Monday, May 07, 2012

லஞ்சத்தில் கொழிக்கும் திருச்சி ஏர்போர்ட் அதிகாரிகள்...! ஒரு அனுபவப் பகிர்வு!

திருவிளையாடலில் ஒரு வசனம் வரும் " பிரிக்க முடியாதது எதுவோ?" என்று, அந்த சிவாஜி மட்டும் இன்று உயிரோடு இருந்திருந்தால், கண்டிப்பாக " இந்தியாவும் லஞ்சமும் என்றுதான் பதில் சொல்லியிருப்பார்! இரண்டு சாரைப்பாம்புகள் ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைவது போல் பிண்ணிப் பிணைந்து கிடக்கிறது லஞ்சமும் இந்தியர்களின் ரத்தமும்! நியாயமான அரசாங்க சேவைகளைப்  பெறுவதற்குக்  கூட இன்று லஞ்சம் கொடுக்காமல் எதையும் நாம் சாதித்துவிட முடியாது என்ற சூழ்நிலையில்தான் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். கொடுக்கப்பட்டது எவ்வளவு லஞ்சம் என்ற வகையில்தான் நாம் அடுத்தவர்களோடு நம்மை  ஒப்பிட்டுப்  பார்த்து ஆறுதல் அடைய வேண்டியிருக்கிறது. படங்களில் ஊழல் செய்பவனை கதாநாயகன் தண்டிக்கும்போது முதல் ஆளாக கைதட்டும்  நாம்தான், நமக்கும் லஞ்சம் வாங்கும் சந்தர்பம் வரும்போது  கை தட்ட நீட்டிய கையை உள்ளே இழுப்பதில்லை என்பதே உண்மை!

லஞ்சம் வாங்கி வாழ்பவனே பிழைக்கத் தெரிந்தவன் என்ற இந்திய மனப்பான்மைக்கு நாம் ஒவ்வொருவரும் நம்மை அறியாமலே மாறிக்கொண்டு இருக்கிறோம்! என் வேலை எனக்கு சீக்கிரம் முடிய வேண்டும்! அதற்கு நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் எவ்வளவு லஞ்சம் வேண்டுமானாலும் கொடுப்பேன் என்றுதான் ஒவ்வொருவரும் இந்திய நேர்மையில் இருந்து ஒவ்வொரு செங்கலாக உருவிக் கொண்டிருக்கிறோம்! என்றாவது ஒட்டுமொத்தமாக தலையில் விழும்போது காப்பாற்ற யாருமே இருக்கப்போவதில்லை என்பது மட்டும் நிதர்சனம்! சரி.. இந்த கதையெல்லாம் வேணாம் தலைப்புக்கு வாங்கன்னு சொல்றீங்களா? அதுவும் சரிதான்... சமீபத்தில் சிங்கையில் இருந்து இந்தியா சென்றிருந்தேன், என்னைப்போல தென் மாவட்டங்களில் உள்ளவர்களுக்கெல்லாம் திருச்சி விமான நிலையம்தான் முதல் தேர்வு!

அவ்வாறே நானும் திருச்சிக்கு சென்றேன். விமான நிலையம் புது கட்டிடத்துக்கு மாறி வெகு நாட்கள் ஆகிவிட்டது, ஆனால் அங்கு வேலை பார்க்கும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் மன அழுக்கு மட்டும் இன்னும் அப்படியே உள்ளது. விமானத்தை விட்டு இறங்கி குடிநுழைவுச் சோதனைக்கு சென்றதில் இருந்தே நமக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்துக்கொண்டு இருக்கிறது. அவைகளை மொத்தமாகச் சொல்லாமல் ஒவ்வொரு சம்பவமாகத் தொகுத்துச் சொல்கிறேன், நீளம் கொஞ்சம் அதிகமாக இருக்கும், ஆனாலும் கண்டிப்பாக சொல்லியே ஆகவேண்டிய சூழ்நிலைதான் இப்போது அங்கே நிலவுகிறது! ஏற்கனவே ஒருமுறை ABT ட்ராவல்ஸின் அராஜகம்! என்ற பதிவிற்கு கிடைத்த உங்கள்  ஆதரவின் உந்துதலால் இதையும் எழுதுகிறேன். தீர்வு கிடைக்கிறதோ இல்லையோ இனி அங்கு செல்பவர்களுக்கு இது  ஒரு எச்சரிக்கையாகவாது இருக்கட்டும்!



சம்பவம் ஒன்று.
விமானத்தை விட்டு  இறங்கி ஒரு பேருந்தில் கொண்டு போய்  குடிநுழைவு வாசலில் ( Immigration Check point ) இறக்கிவிட்டனர். என்னதான் அடிக்கடி வந்துபோனாலும் விமானத்தில் ஏறியதுமுதல் சொந்த பந்தங்களை காணும் ஆவல்தான் வீடு போய் அவர்களை பார்க்கும்வரை இருக்கும்! ஒவ்வொருவருமே அந்த ஆசைகளை சுமந்துதான் நீண்ட வரிசையில் நிற்கிறார்கள். ஒரு விமானம் முழுவதும் வந்த பயணிகளுக்கு மூன்றே மூன்று அதிகாரிகள்தான்! அதுகூட மிட்நைட் என்பதால் அதிகாரிகள் குறைவு என்று எடுத்துக்கொள்ளலாம்! ஆனால் அதன்பிறகு நடந்ததுதான் கொடுமை!

நாங்கள் வரிசையில் நிற்கும்போதே ஒருவர் உள்ளே இருந்து வந்து ஒரு பெயரை சொல்லி அழைத்துக்கொண்டே வந்தார், உடனே அவர் பெயர் சொல்லி அழைத்த நபர் தன் மனைவியோடு வரிசையின் கடைசியில் இருந்து வந்து எந்தவித கூச்சமும் இல்லாமல் வாயெல்லாம் பல்லாக வரிசையில் நிற்பவர்களை கடந்து அந்த ஊழியரை பின்தொடந்து சென்றார்! அதிகாரிகளும் அவர்களுக்கு முதலில் செக் செய்து அனுப்புகின்றனர்! அந்த ஒருவர் மட்டும் அல்ல அதன் பிறகும் இதேபோல இன்னும் இரண்டுபேரை அந்த ஊழியர் அழைத்துக்கொண்டு சென்றார்! எந்த நாட்டு இன்டர் நேசனல் ஏர்போர்ட்டிலும் காணக்கிடைக்காத காட்சி அது! அருகில் நின்று கொண்டிருந்தவர் சொன்னார், அவர்கள் அந்த விமான நிலையத்தில் வேலை பார்க்கும் ஏதாவது ஒரு அதிகாரிக்கு உறவாக இருக்கும் என்று! அப்படியே உறவு இல்லையென்றாலும் இதேபோல் செல்ல வாய்ப்புள்ளது என்று அவர் சொன்னதுதான் அதிர்ச்சியின் உச்சம்!

அதாவது, நம்மை வரவேற்க வந்தவர்கள் இதற்கென சிலரை பிடித்து தள்ளுவதை தள்ளி நாம் பெயரை அவர்களிடம் கொடுத்துவிட்டால் போதும், அவர்களும் கடமை தவறாமல் நம்மை வரிசையில் நிற்கவிடாமல் உறவு என்று சொல்லி அழைத்துவிடுவார்கள்! இந்த நேரத்தில் இன்னொன்றையும் இங்கே சொல்ல வேண்டும், சிங்கபூர் நான் பிழைக்க வந்த நாடுதான், ஆனால் நிரந்தரவாசியாக இருந்தால்கூட போதும் எந்த நாட்டிற்கு போனாலும் எந்த நாட்டில் இருந்து வந்தாலும் குடிநுழைவுக்கு எந்த வரிசையிலும் நிற்க வேண்டாம், எனது இந்தியன் பாஸ்போர்ட்டை வைத்து ஆட்டோ ஸ்கேனிங்கில் வந்து விடலாம். ஆனால் சொந்த நாட்டில் சொந்த நாட்டு பாஸ்போர்ட்டை வைத்துகொண்டு இந்த அவலங்களை எல்லாம் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது! 

சம்பவம் இரண்டு.

ஒருவழியாக இமிக்ரேசன் முடிந்து வந்தால் அடுத்து லக்கேஜ் கலெக்சன். இந்த முறை எனக்கு ஒரே ஒரு செக் இன் லக்கேஜ் மட்டுமே, இங்கு ஐ.டி. ஷோவில் வாங்கிய ஒரு LED T.V . இங்கு அதை செக் இன் செய்து கன்வேயரில் அனுப்புவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஏனென்றால், இதுபோல எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஐட்டங்களுக்கு தனி  கன்வேயர்! ஆனால் திருச்சி கன்வேயர் பற்றி சொல்லவே வேணாம், புது விமான நிலையத்தில் இப்படி ஒரு டிசைனிங்?! அந்த கன்வேயரில் வரும் உங்கள் லக்கேஜ் சேதப்படாமல் வந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலிதான்! சரி.. அதைப்பற்றி தனியாகவே எழுதலாம் அவ்வளவு இருக்கு! பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.

இந்த காரணங்களால் டிவி போன்ற ஹேண்டில் கேர் ஐட்டங்களை கன்வேயரில் அனுப்பாமல் தனியாக சைடில் உள்ள வாசல் வழியாக எடுத்து வைப்பார்கள், எனது டிவி யையும் எடுத்து வைப்பார்கள் என்று காத்துகொன்டிருந்தேன், ஆனால் எடுத்துவைத்தபாட்டைக் காணும்! ஆனால் மற்றவர்கள் ஒவ்வொருவராக எடுத்துகொண்டு சென்றார்கள். சரி.. அருகில் சென்று கேட்கலாம் என்று அங்கு சென்றேன், நான் போனதுமே அங்கு உள்ள ஒரு ஊழியர் வந்து " உங்களது என்ன பொருள் சார்?" என்றார், நானும் டிவி என்று மாடலையும் சொன்னேன், கேட்டுக்கொண்டு வேகமாக உள்ளே சென்றார், நானும் பரவாயில்லை நல்ல சர்வீஸ் என்று நினைத்தேன்! ஆனால் கொஞ்ச நேரத்திலே என் நினைப்பில் அவர் மண் அள்ளிப்போட்டார்! வேகமாக வெளியில் வந்து " இருக்கு சார், கொஞ்சம் கவனிங்க எடுத்துட்டு வர்றேன்" என்றார்!

எனக்கு முதலில் புரியவில்லை, பின்னர்தான் கவனித்தேன் அருகில் இருப்பவர்கள் நூறு ரூபாயை அவர் கைகளில் திணித்துவிட்டு தங்கள் பொருட்களை எடுத்துக்கொண்டனர்! நான் அவரிடம் கேட்டேன் " ஏன் சார்..பணம் கொடுக்கலைனா நம்ம திங்க்ஸ எடுக்க முடியாதா? எடுத்து வைக்கிறதுதானே அவங்க வேலை? என்றேன், அவரும் " சார்.. நாம சண்டை போடலாம்.. முதலில் நமக்கு நேரம் இல்லை. இரண்டாவது உங்க டிவி 40,000 ரூபாய்னு வைங்க, இந்த நூறு ரூபாய்க்கு பார்த்தா, உள்ளேயே   வச்சு  சம்திங் டேமேஜ் பண்ணிட்டு கன்வேயர்ல டேமேஜ்  ஆயிருச்சுன்னு சொல்வாங்க" என்றார்! அதிர்சியுடனே அந்த நாய்களுக்கு எலும்புத்துண்டை வீசிவிட்டு டிவியை எடுத்துகொண்டு வந்தேன்! இதையும் மீறி நகரும்போது அங்கு பாதுகாப்புக்கு இருந்த கான்ஸ்டபிள் " தம்பி.. கொடுக்கவேண்டியதை கொடுத்திட்டிங்களா? என்றார்! இத்தனையும் கன்வேயர் ரூமுக்குள் இருந்த ஒரு கஸ்டம் ஆபிசர் நன்றாக கண்காணித்துக் கொண்டிருந்தார்! யார் எவ்வளவு கொடுக்கிறார்கள் என்று! கூட்டுக்கொள்ளை! 

சம்பவம் மூன்று.

டிவியை எடுத்துகொண்டு அடுத்து சுங்கச் சோதனை! கண்டிப்பாக டிவி போன்ற சாதனங்களுக்கு சுங்கவரி ( TAX ) உண்டு  என்று தெரியும். ஏற்கனவே ஒருமுறை கட்டி இருப்பதால் அதற்கு தயாராகவே வந்தேன். தனியாக இதற்கென இரண்டு அதிகாரிகள் இருந்தனர். அவர்களிடம் சென்று எனது டிவி மாடல் மற்றும் விலைகளை சரி பார்த்து 3750 ரூபாய் கட்ட சொன்னார்கள்! எனக்கும் சந்தோசமே, ஏனென்றால் இதற்குப்  பில் கொடுத்துவிடுவார்கள்! ஒரு பைசா கூட அந்த அதிகாரிகள் எடுக்க முடியாது! சரி என்று கட்டப் போகும்போது அதில் இருந்த ஒரு அதிகாரி எனக்கு பின்னால்  வந்து மெதுவாக " தம்பி, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, அந்தப்பக்கம் சைட்ல சோபால உட்காந்திருக்கதுதான் எங்க சீனியர் ஆபிசர்! அவர் இப்ப போயிருவார், அவர் போனதும் 2000 மட்டும் கொடுத்திட்டு உங்க டிவிய எடுத்துக்கிட்டு போய்கிட்டே இருங்க" என்றார்! 

மேலும் " நேரம் காலம் தெரியாம இங்க வந்து உக்காந்துகிட்டு எங்க பொழப்புல மண்ண போடறான்" என்று அந்த சீனியர் ஆபிசரையும் திட்டிக்கொண்டே சென்றார்! இந்தியன் படத்துல நிழல்கள் ரவிய கமல் கொல்லப்போகும் போது அவருக்கே லஞ்சம் கொடுக்கிறேன்னு நிழல்கள் ரவி  சொல்லும்போது கமல் ஆயாசமா கன்னத்துல கைய வச்சிக்கிட்டு சொல்லுவாரே " உன்னை கொல்றதுல தப்பே இல்லடான்னு" அதுதாங்க அப்ப மனசுல வந்துச்சு! சரி நீ ஆணியே புடுங்க வேண்டாம்னு முழு தொகையும் கட்டிட்டு டிவியை எடுத்துக்கிட்டு வெளில வந்துட்டேன்!

சம்பவம் நான்கு.

எல்லாத்  தொல்லைகளும் முடிந்து அப்பாடான்னு வெளில வந்து  லக்கேஜ் எல்லாவற்றையும் காரில் ஏற்றிவிட்டு திரும்பினா, நான் கொண்டுவந்த ட்ராலிய வாங்குறதுக்காக ஒரு ஊழியர் தயாராக நின்றார்! பரவாயில்ல... இந்த சர்விசாவது நல்லா இருக்கு என்று நினைப்பதற்குள் அதற்கும் ஒரு சம்மட்டி அடி! ட்ராலியை எடுத்துகொண்டு தலைய சொரிந்தார் அந்த ஊழியர், " என்னப்பா என்ன வேணும்?" என்றேன், "பார்த்து கவனிங்க சார், ட்ராலிய தள்ளிட்டு உள்ள போகணும்" என்றார்! நானும் விடாமல் " போங்க.. அதுக்குதானே உங்களுக்கு சம்பளம் கொடுத்து வச்சிருக்காங்க?" என்றேன், 

" என்ன சார் நீங்க? ஒவ்வொருத்த ரெண்டு வெள்ளி, பத்து வெள்ளின்னு கொடுத்துட்டுப்  போறாங்க, இதுக்குப் போய் கணக்கு பார்க்குறீங்க?" என்றார் சாதரணமாக! எனக்கு வந்த கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவரிடம் சொன்னேன் " அண்ணே. இன்னும் சிங்கபூர்ல தினக்கூலிக்கு  வர்ற நம்ம ஆளுங்களுக்கு ஒரு நாள் சம்பளமே 18 வெள்ளிதான்! இங்க ட்ராலி தள்ளியே அவ்வளவு சம்பாதிக்க முடியும்னா எனக்கும்  ஒரு வேலை இங்க வாங்கித் தாங்க, நானும் வந்து ட்ராலி தள்ளுகிறேன்" என்றேன்! அந்த முனகியபடியே திரும்பிச் சென்றார்! கண்டிப்பாக கெட்ட வார்த்தையில் திட்டியபடியே சென்றிருப்பார்! 

சம்பவம் ஐந்து.

எல்லாவற்றையும் கடந்து வீட்டுக்குச் செல்லும் ஆர்வத்தோடு விமான நிலையத்தை விட்டு  வெளியில் வந்தால், கொஞ்ச  தூரத்தில் போலிஸ் செக் போஸ்ட்! அதை தொடும் முன்னரே ஒரு போலிஸ் வந்து நிறுத்தச் சொல்லி கை காட்டினார், நிறுத்தியவுடன் டிரைவர் சீட் பக்கம் குனிந்தார் அவர், என்னவோ என்று கண்ணாடியை இறக்கினால் குப்பென்று அடித்தது சரக்கு வாடை! டிரைவர் சீட்டில் இருந்த என் மாமாவிடம் " என்ன புதுசா? கவனிச்சிகிட்டு போய்க்கிட்டே இருங்க, ஐயா உள்ளதான் இருக்காரு" என்றார்! 

உடனே என் மாமாவும் ஒரு ஐம்பது ரூபாயை எடுத்து நீட்டவும் " ஓக்கே ரைட்..போய்க்கிட்டே இருங்க" என்று கை காட்டி அனுப்பி வைத்தார்! நான் கொஞ்சம் எட்டிப்பார்த்தேன், அவர் சொன்ன ஐயா, நன்றாக தூங்கியபடி டியூட்டி பார்த்துக் கொண்டிருந்தார்! மாமாவிடம் கேட்டேன் " நாம பணம் கொடுக்கலைனா என்ன பண்ணுவாங்க?" என்று, "என்ன பண்ணுவாங்க? சந்தேகமா இருக்கு செக் பண்ணனும்னு லேட் பண்ணுவாங்க, இன்னும் கொஞ்சம் மோசமான ஆளுங்களா இருந்தா, கஞ்சா பாக்கெட்ட அவங்களே போட்டு நம்ம கார்ல இருந்துதான் எடுத்ததா வழக்கு போடுவாங்க" என்றார்!  அரசாங்க அதிகாரிகளைப் பற்றிய மக்களின் இந்தப் பயம்தான் அவர்களை மேலும் லஞ்சமயமாக வாழவைத்து  கொண்டிருக்கிறது! 

சம்பவம் ஆறு.

விடுமுறையை சந்தோசமாக கழித்துவிட்டு திரும்ப சிங்கை வர அதே திருச்சி விமான நிலையம்! சரி.. எந்தப் பிரச்னையும் இருக்காது, ஏனென்றால் என்னிடம் செக் இன் லக்கேஜ் இல்லை! ஒரு ஹேன்ட் லக்கேஜ் மற்றும் லேப் டாப் மட்டுமே என்று நினைத்துதான் வந்தேன். ஆனால் அப்போதும் லஞ்சம் தன் கோரப் பற்களை காட்டியபடி என்னை வரவேற்றது! இந்தமுறையும் இமிக்ரேசனில் நீண்ட வரிசை! இன்னும் கொடுமை என்னவென்றால், மூன்று விமானங்கள் குறைந்த நேர இடைவெளியில் கிளம்பும், மூன்று விமான பயணிகளையும் கையாள அதே மூன்று அதிகாரிகள் மட்டுமே! நான் சிங்கைக்கு வரும் பயண நேரத்தைவிட விமான நிலையத்தில் செலவழிக்கும் நேரம் அதிகம்! ஒருவழியாக இமிக்ரேசன் முடிந்து உள்ளே போகும் முன் ஒரு கஸ்டம் ஆபிசரும் அவருக்கு துணையாக ஒரு போலிசும் இருந்து பாஸ்போர்ட்டை செக் செய்து அனுப்புவார்கள்.

என் பாஸ்போர்ட்டை வாங்கி புரட்டிப் பார்த்த அந்த போலிஸ் " என்ன தம்பி.அடிக்கடி வந்து போவீங்க போல? உங்களுக்கெல்லாம் நான் சொல்ல வேண்டியதே இல்லை, கவனிச்சிக்கிட்டு போய்கிட்டே இருங்க" என்றார்! அந்த நேரம் பார்த்து டைகர் ஏர்வேசின் செக்கிங் எஜன்ட் வர, நான் நழுவி எஸ்கலேட்டரில்  ஏற ஆரம்பித்தேன், அவரும் விட வில்லை என் பின்னாடியே வந்துவிட்டார்! " தம்பி..கவனிச்சிட்டு போங்க" என்று! திரும்பவும் மேலே ஒரு பெண் என் போர்டிங் பாஸை செக் செய்து ஓக்கே சொல்லவும் உடனே உள்ளே போய் விட்டேன்! உள்ளே போய் எல்லா ஃபார்மாலிடீஸ் முடிந்தபின் திரும்பிப் பார்த்தேன், அப்பவும் அவர் இடுப்பில் கை வைத்து என்னை முறைத்தபடியே நின்றார்! என்னைப்போல அடிக்கடி வந்து செல்பவர்களையே இவர்கள் இந்தப் பாடு படுத்தினால், அதிகம் படிக்காமல் முதல் முறை வெளிநாடு செல்பவர்களை இவர்கள் என்ன பாடு படுத்துவார்கள்? பணம் கொடுத்தால்தான் பயணமே சாத்தியம் என்று சொன்னாலும் சொல்வார்கள்! இவர்களுக்கு ஏன் இந்தப் பிழைப்பு?


இந்த நீண்ட கட்டுரையை படித்து முடிக்கும் உங்களுக்கே இவ்வளவு ஆயாசமாக இருக்கும்போது, இதை ஒவ்வொரு பயணத்திலும் அனுபவிக்கும் பயணிகளின் நிலையை நினைத்துப்பாருங்கள்! பல வெளிநாட்டினர் வந்துபோகும் இது போன்ற இடங்களில் நம் மானத்தை நேரடியாக விமானத்தில் ஏற்றிக் கொண்டிருக்கின்றனர் இந்த ஊழல் அதிகாரிகள்! இந்தியனாக பிறந்த ஒவ்வொருவரும் லஞ்சத்தை தவிர்த்து வாழவே முடியாத சூழ்நிலையில் கொண்டுவந்து தள்ளிவிட்டது இந்த அதிகார வர்க்கம்! லஞ்சம் என்றால் என்னவென்றே தெரியக்கூடாத குழந்தைகளை லஞ்சம் கொடுத்துதான் பள்ளியில் சேர்க்கிறோம்! லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் தவறு என்று போதிக்க வேண்டிய ஆசிரியரே லஞ்சம் கொடுத்துதான் அந்த வேலைக்கு வருகிறார்! லஞ்சம் வாங்குவதை கண்காணித்து கண்டிக்க வேண்டிய காவல்துறை லஞ்சத்தில் திளைத்து கொண்டிருக்கிறது! சட்டங்களை கடுமையாக்க வேண்டிய மந்திரிகள் லஞ்சத்தை கமிஷன் என்று பெயர் மாற்றி வைத்து வாங்குகின்றனர்! ஆக மொத்தம் இந்தியாவிற்கு தேசிய வியாதி என்று ஒன்றை தேர்வு செய்தால் அதற்கு சரியான தேர்வு இந்த லஞ்சம்!


கழுகிற்காக
வைகை


(கழுகு இன்னும் உயரப் பறக்கும்...)

34 comments:

Vijay Anand said...

Romba Correct sir, :(
Same blood

இம்சைஅரசன் பாபு.. said...

அன்பு நண்பர் வைகைக்கு ..

உன்னோட சீரிய நோக்கம் புரிகிறது .. திருச்சி ஏர் போர்ட்ல நடக்கும் அக்கிரமம் பல பேருக்கு தெரியணும்ன்னு .அன்னைக்கு உன் ப்ளாக் ல போஸ்ட் இன்று கழுகில் ..
இன்னும் இது மக்கள் மத்தியில் தெரிய வேண்டுமென்றால் ..எங்கள் தலைவன் பவர் ஸ்டார் இந்த மாதிரி ஒரு கதை கருவை தான் எதிர் பார்த்து கொண்டு இருக்கிறார் .இதை பவர் ஸ்டார்க்கு நான் அனுப்பி வைக்கிறேன் ..உங்கள் எண்ணங்கள் படி இது உலக அரங்கில் 365 நாள் ஓடி எல்லார் மத்தியிலும் இது பரப்பப்பட்டு விழிப்புணர்வு ஏற்ற படும் ..

இப்படிக்கு
பவர் ஸ்டார் பாசறை
334 வட்டம் ,செவ்வாய்கிரகம்

வைகை said...

அன்பு நண்பர் பாபுவுக்கு,
உங்கள் ஆர்வத்திற்கு நன்றி! நீங்களே சொல்லிவிட்டீர்கள், நீங்கள் செவ்வாய் கிரகம் என்று! ஆகவே எங்கள் கஷ்டம் உங்களுக்கு கிண்டலாகவே தெரியும்! உங்கள் அடுத்த ஜென்மத்திலாவது நீங்கள் பூமியில் பிறந்து இதேபோல் நாங்கள் படும் துன்பங்களை நீங்களும் பெற அந்த ஆண்டவனை வேண்டி கொள்கிறேன்! :-)

கோவை நேரம் said...

இதை தடுக்க ஒரு வழி உண்டே..நீங்கள் மொபைல் கேமராவில் படம் எடுத்து இருக்கலாமே.அல்லது அடுத்த முறை வரும்போது ஸ்பை கேமரா கொண்டு வாருங்கள்.அதில் அவர்களின் நடவடிக்கை களை எடுங்கள்.ஆதாரம் இருப்பின் கண்டிப்பாய் தீர்வு கிடைக்கும்..பூனைக்கு நாமே மணி கட்டி விடலாம்..ஊருக்கு செல்லும் அவசரத்தில் இதையெல்லாம் கவனிக்க தான் முடியும்.அப்புறம் என்ன பண்றது..?

இம்சைஅரசன் பாபு.. said...

அட பாவி அடுத்த ஜென்மமம் ன்னு சொல்லி இப்பவே சாகடிக்க பார்க்குறீய ...
நண்பர் வைகை உங்கள் கோபம் எனக்கு புரிகிறது ..ஆனால் தெரியவில்லை ..என்ன செய்ய விழிப்புணர்வு பத்தவில்லை எனக்கு அதனால் தான் ஆண்டவன் என்னை இன்று வரை பாஸ்போட் எடுக்க விடவில்லை ...
நான் நல்லவன் மக்கா அதனால் தான் இந்த அக்கிரமத்தை என்னால் பார்க்க இயலவில்லை ..(ஓஹோ இதுதான் அநியாயத்தை கண்டால் பொங்குறதோ )

வைகை said...

கோவை நேரம் said...


இதை தடுக்க ஒரு வழி உண்டே..நீங்கள் மொபைல் கேமராவில் படம் எடுத்து இருக்கலாமே.அல்லது அடுத்த முறை வரும்போது ஸ்பை கேமரா கொண்டு வாருங்கள்.அதில் அவர்களின் நடவடிக்கை களை எடுங்கள்.ஆதாரம் இருப்பின் கண்டிப்பாய் தீர்வு கிடைக்கும்./////

இனிமேல் செல்பவர்களுக்கு இது ஒரு தகவலாக இருக்கட்டும் :-)

பூனைக்கு நாமே மணி கட்டி விடலாம்..ஊருக்கு செல்லும் அவசரத்தில் இதையெல்லாம் கவனிக்க தான் முடியும்.அப்புறம் என்ன பண்றது..?//

பிரச்சனையே இதுதான்! குறைந்த கால அவகாசத்தில் குடும்பத்தோடு கழிக்க வருபவர்களுக்கு இது இயலாத காரியம் :-)

TERROR-PANDIYAN(VAS) said...

@பாபு

நண்பர் பாபு அவர்களுக்கு! சீரியஸ் கட்டூரையில் காமடி செய்தால் அந்த கட்டூரையின் வீரியம் குறைந்து போகும். அதனால் நையாண்டி செய்யாமல் கருத்துகளை பகிரவும்.

இம்சைஅரசன் பாபு.. said...

@டெரர்
அடங்கொன்னியா .... அதான் நான் ஏற்க்கனவே ஒருவாட்டி சீரியஸா படிசிட்டேண்டா ....(எத்தனை பேரு இங்க சண்டை நடக்க போகுது ன்னு வேடிக்கை பார்க்குரான்களோ ....)

நாளைக்கு இதே போஸ்ட் என்னோட ப்ளாக்ல என் நண்பன் வைகைகிட்ட அனுமதி வாங்கி போடுறேன் ..அங்க வந்து கும்மி அடிச்ச அப்போ இருக்கு உனக்கு

ஜீவன்பென்னி said...

துபாயிலேர்ந்து திருச்சிக்கு வருவதற்கு பயப்பட வேண்டிய நிலமைதான் இருக்கு. என் கிட்ட சுங்க அதிகாரிங்க அதிகமான தங்க நகைகள் இருக்கு அதனால ஒரு எட்டாயிரம் கட்டனும்னு சொன்னாங்க. கட்டப்போறப்போ 5000 கொடுத்துட்டு போங்க. உங்களுக்கு 3000 மிச்சம் அவிங்களே சொல்றானுங்க. ஆனா மொத்த நகையையெடுத்து கணக்கு பாத்தா 4000 வந்துச்சு. அத கட்டிட்டு வெளில வந்தேன். இன்றும் நிறைய பேர் திருச்சிக்கு வருவதற்கு பயந்துகொண்டு சென்னைக்கு செல்கின்றார்கள். இன்னோர் விசயம் திருச்சி ஏர்போர்ட்ல எமிக்ரேசன் கவுண்டர்ல கிரிமினல விசாரிக்கிற மாதிரியே நம்ம கிட்ட பேசுவாங்க. என் கிட்ட மட்டும் தான் அப்புடியா இல்ல எல்லாருக்கிட்டயும் அப்புடியான்னு தெரியல.

TERROR-PANDIYAN(VAS) said...

@பாபு

//அடங்கொன்னியா .... அதான் நான் ஏற்க்கனவே ஒருவாட்டி சீரியஸா படிசிட்டேண்டா ....//

இன்னும் படிக்காதவர்கள் படிக்காடும் தோழமையே. அங்கு படிக்காத சிலர் இங்கு கருத்து பறிமாரி இருப்பாது காண முடிகிரது. அதனால் கட்டூரையின் நோக்கம் நீர்த்து போகாமல் காப்பது நமது கடமை.

வைகை said...

ஜீவன்பென்னி said...


துபாயிலேர்ந்து திருச்சிக்கு வருவதற்கு பயப்பட வேண்டிய நிலமைதான் இருக்கு. என் கிட்ட சுங்க அதிகாரிங்க அதிகமான தங்க நகைகள் இருக்கு அதனால ஒரு எட்டாயிரம் கட்டனும்னு சொன்னாங்க. கட்டப்போறப்போ 5000 கொடுத்துட்டு போங்க. உங்களுக்கு 3000 மிச்சம் அவிங்களே சொல்றானுங்க. ஆனா மொத்த நகையையெடுத்து கணக்கு பாத்தா 4000 வந்துச்சு//////

இதேபோல சமீபத்தில் நண்பர் ஒருவருக்கு நடந்து அதை பேஸ் புக்கில் பகிர்ந்திருந்தார்!

அத கட்டிட்டு வெளில வந்தேன். இன்றும் நிறைய பேர் திருச்சிக்கு வருவதற்கு பயந்துகொண்டு சென்னைக்கு செல்கின்றார்கள்.///

உண்மைதான்... பயண நேரத்தை கணக்கில் பார்த்தா மண உளைச்சல் அதிகமாகுது :-(

இன்னோர் விசயம் திருச்சி ஏர்போர்ட்ல எமிக்ரேசன் கவுண்டர்ல கிரிமினல விசாரிக்கிற மாதிரியே நம்ம கிட்ட பேசுவாங்க. என் கிட்ட மட்டும் தான் அப்புடியா இல்ல எல்லாருக்கிட்டயும் அப்புடியான்னு தெரியல////

எல்லோர்கிட்டயும் அப்பிடிதான்! கவன குறைவுள அந்த பார்ம்ல மாவட்டம் பேரு எழுதல, அதுக்கே அந்த அதிகாரி ஏதோ புழுவை பார்ப்பது போல பார்த்து திட்டினார் :-(

Unknown said...

இந்தப் பதிவை cvoaai@aai.aero என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பியிருக்கிறேன். கேட்டால் கிடைக்கும் எனும் ஃபேஸ்புக் குழுமம் மூலமும் இதனை அனுப்பியுள்ளோம்..

இதனை படிக்கும் நண்பர்கள் அணைவரும் மேற்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என பார்ப்போம்..

saidaiazeez.blogspot.in said...

இனி இந்த கதை மதுரையிலும் ஆரம்பித்துவிடும், கூடிய விரைவில்.
//விமான நிலையம் புது கட்டிடத்துக்கு மாறி வெகு நாட்கள் ஆகிவிட்டது, ஆனால் அங்கு வேலை பார்க்கும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் மன அழுக்கு மட்டும் இன்னும் அப்படியே உள்ளது//
well said

அமுதா கிருஷ்ணா said...

இங்கேயே இருக்கும் எங்களை மாதிரி அப்பாவி மக்கள் எவ்ளோ கஷ்டப்படுறோம்.நீங்களாவது அவ்வப்போது வரும் போது தான் கஷ்டப்படுறீங்க!!!!

வீடு கட்ட,கட்டாமல் வெறும் நிலமா இருக்கா,வீடு கட்டி முடிச்சு வரி கட்ட போனா...லஞ்சம் தாண்டவமாடுது இந்த துறையில்.ரோட்ல அடிப்பட்டு சாவீங்கடா என்று சாபம் விட்டு தான் வர வேண்டியிருக்கு. சமீபத்தில் ஒரு வீடு கட்ட நான் பட்ட பாடு..எழுதவே மனசு வலிக்குது.அதனால் பதிவா போடலை.

Rathnavel Natarajan said...

வேதனையான பதிவு.
நமது மக்கள் குடும்பத்தைப் பிரிந்து, சுகதுக்கங்களை பிரிந்து, வெளி நாட்டில் போய் வேகாத வெயிலில் பாடாய்ப் பட்டு - இங்கு வந்து திருச்சி ஏர்போர்ட்டில் அவர்கள் படும் பாடு - நெஞ்சு பொறுக்குதில்லை.
படித்துப் பாருங்கள்.
நன்றி கழுகு குழுமம் - கழுகு சிறகடித்து பறக்கட்டும்.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.வைகை,
தங்களின் இந்த கசப்பான அனுபவத்தை மனதுக்குள் பூட்டி வைக்காமால் இப்படி பலர் அறிய பதிவிட்டமைக்கு முதற்கண் நன்றி சகோ. இது, மேலும் பலரை திருச்சி பக்கம் செல்ல விடாமல் தடுக்கும் படியான மிக நல்ல விழிப்புணர்வு பகிர்வு. லஞ்சம் ஒழிய வேண்டும். அதற்கான நமது ஓயாத முயற்சிகளில் ஒன்றுதான் இந்த பகிர்வும். இனி சென்னை பக்கமாக வாருங்கள் சகோ.

முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ் said...

தாயகத்துக்கு ஒவ்வொரு முறை பயணம் மேற்கொள்ளும்போதும் திருச்சி வழியாக செல்ல திட்டமிடுவேன்.நண்பர்களும்,உறவினர்களும் அங்கே நடக்கும் சம்பவத்தை சொல்லி சொல்லி திருச்சி வழியாக செல்லும் ஆசை நிராசையாகவே போய்விடும்.சென்னையை காட்டிலும் எங்கள் ஊருக்கு பக்கமான ஏர்போர்ட் என்று பார்த்தால் திருச்சிதான்."வழிபறி கொள்ளையர்கள்" பயத்தை கருத்தில் கொண்டுதான் திருச்சி செல்வதை விட்டுவிட்டு நான் சென்னை வழியாக சென்று கொண்டிருக்கின்றேன்.அருமையான பகிர்விக்கு நன்றி சகோ

Unknown said...

மாப்ள இது வரை சில முறை ஏர் ஏசியா வழியாக மலேசியாவில் இருந்து திருச்சி வந்து சென்று இருக்கிறேன்..ஒரு முறை கூட இப்படி ஆனதில்லை...இப்போது சிங்கப்பூர் வழியாக சென்னை செல்வதால் அப்படி எதுவும் நடப்பதில்லை...ஒரு வேளை நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்னு விட்டுட்டானுங்களோ!

நம்பள்கி said...

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!!

suvanappiriyan said...

நல்ல வேளை! இதுவரை நான் திருச்சி வழியாக வந்ததில்லை. சென்னை சென்னைதான்.

துளசி கோபால் said...

இந்த லஞ்சலாவணியத்தை நினைச்சால் இந்தியா போகும் ஆசையே போயிருது.... அதுக்காக போகாமலேயே இருக்கமுடியுதா சொல்லுங்க.

நம்ம வேர் இன்னும் அங்கேதானே?

நல்லவேளை சென்னை விமானநிலையத்தில் இவ்ளோ இல்லைன்னு ஆறுதல் பட்டுக்கணும்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஹிஹி..
கோவையில இதுவரை இது போல நடந்ததில்லை...


கோவையை சார்ந்த கஸ்டம்ஸ் அதிகாரிகள், தயவு செய்து இதை படித்து, நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ளவும்..


யோவ்.. நாம திருச்சிக்காரனை விட நீ இளிச்சவாயன் இல்லை...


இங்கேயும் அதிரட்டும் மீசிக்...

Seenivasan K said...

Dear Friend

I have shared this web link to airport authority of india general manager mail id.

I hope he will take necessary actions regarding this serious issue

Thanks
Seenivasan

Ashokar said...

ivargal indian naam yelaam adimaigal

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

http://www.nakkheeran.in/users/frmnews.aspx?N=75405

சிங்கப்பூரில் இருந்து தங்கம் கடத்தி வந்தவர் திருச்சி விமான நிலையத்தில் கைது
//

வைகை சார்!!!!!!!!!!

உங்க பதிவ பார்த்ததும்.. கடமைய ஆற்ற ஆரம்பித்து விட்டார்கள்... ஹிஹி

TERROR-PANDIYAN(VAS) said...

@பட்டாபட்டி

//உங்க பதிவ பார்த்ததும்.. கடமைய ஆற்ற ஆரம்பித்து விட்டார்கள்... ஹிஹி//

மச்சி! இந்த பதிவை அப்படியே காப்பி பண்ணி உன் ப்ளாக்ல போடு. அதுக்கு அப்புறம் இண்டர்போல் வந்து திருச்சியில் நிற்க்கும். உன் பவர் அப்படி...

(உன் நக்கல் மட்டும் அடங்காதே :) )

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@டெரர்
மச்சி! இந்த பதிவை அப்படியே காப்பி பண்ணி உன் ப்ளாக்ல போடு. அதுக்கு அப்புறம் இண்டர்போல் வந்து திருச்சியில் நிற்க்கும். உன் பவர் அப்படி...
//

ஏன் சார்.. பட்டாபட்டி அழுக்கா இருக்குனு நேரா சொல்லுங்க..

அதென்ன கழட்ட வழி சொல்வது?...


I like திருச்சி கஸ்டம்ஸ்.. ஒவ்வொருத்தரும், 10 ஆதினத்துக்கு சமம்.
:-))))

saidaiazeez.blogspot.in said...

கஸ்டம்ஸ்லே உள்ள பல பேர் இப்படிதான் பொழப்பு ஓட்டிக்கிட்டு இருக்காங்க. இது திருச்சிலே மட்டுமில்லை, சென்னை, மும்பை பெங்களூரு போன்ற பல ஊர் விமான நிலையங்களிலும் இதே நிலை தான். என்ன திருச்சிலே ட்ராஃபிக் கம்மி என்பதால் "கோட்டா/டார்கெட்" எட்டுவதற்கு அனைத்து பயணிகளையும் பிழிகின்றனர். மற்ற ஊர்களில் அப்படி அல்ல. சுலபமாக டார்கெட் எட்டப்படுவதால் அராஜகம் வெளியில் தெரிவதில்லை. அவ்வளவே!
நான் சென்னை விமான நிலையத்திற்கு செல்லும்போதெல்லாம் கையில் ஒத்த ரூபாய் டாலர் நோட்டுகளாக ஒரு பத்து நோட்டுகளை வேறு வேறு பாக்கெட்களில் வைத்துக்கொள்வேன். தேவையேற்படும் இடத்திலெல்லாம் ஒரு நோட்டை நாலாக அல்லது எட்டாக மடித்து கொடுத்துவிடுவேன். அவனுங்களும் அது 10 டாலர் அல்லது 100 டாலர் நோட்டுன்னு நம்பி எடுத்து தங்கள் பாக்கெட்டில் திணித்துக்கொள்வார்கள். நமக்கு செலவும் கம்மி வேலையும் விரைவில் முடிந்துவிடும் அவர்களை ஏமாற்றியதில் ஒரு ஆத்ம திருப்தியும்!

அனாதி said...

சென்னை சிபிஐயின் இமெயில் ஐடி இது. இக்கட்டுரையை மெயில் செய்யுங்கள் :

hobacchn@cbi.gov.in

ஹுஸைனம்மா said...

ஒருமுறை தனியாகவே திருச்சி ஏர்போர்ட் வந்திருந்தேன். அப்போ இப்படியெல்லாம் பிரச்னை எதுவும் வந்ததில்லை. (நகை, எலெக்ட்ரானிக்ஸ் எதுவும் கொண்டு வரவில்லை)

இதற்கு தற்போதைய திருவனந்தபுரம் ஏர்போர்ட் எவ்வளவோ பரவால்லை போலருக்கு. மதுரை ஏர்போர்ட் ரெடியானா போய்வர வசதியா இருக்குமேன்னு நினைத்ததுண்டு. இதைப் படிக்கும்போது, ஒருவேளை வந்தாலும், போகக்கூடாதுபோல.

திருவனந்தபுரம் ஏர்போர்ட் ஆபிஸர்களும் இப்படித்தான் ஒருகாலத்தில் இருந்தார்கள். இப்போ, விமான நிலையம் நவீனமாக்கப்பட்டபின் இந்தத் தொல்லைகள் சந்திக்கவில்லை. ஒருவேளை கேமராக்கள் வைத்திருப்பார்கள்போல.

உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தபின், என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்றும் தெரிவித்தால் நல்லது.

Aashiq Ahamed said...

உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

கழுகு தள நிர்வாகிகளுக்கு,

இந்த பதிவிற்கு முஸ்லிம்கள் பெயரில் கள்ள வோட் குத்தும் ஆள்/ஆட்கள் மைனஸ் குத்தி இந்த பதிவை மகுடத்தில் இருந்து இறக்கி இருக்கின்றார்கள். மைனஸ் குத்தப்பட்ட வோட்கள் இதுதான்

hussainaamma, suvanapppiriyan, abdulhakkimm, peermohamed.mm@gmail.com, mohaaashik, hajamydheeen, AMINAA29

முஸ்லிம் பதிவர்கள் பெயரில் (ஒரு ஒரு எழுத்தை) மாற்றம் செய்திருப்பதை கவனியுங்கள். மேலும் இந்த கள்ள வோட் ஆட்கள் தற்போது சுவனப்பிரியனின் இன்றைய பதிவை இதேபோல கள்ள வோட் குத்தி மகுடத்திற்கு கொண்டு வந்து இருக்கின்றார்கள். அதாவது, இந்த பதிவிற்கு மைனஸ் குத்தி கீளிரக்கிவிட்டு, அந்த பதிவிற்கு பிளஸ் குத்தி மேலே கொண்டு வந்திருக்கின்றார்கள்.

நான் நினைப்பது சரியென்றால், இதனை வைத்து குழப்பம் ஏற்படுத்த யாராவது முயற்சிக்கலாம். தமிழ்மனத்திடம் ஏற்கனவே இது குறித்து கூறி இருக்கின்றோம். தற்போது இன்று நடந்ததையும் தெரியப்படுத்தி இந்த கள்ள முகவரிகளை நீக்கி சொல்லியிருக்கின்றோம்.

இந்த கீழ்த்தரமான, மனித தன்மை அற்ற செய்கைகளுக்கு எங்களை நீங்கள் சந்தேகப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே இந்த பின்னூட்டம்.

நன்றி...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
aashiq.ahamed.14@gmail.com

சதீஷ் செல்லதுரை said...

அனைவரும் காமெடி செய்தே ஒரு முக்கிய பிரச்னையை கடந்து செல்கிறோம்....ஏன் இதை மீடியா மற்றும் சில நண்பர்கள் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பலாமே...மிகவும் சுதந்திரமாக நடப்பதை நினைத்தால் கஷ்டமாக உள்ளது.நாட்டின் வெளியே உள்ள எதிரிகளை விட உள்ளே உள்ள இந்த துரோகிகள் மோசமானவர்கள்.

காலம் கிடைக்கும் பட்சம் படிக்கவும்..http://tamilmottu.blogspot.in/

srinivasan said...

மேற்கண்ட கசப்பான அனுபவங்களை சென்னை விமான நிலையத்தில் பார்த்திருக்கிறேன். பணம் கொடுக்காவிட்டால் பெட்டியை சோதனை என்ற பெயரில் திறந்து பொருட்களை எடுத்து கொள்வது.அதனால் தான் பலர் திருச்சி விமான நிலையத்திற்கு செலவு கூடுதலாக இருந்தலும் பரவாயில்லை என்று வருகிறோம் . திருச்சி விமான நிலையத்தில் பணி புரியும் அதிகாரிகள் அனைவரும் 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருந்தனர்,பலருக்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்தும் இகோ இல்லாமல் உதவினர் . இப்பொழுது எல்லாம் தலைகீழாக இருபது வேதனைக்குரியது.

Unknown said...

ok thanks for these informations.In future we will do the necessity .

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes