Friday, April 29, 2011

ஒரு ஜனநாயக யுத்தம்....!!!!


கூகிள் இலவசமாய் வலைப் பூக்களை வழங்குகிறது. ஒரு உத்வேகத்தில் உருவாக்கப் பட்ட கழுகின் ஆரம்ப கால தருணங்களில் ஈழப்போர் நடந்து கொண்டிருந்தது. கூட்டம் கூட்டமாக எம் மக்கள் குண்டடி பட்டு இறந்து கொண்டிருந்தனர். விடுதலைப் புலிகளும் கிளிநொச்சியில் ஆரம்பித்து ஆனையிறவுலிருந்து ஒவ்வொன்றாக இழந்து பின் தங்கிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அதிக ஈழச் செய்திகளை இணையத்தில் வாசித்து வாசித்து அங்கே நிகந்து கொண்டிருந்த கொடுங்காட்சிகளை சகிக்கவொண்ணமல் இயலாமையை எழுத்தாக்கிப் பார்த்த போது கழுகு என்ற குழந்தை  ஜனித்திருந்தது.


அவ்வபோது சமுதாயத்தில் நிகழும் அட்டூழியங்களையும், அதர்மங்களையும் வெறுமனே பார்த்து சகித்துச் சென்று கொண்டிருக்க வேண்டியதுதானா? ஏதேனும் எம்மக்களுக்கு பகிர வேண்டாமா என்ற சிந்தித்த போது இணையத்தில் எழுதி என்ன செய்ய முடியும் என்று சில எதிர்மறைக் கருத்துக்களை சந்திக்க வேண்டிய சூழலும் எமக்கு வந்தது. பிறகு ஆழ யோசித்ததில் ' இதைச் செய்து என்ன பண்ண முடியும் ? ' என்ற வாக்கியத்தை நமது எல்லா செயல்களுக்குமே கேள்வியாக்கிப் பார்த்தோமானால் எதுவே செய்யாமல் சவமாய் ஒரு மூலையில் சமைந்து கிடக்கவேண்டியதுதான்....என்ற ஒரு எண்ணமும் சூரியக் கதிராய் எம்முள் பளிச்சிட்டது.


ஒத்த கருத்துள்ள இதயங்கள் ஒன்று சேர்ந்த பொழுதில் ஒரு கொள்கை ஒன்று நமக்கு வேண்டுமே என்று சம்மட்டியால் அடித்த நினைவுகளை சமன் செய்து.... அந்த கொள்கைக்கு....

                                              " சமூக விழிப்புணர்வு "


என்று பெயரிட்டு அந்த ஒற்றை எண்ணத்தை விதைகளாய் தூவ ஆரம்பித்தோம். இங்கே மனித தலைகள் வழி நடத்தாது மாறாக கருத்துக்கள் வீரியமாய் மனிதர்களை வழி நடத்தும் என்ற எமது எண்ணத்தையும் பகின்றோம். கழுகின் இறகுகள் எல்லாம் பலம் பெற, பலம் பெற, மெல்ல மெல்ல எமது சிறகசைத்து எல்லையில்லா வானத்தின் மீதேறி ஒரு வீரப்பார்வையை யாம் பார்த்த கணம்...காலங்கள் கடந்தும் எமது தோழர்களின் சிந்தனைகளுக்கு உரமூட்டுமென்பது திண்ணம்.


கட்டுரைகளை சமைத்ததோடு வலுவான கட்டுரைகள் எங்கெல்லாம் பதிவுலக ஏகாதிபத்தியத்தால் ஒதுக்கப்பட்டு கிடந்ததோ அவற்றையெல்லாம் கழுகு தனது அலகினால் கொத்தி எடுத்து வந்து அனைவரின் பார்வைகளிலும் கிடத்தியது. விமர்சனம் என்ற பெயரில் தனி மனித தாக்குதல்கள் நடந்த பொழுதெல்லாம் கழுகு தனது பிடரி சிலிர்க்க சண்டையேதும் செய்யாமல் கோபப் பார்வை பார்த்தே தீர்வுகளை இயம்பியிருக்கிறது.


எம் தோழர்களின் எழுத்துக்களிலும் எண்ணங்களிலும் இருந்த மெருகினை, அவர்களின் சிந்தனா சக்திகளை எல்லாம் கழுகின் வளர்ச்சிக்காக கொடுத்த போது இரு கண்ணிலும்  நீர் பெருக தலை வணங்கி தன் நன்றிகளை தெரிவித்து கழுகின் ஜீவனுள்ள உயிர்களாய் அவர்களை பாவித்திருக்கிறது, பாவிக்கிறது...


கழுகு விவாதக்குழுவின் அமைப்பில் தீரமுடன் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் கருத்து வேங்கைகள் எல்லாம் உற்சாகமாய் கழுகோடு ஒண்றினைந்து விழுப்புணர்வு போரில் கழுகாய் மாறி  சூழல்களின் முரண்பாடுகளுக்கு தீர்வு சொல்ல...கழுகு இதோ உங்கள் முன் விஸ்வரூபம் எடுக்கும் நிகழ்வுக்கு முந்தைய படியில் நிற்கிறது....!


கடந்த வருடத்தின் ஜூலை மாதத்தில் பிறந்த கழுகின் கரங்கள் இந்த வருடத்தில் வலுப்பட்டு போனதற்கு முழு முதற்காரணம் எமது விவாதக் குழு தோழர்கள்...! இதோ ஒட்டு மொத்த இறகுகளும் ஒன்று சேர்ந்து 100 என்ற இலக்கினை சாதாரண ஒரு எண்ணிக்கையாக மட்டுமே பார்த்து கடந்து கொண்டிருக்கிறோம். இந்த நூறில் ஒன்று கூட விழலுக்கு போகவில்லை, இந்த நூறில் ஒன்றில் கூட  பகட்டில்லை.. இந்த நூறில் எந்த வியாபார யுத்தியும் இல்லை.. இந்த நூறில் எந்தப் பொய்களும் இல்லை..இந்த நூறில் எந்த ஒரு கொடுக்கல் வாங்கலும் இல்லை... இந்த நூறும்....


" விழிப்புணர்வு இறகுகள் கூடி எம்மின் சிறகுக்கு வலு கொடுத்த ..ஆயுதங்களாய் மாறிய அற்புதம் மட்டும் நடந்தேறியிருக்கின்றது "


ஒரு ஐந்து பேருக்காவது யாம் பயன் பட்டிருபோமென்றால் ஒரு ஐந்து பேரின் புத்திக்குள் புது விசங்களை கொடுத்திருப்போமென்றால்...ஒரு மைக்ரோ மில்லி மீட்டர் மனித மூளைகளை நகர்த்தியிருக்கிறோமென்றால்...........அது எமது இமாலய வெற்றி..!

இதோ கழுகு சிலிர்த்து நிற்கிறது உங்கள் முன்...! 


திக்குகளெட்டும் முரசு கொட்டி செவிகள் கிழிய அறிவிக்கிறோம்...எமது விழிப்புணர்வு போர் கம்பீரமானது....!!! இங்கே எமது சமுயாத்திற்கு எம்மால் இயன்றதை சர்வ நிச்சயமாய் செய்வோம்... என்ற செய்தியினை!!! '


கழுகு விவாதக் குழு நண்பர்கள் அனைவருக்கும், சமுதாய விழிப்புணர்வில் ஆர்வம் கொண்டு எம்மை வலுப்படுத்த புறத்திலிருந்து அரவணைக்கும் தோழர்களுக்கும், தோழிகளுக்கும் கழுகின் சிரம் தாழ்ந்த நன்றிகளை காணிக்கையாக்கி....


எமது சிறகடிப்பினை தொடர்கிறோம்...!!!!!




(கழுகு இன்னும் உயரப் பறக்கும்...)


6 comments:

சேலம் தேவா said...

சிறகடிப்பில் எனக்கும் உள்ள சிறு பங்கை நினைத்து மகிழ்கிறேன்.

TERROR-PANDIYAN(VAS) said...

அருமையான எழுத்து நடை. வாழ்த்துக்கள். புல்லுருவிகளின் புகழ்ச்சியில் புளங்காங்கிதம் அடையாமல் உற்று நோக்கி சமநீதி பாவிப்பதில் சற்றும் தளராமல், எத்திசையும் எம் திசையே என்று பறைசாற்றி, திசை எட்டும் சிகரங்களை தாண்டி விண்ணைக் கிழித்து மேலும் மேலும் பறக்க வாழ்த்துக்கள்.

இம்சைஅரசன் பாபு.. said...

எழுத்து நடை நன்றாக உள்ளது .தராசை போல சமநோக்கு பார்வையுடன் எல்ல திசைகளும் என் திசையே என்று ..இமயம் நோக்கி மேலும் பறக்க வாழ்த்துகள்..

MANO நாஞ்சில் மனோ said...

கழுகு இன்னும் பறக்கட்டும்....

ரஹீம் கஸ்ஸாலி said...

தொடரட்டும் கழுகின் பயணம்....இன்னும் உயரே பறக்க விரிக்கட்டும் அதன் சிறகுகளை

வைகை said...

கழுகின் சிறகுகளில் நானும் ஒரு இறகு என்ற பெருமையோடு வாழ்த்துகிறேன்!

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes