Sunday, January 26, 2014

இந்தியக் குடியரசும்...வல்லரசுக் கனவும்...! ஒரு விழிப்புணர்வு பார்வை...!


இந்திய குடியரசின் ஒப்பற்ற நாளை விழாவாக கொண்டாடிக்கொண்டிருக்கும் அத்தனை தோழர்களுக்கும் வாழ்த்துக்களை கழுகு தெரிவித்துக் கொள்கிறது.

உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற அடைமொழியோடு வல்லரசு பட்டத்தை தனது தோள்பட்டையில் தானாகவே குத்திக் கொண்டு மீண்டும் மீண்டும் தன்னை வல்லரசாக பார்க்கச் சொல்லி இந்திய தேசத்தின் மக்களை மூளைச் சலவை செய்து கொண்டிருக்கும் இதுவரை இந்தியாவை ஆண்ட, தற்போது ஆண்டு கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளுக்கு எல்லாம் ஒரு இந்தியக் குடிமகனாக கடும் கண்டனத்தை இந்த 65 ஆம் குடியரசு தினத்தில் தெரிவிக்கும் கடமை நமக்கு உள்ளதையும் மறக்க வேண்டாம் தோழர்கள்..!

17 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயனும், டச்சுக்காரனும், பிரெஞ்சுக்காரனும் மென்று தின்றது போக மீதமுள்ள நாட்டை நாங்கள் போராடித்தான் சுதந்திரம் பெற்றோமென்று இந்திய வரலாறு எழுதப்பட்டதிலிருந்து ஆரம்பிக்கிறது இந்திய அரசியல்கட்சிகளின் ஆக்கிரமிப்பு... அரசியல்வாதிகளின் சூழ்ச்சி. இந்திய சுதந்திரத்துக்கு மக்கள் போராடியதும் கஷ்டங்களை அனுபவித்ததும் எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை ஆங்கிலேயனால் நிர்வாகம் செய்ய முடியாமல் சுதந்திரம் என்ற ஒரு மாயா விடுதலையை அவர்கள் விட்டுகொடுத்து சென்றதும்.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினை.. காலத்தின் கட்டாயமாகிப் போனதை மகாத்மா அறிந்திருந்தார். காழ்ப்புணர்ச்சி மதவாத அரசியலைக் கண்டு சகிக்க முடியாத ஒரு தேச நலவிரும்பியாய் இருந்த தேசப்பிதாவால், சுதந்திர இந்தியாவின் எந்த பதவிப் பொறுப்பையும் ஏற்க முடியவில்லை. தன்முனைப்பினைக் கொண்டிருந்த நேருவால் முதல் பிரதமர் பதவியை விட்டுக் கொடுக்க முடியவில்லையாதலால் தீர்க்கமாக தேசப்பிதா எடுத்த முடிவுதான் இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு வித்திட்டது.

காலத்தின் வீச்சில் இந்தியாவின் சக்கரங்கள் உருண்டோடி, உருண்டோடி, அதன் மிகுதியான பக்கங்களை தேசிய அளவிலும், மாநில அளவிலும் ஆண்ட ஒரு பெரும் கட்சியாக விசுவரூபமெடுத்து நிற்பது காங்கிரஸ் மட்டுமே...! சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் என்னும் கட்சி முன்னெடுத்த ஜனநாயகமும் பொருளாதாரக் கொள்கைகளும், பிராந்திய மக்களை நடத்திய விதமும், பிராந்திய கட்சிகளோடு கூட்டு சேர்ந்து முன்னெடுத்த திட்டங்களும் சேர்ந்துதான் இன்றைய இந்தியாவின் எல்லாவிதமான சமூக சூழல்களுக்கும் காரணியாய் ஆகியிருக்கிறது என்பதை யாரும் மறுத்தல் ஆகாது.

அகில இந்திய அரசியலில் இன்றைய தேதிக்கு காங்கிரஸ் என்னும் பெரும் கட்சிக்கு மாற்றாய் அறியப்படும் பாரதிய ஜனதாவின் அடிப்படைக் கொள்கைகள் இந்தியா என்னும் பன்முகப்பட்ட மக்களைக் கொண்டிருக்கும் மனிதர்களின் ஒற்றுமைக்கு சர்வ நிச்சயமாய் ஊறு விளைவிக்க கூடியதுதான். ஆர்.எஸ்.எஸை தனது ஆணிவேராக கொண்டிருக்கும் இந்தக் கட்சியின் அகண்டபாரதக் கொள்கையும், இந்து நாடு கொள்கையும் ஒரு வேளை இந்தக் கட்சி தேசம் முழுதும் வலுவாய் காலூன்றினால் ஒரு சர்வாகாதிகாரமாகவே தேசம் முழுமைக்கும் அறிமுகம் செய்யப்படும் அபாயமுமிருக்கிறது.

பல சாதி அடிப்படைகள் கொண்ட இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் இறக்குமதி செய்த கம்யூனிசம் வேரூன்ற முடியாததற்கு காரணம் வர்க்க போராட்டங்களையும் அதன் கொடுமைகளையும் தாண்டிய நுணுக்கமான மனிதவள சங்கடங்களை அவர்களால் அணுகமுடியாததுதான். அடிமட்டத்தில் இருக்கும் மனிதர்களின் பொருளாதர ரீதியான பலவீனங்களையும், அடக்கு முறைகளையும் ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை சொல்ல முனைந்த கம்னியூஸ்ட்டுகளுக்கு இன ரீதியான அடக்கு முறையை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமலேயே போனது...

இந்திய தேசத்தில் காங்கிரசுக்கு மாற்றாக எந்த ஒரு கட்சியும் தேசம் முழுதும் வியாபித்து நிற்க முடியாத வகையில் போனதற்கு காங்கிரசின் மேம்போக்கான கவர்ச்சிகர கொள்கைகளும், தேச விடுதலைப் போராட்ட அக்மார்க் முத்திரைகளும் காரணமாக இருந்ததால்,  இன்று வரை ஒரு பாமர இந்தியனால் சுதந்திரத்துக்குப் போரடிய இந்திய தேசிய காங்கிரசுக்கும், இந்தியாவை ஆளும் அரசியல் கட்சியான காங்கிரசுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் தெரியாமலேயே போனது....

இதுதான் காங்கிரஸ் கட்சியின் உச்ச பட்ச சாணக்கியத்தனம். சுதந்திரப் போராட்டத்தில் பயன்படுத்திய காங்கிரஸ் கொடியில் இராட்டையை எடுத்து விட்டு.... அதில் அசோக சக்கரம் பொருத்தி இந்தியாவின் சுதந்திரக் கொடியாய் அறிவித்த காங்கிரஸ் பெரும் தலைகள் அதே வர்ணத்தில் தனது கட்சியின் கொடியையும் வைத்துக் கொண்டு நடுவில் கைச் சின்னத்தை பொறித்து சாமார்த்தியமாய் தன்னை தேசத்தின் மிகப்பெரிய சக்தியாய் முடிச்சிட்டுக் கொண்டது.

கடந்த 64 வருட இந்திய குடியரசு எதையும் சாதித்து விடவில்லை என்பதை நீங்கள் தெளிவாக உணர்வீர்களாக; எந்த மாநிலத்துக்கு இடையேயும் சுமூக உறவுகள் கிடையாது. இந்திய தேசியத்தின் வளங்களைப் பங்கிட்டுக் கொள்வதிலும், பகிர்தலிலும்,  ஒரு நேர்மை கிடையாது என்பதை தொடர்ச்சியாக தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு அயல் மாநிலங்களால் நடக்கும் வஞ்சிப்புக்களின் மூலம் நாம் அறியலாம்.

ஒரு நாடு தன்னில் தன்னிறைவு பெற்று, தன் குடிகளை சுபிட்சமாக்கி, தன் ஆளுமையை தன் தேசம் கடந்து, வெவ்வேறு பிராந்தியங்களில் பணமாகவும், படையாகவும் செலுத்த இயலுமெனில் அதுதான் வல்லரசு நாடு....

சென்னை போன்ற தமிழகத்தின் தலை நகரங்களில் கூட தொடர்ச்சியான மின்வெட்டு, தமிழகம் முழுவதும் மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்தியா முழுமையும் மின்சாரப் பற்றாக்குறை, இயற்கை வளங்கள் நிறைந்த ஒரு தேசத்தில், ஒரு வருடத்தில் மிகையான மாதங்களில் கொளுத்தும் வெயிலைக் கொண்ட ஒரு தேசத்தில் மின்சாரம் தயாரிக்க திட்டங்கள் இல்லை என்பதை எப்படி எடுத்து கொள்வது என் தேசத்தீரே...?

அதிகப் பொருட்செலவு ஆகும் என்று திட்டங்களை உதறித் தள்ளும் இந்திய ஆளுமை, வேண்டாம் வேண்டாம் என்று அண்டை நாடுகள் சொல்லும் போதும் தங்கள் உதவிகளை அங்கே குவிக்கும் குறுகிய அரசியல் நோக்கத்தின் பின்னணி என்ன?

சர்வ நிச்சயமாய் இந்தியா அதிக பணக்கார முதலாளிகளைத் தொழிலதிபர்களாயும், அரசியல் தலைவர்களாயும் கொண்ட, எப்போதும் லஞ்ச லாவண்யங்களையும் நேர்மையற்ற அரசியலையும் கொண்ட தன்னை எப்போதும் மிகைப்படுத்திப் பார்த்துக் கொள்கிற ஒரு வறுமையின் தேசம்தான்...!

சாலை வசதிகள் இல்லாமலும், சுகாதர வசதிகள் இல்லாமலும், சுற்று வட்டாரத்தில் மருத்துவ வசதிகள் இல்லாமல் குறைந்த பட்சம் ஐந்து மைல்கள் தாண்டி செல்ல வேண்டிய அவசியமும், மின்சார வசதிகள் இன்றியும், குடிநீர் வசதிகளின்றியும், ஒருவேளை நெல் சோற்றை சாப்பிடவே வக்கற்ற குடும்பங்களை புறநகர்ப்பகுதிகளிலும், கிராமங்களிலும் ஒளித்து வைத்துக் கொண்டுதான்...

வல்லரசு கோஷத்தோடு இந்திய குடியரசை நாம் போற்றிக் கொண்டிருக்கிறோம் தோழர்களே....!

கல்வியறிவில் மிகுந்த மாநிலம் என்று இந்தியாவால் அறிவிக்கப்படும் ஒரு மாநிலத்தில் தான் முட்டாள்தனமாக அணை இடிந்து விடும் என்று கூறி போராட்டங்கள் நடத்தி தண்ணீர் தர மறுத்து வெந்நீரை ஊற்றி மனிதர்களைக் கொல்லும் மனிதர்கள் வசிக்கிறார்கள்....

கல்வியறிவு என்று தேசம் கூறும் மனிதர்களின் அறிவின் உயரம் என்னவாயிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்,  இது வல்லரசு இந்தியாவா? அல்லது குள்ளரசு இந்தியாவா? என்பதை நீங்கள் விளங்கக்கூடும்....!

அறிவால் முன்னேற முடியாமல் மக்களைக் கிடுக்குப் பிடிபோட்டு இன்னமும் சாதிப் பிரச்சினைகளையும், மதப்பிரச்சினைகளையும் வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகளைக் கொண்ட தேசம் எப்படி வல்லரசு ஆகும்...?

ஏதோ ஒரு சாதியில் பிறக்கிறான், வளர்கிறான் அதைத் தனது அடையாளமாகக் கொண்டு கூட்டம் கூட்டி ஒரு அமைப்பாகும் போது அதை முற்போக்கு புத்திகள் கொண்டவர்களாக தங்களை அறிவித்துக் கொள்ளும் அரசியல்கட்சிகள் வாக்குகளுக்காக அண்டிப் பிழைக்கும் போக்கு உள்ள தேசம் எப்படி ஒரு வல்லரசு என்று கூறுவீர்கள்...?

சிறு சிறு நாடுகள் எல்லாம் அணு ஆயுதங்களில் தன்னிறைவு பெற்ற பின்னரும் நாம் அணு குண்டு வெடித்ததையும், ஏவுகணைகள் செய்ததையும் வைத்துக் கொண்டு பெருமை பேசிக் கொண்டிருப்பதின் பின்னணியில் இருக்கும் அறியாமைச் சாயம் எப்போது என் தேசத்தில் வெளுக்கும்....?

அன்புத் தோழர்களே...இந்தியா சுதந்திரம் அடைந்தது.....இந்தியா குடியரசு ஆனது....கூடவே இங்கே மேல்தட்டு மக்கள் மேலும் மேலும் பணம் சேர்த்துக் கொண்டு ஆடம்பரமாய் வாழக்கூடிய ஒரு சமூக அரசியலும் புகுத்தபட்டது.....

சாமானியன், சாமானியனாகவே இன்னமும் சாணம் மொழுகிய வீட்டில் மழைக்கு ஒழுகுமே என்று கூரை மேய்ந்து கொண்டிருக்கிறான் வல்லரசு நாட்டின் ஒரு குடிமகன் என்ற கனவோடு..!

இதுதான் இந்திய தேசியம்...! இதுதான் இந்தியா....!

இந்தியாவை ஆளும் காங்கிரசும், மாற்றாக கருதப்படும் பாரதிய ஜனதாவையும் கடந்து மூன்றாவதாய் ஒரு ஆளுமை நிறைந்த சக்தி புத்துணர்ச்சியோடு வரவேண்டியது தான் தற்போது இந்த தேசத்தின் தேவை.....

இது நிகழவில்லையெனில்...

அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்குள் துயரப்படும் மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், எல்லாம் ஒன்று சேர்ந்து அதிகார அரசியலுக்கும், முதாலாலித்துவ மூளைகளுக்கும் சமாதி கட்ட வெகுண்டெழுந்து தன்னிச்சையாக போராடத் துவங்குவார்கள் என்பது சர்வ நிச்சயம்.....!

அப்படியான ஒரு போராட்டத்தின் முடிவு....சோவியத் ருஷ்யாவை முன்னுதாரணமாக்கிக் கொள்ளும் என்பதும் காலத்தின் கட்டாயம் ஆகும்...!



  கழுகு வாசகர்களுக்கு இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்

கழுகு


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்) 

Friday, November 29, 2013

தேசிய அளவிலான தேர்வுகளும்...இந்தி மொழி திணிப்பும்...!




இன்றைய நிலையில் தேசிய அளவிலான எல்லா தேர்வுகளின் கேள்வித் தாள்களும் இரு மொழிகளிலேயே அச்சிடப் படுகின்றன. முதன்மையாய் ஆங்கிலம், இரண்டாவது இந்தி. போட்டி தேர்வுகளில் இவ்விரு மொழிகளில் மட்டுமே கேள்விகள் கேட்கப்படுவதால் அதிகம் பாதிக்கப் படுவது நம் தமிழக மாணவர்கள் மட்டும்தான். அதுவும் முக்கியமாக அரசுப் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி கற்று போட்டித் தேர்வுக்கு முயலும் மாணவர்கள்தான்.

எப்படி என்று கேட்பவர்களுக்கு. இந்தி நம் தேசிய மொழி என்ற தவறான எண்ணம் இன்னும் நம்மில் பலருக்கும் இருக்கலாம். ஆனால் அது உண்மை இல்லை. இந்தியா தனது அலுவலக மொழியாக மாநில வாரியாக இருபத்தி இரண்டு மொழிகளை ஏற்றுள்ளது. ஆங்கிலம் எல்லா மாநிலங்களிலும் இரண்டாம் மொழியாகப் பயன்படுத்தப் படுகிறது. இப்படி இருக்க ஏன் இந்தியில் மட்டும் கேள்வித்தாள் அச்சிட என்ன காரணம்.

இந்தியாவின் மொத்த மாநிலங்களில் வெகு சில தவிர மற்றவை இந்தி மற்றும் இந்தி சார்பு மொழிகளையே தாய் மொழியாகக் கொண்டுள்ளது. அந்த அனைத்து மாநிலங்களிலும் இந்தி மிக நெருங்கிய மொழி. வட மாநிலங்கள் அனைத்துக்கும் இந்தி இன்றியமையாதது. அதுபோல் தென் மாநிலங்களிலும் தமிழகம் தவிர இந்தி எல்லாப் பள்ளிகளிலும் கட்டாயப் பாடம் ஆக்கப் பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தி கற்காதவர்கள் என்பது இல்லாத நிலை உருவாக சாத்தியக் கூறுகள் அதிகம்.

இப்படி இந்தியா முழுவதும்தமிழகம் தவிர்த்து  ஆங்கிலம் அல்லாத ஒரு மொழி கற்கப் படுகிறது என்றால் அது இந்திதான். இதன் காரணமாக தேர்வுத் துறைகளும் போட்டித் தேர்வுகளை தீர்மானிக்கும்போது பொதுவான மொழி என்ற வரிசையில் ஆங்கிலத்தை முதலிலும், இரண்டாவதாக இந்தியையும் தெரிவு செய்கிறது.

இங்குதான் பிரச்சனை தொடங்குகிறது, இந்தி என்பதும் மற்ற மாநிலங்களை பொறுத்தவரை பயிற்று மொழி, ஆனால் இது மூன்று முதல் ஐந்து மாநிலங்களுக்கு தாய் மொழியாக இருக்கும் பட்சத்தில் இது எப்படி நடுநிலையான நிலைப்பாடாக அங்கீகரிக்க முடியும்.

எப்பொழுதோ போராடி இந்தியை வேண்டாம் என்று சொன்னது நீங்கதானே என்று கேட்பவர்களுக்கு. அது எப்படியோ போகட்டும் இந்த பதிவில் அதை பற்று நான் பேச விரும்பவில்லை. காரணம் எங்கு எனது நிலைப்பாடு பொதுவான போட்டித் தேர்வு என்று ஆனபிறகு சில மாநிலங்களின் தாய் மொழியிலும் தேர்வுக்கான கேள்விகள் ஆச்சிடப்படுவது எந்த வகையில் நியமான விசயமாய் இருக்க முடியும். அவர்களுக்கு அது எழிமையாய் அமைந்து விடாதா.

இதற்க்கு மாற்று வழி என்று ஏதேனும் உண்டா..

முதல் வழி தேசிய அளவிலான அனைத்து போட்டித் தேர்வின் கேள்வித்தாள்களும் பொதுவான ஒரே மொழியிலேயே அச்சிடப் படவேண்டும். இதியாவில் நிலவும் பல மொழி நிலையில் இதற்க்கான சாத்தியம் ஆங்கிலத்தை பொதுவாய் தேர்ந்தெடுப்பது மட்டுமே..

இரண்டு : அவ்வழி கூடாதெனில் எல்லா மாநில பொதுப் பணித்துறையினருடன் இணைந்து அங்கீகரிக்கப்பட்ட இருபத்து இரண்டு மொழிகளிலும், மாநில வாரியாக ஆங்கிலத்துடன் இணைந்ந்து ( இப்போது ஆங்கிலம் இந்தி இருப்பது போல், ஆங்கிலம் நிலையாய் இருக்க மாநில வாரியாக இரண்டாம் மொழி அம்மாநிலத்தின் தாய் மொழியில்) இரண்டாம் மொழியை மாநிலத்திற்கு தகுந்தாற்போல் மாற்றி அமைத்து தேர்வு நடத்தப்பட வேண்டும்.
இதுவே சரியான நேர்மையான ஒரு போட்டித்தேர்வு நடத்த வழி ஆகும்.

 இப்படி நடக்கும்போது மட்டுமே அதில் தேர்ச்சி பெரும் மாணவர்கள் உண்மையாய் அவர்கள் திறமையால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களாய் அங்கீகரிக்கப்படுவர். அதுவரை அதன் முடிவுகள் அனைத்தும் ஒரு பெரும் கூட்டத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியாய் அறியப்படும்.


       கழுகிற்காக
கௌதமன் ராஜகோபால் 

(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)  
  

Saturday, November 23, 2013

வெடிக்கட்டும் ஒரு அரசியல் புரட்சி... !




இணையத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளின் பரப்புரைகளை கவனமாய் உள்வாங்கிக் கொண்டு தெளிவுகளை உணர்ந்து கொண்டு தெளிவின்மைகளை அறுத்தெறிந்து வெளியே வரவேண்டிய மிகப்பெரிய சவால் இன்றைய அதுவும் இணையத்தை வலம் வரும் தமிழ் இளைஞர் கூட்டத்திற்கு இருக்கிறது என்ற ஒரு வேண்டுகோளினை சிவப்புக் கோடிட்டுக் காட்டி விட்டு கட்டுரையைத் தொடர்கிறேன்....!

சம காலத்தில் அரசியலை காழ்ப்புணர்ச்சிகளின் களமாய் ஆக்கி வைத்திருக்கும் இன்றைய மக்கள் தலைவர்களைக் கண்டு என் தேசத்து இளைஞன் அரசியல் என்றாலே சாக்கடை என்றும், அரசியல் களம் என்பது பொய்யும், புரட்டும், தனிமனித தாக்குதல்களும் கொண்ட மரியாதையற்ற ஆதிக்க சக்திகளின் இடம் என்று நினைத்து ஒதுங்கி ஒதுங்கிப் போனதன் விளைவாய் எதைச் சம்பாதித்திருக்கிறோம் தெரியுமா....?

மிரட்டும் தாதாக்களின் அடாவடிகளையும், பொருளைக் கொண்டு மனிதர்களை மிரட்டி அல்லது மூளைச்சலவைகள் செய்து வாக்குகள் பறிக்கும் பெருங்கூட்டத்தையும் நம்மைச் சுற்றி மிகுந்து போக வைத்திருக்கிறோம். உண்மையான தமிழர் நலம் காண இன்று களத்திலிருக்கும் எத்தனை கட்சிகள் முனைகின்றன...? அப்படியாய் முனைகிறோம் அல்லது செய்தோம் என்று சொல்பவர்கள் செதுக்கி வைத்திருக்கும் செம்மைகளின் விளைவுகள் என்ன....?

அரசு +இயல்... என்னும் அரசியல் என்பது மிகப்பெரிய கலை. அது மக்களுக்கான இயல். மக்களுக்கான சேவைகள் செய்யும் மனிதர்கள் தங்களை தங்களின் செயல்பாட்டினை அர்ப்பணிக்கும் ஒரு புனிதமான களம். இங்கே களமாடிக் கொண்டிருக்கும் வசீகர சக்திகள் கட்டியெழுப்பி இருக்கும் அரசியல் என்பது மக்களுக்கானது அல்ல..அது மக்களை நடு நடுங்க வைத்துக் கொண்டிருப்பது....

ஆதி சமுதாயத்தில் மனிதன் விலங்குகளை ஒத்து திரிந்து மெல்ல, மெல்ல பண்பட்டு கல்லின் உபயோகம் அறிந்து, நெருப்பின் பயன் புரிந்து, இரும்பின் வலிமை உணர்ந்து பிறகு தன்னை உணர்ந்து தான் தனித்து இயங்க இயலாது, தான் ஒரு சமூகம், சமூகத்தை சார்ந்த வாழ்க்கையே எமக்குச் சிறந்தது என்று தெளிந்து.....

அப்படியான தெளிதலில் தன் கூட்டத்தில் வலிவாய் இருந்தவன், தம்மையும் தம் சமூகத்தினரையும் காப்பான் என்று அவனை மன்னன் என்றும் அரசனென்றும் வணங்கி எம்மை, எமக்கான வாழ்க்கையை நீ நிர்வாகம் செய்...! உமக்கு எம்மாலான எல்லா ஒத்துழைப்பையும் நல்குவோம் என்று சிரம் பணிந்து தமக்குள் தாமே ஒரு தலைவனை ஏற்றுக் கொண்டு மன்னாராட்சி என்ற மாண்பினை படைத்தனர்...

காலத்தின் போக்கில் கிடைத்த புரிதல்கள், மானுடரின் புத்தியில் இன்னும் தெளிவென்னும் தீபத்தை ஏற்றி வைக்க விடிந்த ஒரு ஓப்பற்ற ஞானம்தான் மக்களாட்சி என்னும் ஜனநாயகம். மக்களால் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க ஒரு குழுவினை மக்கள் தேர்ந்தெடுத்து.. நீவீர் எம்மை ஆளும்...! இது நமது நாடு, நாங்கள் உமது மக்கள்....எம்மை நிர்வாகம் செய்ய உம்மை தேர்ந்தெடுக்கிறோம் என்ற மக்களாட்சி என்னும் ஒரு ஒப்பற்ற நிலைக்கு நகர்ந்தனர்....!

மக்களைக் காக்க காவல்துறை, நட்டின் எல்லைகளைக் காக்க இராணுவம், இப்படியாக மக்களின் குறைகளைத் தெருவுக்கு தெரு தீர்த்து வைக்க உறுப்பினர்கள் என்று ஆரம்பித்து சட்டமன்றம், பாராளுமன்றம், மந்திரிகள், முதலமைச்சர், பிரதமர் என்று இந்த கட்டமைப்பு விரிந்து பரந்து பிரமாண்டமாகிறது.

ஏன் இந்தப் பிரமாண்டம்...? யாருக்காக இந்தக் கட்டமைப்பு....?

மக்கள் நலனுக்காக....மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க....மக்களிடம் அமைதியை நிலை நாட்ட, மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தேர்ந்த நிர்வாகத் திறமையால் செம்மையாய் வழி நடத்த.....

இதற்குத் தானே...அரசியல்....? எம் நலம் பேணத்தானே அரசியல் தலைவர்கள்...? எம்மைக் காக்கத்தானே காவல் துறை...? எமக்காகத் தானே இத்தனை துறைகள்...?

ஆனால்...

என்ன நிகழ்ந்தேறிக் கொண்டிருக்கிறது இப்போது...? அரசியல் என்னும் புனித வாளினை கையில் வைத்துக் கொண்டு சாதாரண மக்களை மிரட்டுவதும், ஒரு அரசியல்வாதி என்று தன்னை கற்பிதம் செய்து கொள்பவனை அதிகாரங்கள் குவிந்த ஒருவனாய் பார்த்து மக்கள் கூழைக் கும்பிடுகள் போடுவதும்...? மனுக்கள் கொடுத்து ஐயா.. தர்ம ராசா... எங்களுக்கு வழிகாட்டு என்று கெஞ்சுவதும்.....வெள்ளை வேட்டி சட்டைகள் கட்டிக் கொண்டு தேவ தூதர்களாய், வேற்று கிரக வாசிகளைப் போல நடந்து கொண்டு சாதாரண மக்களை கேவலமாக அரசியல்வாதிகள் பார்ப்பதும் என்று...

சீர்கெட்டுப் போய் அரசியல் என்பதற்கு ஒரு தெளிவில்லாத முரட்டு உதாரணத்தை சமகால அரசியல் வல்லாதிக்க சக்திகள் நிர்ணயம் செய்து கொண்டிருப்பது சரியான ஒரு நகர்வா...சொல்லுங்கள் என் தேசத்து இளைஞர்களே..?

என்ன செய்யப் போகிறோம் நாம்...?????



(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

Sunday, July 14, 2013

கழுகு பேஸ்புக் பக்கம்....!


வாழ்க்கையின் போக்கில் நிகழும் மாற்றங்கள் யாரின் விருப்பு வெறுப்பினையும் பொறுத்து அமைவதில்லை. கழுகு இணையத்தில் அடி எடுத்து வைத்து வார்த்தைகளை தட்டச்சு செய்ய ஆரம்பித்த காலத்தில் இணையத்தை அரசியல், ஆதிக்க சாதீய சக்திகள் மிகையாய் சூழ்ந்திருக்கவில்லை.

நவீன ஊடக வளர்ச்சி சாமானிய மக்களுக்கு வசப்பட்டே போனது என்று நாம் கருதியிருந்த காலத்தில் எழுதுவதற்கான கோட்பாடுகளாய் அறிவு ஜீவிகளின் உலகம் சமைத்து வைத்திருந்த அத்தனை வரைமுறைகளையும் எம் இளையர்கள் உடைத்து எறிந்து விட்டு தங்களின் அன்றாட வாழ்க்கையில் நிகழ்ந்த கவனிக்கத்தகுந்த, சமூகத்திற்கு பயன் தரக்கூடிய ஏராளமான நிகழ்வுகளைப் பதிவு செய்தும் வந்தார்கள்.

வலைப்பூக்கள் எனப்படும் பிளாக் உலகத்தின் வசீகரமே அது சாமானியர்களால்  கருத்து சொல்ல முடிந்த இடம் என்பதுதான்.

வலைப்பூக்களைத் தொடர்ந்து, பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக இணைவுத் தளங்களின் பயன்பாடுகள் முழு வீச்சில் எம் மக்களால் பயனீடு செய்யப்பட்ட போது எமது குரல்வளைகளில் ஆதிக்க சக்திகள் தமது கோரக் கை கொண்டு நெறிக்க ஆரம்பித்தன. எப்போதும் ஒரு அரசியல் தலைவனையும், சினிமா நடிகனையும், எழுத்து வியாபாரியையும் போற்றிப் புகழ்ந்து அவர்களின் கால்களில் வீழ்ந்து கிடந்த எமது சமூகம் இவர்களின் அதிரடியான ஆளுமைகள் சமூக இணைவுத் தளங்களில் நுழைந்ததைக் கண்டு மிரட்சியாகி....

தன்னை வியாபாரம் செய்து கொள்ள முனைந்து தங்களின் சார்புத்தன்மையை சாமானிய மக்களிடம் புகுத்த விரும்பிய அதிகாரவர்க்கத்தின் வாசலில் பேச்சற்று நின்று போனது. எழுதக்கூடிய திறனை எம் சமூகம் ஆதிக்க சக்திகளின் தொடர்ச்சியான கருத்து திணிப்புகளால் இழந்து போய்...யாரோ ஒருவனை நாம் ஆதரித்தால் போதும் என்ற முடிவுக்கு வந்தும் விட்டது. நடுத்தரவர்க்கம் மிகையாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த இணைய உலகம் மான அவமானங்களுக்கு கட்டுப்பட்டு தங்களின் பணிகளுக்கு இடையே தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருந்த போதுதான்...

இந்த ஆதிக்க சக்திகளின் தனிமனித தாக்குதல்களும், தங்களின் அரசில், மத, சாதிய அடையாளத்தைத் தூக்கிப் பிடிக்க அவர்கள் பயன்படுத்தும் மூன்றாம் தர வார்த்தை பிரயோகங்களும் எம் மக்களை நிலை குலைய வைத்தன. அதன் விளைவாக இதோ இன்று இணையப்பக்கங்கள் அனைத்திலும் சாதாரணர்கள் யாரும் கருத்து சொல்ல முடியாத அளவிற்கு மனோதத்துவ ரீதியாக் ஒடுக்கப்பட்டு கருத்துக் குருடர்களாய் நின்று கொண்டிருக்கிறார்கள்.

2010 வாக்கில் தமிழ்மணம், தமிழிஷ் போன்ற திரட்டிகளில் எமது சகோதரர்கள் இணைத்த பதிவுகள் பல ஆயிரங்களைத் தொட்டது. இன்றைக்கு எமது அறிவுகள் சார்புக்கருத்து திணிப்புகளால் முடக்கப்பட்டு என்ன எழுதுவதென்றே தெரியாமல் நமது வாழ்க்கை சரியாய் இருந்தால் போதும் நமக்கு எதற்கு சமூக சிந்தனை என்று ஒதுங்கிக் கொண்டு விட்டன. இப்படியான ஒரு மனோநிலைக்கு சாமானிய மக்களைத் தள்ளுவதைத்தான் இது வரையில் நமது ஊடகங்களும், அரசியல், வல்லாதிக்க சக்திகளும் இணையத்தைக் கடந்து வெளியில் செய்து கொண்டிருந்தன.

சமூக விழிப்புணர்வு என்பதையும், நமது அரசியல் தேவைகள் என்ன என்பதையும், யார் யார் எழுதலாம் என்பதையும் நம்மால் இதுவரையில் தீர்மானிக்க முடியவில்லை. எப்போதும் யாரோ சொன்னதைக் கேட்டுக் கொண்டே இருந்த நம்து சமூகம் திடீரென்று இணையத்தில் எழுதலாம் என்ற ஒரு சுதந்திரத்தை உணர்ந்து புலிப்பாய்ச்சலில் நிறைய கருத்துக்களைச் சொன்னது பொறுக்க முடியாத ஆதிக்க சக்திகள் தொடர்ச்சியான தங்களின் பரப்புரைகளாலும், அதிகார துஷ்பிரயோக மிரட்டல்களாலும் இன்று நம்மை முடக்கிப் போட்டு வைத்திருக்கிறது.

எந்த சார்புத்தன்மையும் கொள்ளாத சூழலுக்கு எது உகந்தது என்று தீர்மானித்து நகர முயலும் பகுத்தறிவு மூளைகளை முடக்கிப் போடுவதுதான் அவர்களின் நோக்கம் என்பதை கழுகு தெளிவாக உணர்ந்திருப்பதால்தான்...சாதாரணர்கள் அத்தனை பேரையும் ஒன்று சேர்த்து விழிப்புணர்வு கொண்ட கழுகுகளாக ஆக்க முனைகிறது.

கழுகு ஒரு அரசியல் கட்சி அல்ல, கழுகு ஒரு தனிமனிதனுக்குச் சொந்தமான இயக்கம் அல்ல, கழுகு ஒரு சமூக சேவை செய்யும் அமைப்பும் அல்ல...

கழுகு விழிப்புணர்வோடு வாழும் மனிதர்களை ஒன்று சேர்த்து  விழிப்புணர்வோடு நம் சமூகத்தை வாழச் சொல்லும்  மனிதர்கள் கூட்டம். கழுகின் நெடும் பயணத்தில் நாம் நிறைய பேசிய காலங்களும் இருக்கின்றன...எதுவுமே பேசாமல் மெளனித்துக் கிடந்த காலங்களும் இருக்கின்றன. இப்படியாய் சாதாரண மக்களின் மனோநிலையைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகிய கழுகு...

பேஸ்புக்கில் தனது தனிப்பக்கத்தைத் தொடங்கி இருக்கிறது. எப்போதும் எங்களுக்கு ஆதரவு அளித்து எங்களின் கருத்துக்களோடு உடன்பட்டு நிற்கும் தோழமைகளை கழுகு தனது சிறகு விரித்து வரவேற்கிறது.

https://www.facebook.com/pages/%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81/478934842183563


எந்த சமூகத்திலும் தனி மனிதர்கள் வென்றதாக வரலாறு இல்லை....நாம் அதிகாரத்தை கையிலெடுக்கிறோமோ இல்லையோ ஒத்த கருத்துள்ள மனிதர்களின் சப்தம் குறைந்த பட்சம் அநீதிகளின் செவிப்பறைகளையாவது கிழிக்கட்டுமே....!!!!


(கழுகு இன்னும் உயரப் பறக்கும்)



Tuesday, May 07, 2013

சடுகுடு ஆடும் தமிழக அரசியல்....மிரட்சியில் திருவாளர் பொதுஜனம்...!

அரசியல் கட்சிகளை அண்டிப் பிழைத்தால்தான் வாழ்க்கையை ஓட்ட முடியும் என்ற அசாதாரண சூழல் இந்தியாவில் எந்த மாநிலத்தில் இருக்கிறதோ இல்லையோ தமிழகத்தின் அதுதான் இப்போதைய சூழல். மனசாட்சியை எல்லாம் மார்வாடிக் கடையில் வைத்து விட்டு, தான் சார்ந்திருக்கும் கட்சி எந்தப்பக்கம் சாய்கிறதோ அந்தப்பக்கம் எந்த விதமான கேள்விகளும் இல்லாமல் சாய்ந்து உடனுக்குடன் தங்களின் மனோநிலையை மாற்றிக் கொள்ளவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு கட்சியின் அடிநிலை தொண்டர்கள் இன்று தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இலை மலர்ந்திருக்கிறதே இன்னும்  மூன்றாண்டுகளுக்கு இருட்டு அறைக்குள் புழுங்கிக் கிடந்தாவது அம்மா வாழ்க என்று நாங்கள் முழங்கத்தான் செய்வோம், மின்சாரம் இல்லாவிட்டாலும் ஜெனரேட்டரும் இன்வெர்ட்டரும் வாங்க காசு வேண்டாமா? ஜெய் அம்மா என்று சீறிப்பாயும் ஆளுங்கட்சியினர் ஒருப்பக்கம் ஆதாயத்தோடு அலைகிறார்கள் என்றால்...

அய்யா, அம்மா, அய்யா, அம்மா...மறுபடியும் அய்யா என்பதுதானே தமிழகத்தை ஆள்வதற்கு மக்கள் நிர்ணயித்து வைத்திருக்கும் நியதி அதனால் எப்படிப்பட்ட சூழல் வந்தாலும், தான் சார்ந்திருக்கும் கட்சியின் நியாய தர்மங்களை எல்லாம் சீர்தூக்கிப் பார்ப்பது எல்லாம் இரண்டாம் பட்சம் என்ற உறுதியோடு தங்கள் தலைமையின் வெறுக்கத்தக்க செயல்களையும் சகித்துக் கொண்டு நகர்ந்து கொண்டிருக்கும் உடன் பிறப்புக்கள் ஒருபக்கம்...

கலைஞர் ஆட்சியில் இருந்த மின்வெட்டு சற்றேனும் குறையுமா என்ற எதிர்ப்பார்ப்போடு நாம் ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைத்த அம்மையார் அதிரடியாய் பல தீர்மானங்களை நிறைவேற்றவும், ஈழபிரச்சினைக்காக உயிரைக் கொடுக்கவும், மத்திய அரசை எதிர்க்கவும் அதைவிட வலுவாய் கடந்த ஆட்சியைப் பற்றி அவதூறு பேசவும் செய்கிறாரே அன்றி மாநிலத்தின் தலையாய பிரச்சினையான மின்வெட்டுப் பிரச்சினைக்கு போர்க்கால அடிப்படையில் ஒருநடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை. மிரண்டு போயிருக்கும் திருவாளர் பொதுஜனத்துக்கு  இப்போது ஒரே குழப்பம்....

ஆக மொத்தத்தில் எல்லாமே மலிவு விலையில் வேண்டும் என்று ஆசைப்பட்ட திருவாளர் பொதுஜனத்துக்கு அம்மா ஆட்சியில் வெகு விமர்சையாக காதுகுத்து நடத்தப்பட்டிருப்பதுதன மிச்சம். தெருக்கு தெரு தடுக்கி விழுந்தால் டாஸ்மாக்குகளை திறந்து வைத்து விட்டு புண்ணியத்திற்காக மலிவு விலையில் உணவகம் ஆரம்பித்தது மட்டுமே இவரின் தலையாய சாதனையாக இருக்கிறது.

இன உணர்வு மண்ணாங்கட்டி என்று ஏதோ ஒரு மாய கட்டிற்குள் நின்று தமிழர் ஒற்றுமை பற்றி பேசி பொழுதுபோக்கிக் கொண்டிருந்த அவர்கள் கனவில் மண் அள்ளிப்போடுவதை போல தங்களின் திராவிட எதிர்ப்பைக் காட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் வன்னியர் போர்வையைப் போர்த்திக் கொண்டு சாதி ஒற்றுமையை காட்டுகிறேன் பேர்வழி... என்று...

வன்னியர் அல்லாத ஒட்டு மொத்த தமிழரையும் அடிமைகளாக சித்தரிக்கும் வண்ணம் சித்திரை விழாவில் தத்துப் பித்துவென்று உளற அதன் தொடர்ச்சியாய் கலவரம், குண்டர்கள் சட்டம் கைதுகள், பேருந்து உடைப்புகள், பேருந்து எரிப்புகள் என்று தமிழகத்தில் வன்னியர்கள் அதிகமிருக்கும் பகுதிகள் எல்லாம் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன. பின் தங்கியுள்ள தாங்கள் சார்ந்திருக்கும் சமூக மக்களை மேம்படுத்த சாதிக்கட்சி அமைத்த தலைவர்கள் எல்லாம் இன்று பிற சாதியினரை அடக்க நினைத்ததின் விளைவு...

தமிழர்களின் இன உணர்வு என்னும் மாயக்கட்டை உடைத்தெறிந்திருக்கிறது. அடிப்படையில் தமிழகத்திலிருக்கும் எந்த ஒரு தலைவனுக்கும் விசால பார்வைகள் இல்லை. மக்களைப் பற்றிய கவலைகள் இல்லை. மனிதர்கள் அடித்துக் கொண்டு செத்து தொலைகையில் பாவம் மரங்கள் என்ன செய்தன என்று தெரியவில்லை பசுமை தாயகம் என்ற பெயர் ஏந்தி பவனி வரும் ஐயா அன்புமணி ராமதாஸின் அறிவுறை ஊருக்குத்தான் போல அவரைப் பின்பற்றுபவர்களுக்கு இல்லை போலும்...?

பல்வேறு வழக்குகளும் புலிப்பாய்ச்சல் பாய்ந்திருக்க என்ன செய்வதென்று அறியாமல் சிறைக்குள் காந்தியின் சத்திய சோதனையை தலைவர்கள் படித்துக் கொண்டிருக்க தொண்டர்கள் வெளியில் கொலைவெறியாட்டம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். சட்டம் சாதக பாதங்களை எல்லாம் அலசி சகுனியாய்ப் பாய்ந்திருக்கிறது தர்மதேவனின் முகமூடியோடு.

சுயநலமான அரசியல்கட்சிகள், குழப்பமான நிலையில் அதன் தொண்டர்கள், தெளிவில்லாமலும் ஒற்றுமையில்லாமலும் வறுமையால் பிரித்து வைக்கப்பட்டுள்ள மக்கள்...என்று மிகப்பெரிய சமநிலையற்ற ஒரு சூழலில் நாம் இருக்கிறோம் என்பதுதான் இங்கே வேதனையான விசயம். மாநிலத்தின் அத்தனை குழப்பத்திற்கும் சளைத்ததாக மத்திய அரசும் இல்லை. சோனியாவின் குடும்பத்தினர் பொழுது போக்க இந்த தேசம் ஒரு திறந்தவெளி அரங்காக ஆக்கப்பட்டிருக்கிறது....

அநீதிகள், துரோகம், வறுமை, மின்வெட்டு, விலைவாசி ஏற்றம், ஸ்டண்ட் அரசியல் இதற்கு  நடுவில் சராசரி பொதுஜனம் இன்றைக்கு நாள் நகர்ந்தது..நாளைய தினம்...எந்தப் பிரச்சினையுமின்றி சுகமாய் நகரவேண்டும் என்ற கவனத்தோடு அன்றாடப் பொழுதுகளை ஓட்டிக் கொண்டிருக்கிறது.

தமிழகத்துக்கென்று அதிரடியாய் திட்டங்களைச் செயல்படுத்துகின்ற தொலைநோக்குப் பார்வைகள் கொண்ட ஒரு தலைவன் வேண்டும். அவன் மக்களோடு மக்களாய் இருந்து எல்லாப் பிரச்சினைகளையும்  தீர்க்கவேண்டும். 

தமிழகத்தின் தலையெழுத்து ஒன்று அதிமுக அல்லது திமுக என்னும் நிலை இப்போது மாறப்போவதில்லை...! கண்டிப்பாய் அம்மா சாதாரண பொதுமக்களின் சிரமத்தை மக்களோடு மக்களாக இருந்து அலசும்....குணநலம் கொண்டவரல்ல...அவரின் சமூக ந்லம் என்பது மேல்தட்டு மக்களின் சமூக அக்கறையைப் போன்றது.....அது உண்மையான மக்களின் வலியை அவருக்கு ஒரு போதும் உணர்த்தப் போவது இல்லை....

அம்மாவை விட்டால் தமிழகத்தில் இருக்கும் சாமானிய மக்களின் அன்பைப் பெற்ற வசீகரமான, பழுத்த அரசியல் அனுபவம் கொண்ட அடுத்த தலைமுறைக்கான தலைவர் ஒருவர் திமுகவில் இருக்கிறார்....

ஆனால் அவரையும் நேரத்தே காலத்தே தலைவராக்கி தமிழகத்துக்கு புதிதொரு வெளிச்சத்தைக் கொடுக்காமல் காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார் கலைஞர். 

புதிய தலைவனொருவன் வந்து சவுக்கு எடுத்து சுழற்றாமல் அவ்வளவு சீக்கிரம் நமது சுயபுரிதலோடு  சமூகம் மாறிவிடுமா என்ன...?

தமிழகத்தின் தற்போதைய தேவை நல்ல ஒரு மேய்ப்பன் அவ்வளவே!!!!

(கழுகு இன்னும் உயரப் பறக்கும்)
 
கார்டூன்: நன்றி - பாலா
 

Sunday, March 03, 2013

பூரண மதுவிலக்கு வருமா? ஒரு காந்தியவாதியின் உண்ணாவிரதப் போராட்டம்...!


சசி பெருமாள் ஒரு சாதாரண காந்தியவாதி. அவர் கவர்ச்சி அரசியலை கையிலெடுக்கவில்லை. விளம்பரப் பதாகைகளை தமிழகமெங்கும் நட்டு வைக்க எந்த ஏற்பாடும் செய்யவில்லை. தமது கைத்தடிகள் மூலம் காட்டுத்தீயாய் பிரச்சாரம் செய்து தனது உண்ணாவிரதத்தை பிரபலப்படுத்திக் கொள்ளவில்லை. தமிழக ஊடகங்களின், இணைய எழுத்தாளர்களின் கவனத்தை அவர் ஈர்க்கவில்லை. அவரின் தேவை அரசியல் விளம்பரம் அல்ல. தன்னை இன்னொரு காந்தியாய் காட்டிக் கொள்ள அவர் விரும்பி இருக்கவில்லை.

அவருக்குத் வேண்டியது எல்லாம் பூரண மதுவிலக்கு தமிழகம் முழுதும் வேண்டும் அவ்வளவுதான். அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்து இரத்தம் கொதித்த என் தமிழ்ச்சொந்தங்கள் யாரும் ஒரு தமிழனின் தமிழர் நலம் வேண்டிய பெரும் கோரிக்கைக்கு இரத்தம் கொதிக்கவில்லை. கொதிக்கவும்  மாட்டார்கள். ஏனென்றால் கூட்டு மனோபாவம் எங்கே ஓடுகிறதோ அந்த திசையை நோக்கி ஆட்டுமந்தையைப் போல ஓடவே நமக்கு பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது.

தன் கட்சியின் தலமைகள்  தலையணை, மெத்தை சகிதம் உண்ணாவிரதம் இருந்தால் அதை மிகப்பெரிய வரலாற்று நிகழ்வாய் பதிவு செய்யும் கட்சி விசுவாசிகளுக்கு சசி பெருமாள் என்னும் மனிதர் ஒரு பொருட்டாய் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். சசி பெருமாள் ஒரு காந்தியவாதி, ஆமாம் அவர் ஒரு பொதுநலம் விரும்பிய சேலத்தை சேர்ந்த ஒரு சாமானியர். பெரிய பெரிய மனிதர்களின் இரண்டு மணி நேர, மூன்று மணி நேர உண்ணாவிரதங்களைத் தாங்க முடியாமல் தீக்குளிக்க காத்திருக்கும் என் தமிழ்ச் சமூகம். இந்த சாதரண மனிதரின் 32 நாள் உண்ணவிரதத்தை ஒரு செய்தியாய் கடந்து சென்று கொண்டிருப்பது வரமா? சாபமா?

தமிழ் ஊடகங்கள் தமது இனத்திற்கு பெரும் துரோகத்தை தொடர்ச்சியக இழைத்துக் கொண்டே இருக்கின்றன. தங்களின் சுய லாபத்திற்காய் ஏதோ ஒரு சப்பையான விசயத்திற்கு சப்தமேற்றி மீண்டும் மீண்டும் மக்களிடம் அதைப் பரப்புவது, தேவையில்லாவிட்டால் வாயை மூடிக் கொண்டிருந்து  ஒரு முக்கிய செய்தியை இருட்டடிப்பு செய்வது என்று மிகப்பெரிய ஒரு பிழையை அவர்கள் சமகாலத்தில் செய்து கொண்டிருக்கிறார்கள். இதன் விளைவுகள் அவர்களின் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் காலங்கள் கடந்தாவது குரல்வளைகளைப் பிடிக்கும் என்பதை அவர்கள் அறியாதவர்களாய் இருகிறார்கள்.

அரசியல் கட்சித் தலைவர்களின் பிறந்த நாட்கள் எல்லாம் விமர்சையாகக் கொண்டாடப்பட்டு அவர் அவர்களின் செயற்கைகோள் தொலைக்காட்சிகள் அவற்றை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் என்ன மாதிரியான சமூக விழிப்புணர்வு இருக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?  தொடர்ந்து 32 நாள் உண்ணாவிரதம் இருக்கும் இந்த மாமனிதரின் போரட்டத்தை கொச்சைப்படுத்த இந்தப் போராட்டத்திற்கும் அரசியல் உள்நோக்கம் கற்பிக்கும் புரையோடிப்போன அரசியல் சித்து விளையாட்டுக்களை எப்படி வகைப்படுத்துவீர்கள் தோழர்களே..?

பூரண மதுவிலக்கு வேண்டும் என்பது காந்தியின் கனவு. தமிழகத்திற்கு வேறு வழியில் வருவாய் ஈட்ட திட்டமிடல்களும் நிர்வாக வழிமுறைகளும்  கொண்டிராத அரசுகள் தொடர்ச்சியாய் நம்மை படுகுழியில் தள்ளி இப்படி, இன்று வீதிக்கு வீதி டாஸ்மாக்காய் அது விஸ்வரூபமெடுத்து நிற்கிறது. குடிப்பழக்கம் என்று இல்லை எந்த ஒரு செயலுமே நமது விழிப்புணர்வில் நிகழவேண்டும். எந்த ஒரு விசயத்திற்கும் அடிமை என்று ஆகி விட்டால் அது வாழ்க்கையை சீரழித்து விடும் என்று நாம் ஏற்கெனவே கழுகில் ஒரு முறை எழுதி இருக்கிறோம்.

மதுவை அறியாமல் பயன்படுத்துபவர்களை அது அடிமையாக்கி விடுகிறது. மதுவை மக்களுக்குப் பொதுப்படுத்துவதற்கு முன்னால் மது பற்றிய விழிப்புணர்வை நம்மை ஆளும் அரசுகள் மக்களுக்கு கொண்டு வரமுடிமா? சரியான அளவில் மதுவின் பயன்பாடு இருக்கும் போது அது வாழ்க்கையை சீரழிக்காமல் இருக்கும் என்று முதலில் போதித்து செயற்படுத்தி விட்டு பிறகு மது விற்பனையை செய்ய திரணி இருக்கிறதா நம்மை ஆளும் அரசுகளுக்கு....?

மக்களை எப்போதும் அறியாதவர்களாகவே வைத்திருந்து அவர்களை வறுமையிலும், பசியிலும் நிறுத்தி வைத்து மன உளைச்சல் கொண்ட மனிதர்களாய் வாழ்வதற்கான எல்லா சாத்தியக்கூறுகளையும் உருவாக்கி விட்டு அவர்களின் மன நிம்மதிக்காய் தெருவெங்கும் மலிவாய் மதுக்கடைகளை திறந்து வைத்திருப்பதை வரலாற்றின் பொன்னேடுகளின் சாதனையாகத்தான் நாம் குறித்து வைத்துக் கொள்ளவேண்டும்!!!!?  நாட்டில் பெருகி வரும் பல குற்றங்கள் மதுவின் கோரப்பிடியிலிருந்து வாழ்க்கையின் முரண்பாடுகளை எட்டிப்பார்த்து அடையும் விரக்தியில்தான் நடந்து கொண்டிருக்கிறது. இப்படியான ஒரு காலச்சூழலில் பூரண மதுவிலக்கை அரசு அமுல் படுத்துகிறதோ இல்லையோ மதுவினை விற்பதற்கும், வாங்குவதற்கும் சில கட்டுப்பாடுகளையாவது விதிக்குமா? என்பதுதான் நம்மைப் போன்ற சாதாரணர்களின் எதிர்ப்பார்ப்பாய் இருக்கிறது.

சமூக நீதியையும், சாதனைகளையும் பற்றி பேசும் இந்த அரசு மக்களை நிஜமாகவே நேசிக்கிறது என்றால் நாடெங்கும் மலிவுவிலையில் உணவகங்களைத் திறந்தால் மட்டும் போதாது...கைது செய்வதின் மூலம்  போராட்டங்களைத் தடுத்து நிறுத்தி விடலாம் என்பன போன்ற நிலைப்பாட்டினை அரசு விடுத்து இது போன்ற மக்கள் பிரதிநிதிகளின் போரட்டங்களை செவி மடுத்து கேட்கவும், சரியான கருத்துக்களை பரிசீலித்து அதை பயன்பாட்டில் கொண்டுவரவும் ஆவண செய்யவேண்டும்.

மக்களுக்காக, மக்களின் பிரதிநிதியாய் தனி மனிதராய் போராடும் காந்தியவாதி ஐயா சசி பெருமாள் போன்றவர்களை ஆதரிப்பது மக்களாகிய நமது கடமையாகிறது. தனி மனிதராய் தொடர்ந்து  32 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து வரும் ஐயா சசி பெருமாளுக்கு கழுகு தனது சிரம் தாழ்த்தி நன்றி தெரிவித்துக் கொள்வதோடு, இத்தகைய கண்ணியம் மிகு சமூக நலம் விரும்பிகள் வாழும் ஒரு சமூகத்தில் நாமும் வாழ்கிறோம் என்ற பெருமிதத்தோடு தனது ஆதரவை வலுவாய் இங்கே பதிவும் செய்து கொள்கிறது.


(கழுகு இன்னும் உயரப் பறக்கும்)





Tuesday, December 18, 2012

பதவி உயர்வுக்கு இட ஒதுக்கீடு சரியா? ஒரு எதார்த்தப் பார்வை...!


சுற்றி நிகழும் ஓராயிரம் சூழல்களையும் உள்வாங்கிக் கொண்டு சரியான தெளிவுகளை வாசகர்களிடம் கொண்டு செல்வதையே நாம் வழமையாகக் கொண்டிருக்கிறோம். மிகைப்பட்ட நம்மைச் சுற்றிய முரண்களைப் பற்றி எழுதுவது கைப்புண்ணிற்கு கண்ணாடி வைத்து காட்டுவதைப் போன்ற தேவையற்ற நிகழ்வாகி விடும் என்பதாலேயே பல நேரங்களில் அடர்த்தியான மெளனத்தை சுமந்த படியே நாங்கள் சிறகடிக்க வேண்டியும் இருகிறது.

சமீபத்தில் நாம்  அறிந்த  ஒரு விடயத்திலிருக்கும் முரணை எழுத்தாக்கி உங்களிடம் சேர்க்கும்  விதமாய் எங்களின் கழுகு குழுமத்தில் விவாதித்த செய்தியின் சாரம்சத்தை கட்டுரையாக்கி இருக்கிறோம்...! கட்டுரையின் மையக்கருத்திலிருந்து மாறுபடும் நண்பர்களின் ஆரோக்கியமான கருத்துரைகளை நாங்கள் வரவேற்பதோடு....நேர்மையான  விவாதங்கள் மேலும் பல புதிய கதவுகளை திறந்து விடும் என்பதையும் திண்ணமாய் நம்புகிறோம்.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு அரசு பணி உயர்வில் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவிற்கான ஓட்டெடுப்பு நேற்று ராஜ்யசபாவில் வெற்றி பெற்றிருக்கிறது.. தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளும் இந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்திருக்கும் இச்சூழலில் மசோதாவை நிறைவேற்றியே தீருவோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி தனது ஒட்டரசியலில் வென்றும்  இருக்கிறது.

இட ஒதுக்கீடு வழங்குவதிலேயே மறு சீரமைப்பு தேவைப்படும் ஒரு சூழல் இப்போது உருவாகிப் போயிருப்பதை தெளிவான பார்வைகள் கொண்டோர் யாரும் மறுக்க முடியாது. டாக்டர் அம்பேத்கார் எழுதிய சட்டம் 25 ஆண்டுகளுக்கு மட்டுமே தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மக்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கப்படவேண்டும் என்ற ரீதியில் வடிவமைக்கப்பட்டு இருந்தது. 25 ஆண்டுகள் முடிந்த பின்னால் அந்த சூழலை ஆராய்ந்து அப்போதும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்கள் பொதுப்பிரிவினர் அளவிற்கு சமமாய் இல்லாவிடில் மேலும் ஒரு பத்து ஆண்டுகளுக்கு இந்தச் சட்டத்தை நீட்டிக் கொள்ளாம் என்றுதான் அம்பேத்கார் எழுதிய சட்டம் சொல்கிறது.

ஆனால் 25 வருடங்கள் கழிந்த பின்னால் உண்மையான ஆய்வுகள் செய்து இச்சட்டம் நீட்டிக்கப்படாமல் ஓட்டரசியலுக்காய் தொடர்ச்சியாய் மத்திய அரசால் பத்து பத்து ஆண்டுகள் நீட்டிப்பு செய்யப்பட்டுக் கொண்டே வருகிறது என்பது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.....

உண்மையில் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்களில் யாரெல்லாம் இட ஒதுக்கீடு பெற்றர்களோ அவர்களின் குடும்பங்களே தொடர்ச்சியாக இட ஒதுக்கீட்டின் பலனைப் பெறுபவர்களாக இருக்கிறார்கள். இப்படி தொடர்ச்சியாக ஒரு சாரார் மட்டுமே இட ஒதுக்கீட்டினைப் பெற்றுக் கொண்டு தங்கள் பிரிவில் இருக்கும் மற்றவர்களுக்குத் தடையாகவும் இருக்கிறார்கள்...

உதாரணத்திற்கு இட ஒதுக்கீட்டின் மூலம் ஐஏஎஸ் போன்ற உயர் பதவியில் இருப்பவர்களை எடுத்துக் கொண்டால் அவர்களது பிள்ளைகள் மட்டுமே  இனி அந்த இட ஒதுக்கீட்டை அடையக் கூடிய நிலையில் இருக்கின்றார்கள், ஏனெனில் அவர்கள் அந்தப் படிப்பிற்கு என்னென்ன தேவையோ அதனை மிகத் தெளிவாக தங்கள் பிள்ளைகளுக்கு ஆரம்பத்திலிருந்தே பயிற்றுவித்து விடுகின்றனர். (ஆரம்பத்தில் முற்பட்ட வகுப்பினர் இப்படிச் செய்து தங்கள் வகுப்பினர் மட்டுமே அரசுப் பணிகளில் நீக்கமற நிறைந்திருந்தது போல)

ஆனால் அதே வகுப்பைச் சேர்ந்த இது வரையிலும் இட ஒதுக்கீட்டின் பலனை அனுபவித்திராத ஒரு தினக்கூலியின் பிள்ளை இந்த முன்னேறிய ஆதிதிராவிடர்களின் பிள்ளைகளோடு போட்டி போட்டு அந்த ஐஏஎஸ் பதவியை அடைய முடியாத நிலை தான் இன்று உள்ளது.

ஆகவே தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை இது வரை அந்த பலனை அனுபவித்தவர்களின் வாரிசுகள் இனி மேல் பொதுப் பிரிவுக்கு மாறி விட வேண்டும் என்ற வகையில் அந்த சட்டம் திருத்தப்பட வேண்டும். மற்ற எந்த வகுப்பினரின் இட ஒதுக்கீட்டிற்கும் இதை பொதுவான சட்டமாக மாற்ற வேண்டும்..

பொதுவாகச் சொல்ல வேண்டுமானால், எந்த வகையான இட ஒதுக்கீடாக இருந்தாலும் அது அந்தந்த சமூகத்தினரின் முதல் தலைமுறையினருக்கு மட்டுமே என்பதை சட்டமாக இயற்ற வேண்டும்.  இட ஒதுக்கீட்டையே இப்படியாய் திருத்தம் செய்ய வேண்டும் என்ற பார்வையை உங்களுக்காக நாங்கள் பகிரும் இந்த வேளையில் பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு வேண்டும் எபதை எப்படி  ஏற்று கொள்வது என்று நீங்களே கூறுங்கள்...?

இந்தச் சட்டத்தினால் அரசுப் பணியாளர்கள் மத்தியில் மனநிலை சமச்சீர் கெட்டுப் போய், அரசு இயந்திரம் ஒட்டு மொத்தமாக முடக்கப்படும் பெரும் ஆபத்து இருப்பது உங்களுக்குத் தெரியுமா?

ஒரு அதிகாரியின் கீழே குமாஸ்தாவாக வேலைக்குச் சேர்ந்து அவரிடம் வேலை பயின்ற ஒருவர், இரண்டு ஆண்டுகள் கழித்து அவருக்கு சமமாகவும், அதற்கு அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவரை வேலை வாங்கும் உயரதிகாரியாகவும் தகுதியின் அடிப்படையில் இல்லாமல், சலுகையின் அடிப்படையில் உயரும் போது, அரசுப் பணியாளர்கள் 82 சதவிகிதத்தினர் மத்தியில் ஒருவித கோபத் தீ ஏற்படும். அது ஒரு வித ஒத்துழையாமையை ஏற்படுத்தி அரசு எந்திரம் அப்படியே ஸ்தம்பித்துப் போகவும் வழி வகுக்கும்.

மேலும் தகுதியின் அடிப்படையில் இல்லாமல், சலுகையின் அடிப்படையில் ஒரு துறையின் அதிகாரியாக உயரும் ஒருவர், எப்படி அவசர காலங்களில் முக்கிய முடிவுகளை எடுக்க முடியும்? அனுபவம் இல்லாத முடிவுகளால் முழுக்க முழுக்க முரண்பட்ட அசாதரண சூழல் ஏற்பட்டுப் போய்விடாதா?

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இனத்தவரில் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு அரசு சலுகைகள் கண்டிப்பாய் கிடைக்க வேண்டும் என்பதில் நமக்கு யாதொரு மாற்றுக் கருத்துகளும் இல்லை என்பதை வலுவாக பதிவு செய்யும் அதே நேரத்தில் இது போன்ற பதவி உயர்வுக்கெல்லாம் இட ஒதுக்கீடு என்று ஓட்டரசியலுக்காய் அரசியல் கட்சிகள் நடத்தும் குட்டிக் கலாட்டாக்கள் அரசையும், அரசு நிர்வாகத்தையும், அதன் விளைவுகள் கடுமையாய் மக்களாகிய நம்மையும் பாதிக்கப் போவது உறுதி....!


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)


 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes