Saturday, October 23, 2010

அவசரமாக "A+" இரத்தம் தேவை...!




நண்பர் சாய் கோபால கிருஷ்ணாவின் தளத்தில் இந்த தகவலை கண்டோம். உடனடியாக மிகைப்பட்ட பேரிடம் சேர்க்கும் எண்ணத்தில் குறிப்பாக சென்னை மற்றும் சுற்றுப்புறத்திலிருப்பவர்களின் உடனடி கவனத்திற்கு கழுகு கொண்டு செல்கிறது.
அவசரமாக "A+" இரத்தம் தேவை! உதவுங்களேன்!

பதிவுலக நண்பர்களே! வணக்கம்!


என் தம்பி A .கிரிவாசன் த/ பெ அமரேசன், மாடியில் இருந்து தவறி விழுந்ததால், கால் தொடை பந்து கிண்ண அறுவை சிகிச்சைக்காக சென்னை குமணன் சாவடி அடுத்த ACS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!

அவருக்கு புதன் கிழமை நடைபெற உள்ள அறுவை சிகிச்சையின் போது "A +" வகை ரத்தம் தேவைபடுகிறது. எனவே ரத்ததானம் செய்ய விருப்பமுள்ள நண்பர்கள் மற்றும் உங்களின் நண்பர்களுக்கு கீழ்கண்ட தொலைபேசி, கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு ரத்ததானம் செய்ய, அளிக்க வேண்டுகிறேன்!
நன்றியுடன்!
சாய் கோகுலகிருஷ்ணா

http://saigokulakrishna.blogspot.com/2010/10/blog-post_23.html
ACS மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை,
பூந்தமல்லி நெடுஞ்சாலை,
வேலப்பன் சாவடி,
Ph .no . 044-26802133 Extn 1104 , 1105
Cell no: 9791120313
ரத்த வங்கி காப்பாளர்: திரு காளிதாஸ்.

தங்கள் உதவிக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
நன்றியுடன்!


கழுகு
(கழுகு இன்னும் உயர பறக்கும்)




Wednesday, October 20, 2010

உயிரும் மெய்யும் உள்ளடக்கி..!




கழுகு என்றால் கழுகுதானே என்றா நினைத்தாய் மானுடா....! அஷ்டமா சித்திகள் கற்று ரூபங்கள் மாற்றி அவதாரங்கள் எடுக்கத்தெரியாத ஐந்தறிவு பறவை என்று எண்ணி விட்டாயா? ஆறாம் அறிவில் ஆறவதின் பயன்பாடு தெரியாத உமக்கு.....! உயிரும் மெய்யும் உள்ளடக்கி.. மூச்சுக்காற்றில் உஷ்ணம் பரப்பி தமிழ்கற்று தன்மானமும் கற்று... மிடுக்காய் எம்மை சிம்மாவதாரம் எடுக்க வைக்கும் உமது பகீர முயற்சிக்குப் பின்னால் இருக்கும் அறியாமையை எண்ணி கழுகு உமக்காக பரிதாபப்படுகிறது.



உமக்கு எதற்கு சிம்மாவதாரம்.. கழுகின் சிறகின் ஒரு பிசிறிலிருந்து வரும் வெம்மையை தாங்க உமது சக்தி இடம் தருமா என்பது எமக்கு சந்தேகமே...!


கட்டுரை இடுவதும், பேட்டிகள் எடுப்பதும் சமுதாய நன்னோக்கில் எமது பிரிய தோழா! உமக்கு சினம் இருக்குமெனில் அதை தீர்க்க ஏராளமான மதில் சுவர்கள் இருக்குமே வசிக்கும் ஊரில் .... அதிபோய் முட்டிக் கொள்வதில் எமக்கு எந்த முரண்பாடும் இல்லை ஆனால் வேங்கைகளை சொறி நாய் என்று கணித்த உமது பார்வையிலும் அப்படி சொல்ல தூண்டிய எண்ணத்தையும் பார்த்துக் கோண்டு போக பலிங்கி விளையாடும் சிறார்களல்ல நாம்...!


ஜாக்கி சேகரின் பேட்டியை வெளியிட்டது சர்வதேச குற்றமா? எமது பதிவுலக தோழர்களே மனம் திறந்து சொல்லுங்கள்? ஒரு ஒப்பற்ற ஜன நாயக நாட்டில், பேச்சுரிமையும் எழுத்துரிமையும் வரைமுறையற்று பரவிக்கிடக்குமொரு தேசத்தில்.. ஜாக்கியின் பேட்டி எடுக்க ஊரில் இருக்கும் பைரவர்களிடம் நாங்கள் அனுமதி பெற வேண்டுமா?


உமது தலை அறித்தால் அதை வாரிக்கொள்ள சீப்பு வேண்டும் என்று அறியாத சிறுவனாய் கழுகு என்னும் கொள்ளிக்கட்டையை எடுத்து தேய்த்துக் கொண்டது உமது அறியாமை என்று சொல்லமாட்டோம் நண்பா.. ! இது நீ பிரபலமாக செய்த ஒரு துணிகர வேடிக்கை. உமது எழுத்திலே ஈர்ப்பு இருந்தால் உம்மை தேடி சொல்லாமல் கொள்ளாமலேயெ கூட்டம் வரும்.. ஏனிந்த தனிமனித தாக்குதல்...? அதன் மூலம் உம்மை பிரபலமாக்க இப்படி ஒரு கோழை முயற்சி.


சாந்தாமாய் ஒரு மின்னஞ்சல் அனுப்பி.. உம்மிடம் தயைகூர்ந்து விண்ணப்பம் வைத்தால் அது ஏளனாமா சகோதரா? பணிதல் அன்பு செலுத்துதல், தீய சொற்கள் பேசாதிருத்தல் தாண்டி....கடுமையான ரெளத்ரத்தையும் நமது கலாச்சாரம் கற்றுக் கொடுத்துள்ள உண்மை உமக்கு தெரியாமலா இருக்கும். உன்னை எந்த வகையிலும் துன்புறுத்தாத மனிதர்களை....


" சொறி நாய் " என்று குறிப்பிட்டு கூறியிருக்கும் உமது வக்கிரத்தினை உலகம் அறியட்டும். எமக்கு எவரிடமும் இருந்து பெறும் எதையும் வைத்துக் கொள்ள எப்போதும் விருப்பமில்லை.. உமது வார்த்தைகளை உமக்கே சகல மரியாதையுடன் திருப்பி அளிக்கிறோம்.


கழுகு விழிப்புணர்வு ஊட்டும் நோக்குடன் களத்தில் இருக்கிறது...உமக்கு சக்தி இருந்தால் .... மூளையின் செழுமையில் நம்பிக்கை இருந்தால்.... நீ கற்ற கல்வி உம்மை சரியாக வழி நடத்துகிறது என்றால்.....வானம் உமக்கு நிஜமாகவே ஒரு போதிமரமென்றால்....


"எல்லா மானுடர்க்கும் பயன் தரும் வகையில் ஒரு கட்டுரை எழுதி கழுகுக்கு கொடுங்கள்..." நாங்கள் பிரசுரிகிறோம்.....! நாங்கள் உலகின் முன்னனி இதழ்கள் என்று எப்போதும் சொல்லிக் கொள்ளவதும் இல்லை சொல்லிக் கொள்ள போவதும் இல்லை......ஆனால்....


" எல்லா முன்னனி பத்திரிக்கைகளுக்கும், தொலைக்கட்சிகளுக்கும், அரசியல் கட்சிகளுக்கும், நடிகனுக்கும், ..........ஆரம்பம் என்ற ஒன்று இருக்கிறது...."

இது... எமது ஆரம்பம்......!


(கழுகு இன்னும் உயர பறகும்)


Monday, October 18, 2010

ஜாக்கியின் அதிரடி பேட்டி...




கொஞ்ச காலம் பதிவர் பேட்டிகள் வரவில்லை. காரணம் என்ன? வெளுத்ததெல்லாம் பால் என்று ... வெள்ளந்தியாய் பேட்டி கேட்கப் போக.. கழுகும் கழுகு சார் நண்பர்களும் பேட்டிகள் கேட்பதானலேயெ ஏதோ தாங்கள் புகழ் பெற்றுக் கொள்ளப் போவதாக சிலர் எண்ணியதின் விளைவில் எமக்கு சில சறுக்கல்கள் சில வழுக்கல்கள்.. ஆனால் வாழ்வின் பக்கங்கள் எல்லா போதனைகளையும் கொடுக்கும் என்பதை அறியாமலா வாழ்வின் நகர்வுக்குள் பொது வாழ்வின் தெருக்களுக்குள் கழுகு அடியெடுத்து வைத்திருக்கும்....
நெருங்கிய நண்பர்களுக்கு கூட.. ஏதோ எப்போதும் சினிமா, அரட்டை, பொழுது போக்கு என்ற ஈர்ப்பில் இருப்பதனால்.. கழுகிற்குள் வருவது இல்லை. எப்போதும் கொள்வது எப்படி ஓய்வாகும் பொழுது போக்குகள் முழுமையான வாழ்க்கையானால் அது சோம்பேறித்தனம்.
சமீபத்தில் ஜாக்கி சேகரின் வலைப்பக்கங்களை பார்வையிட்டுக் கொண்டிருந்த கழுகு ...ஜாக்கியிடம் சில கேள்விகள் கேட்க தன் முனைப்பிலேயே அவா கொண்டிருந்தது... சூட்டிங் ஸ்பாட்டில் போய்.... எல்லோருக்கும் தெரிந்த ஜாக்கியிடம் கைகுலுக்கி அறிமுகம் செய்து கொண்டு ஜாக்கியின் வரவேற்ப்பை பார்த்து கழுகு ஒரு நிமிடம் மெய்மறந்து நின்றது.. பேட்டிக்காக பேச ஆரம்பித்தோம்.... ஆர்ப்பாட்டமாய் ஆரம்பித்த கேள்விகளுக்கு கிடைத்த பதில்களில் ஜாக்கியின் வாழ்க்கையின் அனுபவங்களும்...மிகுதியான சோகங்களும் கண்டு..... மெளனமானோம்...
யெஸ்.. மீண்டும்.. பதிவர்களின் பேட்டிகள் தொடருந்து வரும் தோழர்களே.. இப்போது ஜாக்கியின் அதிரடி .... உங்களுக்காக....!


1) வலைப்பூக்கள் உங்களுக்கு எப்படி அறிமுகம் ஆனது?

வலைப்பூ என்ற விடயம் எனது மனைவியின் அலுவலக நணபர் நித்யகுமாரன் மூலம் எனக்கு தெரிந்தது...அவர் பிளாக்கை என் மனைவியிடம் சொல்லி வாசிக்க சொல்ல.. நான் அப்போதுதான் கம்யூட்டரில் தமிழ் அழகாக படிக்க முடியும் என்பதை பார்த்து பரவசமானேன்... இரண்டு நாட்களுக்கு பிறகு எனக்கு வலைப்பூ ஆரம்பித்து கொடுத்தார்... பல கேள்விகள் கேட்ட போது அவர் முகம் சுளித்தார்... ஆனாலும் நான் காரியத்தில் கண்ணாக இருந்தேன்... தொடர்ந்து அவரை தொல்லைபடுத்தி சில சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டேன்....அவரே நினைத்து பார்க்கமுடியாத வளர்ச்சி என்பதை அவரே நிறையமுறை சொல்லி இருக்கின்றார்...



2) எழுத்தின் மூலம் எங்கே பயணிகிறீர்கள்?

எழுத்தின் மூலம் நான் உலகம் எங்கும் இருக்கும் தமிழ் வாசிக்க தெரிந்த அத்தனை நெஞ்சங்களிடத்திலும் நான் பயணிக்கின்றன்...ஒரு பத்திரிக்கையில் நான் எழுதி "ரீச்" ஆவதை விட இது பெரிது... என்பது எனது தாழ்மையான கருத்து....ஆனாலும் கம்யூட்டர் வைத்து இருப்பவர்களிடத்தில் மட்டுமே என் "ரீச்" இருப்பது பிளாக்கில் உள்ள சின்ன மைனஸ்....

3) தினமும் பதிவு எழுத உங்களுக்கு உதவுவது வாசிப்பா? இல்லை அனுபவமா?

வாசிப்பை விட அனுபவங்கள்தான் எனக்கு பெரிதும் உதவுகின்றன.... தினமும் வாசிக்க வேண்டும் ஆனால் அது இப்போதைக்கு சாத்தியமாக தெரியவில்லை... பதிவு எழுதவும் அதனை போட்டு விட்டு எனது பணியை பார்க்கவும் நேரம் சரியாக இருக்கின்றது... பைசா வருமாணம் இல்லா விட்டாலும், நான் போஸ்ட் போட்டால் வாசிக்க பலர் இருப்பதால் தினமும் பதிவு எழுத நேரத்தை செலவிடுகின்றேன்...


4) சினிமாத்துறையில் என்னவாக இருக்கிறீர்கள்?எதிர்கால திட்டம் என்ன?


சினிமா துறையில் அசிஸ்டேன்ட் கேமராமேனாக இருக்கின்றேன்.. ஒரு பெரிய கேமராமேனாக எதிர்காலத்தில் ஆக வேண்டும் என்பதுதான் எனது ஆசை... அது ஒரு இலக்கு அவ்வளவே.. ஒரு துறையில் சாதிக்க முழுமூச்சாக அது பற்றிய சிந்தனைனயுடன் இருக்க வேண்டும்.,... ஆனால் எனக்கு பல குடும்ப சூழலின் காரணமாக அந்த இலக்குக்கான திசை எப்போதுவேண்டுமானாலும் தடம் மாற வாய்ப்பு உள்ளது..நான் தனி மரம் அல்ல.. இப்போதுதான் புது வீடு வாங்கினேன்.. நிறைய கடன் இருக்கின்றது... அதற்கு சினிமாவெகுவாய் சாத்தியபடாது... அதற்கு அதிஷ்டம் வேண்டும்.... இருப்பினும் என் சூழ்நிலை ஒத்துழைக்கும் வரை நான் விடாது முயற்சிப்பேன்.... ஓடும் முடியும் தூரம் ஓடும் வரை ஓடிக்கொண்டு இருப்பேன்.

5) உங்கள் பார்வையில் சினிமாத்துறை?


அது ஒரு கூட்டு முயற்ச்சி.. ஒரு ஷாட்டை செல்லுலாய்டில் பதிவு செய்ய எல்லோருடைய அர்ப்பணிப்பும். உத்வேகமும் தேவை. மிக முக்கியமாக எல்லோரும் மிகுந்த ஈடுபாட்டுடன் வேலை செய்யும் இடம். மற்ற எந்த துறையிலும் இது போல ஒரே கணத்தில் எல்லோரும் இயங்க வேண்டிய தேவை எனக்கு தெரிந்து இல்லை...


6) விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வீர்கள்?


எனது தவறுகளை நான் அப்படியே ஒத்துக்கொள்வேன்... மிக நியாயமான விமர்சனங்களை அப்படியே ஏற்றுக்கொள்வேன்.. ஆனால் விதன்டாவதாத்துக்கும், என்னை சீண்ட வேண்டும் என்றும் வரும் விமர்சனங்களை நான் அப்படியே ஏற்றுக்கொண்டதில்லை...மறு கண்ணம் கட்டும் அளவுக்கு நாள் பக்குவபடவில்லை.

7) மற்ற பதிவர்களின் பதிவுகளுக்கு ஏன் நீங்கள் வாக்களிப்பது இல்லை...? நல்ல பதிவுகளை ஊக்குவிக்கலாம் தானே?

இது என்னை பொறுத்தவரை எனக்கு பெரிய குறைதான்.. மனதில் பல நாட்கள் எனக்கு எழுந்த கேள்விதான்.. நானும் புதிய பதிவராக இருந்து உங்கள் பேட்டிக்கு பதில் சொல்லும் இடத்தை அடைத்து இருக்கின்றேன்... எனது பதிவுகளுக்கு தொடர்ந்து எனது வாசகர்கள் நன்றாக இருந்தால் வாக்குஅளித்துக்கொண்டு இருக்கின்றார்கள்... சரி அதில் இருக்கும் பதிவர்களின் வலைப்பூவை கூட நான் வாசித்தது இல்லை... நேரம் கிடைக்கும் போது வாசிப்பதோடு சரி...

இணையம் ஒரு நேரவிழுங்கி ... ஒரு கட்டத்தில் இதில் பயங்கரமாக அடிக்ட் ஆகி இருக்கின்றேன்..காலையில் ஆன் செய்த கம்யூட்டர் இரவு எட்டு மணி வரை ஆனில் இருந்த கட்டங்களை எல்லாம் கடந்து வந்து இருக்கின்றேன்... இப்போது எல்லாம் பதிவை போட்டு விட்டு சிஸ்டத்தை ஆப் செய்து விடுகின்றேன்.. சினிமா நைன்னு டூ பைவ் ஜாப் அல்ல.... அதனால எத்தனைமணிக்கு ஷுட்டிங் முடிந்து வீட்டுக்கு வந்தாலும் பதிவு போட மட்டுமே நேரம் சரியாக இருக்கின்றது.... அதனால் பிறர் வாசிப்பு மிக குறைவு.. ஆனால் நேரம் கிடைக்கும் போது படித்து பின்னுட்டம் மற்றும் ஓட்டு போடுகின்றேன்... மற்றபடி தலைகனமோ தடிப்போ அல்ல என்பதை புதிய பதிவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.


8) நிறைய சினிமா பற்றிய பதிவுகளை எழுதுகிறீர்கள் ...மக்கள் விரும்புவார்கள் என்றா?


சினிமாவை மட்டும் நான் எழுதி இருந்தால் நான் இந்தளவுக்கு வளர்ந்து இருக்கமாட்டேன்.. என் வளர்ச்சியில் சினிமா விமர்சனம் ஒரு பகுதி.. அவ்வளவே.. எனக்கு வரும் பல வாசகர் கடிதங்கள் மற்றும் பின்னுட்டங்கள் அனைத்தையும் போர்த்தாலே உங்களுக்கே தெரியும்.. சினிமா விமர்சனத்துக்கு மட்டும் வந்த வட்டம் அல்ல என்பது............

சமீபத்தில் இன்டேலி ஓட்டில் சினிமா விமர்சன பதிவுகளுக்கு ஓட்டுக்கள் 20க்கு மேல் தாண்டவில்லை என்பதை கூர்ந்து பார்த்தால் தெரியும்...


9) பதிவுலகம்... பற்றிய உங்கள் பார்வை என்ன?

எனக்கு சென்னையில் நண்பர்களே கிடையாது.. இன்று உலகம் முழுவதும் எனக்கு நண்பர்களை பெற்று கொடுத்தது இந்த பதிவுலகம்தான்.. வீடு வாங்க பண உதவி செய்தது,என் மனைவிக்கு அயர்லாந்து நாட்டில் கிடைத்த உதவிகள்.. என்று பல விஷயங்கள் பதிவுலகத்தால் கிடைத்த நன்மைகள்.... எந்த ஊருக்கு வருகின்றேன் என்று போஸ்ட் போட்டு விட்டு போனாலும் அங்கு சந்தித்து பேச நிறைய நண்பர்கள் இருக்கின்றார்கள்.... சென்னை பாரிசில் எடுத்து போட்டோவை போட்டதுக்கு பிரான்ஸ் பாரிசில் இருக்கும் நண்பர் லிங்கம், இங்கு வந்து விட்டு ஏன் என் வீட்டுக்கு வரவில்லை என்று கோபித்துக்கொண்டார்.... அது போலான நல்ல உள்ளங்களும், எனக்காக வேலை மெனக்கெட்டு கடிதம் எழுதும் வாசக நண்பர்களை கொடுத்தது இந்த பதிவுலகம்தான்.. எனக்கு இருக்கும் பல சிக்கல் களில் என்னை ரிலாக்ஸ் ஆக்குவது பதிவுலகம்தான்... ஆனால் இங்கு வரிக்கு வரி நீங்கள் கவனிக்கபடுகின்றீர்கள் என்பது பலருக்கு புரியவில்லை... ஒரு வரியை எடுத்து வைத்துக்கொண்டு நடக்கும் சண்டைகள் ஏராளம்.. நிறைய பதில் சொல்ல கூடிய விவாதங்கள் இருந்தாலும்.... சில இடங்களில் செய்யும் விவாதத்துக்கு மதிப்பு இல்லை என்று தெரியும் போது பதில் சொல்ல நான் விரும்புவதில்லை....

கண்ணுக்கு தெரியாத எதிரிகள் இருப்பதும் நன்றாக பழகி கட்டி பிடித்து மார்பில் கத்து சொருகுவதும் இங்குதான்...

10) உங்கள் எழுத்துக்களை வாசிக்கும் வாசிப்பாளனுக்கு என்ன லாபம்?

பலர் கேட்டு இருக்கின்றார்கள்... அது எப்படி உங்கள் வேவ் லென்தும் என்னுடையதும் எப்படி மேச் ஆகின்றது என்று??? சிலர் ஜாக்கி நாங்க எழுத நினைச்சதை நீங்க எழுதிட்டிங்க.... என்று சொல்லுவார்கள்...என்ன லாபம் என்பது பார்வைக்கு பார்வை வேறுபடும்... தொடர்ந்து எனது பதிவை வாசிக்காமல் ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்ட் படத்தை மட்டும் பார்த்து விட்டு செல்லும் பார்வையாளனும் இருக்கலாம்.. அதனை வாசிப்பவர்கள்தான் சொல்ல வேண்டும்... இலக்கியதரம் இல்லாமல் லோக்கலாக எழுதுவதை படிக்க நினைப்பவன் சிரமபடாமல் படிக்க இலகுவாக இருப்பது கூட காரணமாக இருக்கலாம்.



11) உங்களின் நிறைய கட்டுரைகள் 18+ ஆக இருக்கிறது. பிரத்தியோக காரணம் ஏதும் உண்டா?

என் தளம் பதினெட்டை கடந்தவர்கள் வாசிக்க வேண்டும் என்று நான் சொல்லகாரணம்... இயக்குனர் சங்கர் பாய்ஸ் படம் எடுத்தார்.. ஒரு பிரபல பத்திரிக்கை அதனை சீ என்று விமர்சித்தது....இந்திய அரசின் அங்கீகரிக்கபட்ட சென்சார் போர்டு ஏ சான்றிதழ் அந்த படத்துக்கு வழங்கியது... குழந்தைகளோடு போய் பார்க்கிற மாதிரியா படம் எடுத்து இருக்கான் படம் ச்சே என்று பலர் வசைபாடினார்கள்...ஏ சான்றிதஷ் கொடுத்தாகி விட்டது.. நீதான் அந்த படத்துக்கு போலாமா கூடாதா என்று தீர்மாணிக்க வேண்டும்....நான் ஏ ஜோக் எழுதுகின்றேன்...சில லோக்கல் வார்த்தைகள் பிரயோகிக்கின்றேன்... அதனால் இந்த தளம் இந்த பதிவு இந்த வகையை சார்த்து என்று சொல்லவே அந்த அறிவிப்பு...



12) ஒரு சென்னை வாசியாக சரசரி வாழ்க்கையை எப்படி எதிர் கொள்கிறீர்கள்?


நமக்கு இந்திய நாட்டை விட்டு எங்கேயும் போனதில்லை... விமானம் இன்னும் அண்ணாந்து பார்த்து ஆச்சர்யப்பட்டு போகும் நிலையில்தான் இருக்கின்றேன்.. என் மனைவி அயர்லாந்து போய்விட்டு வந்த போதும்,மற்ற நாட்டை விட ரோடு என்ற போர்வையில் ரொம்ப கேவலமாக இந்தியாவில் வைத்து இருப்பதாக சொன்னபோதும், சராசரியாக வாழ்க்கை நடத்துவது ரொம்பவும் கடினம்தான்..நல்ல ரோடும் சுகாதாரமான தண்ணீரும்தான் வேண்டும்.. ஆனால் அதை எந்த அரசும் செய்து கொடுத்தது இல்லை....எல்ஜசி பக்கத்தில் அதாவது ஜெயப்பிரதா தியேட்டரில் இருந்து தாராபூர் டவர் நோக்கி செல்லும் இடத்தில் ஒரு பெரிய பள்ளம் தோண்டி ... அதாவது அது எந்த பர்பசுக்காக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும்...ஒரு மாதத்துக்கு மேல் ஆகின்றது பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் அந்த இடத்தை கடக்கின்றன.... ஆனால் அது இன்னும் ஆமை வேகத்தில் நடைபெற்றக்கொண்டு இருக்கின்றன...இது சென்னையின் பிரதான சாலையில்.. அப்படி என்றால் எனது கடலூரில் இன்னமும் பாதாள சாக்கடைக்கு தோன்டிய குழியை மூடி விட்டதோடு சரி இன்னமும் ரோடு போடவில்லை.. இரண்டு வருடங்களுக்கு மேல் ஆக போகின்றது.. சகித்துக்கொண்டுடதான் வாழ் வேண்டும்...





13) வரும் தேர்தலில் எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள் ஏன்?


எந்த திருடன் ஓரளவுக்கு நியாயமானவேனோ??? அவனுக்கு.....




14) எதிர்காலத்தில் புத்தகம் எழுதும் எண்ணம் இருக்கிறதா?

இப்ப எழுத வந்ததே ஒரு விபத்துதான்/ நான் நெட்கனெக்ஷன் வாங்க நிறைய காரணங்கள்... அதில் ஒன்று, ஜோதியில் 30 ரூபாய் டிக்கெட்டில் கடைசிவரை பிட்டு வரும் என்று எதிர்பார்த்து ஏமாந்த காரணத்தினால், பிட்டுபடம் எந்த பிரச்சனையில்லாமல் பார்க்கலாம் என்ற காரணத்துக்காவும், நன்றாக கவனிக்கவும் அந்த காரணத்துக்காவும் நெட் கனெக்ஷன் வாங்கினேன்.. ஆனால் நம்மையும் நிறைய பேர் கவனிக்கின்றார்கள்...
உதாரணத்துக்கு எனக்கு ஒரு பெண்மணி பின்னுட்டத்தில் ஒரு மடல் போட்டு இருந்தார்....
அது கீழே...


நளினா லாவண்யா said...
உங்கள் ஒவ்வொரு எழுத்தையும் தீவிரமாக வாசிக்கும் ஆள் நான். பாருங்கள் ஞாயிற்றுக்கிழமை சமையல் முடிந்த கையோடு உங்கள் சாண்ட்வெஜ் படிக்க உட்கார்ந்திருக்கிறேன். படிக்கும் யாரையும் உடனடியாக ஈர்த்துவிடும் அளவுக்கு வசீகரமான நடைக்குச் சொந்தக்காரர் நீங்கள். எதை எழுதினாலும் சுருக்கமாக, சுருக்கென்று நீங்கள் எழுதிச் செல்லும் விதம் வசீகரமானது. இவ்வளவு திறமை உள்ள நீங்கள் ஏன் பத்திரிகைகளுக்கு எழுதுவதில்லை? ஒருவேளை உங்கள் எழுத்தைப் பிரசுரிக்கும் அளவுக்கு பத்திரிகைகளுக்குத் தகுதி இல்லை என்று நீங்கள் நினைத்தால் அதுவும் சரிதான். கூடிய விரைவில் உங்கள் எழுத்துகளைப் புத்தகமாக வாசிக்க ஆசைப்படுகிறேன். எழுத்துப் பிழை பற்றி குறைப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் எழுத்துப் பிழையோடு என்ன எழுத்தே இல்லாமல் எழுதினாலும் வாசிக்க என்னைப் போன்ற பல்லாயிரம் வாசகர்கள் இருக்கிறோம். கவலையே படாமல் எழுதுங்கள். நன்றி.
இது நக்கலா இல்லை பாராட்டா என்று தெரியவில்லை.....பாராட்டாக இருந்தால் சந்தோஷம்... ஆனால் புத்தகம் போட வேண்டும்.. சிறந்த படங்களில் பார்த்தே தீர வேண்டியபடங்களை புத்தகமாக போட வேண்டும் என்ற ஆசை இருக்கின்றது... பட் லோக்கலாக எழுதும் எனது எழுத்தை புத்தகமாக மாற்ற எந்த பதிப்பகம் வந்தாலும் நான் ரெடி..

15) ஆன்மீகம் பற்றி உங்கள் பார்வை என்ன?


எனக்கு மேல் ஒரு சக்தி இருக்கின்றது... கண்ணுக்கு தெரிந்த கடவுள் எனக்கு சூரியன் மட்டுமே....



16) 600 பதிவுகளுக்கு மேல் எழுதியது எப்படி இருக்கிறது?

வியப்பாக இருக்கின்றது... தமிழ்மணத்திலும் இன்டேலியிலும் ஒரு காலத்தில் பாப்புலர் போஸ்ட்டுகள் நிறைய ஆகி இருக்கின்றன.. ஆனால் நிறைய ஓட்டுக்கள் கிடைப்பது இப்போதுதான்... பல பின்னுட்டங்கள் போடுபவர்கள் புதியவர்கள்...ரொம்பவும் சந்தோஷம் ஆனால் குடும்பவேலைகள்,சினிமா ஷுட்டிங் என நிறைய வேலைகள் செய்து தொடர்ந்து எழுத நேரம் ஓதுக்கி இருந்தாலும், என்னை ஓட்டு போட்டு உற்சாக படுத்தும்
எனது வலையை வாசிக்கும் அன்பர்களுக்கு எனது நன்றிகள்...

அவர்களின் உற்சாக ஓட்டும் பின்னுட்டமும் மட்டுமே 600 போஸ்ட்டுக்கான சாத்தியம்....

17) உங்களுக்கு வரும் எதிர் ஓட்டுக்களை பார்த்து என்ன நினைப்பீர்கள்?

எனக்காய் மெனக்கெடும் அவர்களும் எனது நல விரும்பிகளே.... ஒரு மைனஸ் ஓட்டு ரொம்ப ஈசியா போட முடியும்... ஆனா ஒரு பதிவை எழுதி அதை போஸ்ட் செய்யும் போது ஒரு நிறைவு இருக்கும் அதை கொஞ்சம் இந்த மைனஸ் ஓட்டுக்கள் அசைத்து பார்க்கும்...

நான் யாருக்கும் மைனஸ் ஓட்டும், அனானி பின்னட்டமும் இதுவரை போட்டதில்லை என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.



18) உங்களுக்கு நெருக்கமான திரையுலக நண்பர்கள் யார்? அவர்களைப் பற்றி கொஞ்சம் பகிர முடியுமா?

அப்படி எல்லாம் டாகில்ட்டியாக சொல்லிவிட் முடியாது....எழுத்தாளர் சுபா.. பாலகிருஷ்ணன் எனது நண்பர்...பல வருடம் பழக்கம் இருப்பினும் எனக்கு சினிமா கதவை எனது 35 வயதில் திறந்துவிட்டவர்.. எனது சினிமா குரு ஒளிப்பதிவாளர் எம் எஸ் பிரபு...அவரோடு இரண்டு படங்கள் பணி புரிந்து இருக்கின்றேன்... தற்போது கேமராமேன் விஜய் ஆம்ஸ்ட்ராங் இந்த பதிவுலகத்தால் கிடைத்த நட்பு...


19) பதிவுலகம் தவிர்த்து உங்களை பற்றி?

வெளிப்படையாக இருப்பது எனக்கு ரொம்ப பிடித்த ஒன்று....கடலூரில் ஆட்டோ ஓட்டும் போது என்னை காதலித்த ஒரு ஜயங்கார் பெண்ணை பத்துவருடம் காதல் செய்து பின்பு கரம் பிடித்தவன்... இந்த பேட்டி வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியானால் எனக்கு திருமணம் ஆகி இரண்டு வருடம் பூர்த்தி ஆகின்றது....19ம் தேதிதான் எனது திருமணநாள்... அதே போல் பிப்பரவரி ஒன்னாம் தேதிதான் எனக்கும் என் மனைவிக்கும் பிறந்த நாள்... இருவரின் பிறந்த நாளும் ஒரே தேதியில்...4 தங்கைகள்...மூவருக்கு திருமணம் ஆகிவிட்டது ஒருவருக்கு மாப்பிள்ளை பார்த்துக்கொண்டு இருக்கின்றோம்...அப்பா பேரலிஸ் அட்டாக்கில் படுத்த படுக்கையில்.. அம்மா பல வருடங்களுக்கு முன்பே தேவலோகத்தில்....பலர் பாராட்டும் படி ஒரு நாள் உயர வேண்டும் அதுவே என் கனா....போட்டோகிராபியில் ஆர்வம்...குறும்படங்கள் அதிகம் செய்ய ஆசை...நிறைய எழுத ஆசை.. பல தளங்களில் இயங்க ஆசை.. ஒரு ஐகானாக திகழ ஆசை...எல்லோரும் என்னை கொண்டடாட ஆசை,சத்தியம் தியேட்டரில் யோசிக்காமல் டிக்கெட் எடுத்து படம் பார்க்க ஆசை... எந்த ஓட்டலாக இருந்தாலும், எத்தனை பேர் உடன் வந்தாலும் யோசிக்காமல் உள் நுழைந்து,சாப்பிடும் முன் விலைபட்டியல் பார்க்காமல் சாப்பிடும் அளவுக்கு பொருளாதாரத்தில் மேன்மையடைய ஆசை, பிளாட்பாரத்தில் சென்னையில் படுத்து இருந்த போது என்னவாக போகின்றோம் என்று தெரியாமல் விழித்த காலங்கள் உண்டு.. ஆனால் பதினைந்து வருடத்தில் இந்த மாற்றம் நானே எதிர்பார்க்காத ஒன்று.... எதிர்காலத்தில் பார்ப்போம்...

20) குறும்படங்களுக்கு கிடைத்த விருதுகள் பற்றி அடுத்த குறும்படம் என்ன?

இதுவரை நான்கு குறும்படங்கள் எடுத்து இருக்கின்றேன்... நான் எடுத்த துளிர் குறும்படம் மாநில அளவில் மூன்றாம் பரிசினை வென்றது.. சென்னை 3வது உலக குறும்பட போட்டியில் எனது மூன்று படங்கள் நாமினேஷக்கு வந்து மூன்று படங்களும் திரையிடபட்டன...குறும்படத்துக்கு செலவு செய்யும் அளவுக்கு என்னிடத்தில் பணம் இல்லை.. என்னால் தினமும் 5நிமிடத்துக்கான ஒரு குறும்படம் எடுக்க முடியும்... தாராளமாக செலவு செய்ய ஆள் இருந்தால்.....


(கழுகு இன்னும ....உயர பறக்கும்)

Friday, October 15, 2010

வெற்றி...என்பது...



வாழ்வின் எல்லா நேரங்களும் நமக்கு சாதகமாய் இருந்து விடுவதில்லை. கொஞ்சம் வாழ்வின் பக்கம் வேறு மாதிரி இருந்து விட்டால் விரக்தியும் இயலாமையும் நம்மிடம் வந்து சேர்ந்து விடுகிறது. எதிர்மறையான சூழ்நிலைகளையும் சாதகமாக மாற்றி கொள்வது என்பது ஒரு கலை. அப்படி இருப்பதற்கு நமது மனப்பாங்கும், சூழ்நிலைகளை அணுகும் முறையிலும் திடமான ஒரு பார்வையும் தீர்க்கமான முடிவுகளும் எல்லாவற்றையும் புரட்டிப் போடும்....


ஓரயிரம் வாய்ப்புகள் நம்மிடம் இருக்கும் போது வெற்றிகொள்ளுதல் என்பது எளிது ஆனால்...தனி ஆளாக நின்று சூழ் நிலைகளை எதிர்கொள்ளுதல் என்பதில் வலியும் அந்த வலியின் பின்னால் எதிர் கொள்ளலில் மனோ வலிமையும்தானே இருக்க முடியும். வலைப்பக்கங்களை மேய்ந்து கொண்டிருந்த போது நண்பர் எஸ்.கே. யின் இந்த கட்டுரை கண்ணில் பட்டது.........உத்வேகத்தை கொடுக்க கூடிய இந்த கட்டுரையை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதில் கழுகு பெருமிதம் கொள்கிறது


ஒவ்வொரு மனிதனுக்கும் பல்வேறு சமயங்களில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஒருவருடைய பிரச்சினையை மற்றவரால் நிச்சயமாக முழுமையாக புரிந்துகொள்ள முடியாது. தலைவலியும் திருகுவலியும் அவரவர்க்கு வந்தால்தான் தெரியும்! பிரச்சினையில் ஒருவர் இருக்கும்போது, மற்றவர் சொல்லும் சமாதான எந்த அளவிற்கு ஆறுதல் தரும் என்பது, பிரச்சினையின் வீரியம் மற்றும் ஆறுதல் சொல்லும் நபரை பொறுத்தது! ஆனால் அதிலிருந்து மீண்டு வருதல் என்பது தன்னம்பிக்கை சார்ந்தது. வாய்ப்புகள் இருந்தாலும் தன்னம்பிக்கை இல்லையென்றால் யாராலும் பிரச்சினையிலிருந்து மீள்வது கடினம்தான்

ஒரு உண்மைக் கதை. ஒரு இளைஞன். அவன் விருப்பப்பட்ட படிப்பு சில காரணங்களால் தடைபட்டது. அடுத்து என்ன செய்வது என்று அவனுக்கு புரியவில்லை. அவனை வீட்டில் யாரும் எதுவுமே சொல்லவில்லை. ஆனால் அவனுக்கு தாழ்வு மனப்பான்மை, விரக்தி அதிகமானது. தற்கொலை எண்ணம் கூட வந்தது. ஆனால் அதற்கும் அவனிடத்தில் தைரியம் இல்லை. அவன் நிலை பார்த்து அவன் பெற்றோர் அவனுக்கு ஆறுதல் சொன்னார்கள், ஊக்க்மளித்தார்கள். நாளடைவில் அவன் மனதில் இருந்த துளி தன்னம்பிக்கை விதை மரமாக வளர்ந்தது. தன் இலட்சியங்களை அடைந்து விடுவோம் என்று விடா நம்பிக்கையோடு இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறான்.


தன்னம்பிக்கை என்பது தன் மீது வைக்கும் நம்பிக்கை. தன் மீதும் தன்னை சுற்றியுள்ளவர் மீது நம்பிக்கையின்றி காட்வுள் நிறைவேற்றுவார் என சிலர் நம்புவார். அதுவும் தவறில்லை. நம்பிக்கை என்பது எரிபொருள் போன்றது அது இருக்கும் வரை நம்மை இயக்கிக் கொண்டே இருக்கும்.


தன்னம்பிக்கை என்பது இரண்டு விஷயங்களை கொண்டுள்ளது.

1. சுய ஆற்றல் 2. சுய மதிப்பீடு. சுய ஆற்றல் என்பது நம்மிடமும் நம்மை போன்றவர்களிடமும் உள்ள திறமைகளை உணரும்போது, இலக்குகளை அடையும்போது பெறும் உணர்வு. இது பெறப்படும் வெற்றிகளை சார்ந்தது. ஒரு செயலில் வெற்றிகளை பெற்றால் அதை செய்ய முடியும், தோல்வியடைந்தால் செய்ய முடியாது என முடிவுக்கு வருகிறோம். சுய மதிப்பீடு என்பது உங்களை பற்றி நீங்கள் உணரும் உணர்வு. இது மற்றவர்களின் கருத்தையும் சார்ந்தது மற்றவர்களின் கருத்திலிருந்தும் நாம் நம்மை பற்றிய மதிப்பீட்டை செய்கிறோம். தன்னம்பிக்கையின்மை உங்கள் முழுமையான மதிப்பை நீங்கள் புரிந்து கொள்ளாததால் உருவாகிறது.


தன்னம்பிக்கையை வளர்த்தல்-சில வழிகள்:

1. உடைகள் ஒருவர் தன்னைப் பற்றி உணர்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. உங்கள் வெளித்தோற்றம் குறித்து உங்களை விட வேறு யாரும் அதிகம் கவலைப்பட போவதில்லை. நீங்கள் நன்றாக உடையணியாவிட்டால், அது உங்களை மற்றவரிடத்தில் நீங்கள் வெளிப்படுத்துவதில் மாற்றத்தை உண்டாக்கும். குளியல், முகச்சவரம், சுத்தமான உடை, நவீன நாகரீகத் தோற்றம் போன்றவை கூட காரணிகளாக இருக்கலாம். இதற்காக நீங்கள் உடையணிவதில் பெரும் கவனம் செலுத்த வேண்டும் என்றில்லை. உங்கள் உடை உங்கள் மனநிலையில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடாது. உடல் வெளித்தோற்றம் போன்றே உடல் உள்தோற்றமும் தன்னம்பிக்கை வளர்ப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றனது. குண்டான/ஒல்லியான சிலர் தன்னம்பிக்கையின்றி காணப்படுவதை கண்டிருக்கலாம். முடிந்தவரை உடலமைப்பை பேண முயற்சியுங்கள். மேலும் உங்கள் உடலமைப்பை மனதளவில் ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்களும் மற்றவர்களும் சமம் என எண்ணுங்கள்.

2. ஒருவரின் நடையை வைத்தே அவரின் மனநிலையை கண்டறியலாம். தன்னம்பிக்கை உடைய நபர்கள் விரைவாக நடப்பார்கள். அவசரமில்லை என்றாலும் அவர்களின் நடையில் ஒரு துள்ளல், வேகம் இருக்கும். தளர்வாக நடத்தல்/உட்காருதல், மந்தமான அசைவுகள் தன்னம்பிக்கை இல்லாமையை வெளிப்படுத்துகிறது. எப்போது நேராக நின்று/உட்கார்ந்து முகத்தை நேராக வைத்துக் கொண்டு கண்ணுக்கு கண் பார்த்து பேச/கவனிக்க வேண்டும். இது நேர்மறை விளைவுகளை உண்டாக்கும். பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், பொது உடங்களில் சிலர் முன் வரிசையில் உட்கார தயங்குவார்கள், இது தன்னம்பிக்கை குறைபாட்டை காண்பிக்கிறது. முடிந்தவரை முன்னால் உட்காருங்கள். பல விவாதங்கள், பேச்சுக்கள், ஏன் சாதாரணமாக பொதுமக்கள் கூடி பேசுமிடத்தில் கூட சிலர் பேசாமல் அமைதியாக கேட்க மட்டும் செய்வார்கள். தான் ஏதாவது பேசினால் தன்னை குறைவாக மதிப்பிடலாம் என பயந்து பேசாமல் இருப்பார்கள். உங்கள் கருத்துக்கள் தவறோ சரியோ தைரியமாக பேசுங்கள் மேற்கண்ட அனைத்தும் நம் மனநிலையின் பெரும்காரணிகளாகும் இவற்றை பற்றி வேறொரு பதிவில் விரிவாக எழுதுகிறேன்.


3. ஊக்கப்படுத்தும் கட்டுரைகளை படியுங்கள், பேச்சுக்களை கேளுங்கள். இது தன்னம்பிக்கை உண்டாக்கும் முக்கிய வழியாகும். உங்கள் பலங்கள் மற்றும் குறிக்கோள்களை முன்னிலைப்படுத்தும், ஒரு 30-60 நிமிட பேச்சை எழுதுங்கள். பிறகு இதை தன்னம்பிக்கை அதிகப்படுத்த வேண்டும் என நினைக்கும்போது, கண்ணாடி முன் நின்று பேசிப் பாருங்கள். உங்கள் தேவைகளை பற்றி அதிகமாக யோசிக்கும்போது, அவை உங்களிடம் இல்லாததற்கான காரணங்களை மனம் உருவாக்கும். இது உங்களுக்குள் பலவீனங்களை உண்டாக்கும். இதனால் கடந்தகால வெற்றிகள், உங்கள் தனிப்பட்ட திறமைகள், அன்பான உறவுகள், நேர்மறையான நல்ல தருணங்களை நினைத்து பாருங்கள். இவை உங்கள் பலவீனங்களை நீக்கி வெற்றியை நோநோக்கி செல்ல உதவும்.


4. உங்களைப் பற்றி எதிர்மறையாக சிந்திப்பதற்கு பதிலாக, மற்றவர்களை பாராட்டும் பழக்கத்தை உண்டாக்குங்கள். மற்றவர்களை நீங்கள் பாராட்டும்போது, மறைமுகமாக உங்களையும் ஊக்கப்படுத்திக் கொள்கிறீர்கள். உங்கள் பாராட்டு முழுமனதோடு வெளிப்பட வேண்டும். நாம் நம் சொந்த ஆசைகளைப் பற்றி அடிக்கடி சிந்திக்கிறோம். மற்றவர்களின் தேவையை பற்றி போதுமான அளவு சிந்திப்பதில்லை. நம்மை பற்றி சிந்திப்பதை நிறுத்தி விட்டு உலகிற்கு நம்மால் என்ன செய்ய முடியும் என சிந்திக்க ஆர்ம்பித்தால், நம் ஆசைகள் நிறைவேறவில்லையே என்ற கவலை மனதில் தோன்றாது. இது தன்னம்பிக்கையையும் செயல்திறனையும் அதிகப்படுத்தும்.

தன்னம்பிக்கையை வளர்த்தல் என்பது உடனடியாக செய்யக்கூடியது கிடையாது. நாளடைவில் வளர்ப்பதாகும். தன்னம்பிக்கை எப்போதும் சமநிலையில் இருக்க வேண்டும் அது எப்போதும் ஆணவமாக மாறக் கூடாது. உங்கள் தன்னம்பிக்கை மனதில் மட்டும் இருக்க வேண்டும். அது அடிக்கடி வார்த்தைகளில் வெளிப்பட்டால் ஆணவமாக மாறலாம்.



கழுகிற்காக

எஸ்.கே


(கழுகு இன்னும ....உயர பறக்கும்)

Monday, October 11, 2010

ஈழம் என்ற கனவு..........!




ஈழம் என்பது ஏதோ ஒரு நாட்டில் நடக்கும் தனிப்பட்ட நாடு கேட்கும் பிரச்சினை மட்டுமல்ல. ஈழம் என்பது மனித உரிமை மீறல் நடந்த இடம். தமிழனின் உணர்வுகளும் வரலாற்று பெருமைகளும் பொசுக்கப்பட்ட இடம். உலகமே கூடி நின்று ஒரு வெறியாட்டத்தை நடத்திய களம். தமிழன் என்று பிறந்தவன் அதை மறக்க முடியாது....


வாழ்வின் எல்லா பக்கங்களும் கண்ணீரால் எழுதப்பட துரத்தப்பட்டன எம்மவரின் கால்கள். நொறுக்கப்பட்டன எம்மவரின் விலா எழும்புகள். எம் இன பெண்டிரின் கற்புகளை சூறையாடியது குள்ள நரி கூட்டம். எல்லாம் தாங்கிக் கொண்டு இருப்பதனால் மறப்பது என்பது சாத்தியமா...? சாத்தியமாய் இருந்தாலும் சாத்தியப்பட விடக்கூடாது ஒவ்வொரு தமிழனும்...

வஞ்சிக்கப்பட்டிருப்பது தமிழினம். இனம் சார்ந்த பார்வை குறுகியதுதான் என்றாலும் ஒரு தனிப்பட்ட மொழியை பேசியதாலேயே அடித்து நொறுக்கப்பட்டு இறுக்கிறது நமது இனம். ஆயுதம் ஏந்தினார்கள், சண்டையிட்டார்கள், வன்முறையின் பக்கம் போனார்கள் என்று குற்றம் சாட்டும் உலக நாடுகள் எல்லாம் அறவழியில் உண்ணா நோன்பு இருந்து திலீபன் மரித்த போது எங்கே போயிருந்தன... மரத்தடியில் கோலிக் குண்டு விளையாடவா?


ஏன் நொறூக்கப்பட்டோம்? ஏன் நொறுக்கப்பட்டோம் என்பதற்கு பின் அரசியல் காரணங்கள் ஓராயிரம் இருந்தாலும் சொந்தம் மண்ணில் குண்டுகளுக்கு பலியான சிறார்களுக்கும், வயிற்றிலேயே மரித்த சிசுக்களுக்கும்... பதில் சொல்ல..காலமும் சமுதாயமும், இந்த உலகமும் கடமைப்பட்டு இருக்கிறது.


இயற்கை எப்போதும் தனக்குத்தானே சமப்படுத்திக் கொண்டு சென்று கொண்டிருக்கிறது. கடந்த தடவை சமன் செய்யும் போது.... அது தீயவர்களுக்க்கு சாதகமாய் போய்விட்டது... ஆனால் மீண்டும் சமப்படுத்த மனிதர்கள் முயல்கிறார்களோ இல்லையோ..... இயற்கை சர்வ நிச்சயமாய் செய்யும்....!


கழுகுப்பார்வையில் ஈழத்தை சேர்ந்த தோழி மயோ மனோவின் வலைப்பக்கம் கண்ணில் சிக்கியது... அதிலிருந்த தோழியின் இந்தக் கவிதையை மிகைப்பட்ட பேரிடம் கொண்டு சேர்ப்பதில் கழுகு பெருமிதம் கொள்கிறது.
அதற்கான சுட்டி இதோ: http://thurkamano.blogspot.com/2009/10/blog-post_13.html


(கழுகு இன்னும ....உயர பறக்கும்)


Sunday, October 10, 2010

யார் இவர்கள்...?



என்ன செய்துவிடப்போகிறது...இந்த வாழ்க்கை? ஏற்றத்தாழ்வுகள் கொண்ட ஒரு சமுதாயத்தில் பணக்காரர்கள் தங்களுக்கு இருக்கும் பணத்தினை வைத்துக் கொண்டு மேலும் மேலும் தங்களின் வலிமையை அதிகரித்துக்கொள்ளப் போகிறார்கள். நடுத்தர மக்கள் பயந்து பயந்து சேர்த்து சேர்த்து சேமிப்பிலும் சமுதாய சட்டதிட்டங்களுக்கும் தம்மை போல இருக்கும் அக்கம்பக்கத்து உறவுகளுக்கும் பயந்து வாழ்க்கை நடத்தப் போகிறார்கள். கீழ்தட்டு மக்கள் அன்றாட வேலையும், கூலியும் அரியும் கஞ்சியும் என்று அடித்து பிடித்து ஒரு பணக்கார வாழ்க்கை வாழும் கனவுடன் இருக்கப் போகிறார்கள்.....இந்த மூன்றுமில்லாத நான்காவது தரத்தினை பற்றி யாருக்கு கவலை....


இந்த நான்காம் தரப்பு பெரும்பாலும் தெருவில் வசிக்கிறது. உடமைகள் தெருவோரம் குவிக்கப்பட்டு இருக்கிறது. இச்சையின் உச்சம் காமத்திலிருந்து சீறி குழந்தைகள் பெற்றுப்போட வைக்கிறது. அன்றாட வாழ்க்கை வாழ இவர்களின் வறுமையும், சிக்குப்பிடித்த தலையும், கந்தலான துணியும் உதவி செய்கிறது. இவர்களுக்கு ஓட்டுரிமை இல்லை ஏனென்றால் ரேசன் கார்டு இல்லை, வீடு இல்லை ஆனாலும் இந்திய தேசத்தில் வாழும் ஒரு வேற்று கிரகவாசிகள்தான் இவர்கள்.


ஒவ்வொரு சிக்னலிலும், தெருவோரங்களிலும் வாழும் மானுடர்கள்தான் இவர்கள்! வீட்டுக்கு ஒரு கலர் பெட்டி கொடுத்த அரசாங்கம் இவர்களை அடையாளம் கண்டு வேலை வாய்ப்பு வழங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்ற எமது எண்ணத்தில் ஏறிப்பாய்ந்து நசுக்குகிறது அதிகார வர்க்கத்தின் புல்டோசர்கள்.


பஸ்டாண்டிலும் குப்பை மேட்டிலும் வாழும் ஒளவை சொன்ன அரியதொரு படைப்பை பற்றி சிந்திக் கொண்டிருந்த வேளையில் நண்பர் பாலாசி நேற்று எழுதியிருந்த கவிதை செவுட்டில் அடித்தது...சொல்லாமல் ஒராயிரம் விளக்கத்தையும், உணர்வையும் கொடுத்த அந்த கவிதையை....
இன்னும் மிகைப்பட்ட பேர்களுக்கு கொண்டு செல்வதில் கழுகு பெருமிதம் கொள்கிறது.



அதற்கான சுட்டி இதோ: http://balasee.blogspot.com/2010/10/blog-post.html

    கழுகு 

(கழுகு இன்னும ....உயர பறக்கும்)



Saturday, October 09, 2010

உறவுகள் என்பது...



ஒரு மிகப்பெரிய புரிதல் வேண்டியிருக்கிறது நட்புகளையும் உறவுகளையும் கை கோர்த்து வாழ்க்கையின் வழியே செல்வதற்கு ஏனெனில் பலதரப்பட்ட குணாதிசயங்கள் கொண்ட ஒரு மனிதன் கூடி வாழவேண்டும் என்ற ஒரு அடைப்பிற்குள் அடைப்பட்டு வாழ்வது அத்தியாவசியமாகிறது

சமுதாயமும் வாழ்வும் செழிக்க, அரசும், இன்ன பிற தன்னார்வு தொண்டு நிறுவனங்களும் எத்தனை போராடினாலும் அதற்கான பலன் என்பது மில்லி மீட்டரில்தான் இருக்கிறது. ஏன் இப்படி? எத்தனையோ ஊடகங்கள் உலக பிரச்சினை முதல் உள்ளூர் குப்புசாமி பிரச்சினை வரை எல்லாவற்றையும் படம் போட்டு மக்கள் முன் காட்டுகின்றன. தங்களை நியாயத்தின் காவலர்கள் என்று காட்டிக் கொண்டும் சட்டாம் பிள்ளையாக தவறுகளை அதிரடியாக சுட்டிக்காட்டும் இவர்கள்.....சொல்யூசன் என்று சொல்லக்கூடிய தீர்வுகளை கொடுப்பதில்லை.

பிரச்சினைகளைப் பற்றி பேசுவதிலும் அது பற்றி காரசாரமாய் விவாதிப்பதிலும் தம்மை விளம்பரப்படுத்தி கொள்வதில் தான் முனைப்புகள் இருக்கிறதன்றி....மனிதர்களின் பிரச்சினைகளின் மூலத்தை அறிந்து, அதற்கு பயன் தரும் வகையில் கருத்துக்கள் எப்போதும் பகிரப்படுவதில்லை. இப்படி செய்வது இன்னும் ஆபத்தானது. அது மனித உணர்வுகளை, அக்கிரமங்களுக்கு எதிராக கிளர்ந்தெழச் செய்யும், உணர்வு பொங்க பேசச் செய்யும். ஆனால் அறிவினை பகிராது...எதிர்காலத்தில் சந்ததியினருக்கு நன்மைகள் தராது.....


மனிதவளம் மேம்பட வேண்டும். மனிதவளம் மேம்பட, உறவுகளில் புரிதல் வேண்டும். உறவுகளில் புரிதல் இருந்தால் அன்பாய் மிளிரும் இந்த உலகம். அடிப்படையில் அன்பு இருந்தால் கருணையில் விட்டுக்கொடுப்பதும், சக மனிதரை மதித்து நடப்பதும் தானாய் நடக்கும். அப்போது சட்டாம்பிள்ளைகள் நமக்கு தேவையில்லை. ஒரு விசயத்தை கருத்தில் தெளிவாய் கொள்ள வேண்டும்....மிகைப்பட்ட பிரச்சினைகள் உருவாக்கப்படுவதில் பெரும்பங்கு தம்மை சட்டாபிள்ளையாக காட்டிக் கொள்ள முனையும் மனிதர்களாலேயே உருவாக்கப்படுகிறது....


வலைப் பூக்களை மேய்ந்து கொண்டிருந்த கழுகு கண்களுக்கு இந்த வலைப்பூ கண்ணில் பட்டது...ஏதோ ஒரு கருத்தினை தொட்டுவிட்டு செல்ல முனைந்திருக்கும் இந்த கட்டுரையை மிகைப்பட்டவர்களிடம் கொண்டு சேர்ப்பதில் கழுகு பெருமிதம் கொள்கிறது.

அதற்கான சுட்டி இதோ... http://tvrk.blogspot.com/2010/10/blog-post_07.html


(கழுகு இன்னும ....உயர பறக்கும்)

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes