Friday, April 08, 2011

சா'தீயே' நீ ஒழிந்து போ.......ஒரு தொலை நோக்கு பார்வை!



சமுதாயத்தின் குரல்வளையை எப்போதும் இறுக பிடித்திருக்கும் ஒரு முரட்டுக் கையாய் சாதிய கட்டமைப்பு இருக்கிறது. தீயது செய்த போதிலும் நன்மைகள் செய்யும் போதிலும் சாதி என்ற படிமம் நம்மை ஒரு தொற்று நோயாய் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு கணத்தில் ஒட்டு மொத்தமாய் மனிதர்களுக்கு தான் இந்த சாதியை என்ற எல்லாம் ஒரு அம்னீசியா போல மறந்து போகாதா.....புதிதாய் எமக்கு ஒரு புத்துணர்ச்சி நிறைந்த சமுதாயம் கிடைத்து விடாதா? என்ற ஏக்கத்தை எழுத்தாக்கி பார்த்த போது....இந்த கட்டுரை சமைந்தது.

ஒவ்வொரு முறையும் காலம் எம்மை பார்த்து தொண்டைகள் செருமி, கனைத்துக் காட்டி அதட்டலாய் உருட்டலாய் கேள்விகள் கேட்கும், யாமும் காலத்தை உற்று நோக்கி அதைவிட அதிகமாக செருமி, கனைத்துக் காட்டி, கண்களை உருட்டி..... நமது பதில்களைச் சொல்வோம்....இது வழமை....!

இந்த வழமையில் எம்மிடம் கேள்வியாய் வந்து சிக்கியிருக்கும் நூற்றாண்டுகள் கடந்த சாதிப் பிசாசினை எரித்தே விட வேண்டும் என்ற நோக்கில் எமது சக்தியை எல்லாம் ஒன்று திரட்டி முயலும் கணத்திலெல்லாம் மனிதர்களின் கூட்டு மனோபாவமும் ஒன்றிணைந்து இயங்கும் வேகமும் சுயநலமாய் சுழன்று கொண்டிருப்பதும் மிகையாக இருப்பதால் குறையாக இருக்கும் எமது நிறைவான எண்ணங்களை துஷ்ட நிறைகள் சூறையாடி விடுகின்றன.

சமீபத்திய எமது திசைகள் தாண்டிய சிறகடிப்பில் சாதி என்னும் பிசாசு அழுந்தப் பிடித்து வைத்திருக்கும் எம் மக்களை மீட்டெடுக்க வழிகள் அறியா நூற்றாண்டுகள் கடந்த மானுட சமுதாயம் சமூக நீதி என்ற பெயரில் வைத்திருக்கும் இட ஒதுக்கீடு எமது கண்களில் சிக்கியது.

இட ஒதுக்கீடு என்றால் என்ன? எத்தனை சதவீதம் கொடுக்கப்படுகிறது? ஏன் கொடுக்கப்படுகிறது? எத்தனை சாதிகள் இங்கே இருக்கின்றன? சமூக ஒடுக்கு முறைகளை இந்த இட ஒதுக்கீட்டு முறையின் மூலம் எப்படி களையலாம் என்ற புள்ளி விபரங்களை கொடுப்பதற்கு பல வல்லுனர்கள் இருக்கிறார்கள் மேலும் இணையத்தின் பாகத்தினை தொட்டு தட்டினால் வந்து கொட்டும் விபரங்களை நீங்கள் வாசித்து கொண்டேயும் இருக்கலாம்...மாதக் கணக்கில்.

எமது மூளைகள் தசையினாலும் இரத்தத்தாலும் சூழ்ந்துள்ளது. பிண்டமும் நரம்புகளும் ரத்தமும் கூடி நிரவிக் கிடக்கும் சுவாசிக்கும் மானுடக்கூட்டம் நாம்...

கத்தியை வைத்துக் கொண்டு எப்படி கத்தியை அழிப்பது....கத்தி என்ற ஒன்று இருக்கும் வரை அது வன்முறைதான். சாதி என்ற ஒரு கட்டமைப்பு இருக்கும் வரை அது தீங்குதான் என்ற நமது பார்வைகளை வார்த்தைகளாக்கி வெளிக்கொணரும் முன்பே மனிதர்கள் உரக்க கூச்சலிடுகிறார்கள் இது எப்படி சாத்தியமென்று....????

சாத்தியமாவதற்கு வாய்ப்பில்லை என்று முணுமுணுக்கும் வாய்கள் எல்லாம் இதற்கு வழிமுறைகள் இருக்குமா ஏதேனும் என்று யோசித்து இருக்குமா? பழைய வழிமுறைகளை இன்று சட்டமாக நாம் பின்பற்றிக் கொண்டிருக்கும் வேளையில் அவை பிறப்பிக்கப்பட்ட போது கூட இது இயாலது, நடக்காது, வேண்டாம் என்று சொல்லவும் ஆட்கள் இருந்திருப்பார்கள் தானே?

இட ஒதுக்கீடு என்ற ஒன்று அவசியம் என்பதை கருத்தில் கொள்வோம்...அது சமூக ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப் படவேண்டும் என்பதையும் கருத்தில் கொள்வோம். இங்கே பொருளாதார அடிப்படையில் கொடுத்தல் ஆகாது என்ற கூற்றையும் கவனமாய் கைக் கொள்வோம்.

சமூகத்தில் அடக்கிவைக்கப்பட்ட புறச்சூழல் சரியில்லாத, பாட்டன் முப்பாட்டன் காலமாய் அழுத்தி பிடித்து வைக்கப்பட்டுள்ள எம் தோழர்களுக்கு சரியாக இந்த் திட்டத்தின் மூலம் பயன் கிடைக்க வேண்டும் என்பதையும் கருத்தில் கொள்வோம்....

இவற்றை அமுல் படுத்த நாம் அடையாளம் கொள்ளும் பதத்தை மட்டும் மாற்றுவோம். சாதி என்ற பெயரால், பிற்படுத்தப்பட்டவர், தாழ்த்தப்பட்டவர், ஆதி திராவிடர் என்று சமூக வாரியா பிரிக்கப்பட்டுள்ள எம்மக்களுக்கு மட்டுமின்றி உயர் சாதியினர் என்று அழைப்படுபவர்கள் வரையில் இது வரை பயன் பட்டு வரும் பதத்தினை தீயிலிட்டு பொசுக்குவோம்....

உயர்சாதி என்ற பதத்திற்கு பதிலாக - ஊக்கமான சமூகத்தினர்

பிற்படுத்தப்பட்டோர் - சமூக ஊக்கம் அவசியப்படும் சமுகத்தினர் (சாதாரணம்)

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - சமூக ஊக்கம் அவசியப்படும் சமூகத்தினர் (மத்திம நிலை)

தாழ்த்தப்பட்டோர் - சமூக ஊக்கம் மிக மிக அவசியமான சமூகத்தினர் (அவசர நிலை)

என்ற ரீதியில் பெயர்கள் இட்டு, இப்போது நடைமுறையில் இருக்கும் அதே திட்டத்தை செயல்படுத்தலாம். மேலே நாம் கூறியிருப்பது ஒரு அடையாள வழிமுறை. இதைச் செய்வதால் என்ன நலம் வந்துவிடும் என்று மீண்டும் கேள்விகளை நாவென்னும் வில்லினில் ஏற்றி எம்மீது சராமரியாக பாயவிட கணைகள் தயாராய் இருக்குமென்பதை நாம் அறியாமலில்லை.

கயிற்றின் மீதும் கத்தியின் மீதும் நிற்பதும் நடப்பதும் எப்போதுமே சிரமமானதுதான். ஒரு அறுவை சிகிச்சையில் வலிகள் இல்லாமல் எப்போதும் இருந்ததில்லை, போர்முனையில் இருப்பவன் காயமில்லாமல் இருக்கவேண்டும் என்றும் எண்ண இயலாது....வலியும் வேதனைகளும் கடந்து வரும் வேளைகளில் அவற்றை விட்டு விலகியிருத்தலும் ஆகாது....

மனித ஆழ்மனம் எப்போதும் நாம் பேசுவதையும் திரும்ப திரும்ப செய்வதையும் உள்ளே கிரகித்து வைத்துக் கொண்டுதானிருக்கும், நல்லது செய்ய வேண்டி ஒரு தவறான பதத்தை உபோயோகம் கொண்டாலும் தவறான பதத்திற்கான அர்த்தத்தை மூளைகள் தேடிப் பிடித்து அதை நினைவுப் பகுதியில் தேக்கி வைக்கும்.

குறிப்பாக மாணவப்பருவத்தில் இருந்தே எனக்கு இந்த சீட் கிடைத்தது நான் தாழ்த்தப்பட்டவன், எனக்கு அது கிடைத்தது எனது கட் ஆஃப் இவ்வள்வு நான் பிற்படுத்தப்பட்டவன், எனக்கு இத்தனை சதவீதம் தேவை நான் உயர்சாதியைச் சேர்ந்தவன் என்று சொல்லி சொல்லி அந்த சொற்களை எல்லாம் நம்முள் தேக்கிவைத்து...

நகரும் போது காலங்கள் கடந்தும் தாழ்த்தப்பட்ட அல்லது பிற்படுத்பட்ட என்று சொல்லக்கூடிய சமூகம் முன்னேறி சரி நிகர் சமமாய் நிற்கும் வாய்ப்பு இருக்கும்..! அறிவுகள் சமமாகும், பொருளாதரம் சமமாகும், ஆனால்....ஆழ் மனதில் நாம் பதியவைத்திருக்கும் நான் இந்த சாதிக்காரன் என்ற படிமாணம் போயிருக்கும் என்றா நினைக்கிறீர்கள்?காலங்கள் கடந்தும் எண்ணங்களாய் இதை சுமந்து கொண்டேதானிருப்போம்...!

இக்கணமே இப்போழுதே அதற்கு நாம் மேலே கூறியிருப்பது போன்ற வேறு பெயர்களை உறுத்தாத வண்ணம் சூட்டிவிட்டால் ...காலபோக்கில் உயர் சாதிக்காரன், தாழ்த்தப்பட்டவன், பிற்படுத்தபட்டவன் என்ற பதங்கள் எல்லாம் கரைந்தே போகும்....!

பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்கும் போதே....அரசு சுத்த திருத்தமாக மேலே குறிப்பிட்டதை போல எழுதி சேர்த்து குறிப்பிட்ட சாதி பெயர்களை போடாமல் சமூகத்தில் அடையாளத்தை மாற்றி ஒரு காஸ்ட் ப்ரீ சமூகத்தை உருவாக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு சாதியற்ற ஒரு காஸ்ட் ப்ரீ சமூகத்தை உருவாக்கும் ஆரம்பக் கட்டங்களில் அடையாளம் காணும் விதமாக சாதியை பயன்படுத்திதான் ஆகவேண்டும் என்பதை மறுப்பதற்கில்லை ஆனால் இதை இப்போதே அரசு முழுவீச்சில் செயல்படுத்த தொடங்கினால் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் எந்த வகுப்பினன் என்று கேட்டாள் " ஊக்கம் தேவைப்படும் சமூகத்தினன் ' என்பது போன்ற படிமானம் மட்டுமே மிஞ்சும்....!

இதை இப்போது நாம் சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்திலேயே இந்த திட்ட வடிவம் கேலிப்பொருளாகும் வாய்ப்பும் இருக்கிறது என்பதை அறிந்தே கூறுகிறோம். இதையும் தாண்டி அய்யா பெரியார் சொன்னது போல கலப்புத் திருமணங்களை அரசு மிக விமர்ச்சையாக ஆதரித்து கலப்பு மணம் செய்பவர்களுக்கு அரசு வேலை என்பது போன்ற ஊக்கங்களையும் அறிவிக்க வேண்டும். தொலைக்காட்சி பெட்டியும் கிரைண்டரும் கொடுத்து விடுவதில் மனிதர்களுக்கு என்ன சமூக நீதி கிடைத்து விடப்போகிறது? கலப்பு மணமும் சாதியை அள்ளிப்போட்டு ஏறி மிதிக்கும் பெறும் சக்தி கொண்டது தோழர்காள்...

யாம் சொல்லும் வழிமுறைகள் எம் சிற்றறிவிலிருந்து கணப் பொழுதில் கிளைத்தவை ஆனால் இதற்காக முறையான அறிஞர் குழுக்களை அரசு நியமித்து முழு வீச்சில் செயல் படுத்தினால்...............ஒழித்தே விட முடியாதா சாதியை....?????

கேள்வியாய் எமது எண்ணத்தை பொதுவில் வைக்கிறோம்...?

இன்றில்லா விட்டாலும் நாளை, நாளை இல்லாவிட்டாலும் வேறு ஒரு நாள் இந்த தீர்வுகள் தீர்ப்புகளை திருத்தி எழுதியே ஆகும்...இது இந்த பூமி சுழற்சியில் ஒரு நாள் சாத்தியப்பட்டே போகும் தோழர்காள்!

கழுகுகுழுமத்தில் இணைய


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

35 comments:

Chitra said...

யாம் சொல்லும் வழிமுறைகள் எம் சிற்றறிவிலிருந்து கணப் பொழுதில் கிளைத்தவை ஆனால் இதற்காக முறையான அறிஞர் குழுக்களை அரசு நியமித்து முழு வீச்சில் செயல் படுத்தினால்...............ஒழித்தே விட முடியாதா சாதியை....?????


.....சாதிகளையே மூலதனமாக வச்சு எத்தனை பேர் அரசியல் பண்ணிக்கிட்டு இருக்காங்க? அவங்க முதலில் திருந்தணும்.

அருண் பிரசாத் said...

நடக்கனும்.... நடந்தால் நன்றாக இருக்கும்

அருள் said...

// //உயர்சாதி என்ற பதத்திற்கு பதிலாக - ஊக்கமான சமூகத்தினர். பிற்படுத்தப்பட்டோர் - சமூக ஊக்கம் அவசியப்படும் சமுகத்தினர் (சாதாரணம்). மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - சமூக ஊக்கம் அவசியப்படும் சமூகத்தினர் (மத்திம நிலை). தாழ்த்தப்பட்டோர் - சமூக ஊக்கம் மிக மிக அவசியமான சமூகத்தினர் (அவசர நிலை)// //

மன்னிக்கவும். மிகத்தவறான புரிதலுடன் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

1. இடஒதுக்கீட்டு நடைமுறையில் "உயர்சாதி" என்கிற ஒரு பதம் இல்லவே இல்லை. நீங்கள் "பொதுப்பட்டியல்" என்பதைத்தான் "உயர்சாதி" என்று கூறுகிறீர்கள். இது மிகத்தவறு. பொதுப்பட்டியல் எல்லா சாதியினரையும் உள்ளடக்கியது. எடுத்துக்காட்டாக, கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழக தேர்ச்சிப்பட்டியலில் பொதுப்பிரிவின் கீழ் முதல் 10 இடங்களை பிடித்தவர்கள் BC/MBC வகுப்பினர்தான். உயர் சாதியினர் அல்ல.

2. "பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர்" என்பது சாதிப்பெயர் என்கிற கண்ணோட்டத்தில் நீங்கள் எழுதியுள்ளீர்கள். இதுவும் தவறு. வன்னியர், மறவர், நாடார் என்பனதான் சாதிப்பெயர். BC/MBC என்பது சாதிப்பெயர் அல்ல.

3. இடஒதுக்கீட்டு முறையை "ஊக்கம்" என்பதுடன் சேர்த்து பேசுவதும் தவறுதான். ஊக்கம் எல்லோருக்கும் தேவைப்படுவதாகும்.

"ஆக்கம் இழந்தேமென்(று) அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார்."

(ஊக்கத்தை உறுதியாகத் தம் கைப் பொருளாக உடையவர், ஆக்கம் - இழந்து விட்டக்காலத்திலும்- இழந்து விட்டோம் என்று கலங்க மாட்டார்) என்கிறார் திருவள்ளுவர். ஊக்கம் வெளியிலிருந்து திணிக்கப்படுவது அல்ல.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கட்டுரையின் நோக்கம் அருமை. ஆனால் நடைமுறைச் சாத்தியமற்ற விஷயங்கள். பாதிக்கப்படும் சாதிகளைத்தவிர மற்றவர்களுக்கு சாதிய அடையாளம் மிக அவசியமாக இருந்து வருகின்றது. சாதியின் பெய்ரைச் சொல்லி, அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படுவதையும், மீறப்படுவதையும் நீக்கினாலே போதும்!

கழுகு said...

அன்பின் அருள் வணக்கங்கள்!!!!!

1) ஊக்கம் என்ற வார்த்தை ஒரு அடையாள வழிமுறை தான் என்று கட்டுரை தெளிவாகவே கூறியிருக்கிறது. வசதியான படிமத்தினை எல்லோருக்கும் சரியாகப்படும் விதத்தில் மாற்றி அமைக்கலாம்.

2) பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் என்பது எதிர்மறையாக தெரியவில்லையா உங்களுக்கு?

3) கட்டுரை இட ஒதுக்கீட்டு முறையை ஆராயவில்லை என்பதை உணர்க; மாறாக சாதி என்ற படிமாணத்தின் அவசியம் என்ன? என்றுட் கான்கேள்விகள் கேட்கிறது.

எச்சமாய் ஒரு கேள்வி சாதி என்ற ஒன்று ஏன் தேவை? அது இல்லாமல் மனிதம் நகர முடியாதா?

Kousalya Raj said...

பெரிய தேரை கட்டி இழுத்து வர சிறு நூல் போன்று அதேநேரம் நரம்பை போன்ற வலுவில் !!

பலரும் எழுத தயங்கும் ஒன்றை தெளிவாக அதே நேரம் சாதி பற்றி குறை மட்டும் கூறாமல் தீர்வு என்று ஒன்றையும் கூறும் போதே கட்டுரையின் நோக்கம் முழுமை பெறுகிறது...இந்த திட்ட வடிவம் கேலிக்கு ஆளானாலும் படிப்பவர்கள் வேறு தீர்வு சொல்ல இது வழி கோலுமே ... இது சரி இல்லை என்றாவது சொல்வார்களே...

கட்டுரைக்கு முதலில் பாராட்டுகள் !

பின்னூட்டம் தொடரும்...

Kousalya Raj said...

இரண்டாவது வகுப்பு படிக்கும் என் மகனிடம் உன் சாதி என்ன என்று வீட்டில் கேட்டுட்டு வா என்று சொல்லி அனுப்பி இருந்தார்கள்...சேர்க்கும் போது உட்பிரிவு குறிப்பிடவில்லை...என் மகன் 'நாம என்ன சாதிமா', அப்படினா என்னனு என்று கேட்ட கோபம் தான் வந்தது, ஸ்கூலில் நான் வந்து சொல்லிக்கிறேனு சொல்லிட்டேன்...

இப்படி சின்ன பசங்க மனதில் அப்படி ஒன்றை பள்ளிகள் விதைக்கும் இந்த நிலை மாறவேண்டும்...என்னை கேட்டால் சாதி அங்கே இருந்தே தெரிய வருகிறது...

அருள் said...

// //2) பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் என்பது எதிர்மறையாக தெரியவில்லையா உங்களுக்கு?

எச்சமாய் ஒரு கேள்வி சாதி என்ற ஒன்று ஏன் தேவை? அது இல்லாமல் மனிதம் நகர முடியாதா?// //

"பிற்பட்டோர், தாழ்ந்தோர்" என்பனதான் எதிர்மறை. "பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர்" என்பன வரலாற்று உண்மை.

சாதி தேவை என்று நான் வலியுறுத்தவில்லை. சாதி ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் எனது விருப்பமும். ஆனால், சாதிமுறையால் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வுகளும் மனித உரிமை மீறல்களும் இன்றும் நீடிக்கும் வரலாற்று உண்மை. உண்மையை மூடிமறைப்பதால் சிக்கல் தீர்ந்துவிடாது. புண்ணுக்கு புனுகு பூசுவதால் எந்த நன்மையும் விளைந்துவிடாது.

சமூகநீதி மற்றும் இடஒதுக்கீட்டின் அடிப்படை நோக்கம் சாதி ஒழிப்புதான், சாதியை காப்பாற்றுவது அல்ல. எனவே, இடஒதுக்கீடு மற்றும் சமூகநீதிக்கொள்கைகளை சாதியின் மறுவடிவமாகக் காட்டி குழப்பவோ, குழம்பவோ வேண்டாம்.

இடஒதுக்கீடு மற்றும் சமூகநீதிக் கொள்கையை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்துவதும் மனித உரிமைகளை காப்பதுமே சாதி ஒழிப்புக்கு வழி. அதற்கு, சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முதற்படியாக அமையும்.

அருள் said...

Kousalya சொன்னது…

// //இரண்டாவது வகுப்பு படிக்கும் என் மகனிடம் உன் சாதி என்ன என்று வீட்டில் கேட்டுட்டு வா என்று சொல்லி அனுப்பி இருந்தார்கள்...சேர்க்கும் போது உட்பிரிவு குறிப்பிடவில்லை...என் மகன் 'நாம என்ன சாதிமா', அப்படினா என்னனு என்று கேட்ட கோபம் தான் வந்தது, ஸ்கூலில் நான் வந்து சொல்லிக்கிறேனு சொல்லிட்டேன்...

இப்படி சின்ன பசங்க மனதில் அப்படி ஒன்றை பள்ளிகள் விதைக்கும் இந்த நிலை மாறவேண்டும்...என்னை கேட்டால் சாதி அங்கே இருந்தே தெரிய வருகிறது...// //

சாதி சிக்கல் எவ்வாறு தவறாகவும், உண்மைக்கு புறம்பாகவும், மிக மேலோட்டமாக புரிந்துகொள்ளப்படுகிறது என்பதற்கு இந்த ஒரு பின்னூட்டமே சாட்சி.

பள்ளிக்கூடத்தில் சாதி கேட்காமல் இருந்தால் சாதி ஒழியுமா? சாதி ஒழிப்புக்கான ஒரு தேவைதான் இடஒதுக்கீடு. அந்த இடஒதுக்கீட்டிற்கு வழிவகுக்கத்தான் பள்ளிகளில் சாதி கேட்கப்படுகிறது. இதை தவறு என்று பேசும் முட்டாள்தனத்தை என்னவென்று சொல்வது? மருத்துவர் சிகிச்சைக்காக ஊசி போட்டால், "ஐயோ' கொலை செய்கிறாரே" என்று கத்துவீர்களா?

பள்ளியில் சாதி கேட்ககூடாது என்று முற்போக்கு வேடம் போடுபவர்கள் - முடிந்தால் தமது திருமணம், தமது வாரிசுகள் திருமணம், உறவினர்கள் திருமணத்தில் சாதி கேட்க கூடாது என்று வீராப்பு பேசுங்கள். தி இந்து நாளேட்டில் வரும் திருமண விளம்பரங்களை தடுத்து நிறுத்த போராடுங்கள். பாரத் மாட்ரிமோனி நிறுவனத்தை தடைசெய்ய போராடுங்கள்.

கழுகு said...

//பள்ளியில் சாதி கேட்ககூடாது என்று முற்போக்கு வேடம் போடுபவர்கள் - முடிந்தால் தமது திருமணம், தமது வாரிசுகள் திருமணம், உறவினர்கள் திருமணத்தில் சாதி கேட்க கூடாது என்று வீராப்பு பேசுங்கள். தி இந்து நாளேட்டில் வரும் திருமண விளம்பரங்களை தடுத்து நிறுத்த போராடுங்கள். பாரத் மாட்ரிமோனி நிறுவனத்தை தடைசெய்ய போராடுங்கள்.//

அருள் @ யாரிடம் சபதம் போடுகிறீர்கள்...! இதை நீங்களும் நானும் சேர்ந்து எல்லோரும்தான் செய்ய முடியும். எம்மால் முடியும் என்று ஒவ்வொருத்தரும் செய்ய வேண்டிய கடமை. இங்கே கோபங்கள் கொள்வதற்கு முன்னால்....ஏன் கோபம் கொள்கிறோம் மற்றும் யாரிடம் என்ற புரிதலும் இருத்தல் நலம்.

ஏன் பள்ளிகளில் சாதிப்பெயரை கேட்காமல் மேலே நாம் கூறியுள்ள காஸ்ட் ப்ரீ சமுதாயம் அமைந்தால் அது நலம் இல்லையா? நடக்காது என்று சொல்வது வேறுவிதமான பார்வை...நடந்தால்...என்று பார்ப்பது நேர்மறை சிந்தனை தோழர்...!

Anonymous said...

@ARUL

//பள்ளிக்கூடத்தில் சாதி கேட்காமல் இருந்தால் சாதி ஒழியுமா? சாதி ஒழிப்புக்கான ஒரு தேவைதான் இடஒதுக்கீடு. //

இதை சற்று விளக்குங்கள் .. புரியவில்லை

by
Maheswari.

Anonymous said...

nice post.....

i agreed all points..

keeep rocking......

Kousalya Raj said...

//சாதி சிக்கல் எவ்வாறு தவறாகவும், உண்மைக்கு புறம்பாகவும், மிக மேலோட்டமாக புரிந்துகொள்ளப்படுகிறது என்பதற்கு இந்த ஒரு பின்னூட்டமே சாட்சி.//

@@ அருள்
எனது பின்னூட்டத்தை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று எண்ணுகிறேன்...

பெரியவர்களிடம் கேட்கவேண்டிய ஒன்றை 7 வயது சிறுவனிடம் கேட்டு அனுப்புவது எந்த விதத்தில் சரி என்பது தான் என் ஆதங்கம்...அவன் வயதிற்கு இப்போதே தெரியவேண்டிய அவசியம் இல்லையே.....சாதி அங்கே இருந்தே அவர்களின் மனதில் பதிய வைக்கபடுகிறது. சக மாணவர்களுடன் பேசும் போது நீ அந்த சாதி நான் இந்த சாதி என்று கிண்டல் செய்யும் போக்கு நாளடைவில் வேறு விதமாக திரும்பும். இது என் மகனிடம் கேட்டு அறிந்த ஒன்று.

சாதி என்ற பேச்சை எடுத்தாலே வித்தியாசமாக/வேறுபட்டு பார்க்கும் மனபோக்கு முதலில் மாறினால் நல்லது.

ராவணன் said...

"மதமே நீ ஒழிந்து போ" என்று ஒரு பதிவை எழுதுங்கள்.

மதம் என்ற மாய மார்க்கம் மனிதருக்குத் தேவையா?

கடவுள் என்று ஒருவன் எங்கே உள்ளான்?

இந்தியாவில் கனவில் கூட சாதியை ஒழிக்க முடியாது.

அருள் said...

// //
sachin amma சொன்னது…
@ARUL

//பள்ளிக்கூடத்தில் சாதி கேட்காமல் இருந்தால் சாதி ஒழியுமா? சாதி ஒழிப்புக்கான ஒரு தேவைதான் இடஒதுக்கீடு. //

இதை சற்று விளக்குங்கள் .. புரியவில்லை

by
Maheswari.
// //

கடந்த 2000 ஆண்டுகளாக இந்த நாட்டில் 100% இடஒதுக்கீடு இருந்து வந்தது. கோவிலில் சின்ன மணியை ஆட்ட ஒரு சாதிக்கு 100% இடஒதுக்கீடு ஒருபுறம். மலம் அள்ள இன்னொரு சாதிக்கு 100% இடஒதுக்கீடு மறுபுறம் என்ற நிலைதான் இந்த நாட்டில் இருந்து வந்தது.

இன்றும், சில சாதியினரில் எல்லோரும் கல்வி கற்றோராக, எல்லோரும் நல்ல பணியில் வசதியாக இருப்பதற்கும் - மற்றொரு சாதியினரில் எல்லோரும் பஞ்சைப் பராரிகளாக இருப்பதற்கும் - அவரவர் திறமையோ, தலைவிதியோ காரணம் அல்ல. சாதியால் ஏற்பட்ட கேடுதான் இது.

இந்தக்கேட்டைக் களைந்து ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கும் சமவாய்ப்பு கிடைக்கச் செய்வதே இடஒதுக்கீடு ஆகும். இந்த இடஒதுக்கீட்டை சாத்தியமாக்கத்தான் பள்ளியில் சேர்க்கும்போது சாதியை குறிப்பிடச்சொல்கிறார்கள்.

சாதிகளுக்கிடையே சமத்துவம் ஏற்படாதவரை சாதி ஒழிப்பு கனவிலும் சாத்தியமாகாது.

அருள் said...

கழுகு சொன்னது…

// //ஏன் பள்ளிகளில் சாதிப்பெயரை கேட்காமல் மேலே நாம் கூறியுள்ள காஸ்ட் ப்ரீ சமுதாயம் அமைந்தால் அது நலம் இல்லையா? நடக்காது என்று சொல்வது வேறுவிதமான பார்வை...நடந்தால்...என்று பார்ப்பது நேர்மறை சிந்தனை தோழர்...!// //

எதிர்மறை சிந்தனையில் நான் பேசவில்லை.

உங்களது கட்டுரையில்..முதலில்: ""பிற்படுத்தப்பட்டோர் - சமூக ஊக்கம் அவசியப்படும் சமுகத்தினர் (சாதாரணம்). மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - சமூக ஊக்கம் அவசியப்படும் சமூகத்தினர் (மத்திம நிலை). தாழ்த்தப்பட்டோர் - சமூக ஊக்கம் மிக மிக அவசியமான சமூகத்தினர் (அவசர நிலை)"" என்று குறிப்பிட்டுள்ளீர்கள்

பின்னர்:...""பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்கும் போதே....அரசு சுத்த திருத்தமாக மேலே குறிப்பிட்டதை போல எழுதி சேர்த்து குறிப்பிட்ட சாதி பெயர்களை போடாமல் சமூகத்தில் அடையாளத்தை மாற்றி ஒரு காஸ்ட் ப்ரீ சமூகத்தை உருவாக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு சாதியற்ற ஒரு காஸ்ட் ப்ரீ சமூகத்தை உருவாக்கும் ஆரம்பக் கட்டங்களில் அடையாளம் காணும் விதமாக சாதியை பயன்படுத்திதான் ஆகவேண்டும் என்பதை மறுப்பதற்கில்லை ஆனால் இதை இப்போதே அரசு முழுவீச்சில் செயல்படுத்த தொடங்கினால் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் எந்த வகுப்பினன் என்று கேட்டாள் " ஊக்கம் தேவைப்படும் சமூகத்தினன் ' என்பது போன்ற படிமானம் மட்டுமே மிஞ்சும்....!"" என்றும் கூறுகிறீர்கள்.

ஆக மொத்தத்தில் - சமூகப் ஏற்றத்தாழ்வினை பாகுபடுத்தி பார்க்க சாதிதான் அடிப்படையான அளவுகோள் என்பதை ஏற்றுக்கொண்டமைக்காக நன்றி.

அடுத்ததாக - "மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பு" என்பதை "சமூக ஊக்கம் அவசியப்படும் சமூகத்தினர்" என்று வெறுமனே பெயர் மாற்றம் செய்தால் சாதிகள் (காஸ்ட் ப்ரீ) இல்லாத சமுதாயம் அமைந்துவிடக்கூடும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். இது ஒரு வெட்டிவேலை, வீணான கற்பனை என்றே நான் கருதுகிறேன்.

நீங்கள் சொல்வது போன்று செயதாலும் - இன்று "மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினன்" என்றால் அவர் எந்த சாதி என்று எல்லோருக்கும் தெரிவது போல, நாளை "சமூக ஊக்கம் அவசியப்படும் சமூகத்தினன்" என்று சொன்னாலும் அவர் சாதி தெரியத்தான் போகிறது. இது எப்படி மாறும் என்று விளக்குங்கள்?

"மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பு" என்றபெயரில் ஒரு சுயமரியாதை இருக்கிறது. இது சமூகத்தால் தாம் "பிற்படுத்தப்பட்டோம்" என்பதைக் குறிக்கிறது. ஆனால், "சமூக ஊக்கம் அவசியப்படும் சமூகத்தினர்" என்பது அடுத்தவர் உதவியை எதிர்பார்க்கும் கூட்டம் என்கிற பொருளைத் தான் தருகிறது. ஒருவகையில் "ஊனமுற்றோர்" என்பது போன்ற தொனியை இது தரலாம்.

சமூகநீதி, இடஒதுக்கீடு என்பதெல்லாம் கருணையோ, பிச்சையோ அல்ல.

"புற்றுநோய்" என்பதற்கு நாம் "வளர்ச்சிநோய்" என்றுகூட பெயர் சூட்டலாம். ஆனால், உண்மையான தீர்வு பெயர் மாற்றம் அல்ல. சிகிச்சை தான் தீர்வாகும்.

எனவே, சமூகநீதிக் கொள்கைகளை முழுவீச்சில் செயலாக்குவதே இன்றுள்ள அவசரத்தேவை.

Unknown said...

our people has to change ...

Anonymous said...

@ARUL
//"புற்றுநோய்" என்பதற்கு நாம் "வளர்ச்சிநோய்" என்றுகூட பெயர் சூட்டலாம். ஆனால், உண்மையான தீர்வு பெயர் மாற்றம் அல்ல. சிகிச்சை தான் தீர்வாகும்.//

சா’தீ’ என்னும் புற்று நோயை ஒழிக்க தாங்கள் ஏதேனும் தீர்வு வைத்திருக்கிறீர்களா இதற்காக?
இல்லை தாங்கள் சொன்னது போல்
//சமூகநீதி மற்றும் இடஒதுக்கீட்டின் அடிப்படை நோக்கம் சாதி ஒழிப்புதான்// இது தான் தீர்வா? அப்படி என்றால் இட ஒதுக்கீட்டினால் எழுகின்ற.. அதே சமயத்தில் சாதியில் வந்து முடியும் பிரச்சனைகளுக்கு என்ன காரணம்?

இதைக்களைவதற்கு ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?

By
Maheswari

Anonymous said...

@ARUL
//இந்த இடஒதுக்கீட்டை சாத்தியமாக்கத்தான் பள்ளியில் சேர்க்கும்போது சாதியை குறிப்பிடச்சொல்கிறார்கள்.//

இட ஒதுக்கீடு என்பது ஒரு மாணவனுக்கு எப்பொழுது தேவைப்படுகிறது Pre-Kg யில் அல்லவே? கலந்தாய்வின் போது மட்டும் சாதி சான்றிதழைக் கேட்டால் போதாதா? இதன் மூலம் அப்பிஞ்சுகளுக்குள்ளும் நஞ்சை விதைப்பதை தடுக்கலாமே.. சாதியினாலேயே குறிப்பிட்ட போட்டிகளில் கூட அம்மாணவனைக் கலந்து கொள்ள விடாமல்.. தடுக்கும் ஒரு சில ஆசிரியர்களே பேதம் பார்க்கும் அவல நிலையையும் தடுக்கப்படுமே.. பள்ளிகளில் சா’தீ’ தேவையில்லை என்பதே என் கருத்து..
இல்லை இல்லை நன்மைக்கே தான் சா’தீ’ தேவை என்றால் இதனாலேயே பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் உண்டாகும் பிரச்சனைகளுக்கு மாற்று தீர்வு ஏதேனும் உண்டு என்றாலோ அதையும் இங்கே பகிர்ந்து விட்டு செல்வீர்கள் என்றால் நன்மை பயக்கும்..

//சாதி தேவை என்று நான் வலியுறுத்தவில்லை. சாதி ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் எனது விருப்பமும். //

இப்படி நீங்கள் சொல்லியிருப்பதால்.. உங்களுக்கும் இந்த ஆதங்கம் இருப்பதாலேயே கேட்கிறோம்..

Anonymous said...

//சாதிகள் (காஸ்ட் ப்ரீ) இல்லாத சமுதாயம் அமைந்துவிடக்கூடும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். இது ஒரு வெட்டிவேலை, வீணான கற்பனை என்றே நான் கருதுகிறேன்.//

ஐயா.. வெட்டிவேலை, வீணான கற்பனை என்று ஒதுக்கப்பட்ட நிறைய கோட்பாடுகள் தான் இன்று நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு.. அதை நாம் அனுபவித்துக் கொண்டிருகிறோம் என்பதே உண்மை..

எனக்கென்னவோ கட்டுரையில் சொல்லப்பட்டிற்குமிந்த வரிகளே சட்டென நினைவுக்கு வருகிறது..

பழைய வழிமுறைகளை இன்று சட்டமாக நாம் பின்பற்றிக் கொண்டிருக்கும் வேளையில் அவை பிறப்பிக்கப்பட்ட போது கூட இது இயாலது, நடக்காது, வேண்டாம் என்று சொல்லவும் ஆட்கள் இருந்திருப்பார்கள் தானே?

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

@ ராவணன்...

முழுக்கப்பலை சோற்றுப்பருக்கையில் மறைப்பதா..?

//இந்தியாவில் கனவில் கூட சாதியை ஒழிக்க முடியாது.//--?!?!?!?!? பொய்..! பொய்..! பொய்..!

என்னது..? இந்தியாவில் சாதியை ஒழிக்க முடியாதா..? கிட்டத்தட்ட இருபதுகோடி இந்தியர்கள் தங்கள் சாதியை ஒழித்துக்காட்டி அதனை சுத்தமாக மறந்துபோய் இருப்பதை எப்படி மறந்தீர்கள் சகோ.ராவணன்..?


மெய்யாலுமே சாதியை ஒழிக்க விரும்பினால் இப்பதிவை படியுங்கள்... சகோ..!

அருள் said...

sachin amma கூறியது...

// //
சா’தீ’ என்னும் புற்று நோயை ஒழிக்க தாங்கள் ஏதேனும் தீர்வு வைத்திருக்கிறீர்களா இதற்காக?
இல்லை தாங்கள் சொன்னது போல்
//சமூகநீதி மற்றும் இடஒதுக்கீட்டின் அடிப்படை நோக்கம் சாதி ஒழிப்புதான்// இது தான் தீர்வா? அப்படி என்றால் இட ஒதுக்கீட்டினால் எழுகின்ற.. அதே சமயத்தில் சாதியில் வந்து முடியும் பிரச்சனைகளுக்கு என்ன காரணம்?

இதைக்களைவதற்கு ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?
// //

சாதி சிக்கலை களைவதில் உங்களுக்கு உண்மையான அக்கறை இருக்குமானால் பின்வரும் இணைப்பை படியுங்கள்

National Commission to Review the Working of the Constitution (NCRWC): PACE OF SOCIO-ECONOMIC CHANGE AND DEVELOPMENT

http://lawmin.nic.in/ncrwc/finalreport/v1ch10.htm

Anonymous said...

//சாதி சிக்கலை களைவதில் உங்களுக்கு உண்மையான அக்கறை இருக்குமானால் பின்வரும் இணைப்பை படியுங்கள்//

என்ன சொல்ல வருகிறீர்கள்.. அக்கறை இருப்பதனாலேயே.. நாங்கள் களத்தில் இருக்கிறோம்..
மேலும் இணையத்தின் பாகத்தினை தொட்டு தட்டினால் வந்து கொட்டும் விபரங்களை நீங்கள் வாசித்து கொண்டேயும் இருக்கலாம்...மாதக் கணக்கில்.

அத்தோடு நீங்கள் கொடுத்த சுட்டியில் தேடி கண்ட.. ஒரே ஒரு இடத்தில் இருந்த செய்தியும் நாங்கள் ஏற்கனவே கொண்டிருந்த எங்களின் நிலைப்பாடே..

முதலில் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.. இது எங்களின் நிலைப்பாடு:
இட ஒதுக்கீடு என்ற ஒன்று அவசியம் என்பதை கருத்தில் கொள்வோம்...அது சமூக ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப் படவேண்டும் என்பதையும் கருத்தில் கொள்வோம். இங்கே பொருளாதார அடிப்படையில் கொடுத்தல் ஆகாது என்ற கூற்றையும் கவனமாய் கைக் கொள்வோம்.

சமூகத்தில் அடக்கிவைக்கப்பட்ட புறச்சூழல் சரியில்லாத, பாட்டன் முப்பாட்டன் காலமாய் அழுத்தி பிடித்து வைக்கப்பட்டுள்ள எம் தோழர்களுக்கு சரியாக இந்த திட்டத்தின் மூலம் பயன் கிடைக்க வேண்டும் என்பதையும் கருத்தில் கொள்வோம்....

இட ஒதுக்கீட்டின் நன்மையை அறிந்திருக்கும் அதே வேளையில்.. சாதிய கட்டமைப்பு நன்மைக்கே என எண்ணிக் கொண்டாலும்.. இதன் ஊடு களையாக விளைந்திருக்கும்.. சா‘தீ’ என்னும் அரக்கனால் உண்டான புண்களுக்கு என்ன தீர்வு பெரிதாய்ச் சொல்லி விட்டார்கள்.. தீர்வாகச் சொன்ன அறிக்கைகளெல்லாம் முழுவீச்சில் நடைமுறைப் படுத்தி உண்டான ரணத்தை ஆற்ற முடிந்ததா?

ஒன்று செய்திருக்கலாம்.. இணைத்த சுட்டியோடு இதையும் கொடுத்திருப்பீர்களானால் எம் நோக்கமும் வலியும் புரிய வாய்ப்பிருந்திருக்கும்..
http://lawmin.nic.in/ncrwc/finalreport/v2b1-2ch9.htm

How many cases filed and how much solved due to this?
கத்தியை வைத்துக் கொண்டு எப்படி கத்தியை அழிப்பது....கத்தி என்ற ஒன்று இருக்கும் வரை அது வன்முறைதான். சாதி என்ற ஒரு கட்டமைப்பு இருக்கும் வரை அது தீங்குதான் என்ற எமது பார்வைகளை வார்த்தைகளாக்கி வெளிக்கொணரும் முன்பே மனிதர்கள் உரக்க கூச்சலிடுகிறார்கள் இது எப்படி சாத்தியமென்று....????

சாத்தியமாவதற்கு வாய்ப்பில்லை என்று முணுமுணுக்கும் வாய்கள் எல்லாம் இதற்கு வழிமுறைகள் இருக்குமா ஏதேனும் என்று யோசித்து இருக்குமா?

By
Maheswari

TERROR-PANDIYAN(VAS) said...

@அருள்

//நீங்கள் சொல்வது போன்று செயதாலும் - இன்று "மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினன்" என்றால் அவர் எந்த சாதி என்று எல்லோருக்கும் தெரிவது போல, நாளை "சமூக ஊக்கம் அவசியப்படும் சமூகத்தினன்" என்று சொன்னாலும் அவர் சாதி தெரியத்தான் போகிறது. இது எப்படி மாறும் என்று விளக்குங்கள்?//

ஐய்யா வணக்கம்! நான் தங்களை போல் ஆழ்ந்த அகன்ற அறிவை படித்தவன் இல்லை. அதனால் தவறாக பேசினால் கோவம் கொள்ள வேண்டாம். "சமூக ஊக்கம் அவசியப்படும் சமூகத்தினன்" என்று சொன்னால் ஒரு குறிபிட்ட சாதியை அப்படியே பெயர் மாற்றம் செய்வது என்று அர்த்தம் இல்லை. சமுதாயத்தில் பின் தங்கி இருப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களை "சமூக ஊக்கம் அவசியப்படும் சமூகத்தினன்" என்று அறிவிப்பது. இப்பொழுது பிற்படுத்தபட்டவர் என்று கூறுவது ஜாதி அடிபடையில் தானே இருக்கிறது? அதற்க்கு பதில் வேறு ஏதாவது ஒரு அளவுகோள் வைத்து உதாரணம் கல்வி, பொருளாதரத்தில் பின் தங்கியவர் இப்படி அளவுகோள் வைத்து பிரித்தாலும் ஜாதி மறையாதா? இது எனது ஆதங்கத்தில் எழுந்த ஐயம்..

TERROR-PANDIYAN(VAS) said...

@அருள்

//"மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பு" என்றபெயரில் ஒரு சுயமரியாதை இருக்கிறது. இது சமூகத்தால் தாம் "பிற்படுத்தப்பட்டோம்" என்பதைக் குறிக்கிறது. ஆனால், "சமூக ஊக்கம் அவசியப்படும் சமூகத்தினர்" என்பது அடுத்தவர் உதவியை எதிர்பார்க்கும் கூட்டம் என்கிற பொருளைத் தான் தருகிறது. ஒருவகையில் "ஊனமுற்றோர்" என்பது போன்ற தொனியை இது தரலாம்.

சமூகநீதி, இடஒதுக்கீடு என்பதெல்லாம் கருணையோ, பிச்சையோ அல்ல. //

பின் தங்கி விட்டேன் என்பதில் என்ன ஐய்யா சுயமரியாதை? இந்திய சட்டங்களை எல்லாம் கரைத்து குடித்து இருக்கும் நீங்கள் ஊக்கம் என்ற வார்த்தைக்கு தவறான பொருள் கொள்வது என்னை அதிர்ச்சி கொள்ள வைக்கிறது. மாணவனை ஆசிரியர் ஊக்கபடுத்தினால் அது பிச்சையா? கருணையா? ஊக்கம் என்றால் motivation என்று நீங்கள் அறிவிர்கள் என்று ஆணிதனமாக நம்புகிறேன். இன்று கார்ப்ரேட் உலகில் கவர்ந்து இழுக்கும் வார்த்தை Employee motivation. பின்தங்கி இருப்பவர்கள் முன்வரவேண்டும் என்று ஊக்கப்படுத்துவது எப்படி ஐய்யா பிச்சையாகும்?

ஒரு சிறு விண்ணப்பம்... "ஊனமுற்றோர்” என்று கூறிவது அவர்களுக்கு இழுக்கு என்று சொல்ல கேட்டு இருக்கிறேன். அதனால மாற்று திறனாளி என்று கூறினால் மகிழ்ச்சி அடைவேன்.

அருள் said...

TERROR-PANDIYAN(VAS) கூறியது...

// //வேறு ஏதாவது ஒரு அளவுகோள் வைத்து உதாரணம் கல்வி, பொருளாதரத்தில் பின் தங்கியவர் இப்படி அளவுகோள் வைத்து பிரித்தாலும் ஜாதி மறையாதா?// //

இருதயத்தில் அடப்பு என்றால் சிறுநீரகத்தில் அறுவை சிகிச்சை செய்யலாமா? இந்தியாவில் பிற்பட்ட நிலை என்பதை வரையறை செய்ய சாதிதான் அளவு கோள் என்பது உச்சநீதி மன்ற தீர்ப்புகளிலும் நாடாளுமன்ற விவாதங்களிலும், சட்டங்களிலும் பலமுறை தெளிவுபடுத்தப்பட்டது.

கல்வி, பொருளாதார பின்னடைவு என்பதெல்லாம் தனிமனித அளவிலானது. ஆனால், சாதீய பின்னடைவு என்பதுதான் குழுவாக பார்க்கப்படுவது. கல்வி, பொருளாதாரம் என்பதைவிட சமூக பிற்படுத்தப்பட்ட நிலை என்பது மிகக் கொடூரமானது.

அதேநேரம் பிற்படுத்தப்பட்ட தன்மை என்பது கல்வி, பொருளாதாரம், சமுதாய நிலை என்ற அனைத்தையும் கருத்தில் கொண்டுதான் வகுக்கப்படுகிறது என்பதையும் கவனியுங்கள்.

தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்த காரணத்தால் ஒருவர் கல்வி, பொருளாதார, சமூக நிலைகளில் பின்னடைவை சந்திக்கிறார் என்பதே முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஏதோ ஒரு தனிப்பட்ட தாழ்த்தப்பட்டவர் உயர்நிலையை, உயர் பதவியை அடைவதால் அந்த சமூகத்தின் கீழ்நிலை மேலோங்குவது இல்லை.

ஒட்டுமொத்தமாக கல்வி, பதவி, பொருளாதார வளங்களில் ஒவ்வொரு சமூகமும் சம வாய்ப்பை பெற்றுள்ளதா? என்று பார்ப்பதே சமூகநீதி பார்வை ஆகும். இது ஒன்றுதான் சாதியை ஒழிக்கும் வழி.

அருள் said...

TERROR-PANDIYAN(VAS) கூறியது...

// //பின் தங்கி விட்டேன் என்பதில் என்ன ஐய்யா சுயமரியாதை? // //

"பின் தங்கிவிட்டேன்" என்பது வேறு. அது எனது திறமையின்மையினாலோ, சோம்பேறித்தனத்தினாலோ நான் பின் தங்கிவிட்டேன் என்ற பொருளை தரும்.

ஆனால் "பிற்படுத்தப்பட்டேன்" என்பது இந்த சமூகம், குறிப்பாக ஆதிக்க சாதிக் கூட்டத்தினர் தமது திட்டமிட்ட சதியால் என்னை பின்னால் தள்ளிவிட்டனர் என்பதாகும்.

ஒரு பெண் தானாக விரும்பி கணவரல்லாதவருடன் உடலுறவு கொள்வதும், கொடூரர்களால் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுவதும் வேறு வேறு.

எனவே, "பிற்படுத்தப்பட்டேன்" என்பது இழிசொல் அல்ல. அதுதான் 'வஞ்சிக்கப்பட்டேன்' என்பதை நினைவு கூறுகிறது.

அருள் said...

TERROR-PANDIYAN(VAS) கூறியது...

// //நீங்கள் ஊக்கம் என்ற வார்த்தைக்கு தவறான பொருள் கொள்வது என்னை அதிர்ச்சி கொள்ள வைக்கிறது. பின்தங்கி இருப்பவர்கள் முன்வரவேண்டும் என்று ஊக்கப்படுத்துவது எப்படி ஐய்யா பிச்சையாகும்?// //

ஊக்கம் என்கிற வார்த்தையை தவறாக பயன்படுத்துவது யார்? பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டும்தான் ஊக்கம் தேவையா? உயர்சாதியினருக்கு அந்த ஊக்கம் தேவை இல்லையா?

BC/MBC/SC/ST வகுப்பினர் எல்லாம் ஏற்கனவே மிக ஊக்கமாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் கேட்பதெல்லாம் அந்த ஊக்கத்தை பயன்படுத்தும் வாய்ப்புதான்.

நீங்கள் பூட்டிய அறைக்குள் வைத்து ஓட்டப்பந்தய பயிற்சி அளிக்க சொல்கிறீர்கள். ஆனால், நான் மைதானத்தில் ஓட வாய்ப்பு கொடுங்கள் என்றேன்.

இதுதான் இரண்டு கருத்துக்கும் உள்ள வேறுபாடு.

மாலை தென்றல் said...

அருள் கூறியது://ஊக்கம் என்கிற வார்த்தையை தவறாக பயன்படுத்துவது யார்? பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டும்தான் ஊக்கம் தேவையா? உயர்சாதியினருக்கு அந்த ஊக்கம் தேவை இல்லையா? //

இதையே தான் கழுகும் சொல்கிறதோ..? எந்த சாதியினனாய் இருந்தால் என்ன.. எளியவன் எவனோ அவனுக்கு கரம் கொடுப்போம்.. எளியவன் எவன் என்ற வரையரையை சாதி மட்டுமே நிர்ணயிக்க வேண்டாமே.. சம நிலையில் இருக்கும் இரு பிள்ளைகளில், சாதியை மட்டுமே காரணமாக்கி ஒருவனுக்கு துணை செய்தால், அதே சாதியை காரணமாக்கி அவனை இழிந்துரைத்தேனும் தன் ஆதங்கத்தை உயர் சாதியினன் வெளி இட நேரலாம். சகலரும் சமம் எனும் எண்ணம் எங்கிருந்து பிறக்கும்?

மாலை தென்றல் said...

அ.படிக்காத நிரந்தர வருமானமற்ற பெற்றோரின் பிள்ளைகள்
ஆ.நிரந்தர வருமானமுள்ள மற்றும் சிறு வியாபாரிகளின் பிள்ளைகள்
இ.உயர் அதிகாரிகளின் மற்றும் வியாபார காந்தங்களின் பிள்ளைகள்

இதுவே வரையறை என சொல்லவில்லை.. இது போன்றவற்றை வரையரையாய் கொண்டு எளியோர்/சாதாரணர்/வலியோர் என்பதாய் பிரித்தால், பாட்டனும் பேரனும் ஒரே வகுப்பினராய் இருத்தலுக்கான அவசியங்கள் குறையாதா.. யாரும் யாரையும் நிரந்தரமாய் பிற்படுத்தி வைக்க இயலாது அல்லவா..

மாலை தென்றல் said...

//அருள் கூறியது:அதேநேரம் பிற்படுத்தப்பட்ட தன்மை என்பது கல்வி, பொருளாதாரம், சமுதாய நிலை என்ற அனைத்தையும் கருத்தில் கொண்டுதான் வகுக்கப்படுகிறது என்பதையும் கவனியுங்கள்.//
சாதி கொண்டு ஆரம்பத்தில் பிற்படுட்த்தப்பட்ட போன்ற இட ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டது சரியே... அது பிற்படுத்தப்பட்டோரை முன்னேற்ற உதவுகிறது என்பதும் சரியே... ஆனால், அம்மாதிரி சலுகை பெற்று முன்னேறிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஒருவர் இன்னமும் பிற்படுதப்பட்டிருப்ப‌தாகவே கருதப்படுதல் சரியா..? What is the saturation Point???

அருள் said...

தென்றல் கூறியது...

// //எந்த சாதியினனாய் இருந்தால் என்ன.. எளியவன் எவனோ அவனுக்கு கரம் கொடுப்போம்.. எளியவன் எவன் என்ற வரையரையை சாதி மட்டுமே நிர்ணயிக்க வேண்டாமே.. சம நிலையில் இருக்கும் இரு பிள்ளைகளில், சாதியை மட்டுமே காரணமாக்கி ஒருவனுக்கு துணை செய்தால், அதே சாதியை காரணமாக்கி அவனை இழிந்துரைத்தேனும் தன் ஆதங்கத்தை உயர் சாதியினன் வெளி இட நேரலாம். சகலரும் சமம் எனும் எண்ணம் எங்கிருந்து பிறக்கும்?// //

நீங்கள் மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வருகிறீர்கள். இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட தன்மை என்பது சாதியை அடிப்படையாகக் கொண்டதுதான். இது தனிமனிதர்கள் எளியவரா வலியவரா என்பதை முன்னிலைப் படுத்தவில்லை. மாறாக, ஒரு குழுவாக ஒரு மக்கள் கூட்டம் எவ்வாறு புறந்தள்ளப்பட்டுள்ளது என்பதைக் கொண்டே அளவிடப்படுகிறது.

எனவே, பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள "பல எளியவர்களும்", உயர் சாதியினரில் உள்ள "சில எளியவர்களும்" சமமானவர்கள் அல்ல.

TERROR-PANDIYAN(VAS) said...

@அருள்

//இருதயத்தில் அடப்பு என்றால் சிறுநீரகத்தில் அறுவை சிகிச்சை செய்யலாமா? //

வேண்டாம். ஆனால சிறு கத்தி கொண்டு செய்ய வேண்டிய சிகிச்சையை கோடாரி கொண்டு பிளந்து செய்ய வேண்டுமா?

//கல்வி, பொருளாதார பின்னடைவு என்பதெல்லாம் தனிமனித அளவிலானது. ஆனால், சாதீய பின்னடைவு என்பதுதான் குழுவாக பார்க்கப்படுவது. //

பல தனி மனிதர்கள் சேர்ந்ததுதான ஒரு சாதியினர்? அப்போ தனி மனிதன முன்னேற்றினா சாதி மட்டும் தனியா நிக்குமா?

//தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்த காரணத்தால் ஒருவர் கல்வி, பொருளாதார, சமூக நிலைகளில் பின்னடைவை சந்திக்கிறார் என்பதே முக்கியமாக பார்க்கப்படுகிறது. //

இதுக்கு காரணம் சாதி அப்படினு ஒரு விஷயம் இருக்கது தான? சாதினு ஒரு விஷயம் வச்சி இருக்கதாலதான அடையாளம் கண்டு ஒதுக்கராங்க? அதுக்கு பதில் கல்வி, பொருளாதரத்தில் பின்தங்கி இருக்கவனை கண்டு பிடிச்சி அடுத்து முன்னேற்றுங்க. அவன் முன்னேறின பின்னாடி அடுத்து யாரு கீழ இருக்கா பார்த்து முன்னேற்றுங்க. அப்போ தாழ்த்தபட்ட சாதி, உயர்சாதி எங்க இருந்தாலும் உதவி தேவைபடரவனுக்கு போய் சேரும்.

TERROR-PANDIYAN(VAS) said...

@அருள்

//ஊக்கம் என்கிற வார்த்தையை தவறாக பயன்படுத்துவது யார்? பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டும்தான் ஊக்கம் தேவையா? உயர்சாதியினருக்கு அந்த ஊக்கம் தேவை இல்லையா? //

அப்படினு நான் எங்க சொன்னேன்? ஊக்கம் தேவைபடரவன் எங்க இருந்தாலும் ஊக்க படுத்தனும்தான் நான் சொல்றேன். நீங்கதான் சாதி அடிப்படையில் செய்யரது தான் சரின்னு வாதம் பண்ணிட்டு இருக்கிங்க. என்ன அருள் சார் நீங்க குழம்பிட்டிங்களா இல்லை என்னை குழப்பறிங்களா? :))


//BC/MBC/SC/ST வகுப்பினர் எல்லாம் ஏற்கனவே மிக ஊக்கமாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் கேட்பதெல்லாம் அந்த ஊக்கத்தை பயன்படுத்தும் வாய்ப்புதான். //

ஊக்கம்னா அவங்க முன்னேற வாய்ப்பு கொடுக்கரது தான் சார். அதை விட்டு.... அவங்க முன்னாடி நாற்காலி போட்டு உக்காந்து கமான் இந்தியா! கமான் இந்தியா! அப்படினு கத்தவா சொல்றோம்.. :))

I think இந்த ஊக்கம் அப்படின்ற வார்த்தை உங்களை ரொம்ப குழப்பிடுத்து. அதனால அந்த வார்த்தை விட்டுடலாம். நீங்க புதுசா ஏதாவது பெயர் சொல்லுங்க வைக்கலாம்.

//நீங்கள் பூட்டிய அறைக்குள் வைத்து ஓட்டப்பந்தய பயிற்சி அளிக்க சொல்கிறீர்கள். ஆனால், நான் மைதானத்தில் ஓட வாய்ப்பு கொடுங்கள் என்றேன்.//

இல்லை நான் யார் யார் எல்லாம் பட்டினியா இருக்கானோ எல்லாருக்கும் சோறு போடலாம் சொல்றேன். நீங்க இல்லை இல்லை போன வருஷம் இவன் பட்டினியா இருந்தான் அதானால இவனுக்கு தான் சோறு போடனும் சொல்றிங்க.. :)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@TERROR-PANDIYAN(VAS) சொன்னது…
@அருள்

அன்புள்ள டெரர் அண்ணன் அவர்களுக்கு.. உங்கள் பதில் என்னை புல்லரிக்கவைத்துவிட்டது..

எப்படியும் 2 வருடத்தில் உங்கள் கருத்தை ஏற்றுக்கொண்டு அருள் அண்ணன் வரலாம்.. வருவார்..

ஆகவே ஏன் அதற்க்குள் இந்த கோபதாபங்கள்?

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes