Friday, April 25, 2014

எப்போது நிகழும் எழுவரின் விடுதலை..?



எத்தனை காலங்கள் எங்களை அசுரர்களாகவே ஆக்கிவைத்திருப்பீர்கள்  மனிதர்களே.....? காலமெல்லாம் அசாத்தியத்தை நெஞ்சினில் வைத்துகொண்டு சத்தியம் பேசி நடிக்கும் உங்களையெல்லாம் இன்னும் எத்தனை காலங்களுக்கு தான் நாங்கள் சகித்துத் கொள்வது..?

இதிகாசமென்று  சொல்லி நீங்கள் ஒரு கதை சொல்வீர்கள் அதில் கடவுள் கதாபாத்திரம் உங்களுக்கு குரங்கு பாத்திரம் எங்களுக்கு! அவதாரம் என்ற பெயரில்   எட்டுகட்டி விஷ்தாரிக்கப்படும் பொய்களுக்கு எங்கள் கூட்டமே உங்களுக்கு உதவி நிற்கும். அப்படி உயிர் கொடுத்து உதவி நின்றாலும் நீங்கள் எங்களை வானரங்கள் என்று தான் அழைப்பீர்கள்  என்ன நியாயம் இது? யார் சொல்லி சென்ற  சமமற்ற  சமூக   நீதி இது..?

ராமாயணகாலத்தில் இருந்து திரிக்கப்பட்ட பொய்கள்   இதோ  ராஜிவ்காந்தி கொலை வழக்கு வரை  நீண்டு கொண்டே  இருக்கிறதே.... எப்போது  தான் விடியும்  பாரத கண்டத்தின் தென்கோடி புதல்வர்களில் பொழுது? ராஜிவ்காந்தி கொல்லப்பட்டவுடன்     இறந்து  போனாள்  கொலை செய்த  பெண்.   ஒரு சில  மாதங்களுக்கு    பின்னால் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார்கள் கொலைக்கு கொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் 

ராஜீவ் கொலை என்னும்  ஒற்றைக் காரணத்தை கையில்  எடுத்துக்கொண்டு லட்சக்கணக்கிலே ஒரு இனமும்  கொன்றழிக்கப்பட்டாகிவிட்டது   குற்றவாளியென கருதப்பட்டவரையும்    கொன்று அவரின் கீழிருந்த விடுதலை  போராட்ட இயக்கத்தையும் அழித்துவிட்டோமென்று கூறிவிட்டீர்கள்... இன்னுமா தீரவில்லை உங்களின்  கொலைவெறி..?

இருபத்தி மூன்று வருடங்களாக  தூக்குக் கயிற்றின்  கீழ்  வாழ்வின் பெரும் பகுதியை கழித்து  விட்டு முறையற்ற விசாரணையினால் கிடைத்த   தண்டனை மிருகம் முழுவதுமாய் தங்களை தின்று  தீர்த்துவிடுவதற்குள் எப்படியாவது சுதந்திர காற்றை சுவாசித்து  நீதி எப்போதும் சாவதில்லை  என்பதற்கு சான்றாகி  சாவோம் என்று எண்ணிக்கொண்டிருந்த  எழுவரின் விடுதலை இதோ அரசியல் தகிடுதித்தம் செய்பவர்களால் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது  

தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனயென்பது பதினான்கு வருடங்கள்தான் ஆதலால் இருபத்தி மூன்று வருடங்கள் தொடர்ச்சியாக சிறையில் இருந்தவர்களை மாநிலஅரசு விரும்பினால்  வெளியே விடலாம்  என்று  தீர்ப்பு சொன்ன உச்சநீதிமன்ற மாநிலஅரசு மத்தியஅரசோடு  ஆலோசனை செய்து அவர்களை விடுதலை செய்ய சொன்னது. சட்டம் சொல்கிறது மாநிலஅரசின் முடிவை மத்தியரசு கட்டுபடுத்த முடியாதென்று  ஆனால் தென்கோடியில் வாழும் நீங்களெல்லாம்  எங்களை விட இழிந்தவர்கள் என்று கருதி எப்போதும் நம்மை அடக்கும் ஆதிக்க மனபான்மை கொண்ட கூட்டம் சொல்கிறது இது தவறென்று....!  ஆமாம் இன்னும் ஒரு மாதத்திற்குள் இந்தியாவில் இருந்த சுவடு தெரியாமல் போகப் போகும் ஆளும் மத்திய காங்கிரஸ்  இத்தாலிய மூளை எழுவர் விடுதலையை எதிர்த்து மனு செய்து மாநில அரசுக்கு முடிவுக்கு முட்டுக்கட்டை போட்டதனால் இதோ சட்டமே தடுமாறி ஆதிக்க சக்திகளின்  நிர்பந்தத்திற்கு திணறி நிற்கிறது 

ஏழுபேரை தூக்கு கயிற்றில் ஏற்றிவிடலாம் என்று திட்டமிட்டு வர்ணித்து வஞ்சித்து ஜோடிக்கபட்ட வழக்கு தூக்கு தண்டனையை   கொடுத்த போது  ஒரு போதும்  நினைத்து இருக்காது இந்த ஏழுபேருக்கு பின்னால்  ஏழரை கோடி தமிழர்கள் திரண்டு நிற்பார்களென்று. இப்போது எழுவரின் தண்டனை அந்த  ஏழுபேரோடு மட்டும் தொடர்புடையது மட்டுமல்ல அது ஏழரை  கோடி தமிழர்களின் மானம்!

  இதோ மீண்டும் ஒரு யுத்தத்திற்கு நீதி முழுவீச்சில் தயாராகி விட்டது....  

ஏழரை கோடி தேசிய இனமக்களை தலைமை  தாங்கி  நடக்கும்  தமிழகஅரசிற்கும்  அநீதியை  நிறுவி உயிர் குடிக்க  கோரபற்களை  காட்டி  நிற்கும் காங்கிரஸ் கட்சிக்குமான யுத்தமிது!    ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசனம் அமர்விலும் நீதி நிச்சயமாக வெல்லும் என்ற நமது நம்பிக்கையை  இருபத்தி மூன்று  வருடங்களாக தன் மகனுக்காக  போராடும் அம்மா அற்புதம்மாளுக்கு  ஆறுதாலாய் நாம்  கூறும்  அதே  நேரத்தில்   இறுதிவரை   எழுவரின்  விடுதலைக்கு   தோளோடு  தோள்  நின்று  போராடுவது  ஒவ்வொரு  மானமுள்ள  தமிழனின்  சமூக கடமை  என்பதை  நாம் இங்கு அழுத்தமாய் பதிவு செய்து கொள்கிறோம் 

தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும். தர்மம் மறுபடியும் வெல்லும்

கழுகு 


(கழுகு  உயரபறக்கும் ) 

Monday, April 21, 2014

வாக்களிப்பீர்....உதயசூரியன் அல்லது இரட்டை இலைக்கு !!!!












பாரதிய ஜனதாவை விட காங்கிரஸ் மீது இன்னும் நமக்கு கூடுதல் வன்மம் உண்டு என்பதற்கு ஒரே ஒரு காரணம் ஈழம். ஈழத்தில் நடத்தப்பட்ட கொடுமையான போரை முன்னின்று நடத்தியது காங்கிரஸ் கட்சி என்னும் போது காங்கிரசை ஒரு மானமுள்ள சுயமாரியதைக் கொண்ட எந்த தமிழனும் ஆதரிக்க மாட்டான்.... ஆதரிக்கவும் கூடாது!!!!!

இப்படியான சூழலில் காங்கிரஸ் ஆளவில்லை எனில் வேறு யார் ஆள இருக்கிறார்கள் என்று பார்த்தால் இங்கே நமக்கு இருக்கும் ஒரே மாற்று மோடியின் தலைமையிலான பாரதிய ஜனதாகட்சி மட்டும்தான்....என்பதற்காக மோடியை ஆதரிக்க முடியுமா என்ன...?

காங்கிரசுக்கு மாற்று பிஜேபி என்று முடிவு செய்து பிஜேபியை ஆதரிக்க கூடாது தோழர்களே மோடி இந்துத்துவா அடிப்படையைக் கொண்டவர். இந்துத்துவா என்பது வேறு இந்து மதம் என்பது வேறு, இந்து மதம் என்பது எளிமையாய் சிக்கலில்லாமல் வாழ பயிற்றுவித்து ஒரு மிகப்பெரிய கலாச்சாரத்தின் புதல்வர்களை இந்த தேசம் முழுதும் காலம் காலமாய் நிம்மதியாய் வாழ வைத்திருந்துக்கிறது.

இந்து என்ற சனாதான தருமம் என்னும் வழிமுறையை அரசியலாக்கிப் பார்க்க,ஆதாயாப் பிழைப்பு நடத்த உருவாக்கப்பட ஒரு போலி வார்த்தைதான் இந்துத்துவா...

மோடியின் ஆட்சியின் கீழ் முழு மூச்சாய் இந்த இந்துத்துவா இந்த தேசம் முழுதும் பிரயோகம் செய்யப்படும். நீங்களும் நானும் இந்து என்று அடையாளத்துக்குள் சிக்க வைக்கப்பட்டு மாற்று மதத்தினரை எதிரியாய் பார்க்க வேண்டிய சூழல்கள் திட்டமிட்டே உருவாக்கப்படும். எல்லா விசயத்துக்கும் மனிதாபிமானத்தின் மூலமும் சட்டத்தின் மூலமும் முடிவெடுக்காமல் மதத்தின் பெயரால் பாகுபாடு அரசியல் வரைமுரையற்று நிகழும்.

இது எல்லாம் நிகழாது என்று நீங்கள் நம்பலாம் ஆனால் பல்லாயிரக்கணக்கான குஜராத் வாழ் இந்துக்களையும், இஸ்லாமியர்களையும் கேட்டால் அவர்கள் சொல்வார்கள்...எந்த மாதிரியான பாகுபாடு ஆட்சி அங்கே நிகழ்ந்து கொண்டிருக்கிறது அவர்கள் எல்லாம் எவ்வளவு அச்சத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், சிறுபான்மையினரை விஸ்வ ஹிந்து பரீட்சீத், ஆர்.எஸ்.எஸ், ராம் தர்பார்ஸ், ராம் தூன்ஸ் போன்ற அமைப்புகள் எப்படி நிர்ப்பந்திக்கின்றன என்பதை எல்லாம் ஒரு ஆய்வு மனோநிலையில் நாம் அணுகிப் பார்த்தால்

மோடி இந்தியாவில் என்னவெல்லாம் செய்வார் என்று தெளிவாய் புரிந்து அதன் மூலம் ஒரு பேரச்சம் நமக்கு ஏற்படுகிறது.

வாஜ்பாய் வேறு மோடி வேறு இதை தெளிவாய் நாம் உணரவேண்டும்.

தமிழ்நாட்டில் நமது வாக்களர்கள் பாரதிய ஜனதா கூட்டணியை ஜெயிக்க வைக்காமல், அதிமுகவிற்கோ அல்லது திமுகவிற்கோ வாக்களிப்பதே நல்லது.

மத்தியில் மோடி வென்றாலும், காங்கிரஸ் வென்றாலும்...மானமுள்ள தமிழர்கள் காங்கிரசையும் பிஜேபியையும் தோற்கடித்தோம் என்றாவது மார்தட்டிக் கொள்ளவாவது செய்யலாம்...!

பின்குறிப்பு: தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு காங்கிரஸ் அல்லது பிஜேபியோடு திமுகவோ அல்லது அதிமுகவோ கூட்டணி வைக்குமெனில்......வரப்போகும் எல்லாத் தேர்தல்களிலும் அவர்கள் எழ முடியாத அளவுக்கு தோல்வியைக் கொடுக்கவேண்டியதும் நமது கடமையாகிறது.

- கழுகு

(கழுகு இன்னும் உயரப்பறக்கும்...)


Sunday, April 20, 2014

மோடி என்னும் மாயை.....விழித்துக் கொள்ளுங்கள் வாக்காளர்களே...!


நான் என் குடும்பத்தாரோடு உறங்கிக் கொண்டிருக்கிறேன். திடீரென்று  என் வீட்டுக் கதவு தட்டப்படுகிறது. நிறைய பேர் கூட்டமாய் கத்திக் கொண்டு என் வீட்டு கதவை உடைப்பது போல தட்டி ஆக்ரோஷமாய் கத்திக் கொண்டிருக்கின்றனர். பயத்தில் எழுந்து என்ன ஏது என்று யோசிப்பதற்கு முன்பே என் வீட்டுக் கதவு உடைக்கப்படுகிறது.... திபு திபுவென்று கோஷமிட்டபடியே என் வீட்டிற்குள் நுழைந்த கூட்டம் என் மனைவியின் கையைப் பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்து இழுத்துச் செல்கிறது. என் குழந்தையை இரும்புக் குழாய் கொண்டு இடது பக்கத் தலையில் ஒருவன் அடிக்கிறான், ஆக்ரோஷமாய் அந்தக் கூட்டம் இதை ஏன் செய்கிறதென்றே என்று எனக்குப் பிடிபடவில்லை.


என் வீட்டை எரிக்கத் தொடங்குகிறது கூட்டம்.... இரண்டு பேர் சேர்த்து என்னைப் பிடித்துக் கொண்டு தாக்கத் தொடங்குகிறார்கள். என் தலை உடைந்து ரத்தம் வழிந்து கொண்டிருக்கிறது. என் வீட்டுக்கு வெளியேயும் பக்கத்து வீட்டிலும் கூட இதுவேதான் நடந்து கொண்டிருக்கிறது. என்னைகீழே தள்ளி மிதித்து முசல்மான் நாயே என்று ஒருவன் கத்தியபடியே என் வலது காலை வெட்டி எறிகிறான்....

கையெடுத்து கும்பிட்டு விட்டுவிடும்படி என் பிள்ளை கதற, ஈவு இரக்கமின்றி பிள்ளை மீது பெட்ரோல் ஊற்றி எரித்தே விடுகிறான் ஒரு பாவி.....

காரணம்.........

கோத்ராவில் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த இந்துப் புனிதப் பயணிகள் 57 பேர் ரயில் பெட்டியோடு எரிக்கப்பட்டு விட்டனராம். அவர்கள் வந்த ரயில் பெட்டியில் எப்படி தீ பற்றிக் கொண்டது என்று விசாரிக்க நேரம் எடுத்துக் கொள்ளாமல் இதைச் செய்யது முஸ்லீம்களாகத்தான் இருக்கவேண்டும் என்று கருதி ஒட்டு மொத்த குஜராத் வாழ் இஸ்லாமியர்களையும்  அடித்துக் கொல்கிறார்கள். படுகொலைகள் செய்கிறார்கள்....அப்போது எதுவுமே அறியாமல் உறங்கிக் கொண்டிருக்கும் உங்களுக்கோ எனக்கோ, அல்லது நம் உறவுகள் யாருக்கோ நான் மேலே கூறிய யாவும் நடந்திருந்தால் அதை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள் நண்பர்களே....?????

ஒரு மாநிலத்தில் இப்படி கட்டுக்கடங்காமல் மதத்தின் பேரால், அனுமானத்தின் பேரால் இஸ்லாமியர்கள் அத்தனை பேரையும் அதுவும் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் என்றும் பாராமல் வெட்டிச் சாய்த்துக் கொண்டிருந்த போது வேடிக்கைப் பார்த்த அந்த மாநிலத்தின் காவல் துறையையும்,  பாராமுகமாய் இருந்த அந்த மாநில முதலமைச்சரையும், நீங்களும் நானும் மன்னிக்க முடியுமா என் சொந்தங்களே....?

நரேந்திர மோடி......மட்டும் நினைத்திருந்தால் கலவரம் தொடங்கியதில் இருந்து 24 மணி நேரத்திற்குள் சட்டம் ஒழுங்கைக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கலாம். தனக்கும் தன் மாநில அரசுக்கும் வக்கில்லை என்றால் அவர் இந்திய பெருதேசத்தின் இராணுவத்தின் உதவியைக் கோரியிருந்திருக்கலாம். அவர் அப்படி செய்யவில்லை.  இது நிகழட்டும் என்று அனுமதிக்க விட்ட அவரின் மனோநிலையின் அடிப்படையில் மூளைச்சலவை செய்யப்பட்ட ஒரு சித்தாந்தம் பெரு நாகமாய் படுத்துக் கிடந்ததே அதற்கு காரணம். 

இன் த நேம் ஆஃப் ஃபெய்த் என்ற டாக்குமென்ட்ரி காணொளியைக் தொடர்ச்சியாய் என்னால் காணவே முடியவில்லை. வெறித்தனமாய் சூறையாடப்பட்ட இஸ்லாமியர்களின் வாழ்க்கையை அங்கே வெகு கோரமாய் காணமுடிந்தது. பாலகர்களிடம் கேள்விகள் கேட்டு அவர்கள் மழலை மொழியில் அந்த வன்முறைச் செய்திகளைக் கேட்டறிந்த போது கூனிக் குறுகிப் போனேன் நான். ஈழத்தில் நடத்தப்பட்ட வன் கொடுமைகளுக்கு யாதொரு குறைவும் இல்லாமல் குஜராத்தில் ஈனத்தனமான மதவெறியாட்டம் நடந்தேறியிருக்கிறது என்பதை என்னால் தெளிவாக உணர முடிந்தது. இலங்கை வேறு நாடு, வேறு சட்டம், வேறு நோக்கம், என்று அங்கே எல்லவிதமான கொடுங்கோல்களும் நிகழ சாத்தியமான சிங்களப் பேரினவாத அரசு இன அழிப்புக்கு பின்னால் இருந்ததனால் அப்படி நிகழ்ந்தேறியது என்று எண்ணி மனதை ஒரு சமநிலைக்கு கொண்டு வர நமக்கு சாத்தியமிருக்கிறது.


குஜராத் அப்படி அல்ல.... அது இந்திய தேசத்தின் வலப்பக்கத்தில் ஒடுங்கிக் கிடக்கும் ஒரு மாநிலம். அந்த மாநிலத்தில்தான் நம் தேசப்பிதா பிறந்தார். ஒழுக்கம் கெட்ட வேலைகளை அண்டை நாடுகளில் செய்து உலக அரசியல் அரங்கில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளச் செய்யும் ஈன வேலையை இந்திய அரசு இந்தியாவிற்குள் இருக்கும் ஒரு மாநிலத்தில் செய்யாது என்ற நம்பிக்கை வேறு நம்மிடம் நிறைய உண்டு. சாத்வீக பூமி, பாரத மாதா, ஜனநாயகமுள்ள மதச்சார்பற்ற பூமி என்றெல்லாம் சொல்லி மார்தட்டிக் கொள்ள நிறைவே சமாச்சாரங்கள் இருக்கும் இந்த இந்திய தேசத்தில்தான் இஸ்லாமியர்களுக்கு எதிரான உச்சகட்ட இனப்படுகொலை நிகழ்ந்தேறி இருக்கிறது.

குஜராத் கலவரத்திற்குப் பிறகு தொடர்சியாய் மோடிஜிதான் அங்கே முதலமைச்சராக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். அங்கே வாக்களிக்கும் அத்தனை பேரும் எந்தவித அச்சுறுத்துதலும் இல்லாமல்தான் வாக்களிக்கிறார்களா என்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்......இவ்வளவு பெரிய ஒரு வன்முறையை நிகழவிட்டு வேடிக்கை பார்த்த நரேந்திர மோடியை எப்படி இந்தியாவின் பிரமராக நாம் ஏற்றுக் கொள்வது என்பதுதான் எனது கேள்வி. சுதந்திர இந்தியாவை அதிக நாட்கள் ஆண்ட காங்கிரஸ் கட்சி இந்த தேசத்திற்கு செய்த மிகப்பெரிய அநீதி என்ன தெரியுமா? 

பாரதியஜனதா என்ற மதவாதக் கட்சியை வளரவிட்டதோடு மோடி போன்றவர்களை பிரதமர் பதவிக்கு கொண்டு வந்தால் என்ன என்று சாமனியர்களையும் நினைக்க வைத்ததுதான். ஆமாம்....பாரதிய ஜனதா ஆட்சியைப் பிடித்து நரேந்திர மோடி பிரதமரானால் அதற்கு முழு முதற் காரணம் மோடியின் திறமையோ அல்லது பாரதியஜனதா கட்சியின் சீரிய கொள்கைகளோ காரணமாகாது. காங்கிரஸ் என்னும் களவாணிக் கட்சியில் பெருத்துப் போன முதலாளி வர்க்கம் பாட்டாளிகளைப் பஞ்சப்பரதேசிகளாக்கி 100 நாள் வேலைத் திட்டத்தை பெரிய மறுமலர்ச்சியை கொண்டு வந்து நாட்டை சுபிட்சமாக்கி விட்டதைப் போல பறை சாற்றிக் கொண்டிருக்கும் அவல நிலைதான்....இன்றைக்கு பாரதிய ஜனதாவை கொம்பு சீவி வளர்த்து விட்டிருக்கிறது.

சனாதான தருமம் எனப்படும் இந்து மதமும், அதன் பூர்வாங்க தத்துவங்களும் மனிதர்களைப் போற்றவும், மனிதர்களை வழிநடத்தவும், நிம்மதியாய் அவர்கள் வாழவுமே பல சூட்சுமங்களை சட்டதிட்டங்களாய் சொல்லி வைத்திருக்கிறது. யார் தோற்றுவித்தது? எப்போது தோன்றியது...? என்றெல்லாம் ஆருடம் சொல்ல முடியாத தொன்மையான சிந்து வெளிப்பகுதி மக்கள்தான் பிற்காலத்தில் இந்துக்கள் ஆகிப் போனார்கள். கால மாற்றத்தையும், கலாச்சார நகர்வுகளையும் ஏற்று அனுசரித்து காலத்துக்கு ஏற்றார் போல சகமனிதர்களோடு கூடி வாழும் ஒரு மிகப்பெரிய புரிதலைச் சொல்லிக் கொடுத்த சனாதன மார்க்கத்துக்கு இன்று உரிமை கொண்டாடிக் கொண்டிருப்பவர்களுக்கும், அந்த மார்க்கத்திற்கும் யாதொரு தொடர்பும் கிடையாது என்பதே உண்மை.

இந்து மதம் எப்படி தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இன்று முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறதோ அதே போல இஸ்லாமும், கிறிஸ்தவமும், பெளத்தமும் கூட அந்த அந்த மார்க்கத்தைப் பின்பற்றுகிறேன் என்று கூச்சலிட்டிக் கொண்டிருப்பவர்களால் இன்று சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அண்டை வீட்டுக்காரனை நேசி என்று சொல்லிக் கொடுத்தவர்களும், அவரவரின் மார்க்கம் அவரவர்க்கு என்று சொல்லிக் கொடுத்தவர்களும், அன்பே சிவம் என்று போதனையைச் சொன்னவர்களும்.......எப்படி வன்முறை கும்பல்களுக்குச் சொந்தக்காரர்கள் ஆவார்கள்...? சதித்திட்டம் செய்து தன்னை அரியாசனம் ஏறவிடாமல் செய்த தாயின் மீது கொண்ட பாசத்திற்காக பதினான்கு வருடம் காட்டிற்கு சென்ற இராமபிரான் என்ற புண்ணியனை தங்களுக்கு அடையாளமாக்கிக் கொள்ள இவர்களுக்கெல்லாம் என்ன அருகதை இருக்கிறது...? குகனோடு ஐவரானோமென்று  சமத்துவம் பேசிய சகாப்தனா கேட்டான் நான் பிறந்த இடத்தில் எனக்கு கோயில் வேண்டுமென்று....? 

பாபர் மசூதி இடிக்கப்பட்டது மனிதக்கோளாறினால்தானே அன்றி தெய்வ விருப்பத்தினால் அன்று!  ஆக்கிரமித்து சகமனிதனை அடக்கி ஆள ஒவ்வொருவனுக்கும் ஒரு அடையாளம் தேவைப்படுகிறது. அந்த அடையாளம் சார்ந்த ஒரு கூட்டம் தேவைப்படுகிறது. அந்த கூட்டம் எப்போதும் உணர்ச்சியின் பால் அடிமைப்பட்டுக் கிடக்கவும் அறிவைப் பயன்படுத்தாமல் இருக்கவும் கடவுள் மிக பிரமாண்டமாய் வடிவமைக்கப்பட்டு வெகுஜனத்தின் முன்பு இறக்குமதி செய்யவும் படுகிறார்.

குஜராத்தை இதுவரை ஆண்ட நரேந்திர மோடி அந்த மாநிலத்தை இந்தியாவிலேயே முதல் மூன்று மாநிலம் என்ற அந்தஸ்த்துக்குள் கூட  கொண்டுவர முடியவில்லை. மோடிக்கு காற்றடைத்து கொடுக்கப்பட்டிருக்கும் விஸ்வரூப பிம்பம் பொய்யானது என்பதை வரவிருக்கும் பாரளுமன்றத் தேர்தல் முடிவுகள் காட்டிக் கொடுக்காவிட்டாலும்  ஒருவேளை மோடி பிரதமரானால் அவரின் மோசமான கொள்கைகளால் ஏற்படப்போகும் இந்த தேசத்தின் வீழ்ச்சி அதைத் தெளிவாகக் காட்டிக் கொடுக்கத்தான் போகிறது.


மனசாட்சி உள்ளவர்களே....நியாயமான முடிவெடுங்கள்....!


கழுகு


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்...)








 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes