள்ள வேண்டுமெனில்...

ஒவ்வொரு மனிதனுக்கும் தான் யார்? என்ன செய்கிறோம்? ஏன் செய்கிறோம்? எதைப் பின்பற்றுகிறோம்? அப்படி பின்பற்றுவதின் பின்னால் ஒளிந்திருக்கும் தனது சுயநலங்கள் என்ன..? என்ன? தன் சுயநலத்தால் தன்னைச் சார்ந்திருக்கும் எத்தனை பேர்களுக்கு இன்னல்கள் ஏற்படும்? எது சரி? எது தவறு? 

என்றெல்லாம் பகுத்துப் பார்க்கவேண்டும். அப்படி பகுத்துப் பார்க்க தன் உள்ளமையான ஆன்மா என்னும் உயிர்ச் சக்தியினை பற்றிய புரிதல் வேண்டும்.

நான் யார்? எங்கு இருந்து வந்தேன்? ஏன் வந்தேன்? எங்கே செல்வேன்? என்னை நகர்த்துவது எது? எனக்குள் உயிராய் இயங்கும் சக்தி எதனால் உருவானது? அது ஏன் உருவானது? எல்லோருக்குள்ளும் இப்படித்தான் இருக்குமா? என்னை அடித்தால் அழுகிறேன், வலிக்கிறது. நான் அடித்தால் இன்னொருவனுக்கும் வலிக்கும்தானே? அப்படி இருக்கையில் நான் அவனை அடிக்கலாமா? தேவையின் அடிப்படையில் இயங்கு என்கிறார்களே...? தேவை என்றால் என்ன? எனது தேவையா? அல்லது சுமூக வாழ்க்கை முறைக்கான ஒட்டு மொத்த மனிதர்களின் தேவையா? எனது தேவையை ஒட்டு மொத்த மானுட சுமூக இயங்கு நிலைக்கு ஏற்ற தேவையாய் மாற்றிக் கொள்ள நான் என்ன செய்யவேண்டும்...?

என்றெல்லாம் தன்னுள் தானே கேட்டுக் கொள்ளும் உத்தம செயலுக்குப் பெயர்தான் ஆன்மீகம். இப்படியான தொடர்ச்சியான கேள்விகளின் விளைவால் ஏற்படும் மிகப்பெரிய புரிதலே ஆன்ம விழிப்பு.

ஆன்ம விழிப்பு பெறும் போதுதான் நிஜத்தில் ஒரு மனிதன் உண்மையாகவே பிறக்கிறான். இப்படியான ஆன்ம விழிப்பு வாழ்க்கையை மறுத்தல் கிடையாது. வாழ்க்கையை ஒதுக்குதல் கிடையாது. இது வாழ்க்கையை முழுமையாய் ஏற்றுக் கொள்ளுதல்.

ஒவ்வொரு மனிதரும் ஒரு தனித்தன்மை வாய்ந்தவர்களே..ஆனால் பிரச்சினை எங்கே ஏற்படுகிறது என்றால் ஒருவரைப் பார்த்து அவர் போல தானும் இருக்க வேண்டும் என்று ஒருவன் ஆசைப்படும் இடத்தில்தான். அவரைப் போல வரவேண்டும் என்ற விருப்பம் சரி... என்று கொண்டாலும் தனக்கான வழிமுறைகளை ஆராய்ந்து அதன் வழியே பயணித்து அந்த எல்லையைத் தொட யாரும் விரும்புவதில்லை. ஏற்கெனவே ஒருவர் சென்ற பாதையை பின்பற்றுகிறேன் பேர்வழி என்று தன் இயல்புக்கு முரணான ஒன்றை தேர்ந்தெடுத்து தன் சுய அடையாளத்தை இழந்து கடைசியில் தொலைந்தே போகிறார்கள்.

ஒரு தலை சிறந்த ஆன்மீகவாதியே மிகச்சிறந்த வெற்றியாளனாக வாழ்க்கையில் பரிணமிக்கிறான். பணம் சேர்த்தல் என்பது மட்டுமே வாழ்க்கையின் வெற்றியாய் பார்க்கப் படும் மனோபாவம் போலியானது. பணக்காரர்கள் எல்லாம் வெற்றியாளர்கள் என்று யாரும் சொல்லிவிட முடியாது... பணம் என்பது வாழ்க்கையின் புறத்தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு காரணி...அவ்வளவே...

பணத்தின் தேவையும், அப்படி தேடியதின் காரணமும் அதனால் நிம்மதியும் கிடைக்க வேண்டுமெனில் ஒருவன் ஆன்ம விழிப்பு பெற்றவனாய் தன்னை உணர்ந்தவனாய் இருத்தல் வேண்டும்.

பணக்காரர்கள் எல்லாம் நிம்மதியாய் இருக்கிறார்கள், அவர்கள் தான் உலகின் சந்தோஷப் புருசர்கள் என்று யாரேனும் கூறினால்...அவர்களிடம் கேளுங்கள்...கோமணத்தோடு மலை மீது ஏறி எதுவும் வேண்டாம் என்று அமர்ந்தவர்கள் எல்லாம் துக்கத்தின் பிள்ளைகளா என்று? கோடிகளில் சந்தோசம் அடையலாம் என்றால்...இவர்கள் எல்லாம் எதைக் கண்டு  சந்தோஷித்து நிற்கிறார்கள் என்று...

நாம் இங்கே நிறுவ விரும்புவது எல்லாம் ஒன்றே ஒன்றுதான்...

அதாவது கோடிகளில்தான் சந்தோசம் என்று நீங்கள் அதை நோக்கி ஓட்டமாய் ஓடவும் வேண்டாம்..., கோமணம் கட்டிக் கொண்டு மலை மீது துறவியாய் அமர்ந்திருப்பவரைக் கண்டு துறவியாகவும் ஓட வேண்டாம்...

மாறாக நிஜத்தில் நீங்கள் யாரென்று உணருங்கள். உங்களின் தேவை என்னவென்று புரிந்து கொள்ளுங்கள்...எதைச் செய்ய வேண்டும் என்று தீர்மானியுங்கள்...மேலும் எதைச் செய்தாலும் அதை முழுமையாக தெளிவாய்ச் செய்யுங்கள்..!

பிரியமான மக்களே...

ஜனநாயக அரசியல் என்னும் சமூக கட்டமைப்புக்குள் வாழும் நீங்களும் நானும் எங்கு வேண்டுமானாலும் இருந்து கொள்வோம்; யாரை வேண்டுமானாலும் பின்பற்றிக் கொள்வோம் ஆனால் முழுமையான ஆன்ம விழிப்பு பெற்றவர்களாக அதைச் செய்வோம்...அப்படி செய்வதை நமது உள்ளுணர்வு ஏற்றுக் கொள்கிறதா என்று ஒவ்வொரு முறையும் சரி பார்ப்போம்....!

இந்த சமூகம் என்று மட்டுமில்லை உலகத்தில் இருக்கும் ஒட்டு மொத்த சமூகத்தின் விடியலுக்கும் இதுவரையில் வந்த எல்லா சித்தாந்தங்களும், கோட்பாடுகளும், மதங்களும்  முழுமையான ஒரு தீர்வை இதுவரையில் கொடுத்து விட முடியவில்லை. மாறாக அவை மக்களைப் பிரித்துப் போட்டு பைத்தியக்காரர்களாய் ஆக்கித்தான் வைத்திருக்கிறது...

மாறாக....

தெளிவான ஆன்ம விழிப்பே மானுட சமுதாயத்தின் மாற்றத்தை நிர்ணயிக்கும் மிகப்பெரிய சக்தி என்ற எமது சிங்க நாதத்தை கழுகு வாசகர்களாகிய உங்களிடம் சேர்ப்பித்து தொடர்ச்சியான எமது நகர்வுகளை அக்னிச் சுடராய் வெளிப்படுத்திக் கொண்டே இன்னமும் உற்சாகமாய் சிறகடிப்போம் என்ற உறுதியோடு இந்த கட்டுரையை நிறைவு  செய்கிறோம்.

(கழுகு இன்னும் உயரப் பறக்கும்...)

Thursday, April 26, 2012

சினிமா என்னும் கலை...!



எத்தனையோ கலைகள் இருந்த போதிலும் சினிமாவிற்கு மட்டும் ஏன்இவ்வளவு மவுசு. சினிமா மட்டும் எதனால் பெரும்பாலும் சகலமானவருக்கும் பிடிக்கிறது.சினிமாவின் தாக்கம், வீரியம் மட்டும் ஏன் அதிகமாக இருக்கிறது. மிகப்பெரும் வணிகம் சார்ந்த கலையாக சினிமா மட்டும் எப்படி உருவானது. இது முற்றுப்பெறாத முடிவில்லா கேள்வியாக இன்றுவரை இருந்து வருகிறது. மனித மூளைகளைத் தாண்டி மனிதமனங்களோடு பேசுகின்ற ஒரே சாதனம் கலை வடிவம் தான். கதை,கவிதை, இசை, நடனம்,ஓவியம், நாடகம்,பேச்சு, நிகழ்த்துக்கலை என்று நீளும் பல்வேறு கலைவடிவங்களில், ஏதாவது ஒன்றையாவது பிடிக்காத ரசிக்காத ஒரு மனிதன் கூட உலகில் இல்லை. அத்தனை கலை வடிவங்களும் ஒன்றிணைந்து தொழில் நுட்பத்தோடு திரையேறுகையில் அது மொத்த மனித சமூகத்தையுமே கவ்விப்பிடிக்கிறது.மொத்த மனிதர்களின் கலைதாகத்தை தீர்க்கின்ற போது அது மிகப்பெரும் சந்தையாகவும் உருவெடுக்கிறது.
 
 அதன் விளைவு இலக்கியவாதிகள், கலைஞர்கள் உலாவ வேண்டிய திரைத்துறை, வணிகர்களும், பெருமுதலாளிகளும் உலாவுகின்ற சந்தையாகமட்டும் மாறிப்போகிறது.இது தான் நம்மில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான சுருக்கமான பதில்.
 
1940களில் வாசன் பி ச் ச ர் ஸ் தயாரித்து வெளியிட்ட சந்திரலேகாதிரைப்படம் பெரும் பொருட்செலவில் உருவானது. அதனை முதலில் திரையிடும் போது இந்தியாவின் மூத்த சினிமா கலைஞர் "அஸ்வகோஷ்''சை அழைத்திருந்தனர்.பிரம்மாண்டமான செட்டுகள் போட்டு, வேறு யாரும் தயாரிக்கமுடியாத பெரும் படமாக சந்திரலேகா இருந்தது. மொத்த இந்தியாவும் பிரம்மிப்பில் வாய் பிளந்து நின்றபோது.அஷ்வகோஷ் தமிழ் சினிமாவின் தரம்
உயர்ந்துவிட்டது என்று கூறுவார் என்று நினைத்திருந்தனர். ஆனால் அவர் சொன்னதோ, ”தமிழ் சினிமாவை இனி யாராலும் காப்பாற்ற முடியாதுஎன்று. இதே வாசகம் கடந்த ஆண்டு பல
தேசிய விருதுகளைப் பெற்ற இன்றைய எந்திரன் வரை பல படங்களுக்கும் பொருந்தும்.
 
அவர் சொன்னதன் பொருள் பெரும் பொருட்செலவும் பிரம்மாண்டமும் மட்டும் திரைப்படத்தின் தரத்தினை தீர்மானிக்காது.உயிர்ப்புள்ள கதையும்,அதை மனித மனங்களில் அசைவுகளை ஏற்படுத்தும் விதத்தில் நகர்த்தும் விதமும்தான் நல்ல திரைப்படம். அப்போது பொருளே தேவையில்லையா என்றால், தேவைதான்,ஆனால் அது படத்தின் உயிர்ப்பை தின்றுவிடக்கூடாது.
 
சரி நல்ல சினிமா எப்போது அதிகமாக வரும் என்றால் நல்ல சினிமாக்களை பார்ப்பவர்களும், நல்ல சினிமாவை எடுப்பவர்களும் அதிகமாகும் போது நல்ல சினிமா இயல்பிலேயே அதிகமாகவரும். உலகத்தரம் வாய்ந்த சினிமாக்கள் என்று சொல்லப்படும் எந்த சினிமாவும் படம் எடுக்கப்பட்ட மொழியினை, மண்ணைத்தாண்டி எந்த வெளிநாட்டிலும் படம் பிடிக்கப்படவில்லை.ஆனால் நம்மூரில் கரிசல் காட்டில் வாழும் பெண்ணாக இருந்தாலும் கூட பெரும்பாலும் அவர்களின் கனவுக்காட்சிகள் வெளிநாட்டில் தான் படம் பிடிக்கப்படுகிறது. அவர்களின் உடைகள் முதல் உரையாடல் வரை மொத்தமும் அந்த கதைக்கான மண்ணில் ஒட்டாமலேயே அந்தரத்தில் நிற்கிறது.
 
இது சந்தையை மையப்படுத்தியதன் விளைவே. இதை எப்படி சரி செய்து ஒரு எழுத்தாளன் ஒரு பேனா, பேப்பரை வைத்து தன்னுடைய படைப்பினை மிக எளிமையாக எழுதி முடிக்கிறான். அதேபோல் ஒரு இயக்குனர் ஒரு கேமராவை மட்டும் வைத்துக்கொண்டு தன்னுடைய சிந்தனையை படமாக்கிவிட முடியாது. அவருக்கு ஒளிப்பதிவாளர்,படத்தொகுப்பாளர்,இசையமைப்பாளர், தயாரிப்பாளர், என்று
தொடங்கி லைட் பாய் வரை அனைவரின் உதவியும் தேவைப்படுகிறது. இது ஒரு மிகப்பெரும் ஜனநாயகம் சம்பந்தப்பட்ட பணியாகிறது. இதற்கிடையில் ஒரு நல்ல சினிமாவை படைப்பது என்பது ஒரு பெரும் போராட்டமே. எதை மக்கள் ரசிக்கிறார்களோ அதற்குத்தான் தயாரிப்பாளர் என்கின்ற  முதலாளி தன் பணத்தை முதலீடு செய்ய முடியும் என்கிறார். அப்போது மக்களின் ரசனை என்பது இங்கு மிக முக்கியமானதாக
இருக்கிறது.
 
சரி மக்களின் ரசனையை உயர்த்துவது எப்படி. நல்ல திரைப்படங்களை,உலகத்தரம் வாய்ந்த சிறந்த திரைப்படங்களை
தொடர்ச்சியாக மக்களுக்கு திரையிட்டுக்காட்டும் பொழுதும், அதன் மீதான ரசனையை கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு வர முடியும்.இப்போது எடுக்கப்படும் படங்களின் குறைகளை எளிதில் புரிய வைக்க முடியும்.இதன் மூலம் குப்பைகளை, மசாலா படங்களை தானாகவே மக்களை தவிர்க்க வைக்க முடியும். இதுபோன்ற சூழல் வரும் போது பணம் போடும் தயாரிப்பாளர்கள்
நல்லபடம் நோக்கி தன் முதலீடுகளை எளிதில் திருப்புவார்கள்.
 
இதனால் நமக்கு என்ன பயன் என்று நீங்கள் நினைக்கக்கூடும். நல்ல சினிமாக்கள் வரும் போது அது நல்ல சிந்தனைகளை
பேசும், நல்ல சிந்தனைகள் சமூக மனங்களில் பல கேள்விகளை எழுப்பும்,சரி தவறு குறித்து விவாதிக்க உதவும், நல்ல சிந்தனைகளை விவாதிக்கும் சமூகம், நல்ல சமூகமாக மாறி தன் ஒப்புதலைத்தரும். நல்ல சமூகமாக நம் சமூகம் உருவாக வேண்டும் என்கிற நம் எண்ணங்களுக்கு சினிமா மிகப்பெரும் உதவும் சக்தியாக இருக்கும்.
 
ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று மணிநேரத்திற்கும் குறையாமல் படம் ( டி.வி ) பார்க்கிற சமூகமாக உலகமேமாறிப்போயுள்ளது. அப்படி இருக்கையில் நம் வீடுகளில் நல்ல சினிமாக்களை, நல்ல குறும்படங்களை/திரைப்படங்கள்/ஆவணப்படங்களை அந்த நேரங்களில் பார்த்து ஏன் விவாதிக்கக் கூடாது.நல்ல திரைப்படங்களை மக்கள் கூடும் இடமெல்லாம் நாம் ஏன் திரையிட்டுக்காட்டக்கூடாது. நம் குடியிருப்புப் பகுதிகளின் நாம் ஏன் திரைப்பட மையங்களை உருவாக்கக்கூடாது. நல்ல சினிமாவிற்கான இயக்கங்களை நாமே ஏன் கட்டக்கூடாது. வங்கத்திலும், மலையாளத்திலும் இது போன்ற இயக்கங்கள் தான் அங்கு நல்ல சினிமாக்களை உருவாக்க உதவிபுரிந்திருக்கின்றன.
 
 அதோடு அரசும் பள்ளிப்பாடங்களில் இலக்கியப்பகுதிகளில் நல்ல சினிமாவையும் தனிப்பகுதியாக சொல்லிக்கொடுக்க வேண்டும். அறிஞர் அண்ணா ""ஒரு படத்தையாவது எனக்கு தணிக்கை இல்லாமல் அனுமதித்துப் பாருங்கள்”, என்றதற்கும் மக்கள் பட்டினியிலும்,வேலையின்மையிலும் உலாவும் போது, கடந்த தமிழக அரசுஇலவச வண்ணத்தொலைக்காட்சி வழங்கியதையும், இதோடு பொருத்திப்பார்த்தால்தான் நல்ல சினிமாவும் சமூகத்தேவையே என்பது புரியவரும். நல்ல சினிமாக்கள் உருவாகும்போது அதனை மட்டுப்டுத்த மசாலா படங்களை பெரும் முதலாளிகளும், ஏகாதிபத்தியங்களும் உள்ளே திணிக்க முயலும் அதற்கு எதிராக இயக்கம் நடத்துவதும்,அதற்கு எதிராக நாம் உருவாக்கியுள்ள திரையிடல் மையங்களில் நல்ல படங்களை திரையிடுவதும் சமூகத்திற்காக பணியாற்றுபவர்களின் பணியே!.
 
நன்றி : களப்பிரன்
 
(கழுகு இன்னும் உயரப் பறக்கும்...)
 

Monday, April 16, 2012

எது வசீகரம்....?!!!! மனித உடல் நிறங்கள் பற்றிய ஒரு ஆய்வுப் பார்வை...!





சினிமாவில் கதாநாயகனாய் நடித்து அதை மக்கள் ஏற்றுக் கொள்ள ஏதேதோ அளவுகோல்கள் காலங்கள் தோறும் இருந்திருக்கின்றன. பெண்களைப் போலவே முகவெட்டும் செக்கச் செவலென்ற தேகமும், முதிர்ந்த சிவப்போடு கூடிய உதடுகளும், மைதா மாவினை பிசைந்து நிரவி விட்டது போல உடல் வாகும், இருந்து விட்டால் போதும்... கூடவே தனது நீணட் கூந்தலை சிக்கலெடுத்துக் கொண்டே கதாநாயகியோடு போதுமான இடைவெளிவிட்டு தனது சொந்தக் குரலில் கர்நாடக சங்கீதத்தில் பிச்சு உதறினால்...

ஒரு காலத்தில் மனிதர்கள் விரும்பி ரசித்தார்கள். அப்படியான ஆண்களைக் கண்டு பெண்கள் காதல் கொண்டு அலைந்தார்கள். தமிழ் சமுதாயத்தின் நீண்ட நெடு தொன் மரபில் பொழுதுபோக்கு நிகழ்வுகள் என்பது பெரும்பாலும்தெருக்கூத்துக்கள் மற்றும் மேடை நாடகங்கள் மூலமாகத்தான் தீர்த்து வைக்கப்பட்டு இருந்திருக்கின்றன. கரடு முரடான ஆண்களும் பெருத்த மீசையும் திண்டு திமிலான உடம்பும் கொண்டு ஆஜானுபாகுவாக துள்ளிக் குதித்து ஆடிப் பாடி வருபவனை ரசித்து வந்த அந்த மரபு மெல்ல மெல்ல மறைந்து மத்திய கிழக்கு ஆசியாவிலிருந்து உள் நுழைந்த மனிதர்களால் படிப்படியாக மாற்றியமைக்கப்பட்டு...

அழகு என்பதற்கு வேறு படிமாணம் கொண்டு பார்த்துக் கொண்டிருந்த திராவிட இன மக்களின் புத்திகளை சிதறடித்து அழகிற்கு வெவ்வேறு இலக்கணங்களை உட்புகுத்தியது. திராவிடனின் பூர்வாங்க நிறம் கருமை....மெல்ல மெல்ல சிறுமை ஆக்கப்பட்டது. இந்த மனோதத்துவ மாற்றப் புகுத்தலில் தோல் சிகப்பாய் இருப்பவர்கள் எல்லாம் மேன்மக்கள் என்று நம்பவைக்க பல உளவியல் விளையாடல்கள்,  அரசியல் சூழ்ச்சிகள் எல்லாம் மிகப்பெரிய காய் நகர்த்தலாய் தொடர்ந்து நிகழ்ந்ததின் விளைவு.....தோல் சிகப்பாய் இருப்பவர்களைக் கண்டு கூனிக் குறுகும் ஒரு தாழ்வு மனப்பான்மையை இயல்பாய் நம் மக்களிடம் தோற்றுவித்தது.

புறத்தில் ஏற்படும் மாற்றங்களை எளிதில் சரி செய்து விடலாம், ஆனால் மிக நுட்பமாக மனிதர்களின் மனதில் விதைக்கும் விதை மனோதத்துவ ரீதியாக உள் படிந்து அறிவியல் ரீதியாக அவை ஜீன்களின் வழியே கடத்தப்பட்டு, தத்தம் தலைமுறைகளுக்குப் புகுத்தப்படுகிறது. இப்படியான மாற்றங்கள் மிகக் கொடுமையானவை, இவற்றினை வேரறுக்க மீண்டும் அதே ரீதியிலான மனோதத்துவ மாற்றம் மக்களிடையே  நிகழ்ந்து மீண்டும் அந்த தாழ்வு மனப்பான்மை தொடர்ந்து களையப்படவேண்டும்.

சரி.. விசயத்துக்கு வருவோம்...

இப்படியான தொடர் மனோதத்துவ தாக்குதலின் நீட்சிதான் திரையில் தனது ஆதர்சன கதாநாயகனையும் கதாநாயகியையும்  செக்கச் சிவந்த மேனியோடு தரிசிக்க வைத்து ரசிக்கவும் வைத்தது.தமிழ் சினிமா வரலாற்றில் பெரும்பகுதியை சிவந்த தோல் கொண்ட கதாநாயகரும், நாயகிகளுமே ஆக்கிரமித்து வந்திருக்கிறார்கள்.  திரைப்படத்தில் நடிப்பதற்கு அழகு வேண்டும் என்ற ஒரு அளவுகோலை எவன் தீர்மானித்தான் என்றும் நமக்குத் தெரியாது? அழகு என்பதற்கு ஒரு அளவு கோல் வைத்தவன் யாரென்றும் அது சரியா என்றும் நமக்குத் தெரியது..!

1970களுக்குப் பிறகு சிகப்பு ஹீரோக்களை எல்லாம் நொறுக்கி அள்ளி ஓரம் கட்டிவிட்டு ரஜினிகாந்த் என்னும் வசீகரம் விஸ்வரூபம் எடுத்ததற்கு மிகப்பெரிய காரணமாய் திருவாளர் பாலசந்தர் ஐயா அவர்களின் மிகப்பெரிய துணிச்சலும், புதியதைப் படைக்க வேண்டும் என்ற ஒரு படைப்பாளிக்கே உரிய வேட்கையும் சராமாரியாய் உதவ... சிவாஜிராவ் என்னும் கருப்பு நிறக் கண்டக்டர்....ரஜினிகாந்தாய் மாறி தமிழ் சினிமாவில் கதாநாயகனுக்கு என்று கட்டியமைக்கப் பட்டிருந்த பாரம்பரியங்களை எல்லாம் உடைத்துப் போட்டார்.

அந்த அதிரடி சக்தியின் வீச்சில் ரஜினியின் அழகை விட வசீகரமாய் அவர் முன்னிறுத்தி விளையாடிய ஆயுதம் அவரது ஸ்டைல். சினிமா நடிகன் என்றால் ஒரு காலத்தில் கத்தி சண்டையும், குதிரையேற்றமும் இன்ன பிற மன்னர் காலத்து இளவரசர்களைப் போல பயிற்சிகளையும் பெற்றுத்தான் வரவேண்டும் என்ற இலக்கணங்கள் எல்லாம் மெல்ல அகல....ரஜினி அழகு என்று பொது புத்திகள் கற்பித்திருந்த அளவுகோல்களை எல்லாம் கடந்து திறமை, வேகம் மற்றும் வசீகரம் என்னும் கத்திகளைக் கொண்டு பொது புத்தியில் படுத்துக் கிடந்த முரண்பாடுகளை கொன்றுதான் போட்டார்.

இதுதான்.. இதுதான் இந்தக்கட்டுரையில் நான் கூறவரும் மனோதத்துவ மாற்றம்.
வசீகரம் என்னும் ஏவுகணையால் வெள்ளைத் தோல்தான் அழகு என்ற மாயை கிழியத் தொடங்கியது. கிழியத்தான் தொடங்கி இருக்கிறதே அன்றி அது இன்னமும் முற்றிலும் மக்களின் மனதிலிருந்து நீங்கவில்லை என்பதே நிதர்சனம். காரணம்...இது நூற்றாண்டுகளாய் நம்முள் படுத்துக் கிடக்கும் கடும் விசம் கொண்ட கொடு நாகம்....பொது புத்தியாய் சமுதாயத்தில் புரண்டு கொண்டிருக்கும் மாபெரும் அரக்கன். அவ்வளவு சீக்கிரம் இது மாண்டு போய்விடாது...

இன்னும் சொல்லப்போனால் வெள்ளைக்காரனை விட வசதியான நம் தேசத்து மக்கள், வெள்ளைக்காரனை விட பன்மடங்கு பலசாலியான இந்திய தேசத்தின் புதல்வர்கள், அறிவில் சிறந்து விளங்கிய பெருமக்கள் எப்படி அடிமைப்பட்டுப் போனார்கள்.. என்று யோசித்து பார்த்திருக்கிறார்களா?

வெள்ளைக்காரனின் நேரம் நல்ல நேரமாய்ப் போய்விட்டது....காரணம் மக்கள் வெள்ளை நிறத்தை மனோதத்துவ ரீதியாக மிரண்டு போய் பார்த்து அவர்களைக் கண்டு மிரட்சியிலேயே பயப்பட்டுப் போகும் அளவிற்கு அவர்களின் உள்ளமைகள் சுருட்டி வைக்கப்பட்டிருந்தன.  வர்ணாசிரமக் கோட்பாடுகளும் சாதி மத பேதங்களும் திணிக்கப்பட்டு அவன் மிரட்சியின் உச்சத்தில் திரண்டு நின்ற போது வந்து விட்டான் வெள்ளைக்காரன்...

மாறாக தமிழன் தன்னம்பிக்கையோடு வாழ்ந்திருந்த சங்ககாலங்களில் அவன் வந்திருப்பானேயானல் அவனது சங்கறுத்து விரட்டியடித்து இருப்பார்கள் செந்தமிழர்கள். காரணம் தோலின் நிறத்தையும் போலி அழகுகளையும் கண்டு அவன் அப்போது பயப்பட்டிருக்கவில்லை, மாறாக அறிவினை முன்னிறுத்தியே அவன் வாழ்ந்து கொண்டிருந்தான்.. இன்றைக்கு தண்ணீரிலே முழ்கிக் கிடக்கும் தமிழனின் ஆதி தேசமான குமரிக் கண்டம்தான் பூமியிலேயே முதன் முதலில் மனிதன் தோன்றி செழித்து வளர்ந்து முச்சங்கம் வைத்து விஸ்வரூபமெடுத்து நின்ற இடம்.

காலத்தின் ஓட்டத்தில் அந்த இறுமாப்பின் அடர்த்தி தொலைந்து போய் எதுவெல்லாம் நமது வலிமையோ, எதுவெல்லாம் நமது பெருமையோ, அதை எல்லாம் சிறுமையாய் எண்ணும் ஒரு மனோபாவம் புகுத்தப்பட்டு, வெளியிலிருந்து வந்த அன்னியர்கள் கற்றுக் கொடுத்த பொய்யான மரபுகளால் நாம் நமது மூளைகளை சலவை செய்ய அனுமதிகள் கொடுத்தோம்.
இப்படியான பல பொய்யான கற்பிதங்களின் விசுவரூப கொடூர பொது புத்திதான் கருமை நிறத்தை சிறுமையாய் நினைக்கும் போக்கு...

அழகு என்பதற்கு உடற்கூறின் ஏற்ற இரக்கங்களையும் வளைவு நெளிவுகளையும் அளவு கோலாய் வைத்துப் பார்க்கும் ஒரு ஈனச் செயல்....

அகத்தின் அழகைப் போற்றிய ஒரு பெருங்குடியில் பிறந்து விட்டு...புற அழகிற்கு புனைப்பெயர்கள் வைத்து அதை நம்பி... இன்று வெள்ளைத் தோல் இருந்தால்தான் அழகு, பல்வரிசை சரியாயிருந்தால்தான் அழகு, நீண்ட கூந்தல் இருந்தால்தான் அழகு, அடர்ந்த புருவம் இருந்தால்தான் அழகு, கூரிய நாசி இருந்தால்தான் அழகு, வழ கொழ ஆங்கிலத்தை தமிழில் புகுத்திப் பேசினால்தான் அழகு, தலை நிறை முடியிருந்தால்தான் அழகு, இந்த நடிகரைப் போலிருந்தால் அழகு, அந்த விளம்பரத்தில் வரும் பெண்ணைப் போல இருந்தால் அழகு என்று எண்ணி எண்ணி புத்திகள் பேதலித்துப் போய் உலக அழகிகள், உலக அழகன்கள் பயன்படுத்தும் பொருட்களை பயன் படுத்திக் கொண்டே அழகு என்னும் பொய்யான வரைமுறைகளின் பின்னால் ஓடும் நாய்க்குட்டிகளாய் மாறி விட்டோம்...


வெள்ளை மனமும் கூரிய அறிவும், பரந்த மனமும், மனித நேயம் கொண்ட அகமும், சுத்தமும்தான் அழகு என்பதை நாம் இன்று ஒரு அளவு கோலாய் வைத்து பார்க்க முடியாத அளவிற்கு பொருளாதய உலகத்திற்குள் போலியான மனப்பாங்குகள் அடி எடுத்து வைத்து இன்று ஆளத் தொடங்கி இருக்கின்றன....எதேச்சதிகாரமய்...



இந்த குரூர மனப்பாங்குதான்....சாம் ஆண்டர்சன்களையும், பவர்ஸ்டார்களையும் தெருக்கு தெரு மூலைக்கு மூலை  நையாண்டியையும் கேலியையும் பேசி சிரிக்கச் சொல்கிறது....

சாலமன் பாப்பையாக்கள் எல்லாம் பேசத் தெரியாமல் போயிருந்தால்.... கவனிப்பாரற்றுப் போயிருப்பார்கள்..நிறம் என்னும் ஒரு காரணத்தால்....ஆனால் நிறத்தை அங்கே அறிவு வென்று அவர் அழகானவராகி மாறியதால் அவரை எப்படி  ரசித்தோமோ

ரஜினி என்னும் மனிதரின் ஸ்டைல் என்னும் வசீகரம் விஸ்வரூபமெடுத்து நின்றதால் அவரை எப்படி ரசித்தோமோ....

அப்படியாய்..

மனிதர்களை அவர்களின் அறிவினையும், திறமையினையும் வைத்து எடை போடும் மிகப்பெரிய பக்குவ இலக்கை நோக்கி நாம் பயணிக்க வேண்டியது அவசியமாகிறது.

அப்படியான நகர்தலும் வளர்ச்சியும் தெளிந்த கூரிய புத்தியுடைய ஒரு சமுதாயத்தினை படைக்கும் என்பதோடு மட்டுமல்லமால்....தொன்மையில் நம்மிடமிருந்த  பெருமைகளையும், உண்மையான பாரம்பரியங்களையும், மனிதர்களை திறமைகளை வைத்து கணித்து அழகினை ரசிக்கும் மெய்யான உணர்வுகளையும் நாம் மீட்டெடுக உதவும் என்று அழுத்தமாக கூறி இக்கட்டுரையை நிறைவு செய்கிறோம்.



(கழுகு இன்னும் உயரப் பறக்கும்...)


Wednesday, April 11, 2012

கழுகு என்னும் போர்வாள்....!



ஆழமான எண்ணங்களும், தீராத வேட்கைகளும் கருத்து வடிவத்தில் இருந்து வெளிப்பட்டு எழுத்தாகிறது, வாய்ப்புக்களின் அடிப்படையில் பேச்சாகவும் அது உருக்கொள்கிறது. சக்தி வடிவமான எழுத்துக்களால் என்ன செய்து விட முடியும் என்ற எண்ணத்தை வரலாறு எப்போதும் தகர்த்தெறிந்து கொண்டே தனது நகர்வினை ஆக்கப்பூர்வமான விளைவுகளாய் முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது.

சமூகம் என்ற கட்டமைப்பில் சேவைகள் அல்லது வழிகாட்டுதல்கள் காலம், காலமாக பல்வேறு தரப்பட்ட சமூகச் சூழல்களில், பல பரிமாணங்களில் மனிதர்களால் முன்னெடுக்கப்பட்டு இருக்கிறது. சமூக இயங்கு நிலையில் அறிவூட்டும் மனிதர்கள் எல்லோருமே ஒரு மேல் தளத்தில் நின்று கொண்டு தனக்கு கீழிருக்கும் மனிதர்களுக்கு ஏதோ ஒரு போதனையைச் செய்வதையும், சமூக விழிப்புணர்வு மற்றும் சேவை என்ற பெயரில் புறத்தில் செயல்கள் செய்து, மனிதர்களே...! பின்பற்றுங்கள் என்று அறைகூவல் விடுப்பதையும் தனது வழமையாக கொண்டிருக்கிறார்கள்.

இந்த வழிமுறைகளை எல்லாம் பின்பற்றி காலம் கடந்து நாம் இன்று நின்று கொண்டிருக்கிறோம். அவலங்கள் தீர்ந்து விட்டதா? நாம் பேசிய வார்த்தைகள் எல்லாம் மனிதர்களுக்குப் புரிந்து விட்டதா? அன்பையும் சகிப்புத்தன்மையும் போதிக்கும் தேசங்கள் கொன்றழித்த மனித உயிர்கள் எத்தனை கோடிகள்?

பின்பற்று என்று சொன்னவன்...முதலில் பின்பற்றினானா?

அயலானை நேசி, அயலானை நேசி, என்று கூறி மறு கன்னத்தைக் காட்டச் சொன்ன புனிதனை பின்பற்றுகிறேன் என்று கூறிக் கொள்ளும் ஏகாதிபத்திய அமெரிக்காதான் இன்று உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் முதல் பயங்கரவாதி என்பதை நீங்களும் நானும் மறுக்க முடியுமா? அன்பைப் போதித்த புத்தனையும், அகிம்சையைப் போதித்த மகாத்மாவையும் பின்பற்றுவதாக கூறிக் கொள்ளும் இந்தியாவும், இலங்கையும் ஈழத்தில் போட்டிப் போட்டு அழித்த உயிர்கள் எத்தனை ஆயிரங்கள்...?

ஏன் இவர்கள் மன்னிக்கவும், மறக்கவும் அன்பைப் போதிக்கவும் அறியப் பெறாதவர்களா என்ன? தர்மம் என்று மானுடர்கள் கூறிக் கொள்வது யாதுமே தங்களின் வசதிகளைத்தானே அன்றி பொதுவான உண்மைகளை அல்ல...! ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு மனிதனும் தங்களின் தர்மங்களை தாங்களே வரையறுத்துக் கொண்டு அவற்றுக்கு சட்டமென்ற பெயரிட்டுக் கொண்டு அவற்றை நிலை நாட்டவே முயன்று கொண்டிருக்கின்றன.

மனிதர்களிடம் கட்டளைகள் பிறப்பிப்பதும், இப்படி நீங்கள் இருக்க வேண்டும், அப்படி நீங்கள் இருக்க வேண்டும் என்று போதிப்பதற்குப் பெயர்தான் விழிப்புணர்வா? அல்லது மனிதர்களுக்கு அறிவுரைச் சொல்வதும் தன்னையே பின்பற்ற வேண்டும் என்பன போன்ற கண்ணுக்குத் தெரியாதா மனோவசியக் கட்டுக்களைக் கொண்டு கட்டுவதுதான் விழிப்புணர்வா..?

உண்மையிலேயே சமூகத்துக்கு சொல்லும் கருத்துக்களை முதல் நாம் பின்பற்றுகிறோமா? 


...என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது, எம்மைச் சுற்றி வாழ்க, ஒழிக கோசங்களும் நீங்கள் இப்படி இருக்க வேண்டும், அப்படி செய்யக் கூடாது, இவர்தான் பின்பற்றப்பட வேண்டியவர், அறிவியல் உண்மை இது, ஆன்மீக உண்மை இது, இப்படியான பயன்பாடுகளை பின்பற்றுங்கள், அவர் தவறு செய்து விட்டார், இவர் இப்படி இயங்குகிறார்? உலகம் கெட்டு விட்டது வாருங்கள் போராடுவோம்....

என்றெல்லாம் இடைவிடாத சப்தங்கள், சப்தங்கள்....ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. இப்படியான கவனித்தல்களில் எமது மூளையின் செல்களை உலுப்பி விட்டு ஆழமாய் யோசித்து பார்க்கையில் " எல்லோருமே நல்லவர்களாய் இருக்கிறார்களே....? எல்லோருமே மனித நேயத்தைப் பற்றியும், சத்தியத்தையும், உண்மையைப் பற்றியும் பேசுகிறார்களே...? யார்தான் கெட்டவர்கள்" என்று எம்முள் எழுந்த கேள்விக்கு பதில்கள் கிடைக்காமல்...திணறத்தான் வேண்டியிருந்தது.

புறத்தில் மனிதத்தேவைகளை நாம் பூர்த்திச் செய்ய முயல்வதும், சமூக சேவைகள் மூலம் மனிதர்கள் ஒரு நல்ல நிலையை எய்தவேண்டும் எண்ணுவதும் நிஜமான புறத்தேவை அல்ல....அது ஒவ்வொரு மனிதனும் தனது தன்முனைப்பை (ஈகோ) சரி செய்து கொள்ள, தான் நல்லவன் என்று காட்டிக் கொள்ள, மேலும் தன்னை தானே திருப்திக் கொள்ளச் செய்யும் ஒரு நிகழ்வாகவே இன்றைய சமூக விழிப்புணர்வு பிரச்சாரங்களும், இயக்கங்களும் நிகழ்ந்தேறிக் கொண்டிருக்கின்றன என்பதை மனோதத்துவ ரீதியாக அறியவும் முடிந்தது.

கோடணு கோடி சூரியக் குடும்பங்களைக் கொண்ட இந்த அண்ட சராசரத்தில் இந்த எழுத்துக்களை எழுதிக் கொண்டிருப்பவன் ஒரு தூசு. தூசினை விட மிக நுணுக்கமான ஒரு துரும்பு. நான் என்னை திருப்தி செய்து கொள்வதற்காக உங்களுக்குப் போதிக்கிறேன் என்பதுதான் ஆழமான உண்மை என்றாலும் கூட....

மனிதர்களுக்கு புறத்தில் புகட்டும் பாடங்களால் மட்டுமே எந்த விதமாற்றத்தையும் உருவாக்கி விட முடியாது. மாற்றம் என்பது மனித மனங்களுக்குள் தன்னிச்சையாக நிகழ வேண்டிய ஒன்று. நாம் செய்யவேண்டியது எல்லாம் அப்படியான நிகழ்வு நிகழ எல்லாவிதமான சாத்தியக்கூறுகளையும் செய்வது. அப்படிச் செய்ய "தான்" என்ற அகங்காரம் தேவையில்லை, நான் திருத்தி விட்டேன் அல்லது திருந்த கூறிவிட்டேன் என்ற மமதை தேவையில்லை....மெளனமாய் மனிதர்களை சிந்திக்கவைக்க...உண்மைப் பொருளை உணரவைக்க, மனிதர்களின் உணர்வுகளை உள்நோக்கித் திருப்பி விட்டு....

தன்னைப் பற்றியும், தனது வாழ்க்கையைப் பற்றியும், எங்கிருந்து வந்தோம்? எங்கே செல்கிறோம்...? இடையில் ஏன் இவ்வளவு அல்லகள் என்பன போன்ற கேள்விகளை ஒவ்வொருவரும் தத்தம் புத்திகளுக்குள் தானே கேட்டுக் கொள்ளவேண்டும்...! இப்படி கேட்டு கேட்டு கேள்விகள் எல்லாம் மொத்தமாய் மறையும் போது பதிலாய் இவர்களுக்குள் பிறக்கும் உண்மையே ஒரு சரியான வழிகாட்டி.

இதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்த போது புத்திக்குள் ஒரு பறவை ஒன்று அக்னிக் குஞ்சாய் மெல்ல கண்விழித்து, பின் சிறகசைத்து, மெல்ல தத்தித் தத்தி வெளியே வந்து தடுமாறி நடந்து, பின் மெல்லச் மெல்ல சிறகடித்து எல்லைகளில்லா வானத்தில் பறக்க ஆரம்பித்தது.....

அந்தப் பறவைதான் கழுகு 


கழுகு என்னும் சமூக விழிப்புணர்வு வலைத்தளமும் கழுகு குழுமமும் உருவாக்கப்பட்டதின் அடிப்படை நோக்கமே இதுதான். யாரும், யாருக்கும் நல்லது சொல்லி விட முடியாது. சூழலின் அடிப்படையில் நன்மை, தீமைகள் மாறிக் கொண்டே இருக்கின்றன....பொதுவான உண்மைகளை தத்தம் மனசாட்சிகளின் படி விளங்கிக்கொண்டு உதவுதலையும், தெளிவுகளை நோக்கி நகர்தலையும் உங்களின் இயல்பாக்கிக் கொண்டு சாட்சியாக நில்லுங்கள்....என்பதே கழுகின் கூற்றாக இருக்கிறது.

சமுதாயச் சிக்கல்களைத் தீர்க்க இந்தக் கணத்தில் நீங்களும் நானும் பொறுப்பான மனிதர்களாக மாறுவது இன்றியமையாததாகிறது. பொருள் இல்லாமல் அல்லல்படும் ஏழைகளுக்கு பொருளால் உதவுதல் என்பது ஒரு இடைக்கால நிவாரணம் என்பதை நாம் அறிந்திருக்கும் அதே நேரத்தில் அவர்களின் ஏழ்மைக்கு, தன்னைப் பற்றியும் தனது சமூக சூழல்கள் பற்றியும், கால ஓட்டத்தில் போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் எப்படி தங்களை நிலை நிறுத்திக் கொள்வது என்பது பற்றியும் சரியான புரிதல் இல்லாமையே காரணம் என்பதையும் நாம் உணராமலில்லை...

நெப்போலியன் ஹில் என்னும் ஆங்கில எழுத்தாளர் தனது சக்ஸஸ் த்ரூ எ பாஸிட்டிவ் மென்ட்டல் அட்டிடியூட் என்ன்னும் புத்தகதில் ஒரு ஏழைத்தாய் தன் மகனான சிறுவனிடம் சொல்வது போலச் சொல்வார்....

" நாம் ஏழைகளாக இப்போது இருப்பதற்கு காரணம் கடவுள் அல்ல, நாம் இப்படி இருப்பதற்கு காரணம் நமது முன்னோர்கள் ஒரு போதும் செல்வந்தராய் வாழ ஆசையையும் அதற்கான உழைப்பையும் செய்ததே இல்லை. அதனால் இன்று நீ அப்படி ஆசை பட்டு உழைத்தால்....நாளை நாம் ஏழைகளாக இருக்க மாட்டோம்...."

இந்தப் புரிதலை தான் நாம் விழிப்புணர்வு என்கிறோம். செயல்களை செம்மையாக செய்யாமல் விதியை நொந்து என்ன பயன் என்று யோசித்துப் பாருங்கள்?

கல்வி இல்லாதா வீடு இருண்ட வீடு என்ற பாவேந்தர் கூறியிருக்கும் விடயத்தை கழுகு தனது மையக்கருத்தாய் கொண்டிருப்பதோடு கல்வி என்பது நான்கு சுவர்களுக்குள் அமர்ந்து படித்து காகிதங்களில் பட்டயம் பெரும் ஒரு நிகழ்வல்ல...கல்வி என்பது வாழ்க்கையினூடே நின்று எல்லா சூழல்களையும் கவனித்து உள்வாங்குதல் மற்றும் புதுப் புது விடயங்களைத் தேடி அறிதல் என்பதையும் தெளிவாகவே உணர்ந்திருக்கிறது.

கழுகு என்னும் சமூக விழிப்புணர்வு தளம் மற்றும் இதன் குழும உறுப்பினர்கள் யாரும் யாரையும் வலுக்கட்டாயப்படுத்தும் நிகழ்வுகள் இல்லாமல் அறிவுத் திணிப்புசெய்யாமல், ஆரவாரம் இல்லாமல் எம்மைச் சுற்றிலும் ஓராயிரம் மனிதர்களைச் மெளனமாய் சிந்திக்க வைத்திருக்கிறோம். இணையத்தை வாசிக்கும் எத்தனையோ மனிதர்களை நோக்கி எமது கருத்துக்கள் சென்று புத்திகளில் படிந்து கொண்டே இருக்கின்றன. இதன் மாற்றங்களையும் நாம் கவனிக்காமல் இல்லை...

கழுகு என்பது ஒரு அடையாளமே அன்றி அது ஒரு கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் நிறைந்த ஒரு அடைபட்ட இடம் அல்ல. வெட்டவெளி வானில் எப்படி ஏகாந்தமாய் சிறகடித்து கழுகு பறக்கிறதோ அப்படியாக கழுகின் கருத்துக்களை பல்வேறு வடிவங்களின், பல்வேறு பெயர்களில், பல்வேறு இடங்களில், பல்வேறு மனிதர்கள் வழங்கலாம்...! அவர்கள் அனைவரையும் சேர்த்து உள்ளடக்கிய ஒரு உணர்வு திரட்சிதான் கழுகு...!

கழுகின் பக்கங்களை ஒரு முறை கண்களால் உரசிவிட்டுச் செல்பவர்களின் மூளைகளை எல்லாம் நெருப்பாய் கழுகு பற்றிக் கொள்ளத்தான் செய்யும். ஒன்று நாங்கள் செல்லும் வழிமுறை சரி என்று ஆதரித்து அதை பின்பற்றச் செய்யும் அல்லது இம்முறை தவறு என்று கூறி வேறு ஏதேனும் புதிய வடிவங்களில் சமூக விழிப்புணர்வையும் சேவைகளையும் மனிதர்களைச் செய்ய வைக்கும், செய்ய வைத்திருக்கிறோம்.

அறிவின் மாற்றங்களை யாராலும் சுட்டிக்காட்ட முடியாது அவை உணர்வுப் பூர்வமானவை. மாற்றங்கள உருவாவதற்கான காரணிகளை எம்மைச் சுற்றிலும் எதிர்ப்படும் மனிதர்களிடம் தவறாமல் நாம் விதைத்துக் கொண்டே இருக்கிறோம். செயலினைச் செய்து விட்டு விளம்பர பலகைப் பிடிக்கும் ஒரு மரபினை கழுகு கொண்டிருக்கவில்லை. நான் செய்தேன் என்று கூறுவதில் இருக்கும் அறியாமையை நாம் தெளிவாக உணர்ந்தே இருக்கிறோம்.

மாற்றங்களினால் விளையும் நன்மைகளின் பலன்களால் விடியப்போவது எமது சமுதாயத்தின் விடியல், பெறப்போவது எமது மக்களின் இன்னலில்லா வாழ்வு... என்ற மிகப் பரந்த நோக்கோடு சிறகு விரித்திருக்கும் கழுகு மற்றும் கழுகு போன்ற சமூக விழிப்புணர்வு தளங்களை, மனிதர்களை மற்றும் அமைப்புக்களை யாராலும் எக்காலமும் அழிக்க முடியாது.

சமூக நீதிக்காய் குரல் கொடுக்கும் ஒவ்வொருவரும் கழுகின் பிம்பங்களே...! கழுகு என்னும் உணர்வு குழுமமாக நின்றும், குழுமத்திற்கு வெளியேயும் பரவிக் கொண்டுதான் இருக்கும், இது தனிமனித விருப்பமில்லை....நன்மமையை விரும்பும், ஒட்டு மொத்த சமுதாயத்தின் தேடல்...!

நாம் விதைக்க நினைக்கும் விதை சில நேரங்களில் வாங்கும் நிலத்திற்கு ஏற்றார் போல பல நேரம் முளைத்து செழித்தும், சில நேரம் கருகி வளராமலும் போய் விடும். வளர்ந்த செடிகளுக்கு வாழ்த்துக்களை கூறிவிட்டு, முளைத்து வராத நிலங்களை நாம் சப்தமில்லாமல் செப்பனிட்டுக் கொண்டிருக்கிறோம்...

காலங்கள் கடந்தும் எம் மனிதர்கள் இச்செயலை இப்புவியெங்கும் செய்து கொண்டேதான் இருப்பார்கள்....என்பது மட்டும் உறுதி.....!

கழுகு பற்றி அறிய இங்கே அழுத்தவும்...!

கழுகு விவாதக் குழுவில் இணைய இங்கே அழுத்தவும்...!



(கழுகு இன்னும் உயரப் பறக்கும்...)

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes