Monday, August 30, 2010

பா.ரா அவர்களுடன்..ஒரு கவித்துவமான பேட்டி....!

கழுகு தோழமையோடு கைகளை நமது தோளில் போட்டது...என்ன என்று ஒரு வித அன்போடு பார்த்தோம்....ஒண்ணுமில்லை மக்கா....வாழ்க்கையில் என்ன மிஞ்சப் போகுது அன்பும் பாசமும்தானே மக்கா மிச்சம்...கழுகின் பேச்சிலேயே ஒரு பாசமும் நெகிழ்வும் இருப்பதை கண்டு நாமும் கொஞ்சம் வித்தியாசமான உணர்வு நிலையில்தானிருந்தோம்.....
இந்த முறை கடல் கடந்த பயணம் மக்கா....என்று சொல்லி நிறுத்திய கழுகு பேட்டி பேப்பரை நம்மிடம் கொடுத்து விட்டு....சொன்னது ஒரு படைப்பாளியை ஒரு மிகச்சிறந்த மனிதனை எவ்வளவு எளிமையாய் பார்த்தேன் தெரியுமா.... நேற்று இன்று வந்தவர்கள் எல்லாம் காலரை தூக்கிவிட்டு பந்தா காட்டும் இதே உலகத்தில்தான் பா.ரா. அண்ணன் மாதிரி படைப்புலக பிரம்மக்கள் தமக்கும் தமது படைப்புகளுக்கும் எந்த வித தொடர்பும் இல்லாத மாதிரி எளிமையாயிருக்கிறார்கள்.
எல்லாவற்றின் ஆணி வேர் அன்புதான் என்று சொல்லாமல் சொல்லி ....பதட்டத்தில் பேட்டி கேட்கவே யோசித்துக் கொண்டிருந்த நமது தோளில் சினேகமாய் கை போட்டு.... போதுமா மக்கா இல்ல இன்னும் கேள்விகள் இருக்கா என்று பார்த்த தொனியில் ஒன்று மட்டும் புரிந்தது.....பா.ரா அண்ணன் என்ற படைப்பாளியை விட...மனிதர்களை நேசிக்கும் அவரது நேயம்...பிரமாண்டமானது என்று.... இதோ பா.ரா அண்ணனின் பாசமிகு பேட்டி உங்களுக்காக....


1)கவிதைகள்....விழிப்புணர்வூட்டுமா? சமகாலத்தில் மக்களின் வாசிப்புத்திறன் எப்படி இருக்கிறது?




முதல் கேள்வியே ரொம்ப கஷ்ட்டமான கேள்வி. என் ரேஞ்சிற்கு கேட்டிருக்கலாம். சரி, என்னளவு பதில், கண்டிப்பா! சமகால வாசிப்பு குறித்து, தெரியலையே



2) வெளி நாட்டு பயணத்திற்காக மண்ணை விட்டு பிரிந்த அந்த கடைசி மணித் துளி எப்படி இருந்தது உங்களுக்கு?


இருட்டி வந்தது மக்கா. குடும்ப பறவை நான். ஆனால் விதி ஏற்றியது. அண்ணாத்துரை சித்தப்பா வீட்டில் இருந்து கிளம்பினோம். சற்றேறக் குறைய, நாற்பது குடும்ப நண்டு சிண்டுகள். k.n.p.ட்ராவல்ஸ் என நினைவு. மதுரையில் இருந்து கிளம்பிய பிறகு, மனநிலை, மூடிக் கொண்டது.


3) முதன் முதலாய் உங்களுக்குள் காதல் பூத்தது எப்போது? எப்படி?( நான் எப்பய்யா...காதல் பூத்துச்சுன்னு சொன்னேனு கேட்க கூடாது...ஹா..ஹா..ஹா)



முதன் முதலாய் காதல் பூத்தது என்றால், சிவகாமி டீச்சரின் மேல். காதல் பூக்க வேண்டிய காலத்தில் பூத்தது, மஹாலக்ஷ்மியின் மேல். அத்தை மகள்.



4) உங்களின் முதல் கவிதை எத்தனை வயதில் எழுதினீர்கள்? அந்த கவிதையையும் எழுதப்பட்ட சூழலையும் கொஞ்சம் கூற முடியுமா?



நினைவு எட்டியது வரையில், "கண்ணே" என தொடங்கியதுதான். எல்லோரையுமே காதல்தானே கவிதைக்கு நீட்டுகிறது



5) மண்ணின் மைந்தர் என்பதால் இந்த கேள்வி....உங்களுக்கு விவசாயம் தெரியுமா? விவசாயம் செய்த அனுபவம் பற்றி..



இல்லை. அப்பாவிற்கு கஞ்சி கொண்டு போனது வரையிலேயே எனக்கும் விவசாயத்திற்கும்
சம்பந்தம். அப்பா, கவர்மென்ட் எம்ப்லாயிதான் என்றாலும், வயலை பார்க்கும் போது ஒரு முகம் வைத்திருந்தார். பூ, பூன்னு பூக்குற முகம். இயலாமையில் எல்லாம் தோற்க நேர்ந்தது அப்பாவிற்கு. ஆனா, அப்பா எங்க யாரையும் தோற்கல. விடுங்க, சம்பந்தமில்லாத பதிலா இருக்கலாம். விவசயாம்னாலே எனக்கு என் அப்பாதான்!ரிட்டயர்மன்ட் காலங்களில் விவசாயம் செய்ய மிகுதி விருப்பம்



6) கல்லூரி வாழ்க்கையில் மறக்க முடியாதது....?

கல்லூரி வாழ்வு முழுக்கவே மறக்க முடியாதுதானே மக்கா. என்றாலும், அப்போ, கணையாழி அகரத்தில்தான் கிடைக்கும். அகரம் பதிப்பகம் கவிஞர் மீராவுடயது. மீரா எனக்கு பிரின்சிபால். கனவுகள் பிளஸ் கற்பனைகள் மீரா! (கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள், புத்தகத்தை காதலிக்கு பரிசளிக்காத காதலன் இருந்திருப்போமா?) கணையாழியில் என் முதல் கவிதை வந்திருந்தது. சந்தோசம் பிடிபடவில்லை.

கல்லாவில் இருந்த மீராவிடம், " கணையாழியில் என் கவிதை வந்திருக்கு சார்" என காட்டினேன். வாங்கி வாசித்தவர், கருத்து ஒன்றுமே சொல்லாமல் கணையாழியை திருப்பி கொடுத்தார். ஏமாற்றம் எனக்கு. பிறகு கல்லூரி ஆண்டு விழாவில், விளையாட்டுப் போட்டிக்கான பரிசு வாங்க மேடை ஏறிய சமயம், " விளையாட்டுக் காரனான இந்த ராஜாராம் கவிதைகளும் எழுதுகிறார். கணையாழியில் வெளி வந்த இவர் கவிதை இது என மேடையில் வாசித்து காட்டினார். அடர்த்தியான, மறக்க முடியாத நாள் அது!

7) ஏதாவது எக்கு தப்பாய் செய்து வீட்டில் மாட்டிக் கொண்டு முழித்த அனுபவம் இருக்கிறதா?



ஏதாவது என்ன? எல்லாமே எக்கு தப்பா செய்து மாட்டிக் கொள்வதுதான். இப்ப வரையில்.



8) பழைய காலங்களோடு ஒப்பிடும் போது தற்போது வளரும் நகர்ப்புறத்து குழந்தைகள்....எந்த மாதிரியான விசயங்களை இழந்து கொண்டிருக்கிறீர்கள்?



உறவுகளை, புத்தக வாசிப்பை, காற்றை, கற்பனையை


9) உங்கள் கவிதைகளில் பெரும்பலும் சூழலே...கரு....இது உங்களின் உள்ளுணர்வா? இல்லை இப்படிதன் எழுத வேண்டும் என்று தீர்மானித்து எழுதுகிறீர்களா?


இப்படித்தான் எழுத வேணும் என fix பண்ணிக் கொள்ளவில்லைதான். ஆனால், சூழலில் எழுதவே வருகிறது. ஒரே மாதிரியான கவிதைகள் மீண்டும் மீண்டும் எழுதுவதாக, என் நன்பன், நல்ல விமர்சகன் ஜ்யோவ் வைக்கிற குற்றச்சாட்டையும் இங்கு பதியனும். ஆனா, என்ன செய்யலாம்? வேணுமென செய்யவா போறோம், எதையும்? ஸ்ட்ரெந்த் அவ்வளவுதான் என எடுத்து கொள்கிறேன். எளிதாக இருக்கிறது.



10) ஒரு வித ஜனக்கட்டு நிறைந்த வாழ்க்கையிலிருந்து விடுபட்டு முதன் முதலில் வெளி நாட்டு மண் மிதித்த அன்றைய தினத்தின் இரவு.......கொஞ்சம் பகிருங்களேன்...?


கண்ணை கட்டி காட்டில் விட்டது போலதான். கூடவே இரண்டு நண்பர்கள் வந்தார்கள். கபில், டேவிட் என்று.எனக்கு தமிழைத் தவிர மாற்று மொழி தெரியாது. ஆங்கிலம் வாசிக்க தெரியம். பேச்சு வராது. ஏர்போர்ட் இறங்கி, அறை அடைந்தது வரையில் அவர்கள் பார்த்துக் கொண்டார்கள். "விடிஞ்சா ஊருக்கு. நை நைன்னு பேசிக்கிட்டு இருக்காம தூங்குங்க" என்கிற வசனத்தை மட்டும் நான் பார்த்துக் கொண்டேன். அப்புறம், ஒவ்வொரு இரவும் இப்படித்தான் போச்சு. இரண்டு வருடம் வரையில் அவர்களுக்கு. மூன்று வருடம் வரையில் எனக்கு

11) வெளி நாட்டில் இருக்கும் நீங்கள் குடும்ப நினைப்பு வந்தால் என்ன செய்வீர்கள் போன் பேசுவதை தவிர...

கருவேலநிழல் தொடங்கும் முன்பு முக்கியமாக, டி.வி.தான். தொடங்கிய பிறகு குடும்ப நினைப்பு பெரிதாக படுத்தவில்லை. குடும்பத்தில் சொல்லிவிட வேணாம். கேட்டீர்களா?


12) கரு வேல நிழலின் பிரம்மா... நீங்கள்....முதல் புத்தகம் இதுதானா? புத்தகமாய் கையில் பார்த்த போது...உங்களின் உணர்வு..?

உண்மையில் தம்பி கண்ணனும் அவர் நண்பரும் மற்றும் நீங்களும்தான் கருவேலநிழலின் பிரம்மாக்கள் என்பேன். நீங்கள் எனில், அப்பா, சித்தப்பா, மாமு, அண்ணா, அண்ணே, என்கிறீர்களே அந்த நீங்கள். அப்புறம் நானும் கூட உண்டு. so, "we the prammaas!

13) வெளி நாட்டு வாழ்க்கை வரமா? சாபமா?


மகன் கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்தான். உயிர் போராட்டமான சிகிச்சை தொடங்கியது.. சற்றேறக் குறைய ஐந்து வருட சிகிச்சை .மகனை
காப்பாற்றியதில், சிவகங்கையின் அனேக தெருக்களில் எனக்கு கடன் கொடுத்தவர்கள் இருந்தார்கள். ஒவ்வொரு தெரு நுழையும் போதும், "இங்கு யார் இருக்கிறார்கள்?" என மாற்று வழியில் பயணித்தது உண்டு. சவுதி வந்து மூன்று வருடத்தில் சகல கடன்களையும் முடித்து, மனசுக்கு பிடித்த என் சொந்த மண்ணில், "இந்த தெருவில் யார்? என்கிற எந்த நினைப்பும் இல்லாமல் சுற்றி வர முடிந்ததே, இது வரமா? சாபமா?


பணி நிமித்தமாக ஜெத்தாவில் இருந்தேன். (அதாவது, 1200 கி.மீ. பணி புரியும் இடத்தில் இருந்து) "ஏங்க, ஒங்க அப்பாக்கு முடியல. ஒடனே கிளம்பி வாங்க." என்ற மனைவியின் அழை பேசியை பறித்து "ராஜாண்ணா அப்பா இறந்துட்டாங்க. வரமுடியுமாண்ணா?" என்ற எதிர் வீட்டு கவிதா சொன்னதும், நான் போய் சேர்ந்ததும், அப்பா ice பெட்டியில் இருந்தாரே. "எதையாவது இழந்துதாண்டா எதையாவது பெற முடியும்" என்று சொல்லிக் கொண்டே இருந்த அப்பா. இது வரமா? சாபமா?


14) சிவகங்கை மண்ணுக்கு சொந்தக்காரர் என்பதால்...இந்த கேள்வி......வானம் பார்த்த பூமியின் மக்களின்.....வாழ்க்கை ஜெயித்திருக்கிறதா?


வானம் பார்த்த மக்களின் வாழ்வு என்று குறிப்பிட்டு கேட்பதால், நான் உணர்ந்தவரையில் தோற்றுத்தான் இருக்கிறார்கள். இது வருத்தம். தோற்றது தெரியாமல் எப்பவும் போல இருக்கிறார்கள். இது மிகுதியான சந்தோசம்

15) உங்களுக்கு பிடித்த.... நீங்கள் அடிக்கடி முனு முனுக்கும் கவிதை வரிகள்....என்ன?


சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று காற்றின் தீராத பக்கங்களில் தன் வாழ்வை எழுதிச் செல்கிறது- பிரமிள்.

16) ஒரு கவிதை எப்படி இருக்க வேண்டும்...?


எப்படி வேணா இருக்கலாம். கண்ணே என தொடங்கியது எனக்கு அப்ப பிடிச்சிருந்தது. இப்ப பிடிக்கல. இல்லையா? அப்படி, பருவம், வாசிப்பு ஒட்டி, கவிதையின் தொணி மாறலாம். அப்பவும், இப்பவும், என்னை மீட்டவென எழுதினால் போதும் என் கவிதைகளை என தோன்றுகிறது.

17) முதல் விமான அனுபவம் எப்படி இருந்தது...?


"ஃப்லைட்லல்லாம் ஏறிட்ட போல ராஜாராமா?" என்று இருந்தது. அப்புறம், ஏண்டா ஏறினோம் என்றும் இருந்தது.

18) பதிவுலகம் பற்றிய ஒரே ஒரு கேள்வி....பதிவுலகில் நீங்கள் பார்த்து வியந்த விசயம் எது? வெறுத்த விசயம் எது?


பதிவருக்கு உயிர் பிரச்சினை என்றதும் கை கோர்த்துக் கொண்ட பதிவர்கள்- வியப்பு! இப்ப வரையில் வெறுப்பு இல்லை. கோபம் தாண்டித்தானே வெறுப்பு? கோபம் நிலையிலேயே பின்னூட்டத்தில் இறக்கி வைக்கிறேன்


19) DVD யில் வீட்டில் பார்க்கும் படம்...அந்தக்கால டூரிங் டாக்கிஸ் படம்.....ஒப்பீடு செய்யுங்கள்.....?

மனைவியை விடுங்கள், மகள் மகன் முன்பு, வீ....வீ... என விசில் அடித்து பார்க்க இயலவில்லை dvd-யில்


(கழுகு இன்னும் ....உயர பறக்கும்
)




22 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அருமையான பதில்கள் கவிதைத்தனமாக...

செல்வா said...

/// உறவுகளை, புத்தக வாசிப்பை, காற்றை, கற்பனையை //
ரொம்ப உண்மையான பதில் ..
// இது வரமா? சாபமா?
//
இரண்டுமே இருக்கு ..!!

School of Energy Sciences, MKU said...

பழுத்த அனுபவம் பேட்டி முழுவதும் ததும்பி வழிகிறது. ஊர்காரர் என்று அறிந்ததும் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். (நான் திருப்புத்தூருங்கண்ணா)

dheva said...

சித்தப்பா....ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு பதில்கள்..மீண்டும் மீண்டும் படிச்சுகிட்டே இருக்கேன்!

Unknown said...

முத்தாய்ப்பு...

ஜீவன்பென்னி said...

//சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று காற்றின் தீராத பக்கங்களில் தன் வாழ்வை எழுதிச் செல்கிறது- பிரமிள்//

நான் எழுதிய முதல் கவிதையும் சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று என்ற இந்த வரிகளைத்தான் கொண்டிருந்தது. பின்பு பிரமிளின் மொத்த படைப்பும் புத்தகமாக வந்த போது இந்த வரிகளை படிக்க நேரிட்டது. அருமையான கேள்விகள் வெளிப்படையான பதில்கள்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமையான பதில்கள் கவிதைத்தனமாக...

அருண் பிரசாத் said...

அனுபவசாலியின் முதிர்ந்த பதில்கள்.

Ahamed irshad said...

சுவராஸ்யமான கேள்வி பதில்.. நல்லாயிருக்கு...

என்னது நானு யாரா? said...

//நான் போய் சேர்ந்ததும், அப்பா ice பெட்டியில் இருந்தாரே. "எதையாவது இழந்துதாண்டா எதையாவது பெற முடியும்" என்று சொல்லிக் கொண்டே இருந்த அப்பா. இது வரமா? சாபமா?//

என்ன ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் வரிகள்! அருமை நண்பரே!
நல்லா இருக்கு!
பா.ரா. அவர்களின் பேட்டி சரக்கு!

Unknown said...

அருமையான பேட்டி..

Anonymous said...

//நான் போய் சேர்ந்ததும், அப்பா ice பெட்டியில் இருந்தாரே. "எதையாவது இழந்துதாண்டா எதையாவது பெற முடியும்" என்று சொல்லிக் கொண்டே இருந்த அப்பா. இது வரமா? சாபமா?//

உண்மை...கடல் தாண்டி வேலை செய்பவர்களுக்கு மனநிலை பலவீனமாகத்தான் இருக்கும்...என் அனுபவத்தில்...அன்பாலும் கூட..பகிர்விற்கு நன்றி..

க ரா said...

அருமையான பதில்கள் :)

Thenammai Lakshmanan said...

அருமை கழுகு.. மக்கா நீங்களும்தான்..
யதார்த்தமான பதில்கள்..

Jey said...

பா.ரா., நீங்க ரொம்ப எளிமையானவர்னு என் நண்பன் சொல்லிருந்தான். அதை இப்போது உங்கள் பதில்களில் பார்க்கிறேன்.

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த கழுகு, மகன் தேவா, மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் மிகுந்த அன்பும் நன்றியும்!

Chitra said...

கலக்கல் பதில்கள்!!!! அருமை.

'பரிவை' சே.குமார் said...

அனுபவசாலியின் எழுத்துக்கள் அருமை என்றாலும் பல இடங்களில் மனதை கனக்கச் செய்யும் பதில்கள்.

குறிப்பாக...

வெளிநாட்டுக்கு பயணமான அந்த நாள்...

அப்பாவின் பிரிவு...

குழந்தைகளுடன் செலவழிக்க முடியாத வாழ்க்கை...

பணம் துரத்தும் வாழ்க்கை...

எங்கள் சிவகங்கை மக்கள் நிலை குறித்த ஆதங்கப் பதில் எல்லாவற்றிலும் பாரா அண்ணன் அவருக்கே உரிய நடையில் சொன்னாலும் நிதர்சனம் மனசைக் கனக்கச் செய்கிறது.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

அருமையான பேட்டி. யதார்த்தமான பதில்கள்..

vasu balaji said...

இப்படி இருந்தாத்தான் அப்படி எழுத முடியும்:)

Starjan (ஸ்டார்ஜன்) said...

பாராண்ணே.. அசத்தலான பதில்கள்.. நிறைய தகவல்களையும் பேட்டியில் சொல்லியிருக்கீங்க.. தெரிந்துகொள்ள வசதியாக இருந்தது..

அருமையான பேட்டி.. கழுகின் பணி தொடரட்டும்..

Ravichandran Somu said...

// "எதையாவது இழந்துதாண்டா எதையாவது பெற முடியும்" என்று சொல்லிக் கொண்டே இருந்த அப்பா.//

நிதர்சனமான உண்மை!

அருமையான பேட்டி.. நெகிழ்ச்சியான பதில்கள்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes