Tuesday, August 23, 2011

ஒழியட்டும் தூக்கு தண்டனைகள் ...! ஒரு மனித நேயப் பார்வை..!


நாங்கள் ஒரு கட்டுரை செய்தோம். அந்தக் கட்டுரை பேரறிவாளனை தூக்கில் போட வேண்டும் என்ற நோக்கில் செய்யப்படவுமில்லை. தூக்கில்தான் போட வேண்டும் என்று வலியுறுத்தவும் இல்லை. குற்றமிருப்பின் அதிகபட்ச தண்டனையாக மரணிக்கும் வரையில் சிறையிலடைக்கலாம் என்றும் மரண தண்டனை என்பது மொத்தமாகவே நீக்கப்பட வேண்டும் என்பதே எமது பார்வையாக இருக்கிறது.

இன்று மரண தண்டனையை எதிர்த்து போராடும் இந்த நிலைமை இன்னும் வலுவாக பெரும் புயலாக மையம் கொண்டு இந்தியா மற்றும் உலகம் முழுவதிலுமே மரண தண்டனை நிறுத்தப்பட வேண்டும் என்பதே நமது நோக்கமாயிருக்கிறது.

மனிதர்கள் யாருக்குமே மரண தண்டனை விதிக்கப்படக் கூடாது அப்படியான கோரிக்கையை வைக்கும் போது இனம், மதம், நாடு கடந்த மனிதநேயப் பார்வைகள் வேண்டும் என்று சுட்டிகாட்டியிருந்தோம். தான் செய்தது குற்றமில்லை என்று குற்றம் சாட்டப்பட்டவர் சொல்ல, செய்தது குற்றம்தான் என்று மக்கள் பிரதிநிதியாக அரியாசனத்தில் வீற்றிருக்கும் நீதியரசர்கள் தீர்ப்பளிக்க....,

சாமானிய மனிதர்களாகிய நாங்கள், குற்றவாளி தண்டிக்கப்படக் கூடாது என்பதும் தவறு, ஒரு குற்றத்திற்கு சட்டப்படிஎவ்வளவு தண்டனையோ அதற்கு மேல் தண்டனை வழங்கியிருந்தால் அதுவும் கண்டிக்கத்தக்கது என்றோம்.

ஒரு விடயத்தை ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ நாம் பயணிக்கும் போது அது அறிவு சார் பார்வையாக இருக்க வேண்டும், உணர்ச்சி சார் பார்வையாய் இருக்க கூடாது என்ற விடயத்தையும் பகிங்கரப்படுத்தி, தமிழ்ப் பெயர் கொண்டவர், தமிழன் என்றால் மட்டுமல்ல எந்த தேசத்தவராய் இருந்தாலும், மொழியுடையவராய் இருந்தாலும் நாம் அநீதிகளை எதிர்க்கும் மானுடக் கூட்டமாய் இருக்கவேண்டும் என்ற மொழி பகின்றோம்.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது, அதில் முரண் இருக்கிறது என்றால் தேசத்திலிருக்கும் அத்தனை குடிமக்களுக்கும் இந்த அரசியல்வாதிகளால், சுயநல பொய் புரட்டுகளால் பாதுகாப்பு அற்ற தன்மை ஏற்பட்டுத்தானே போயிருக்கிறது என்று அர்த்தம்? இந்த நோக்கில் பேரறிவாளனின் தீர்ப்பினை பாருங்கள்...

பேரறிவாளன் விடுவிக்கப்படுவது மட்டுமின்றி, இனி எப்போதுமே இது போன்ற குற்றத்திற்கும் மேலான தண்டனைகளை யாருக்குமே இந்த சமூக கட்டமைப்பில் இருக்கும் நீதிமன்றங்கள் செய்துவிடக்கூடாது, மேலும் ஊழலுக்கு எதிராய் புரட்சி செய்யும் மேலதிகார மக்களை எல்லாம் கொண்டாடும் மக்கள் உயிர்க்காக போராடும் மனிதர்களையும் போராட்டங்களையும் முழு அறிவோடு உற்று நோக்கி ஏன் முன்னெடுப்பதில்லை என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி, மொழி சார்ந்த, உணர்ச்சி கடந்த மனித நேயத்தோடு பிரச்சினையை அணுகுங்கள் என் தோழர்களே என்ற மறைமுக கோரிக்கையினை வைத்தோம்.

ஏன் இவரை மட்டும் தூக்கில் போடவேண்டாம் என்று கூறுகிறீர்கள்? தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட எல்லோரையுமே தூக்கில் போடக்கூடாது என்று நாம் வலியுறுத்த வந்த நேற்றைய கட்டுரயின் முதல் பாதி அனேக பேரால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது அல்லது சரியான செய்தியை கட்டுரை பகிரவில்லை என்பதை தெளிவாய் உணர முடிகிறது.

கட்டுரையின் பொருள் புரிபடவில்லையெனில், கட்டுரையின் சாரம் சரியான இலக்கிற்கு இழுத்துச் செல்லவில்லை என்றால், கருத்துரைகளில் சாட்டையடி கொடுக்கலாம் சிலர் கொடுத்தார்கள். திரட்டிகளில் எதிர்த்து வாக்களித்து சாரம் எம்மை திருப்தி கொள்ளச் செய்யவில்லை என்று கூறலாம், பலர் செய்தார்கள். இது ஜனநாயக வழிமுறை...!

இது விடுத்து முகமிலிகளாக அவசர கதியில் ஒரு வேடமிட்டு வந்து மூன்றாம் தரவார்த்தைகளை உபயோகம் செய்து கட்டுரையை தூக்கு இல்லையே என்ன நடக்குமென்று தெரியாது என்று தாயையும்,பிறப்பையும் இழிவு செய்து பேச ஒரு அயோக்கியன் துணிகிறான் என்றால் இந்த சமுதாயத்தின் வேர்களில் எவ்வளவு நச்சுப் பிடித்துப் போயிருக்கிறது என்று அறிந்து கொள்ளுங்கள்,

அஹோரி என்ற பெயரில் நேற்று வந்து அத்துமீறிய திருடனின் புரபைல் ஐடி மொத்தமும் சென்னைக்கு அனுப்பப்பட்டு இணையகுற்றங்களுக்கான பிரிவினை நமது தொடர்புகள் நெருங்குவதற்கு முன்னால் அந்த வலைப்பூ அடையாளம் முற்றிலுமாய் அழிக்கப்பட்டு இருப்பது அறிய முடிந்தது.

சற்று நேரம் அந்த மூர்க்கன் காத்திருந்தானேயானால், பொதுவெளியில் வந்து, அதுவும் கழுகு போன்ற சமூக விழிப்புணர்வு தளங்களில், பெண்கள் நடமாடும் பொதுவெளியில் மூன்றாம் தர வார்த்தைகளை உச்சரித்து, உதாரணம் கொடுக்கவே ஒவ்வாத வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக அஹோரி என்ற அயோக்கிய போலி முகத்திரை கிழிக்கப்பட்டு பொதுவெளியில் அத்து மீறியதற்காக சட்டத்தின் பிடியில் சிக்கவைக்கப்பட்டு இணையத்தில் வேறு, வேறு அடையாளங்களில் வந்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம், யாரை வேண்டுமானாலும் ஏசலாம் என்று எண்ணிக் கொண்டு இருப்பவர்களுக்கு எல்லாம் ஒரு முன்னுதாரணமாய் இருந்திருப்பான்.

ஒரு மனிதனின் தரத்தை அவனின் வார்த்தைகளில் இருந்து அறிய முடியும். வீரம் என்பது வெற்றியை மட்டும் கொண்டு மனிதர்களை அடிமைப்படுத்துவது அல்ல, வீரம் என்பது மிரட்டி விளையாடுவது அல்ல, வீரம் என்பது அநாகரீக வார்த்தைகள் உபயோகம் செய்வது அல்ல, வீரம் என்பது உரக்க சப்தமிடும் ஒரு உபாயம் அல்ல...

வீரம் என்பது அன்பால் எல்லோரயையும் தன்பால் ஈர்ப்பது; வீரம் என்பது சமயோசிதம்; வீரம் என்பது பிரபஞ்ச நியதிக்கு மாறாய் நிகழ்வுகள் இருக்கையில் சத்தியத்தை தற்காத்துக் கொள்ள பயன் படும் ஒரு ஆயுதம்.

ஒரு சத்தியத்தை ஆதரிக்கும் மனிதர்கள் சீற்றமில்லாமல் தமது கருத்துக்களை ஆழமாக எடுத்து வைத்து, புரிதல் இல்லாவனை புத்துயிர் கொடுத்து எழ வைக்கவேண்டும். எந்த ஒரு மனிதன் கூறும் அல்லது எடுத்துக் கொள்ளும் மனோபாவமும் இறுதி உண்மை அல்ல. உண்மை யாராலும் சொல்லப்படவேண்டிய அவசியமில்லாமல் அதுவே தன்னை காலமெல்லாம் வெளிப்படுத்திக் கொள்கிறது.

ஒரு கொலை வழக்கு, அதை 20 வருடங்களாக அலைக்கழித்து இதுவரை எது உண்மை? எது பொய் என்று மக்கள் உணர முடியாத நிலையில் மக்களை வைத்திருக்கும் தேசம்? ஒவ்வொரு தேசத்து நிகழ்வுக்கும் ஏதோ ஒரு சாயம் பூசி அதை தமது அரசியல் வாழ்க்கையாக்கப் பார்க்கும் அரசியல்வாதிகள், குற்றத்திலிருந்து ஒளிந்து கொண்டு அரசியல் படைபலங்களுக்குப் பின்னால் வெற்றிலைப் பாக்குப் போடும் குண்டர்களை ஒத்த தலைவர்கள்,

தூக்கு தண்டனை என்ற ஒன்றே நமது தேசத்தில் இருக்கக்கூடாது, ஒரு உயிருக்கு இன்னொரு உயிர் எடுப்பது சரியான வழிமுறை அல்ல. குற்றவாளி குற்றம் செய்யும் நிலையில் உணர்ச்சி மேலிட ஒரு முடிவெடுத்து விடுகிறான் ஆனால் தீர்ப்பு கொடுக்கும் போது உணர்ச்சி மேலிடாமல் குற்றவாளி திருந்தும் படியான ஒரு தீர்ப்பினை நீதிபதிகள் வழங்கவேண்டும். இப்படியாக நாம் கூறுவது ஒரு தமிழன் என்ற கட்டுப்பாட்டுக்குள் நின்று முடிவெடுக்காமல் மனிதன் என்ற ஒரு உன்னத பார்வையில் உயிரை உற்றுப்பார்த்து எடுங்கள்....

என்று நாம் கூறினால், அதை விளங்கிக் கொள்ளாமல்., மின்னஞ்சல் மிரட்டல்கள், கருத்துரைகளில் மூன்றாம் தர வார்த்தை பிரயோகம் என்று நேர்மையற்ற முறையில் கருத்துக்களை பகிரும் மக்கள்.....

இப்படியான சமுதாயத்தில்தான் நாமிருக்கிறோம்.

மனிதர்கள் திருந்த வாய்ப்பினை காலம் எப்போதும் கொடுக்கிறது அதையே அவர்கள் அத்துமீறுவார்களாயின் அதே காலமே அவர்களை நையப்புடைக்கிறது. பேரறிவாளன் விடயத்தில் தூக்கு தண்டனை என்பது நிறுத்தப்பட்டு, சரியான முறையில் வழக்கினை செலுத்தி இதில் ஈடுபட்டுள்ள அத்தனை நியாயமான குற்றவாளிகளையும் பாரபட்சமின்றி வெளிக் கொண்டு வந்து தண்டிக்க வேண்டும் என்று இந்தக் கட்டுரை வலியுறுத்தும் அதே நேரத்தில்....

அப்போது கூட தூக்கு தண்டனை என்பது யாருக்கும் வழங்கப்படாமல்..உச்ச பட்ச தண்டனையை வேறு வடிவத்தில் வழங்க வேண்டும் என்ற கொள்கையை மீண்டும் உரக்க சப்தமிட்டு கூறி தெளிவாய் இச்செய்தி அனைவருக்கும் சென்று சேரட்டும் என்று பிரார்த்தனைகளையும் செய்கிறது.


கழுகு

(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)


பின்குறிப்பு: எந்த மூன்றாம் தரவார்த்தைகளாய் இருந்தாலும் கருத்துரைகள் நீக்கப்பட மாட்டா. அவை வெளியிடப்பட்டு, பதப்படுத்தப்பட்டு, செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று யாரால் அத்துமீறப்பட்டதோ அவர்களுக்கு பாடம் தெளிவாய்க் கொடுக்கப்படும்.

13 comments:

வெங்கட் said...

// என்று நாம் கூறினால், அதை விளங்கிக்
கொள்ளும் திராணியற்று, //

தெளிவில்லாத.,குழப்பமான கட்டுரைக்கு
விளக்க கட்டுரை எழுதிய தாங்கள் இதை
சொல்வது சிரிப்பாய் இருக்கிறது..

சொல்ல வந்த கருத்து மக்களுக்கு
விளங்கவில்லை என்றால்..
அதற்கு வாசகர்கள் திராணியற்றவர்கள்
என்றும் மட்டும் அர்த்தம் அல்ல..

சொல்ல வந்த கருத்தை சரியாய் சொல்லும்
திறமையற்றவர் கட்டுரையாளர் என்பதாகவும்
இருக்கலாம்..

வெங்கட் said...

// கட்டுரையையும் கட்டுரையி சாரத்தையும்
விட்டு விட்டு... எங்கோ தடம் புரட்டிக் எம்மை
கூட்டிச் செல்கிறீர்கள். //

நான் எங்கும் கூட்டி சொல்ல வில்லை..

// அனேக பேரால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது
அல்லது சரியான செய்தியை கட்டுரை பகிரவில்லை
என்பதை தெளிவாய் உணர முடிகிறது. //

இப்படி சொன்ன தாங்கள்..

சரியாய் செய்தியை பகிராத கட்டுரையை
புரியாதவர்களை நீங்க எப்படி திராணியற்றவர்கள்
என்று கூறலாம்..

எனக்கு கூடத்தான் போன கட்டுரையின்
சாரம் புரியவில்லை..

கழுகு said...

வெங்கட் @ நேற்றைய கட்டுரை தவறான புரிதலை கொடுத்திருக்கக் கூடும் என்ற காரணத்தா வெளிச்சத்தினை கூட்டி இன்றைய கட்டுரை செய்யப்பட்டது.

தங்களின் நியாயமான எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்க காத்திருக்கிறோம்.

புரிதலுக்கு நன்றிகள்.

Prabu Krishna said...

@ வெங்கட்
நண்பரே சென்ற கட்டுரையின் நோக்கம் பலருக்கு புரியாத காரணத்தால் தான் இந்தப் பதிவு.

தூக்கு தண்டனைக்கு எதிராக நாம் போராடுகிறோமா? இல்லை பேரறிவாளனின் தூக்கு தண்டனைக்கு எதிராக மட்டும்தான் நாம் போராடுகிறோமா?

கழுகின் நோக்கம் தூக்கு தண்டனையே கூடாது என்பது.

வெங்கட் said...

@ பிரபு.,

// நண்பரே சென்ற கட்டுரையின் நோக்கம்
பலருக்கு புரியாத காரணத்தால் தான் இந்தப் பதிவு. //

அது எனக்கு புரிகிறது நண்பரே..

அந்த பதிவு புரியாமல் போனதற்காக
வாசகர்களை குறை கூறாதீர்கள் என்று
தான் நான் சொல்கிறேன்..

Prabu Krishna said...

@ வெங்கட்

என்றுமே வாசகரை சாடியதில்லை கழுகு.

//கட்டுரையின் பொருள் புரிபடவில்லையெனில், கட்டுரையின் சாரம் சரியான இலக்கிற்கு இழுத்துச் செல்லவில்லை என்றால், கருத்துரைகளில் சாட்டையடி கொடுக்கலாம் சிலர் கொடுத்தார்கள். திரட்டிகளில் எதிர்த்து வாக்களித்து சாரம் எம்மை திருப்தி கொள்ளச் செய்யவில்லை என்று கூறலாம், பலர் செய்தார்கள். இது ஜனநாயக வழிமுறை...!//

இதை கவனித்தீரா?

இங்கு குறிப்பிடப்பட்டு உள்ளது மூன்றாம் தர வார்த்தைகளை உபயோகித்த ஒரு வாசகர் குறித்து. பொது இடத்தில் மிகக் கேவலமான வார்த்தைகளை பயன்படுத்துபவரை எப்படி கூறுவது?

மற்றபடி எதிர்கருத்துகள் தான் எங்களுக்கு ஊட்டம். கருத்தில் தவறு இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் பதில் கூறுகிறோம்.

வெங்கட் said...

@ பிரபு.,

// என்றுமே வாசகரை சாடியதில்லை கழுகு. //

இந்த பதிவுல நானும், கழுகும் போட்ட
6 கமெண்ட்ஸ் எதனால டெலிட் ஆச்சுன்னு
தெரியுமா பிரபு...?!!

// இங்கு குறிப்பிடப்பட்டு உள்ளது மூன்றாம் தர
வார்த்தைகளை உபயோகித்த ஒரு வாசகர்
குறித்து. பொது இடத்தில் மிகக் கேவலமான
வார்த்தைகளை பயன்படுத்துபவரை எப்படி கூறுவது? //

அதான் மாடரேஷன் வெச்சு இருக்கீங்கல்ல..
கமெண்ட் பப்ளீஷ் பண்ணாம விட்டா போச்சு..
நீங்களே ஏன் இதை பெருசு படுத்தறீங்க..?

// மற்றபடி எதிர்கருத்துகள் தான் எங்களுக்கு
ஊட்டம். கருத்தில் தவறு இருப்பின் சுட்டிக்
காட்டுங்கள் பதில் கூறுகிறோம். //

இதை எல்லாம் நம்பிதான்பா.. நானும்
இங்கே வந்து எதாவது சொல்லிடறேன்..

வெங்கட் said...

// தூக்கு தண்டனை என்ற ஒன்றே நமது தேசத்தில் இருக்கக்கூடாது, ஒரு உயிருக்கு இன்னொரு உயிர் எடுப்பது சரியான வழிமுறை அல்ல. குற்றவாளி குற்றம் செய்யும் நிலையில் உணர்ச்சி மேலிட ஒரு முடிவெடுத்து விடுகிறான் ஆனால் தீர்ப்பு கொடுக்கும் போது உணர்ச்சி மேலிடாமல் குற்றவாளி திருந்தும் படியான ஒரு தீர்ப்பினை நீதிபதிகள் வழங்கவேண்டும். இப்படியாக நாம் கூறுவது ஒரு தமிழன் என்ற கட்டுப்பாட்டுக்குள் நின்று முடிவெடுக்காமல் மனிதன் என்ற ஒரு உன்னத பார்வையில் உயிரை உற்றுப்பார்த்து எடுங்கள்....

என்று நாம் கூறினால், அதை விளங்கிக் கொள்ளாமல்., //

இதெல்லாம் தான் அந்த பதிவின் சாரமா..?
எனக்கு அந்த பதிவை படித்த போது வேறு
மாதிரி பட்டது..

அப்போ அதை விளங்கிக்கொள்ளாமல் என்று
பொதுவாய் சொல்லும் போது அது என்னையும்
சேர்த்தே குறிக்கிறது..

" புரிகின்ற மாதிரி எழுதவில்லை " என்று
எனக்கு கட்டுரையாளர் மீது கோவம் வந்தது..

கழுகு said...

என்று நாம் கூறினால், அதை விளங்கிக் கொள்ளாமல்., //

இந்த வார்த்தைகள் மிரட்டல் மின்ஞ்சல், மூன்றாம் தர வார்த்தை பயன் படுத்தியவருக்கு என்று பல முறை சொல்லியும் உங்களுக்கு மட்டும் உறுத்துவது ஏனோ...????

" புரிகின்ற மாதிரி எழுதவில்லை " என்று
எனக்கு கட்டுரையாளர் மீது கோவம் வந்தது..///

எங்களை விட கழுகுகில் சிறந்த பதிவு வர வேண்டுமென்ற உங்கள் கோவத்திற்கு மிக்க நன்றி வெங்கட்... உங்கள் கோவமே எங்களை மெருகு படுத்தி கொள்ள உதவும்

அதான் மாடரேஷன் வெச்சு இருக்கீங்கல்ல..
கமெண்ட் பப்ளீஷ் பண்ணாம விட்டா போச்சு..
நீங்களே ஏன் இதை பெருசு படுத்தறீங்க..? ///

மூன்றாம் தர வார்த்தை பயன் படுத்திய பிறகே மாடரேஷன் வைக்கப் பட்டது ..... இனியும் மாடரேஷன் தொடரும் அதற்கு பெயர் பயம் அல்ல ...

அபி அப்பா said...

அந்த அஹோரி என்னும் இழிபிறவியை பற்றி நீங்கள் கழுகு குழுமம் சைபர்கிரைமில் புகார் செய்யும் போது என்னையும் சட்சியாக இணைத்துக்கொள்ள தயாராக இருக்கின்றேன். அவனுடைய பல பின்னூட்டங்கள் நான் இன்னும் அழிக்காமல் ஆனால் வெளியிடாமல் இருக்கின்றேன். எனது அரசியல் கட்டுரை அனைத்திலும் அவன் தவராமல் ஆஜராகி குடும்பத்தை திட்டுவது அவனது தொழில். உங்கள் முயற்சிக்கு என் முழு ஆதரவு உண்டு!

saidaiazeez.blogspot.in said...

எப்பொருள் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

கழுகை நாம் நோட்டம் விடும் போது, எங்களின் mind set, "அவன் ரொம்ப நல்லவன்..." என்று.
நமக்கு ரொம்ப பிடித்தவன் தவறு செய்தால் அல்லது தவறு செய்கிறான் எனறு நாம் நினைத்ததால் ஏற்பட்ட கோபத்தின் வெளிப்பாடே இது போன்ற பதிலுரைகள். எனினும் அறுவருக்கத்தக்க/வசை சொற்கள் பயன்படுத்துவது தூக்குத் தண்டனையைவிட மிகக் கொடுமையானது.

தீயினாற் சுட்டபுண் உள்ளாரும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு

நாம், நம் மொழி பேசுபவனுக்கு இந்த துக்கம் ஏற்பட்டு விட்டதே என்று கதரவில்லை...
மாறாக, இந்த மொழி பேசுவதாலேயே இப்படி துக்கம் தருகிறார்களே என்று வெறி கொள்கிறோம்

baleno said...

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட எல்லோரையுமே தூக்கில் போடக்கூடாது என்று நாம் வலியுறுத்த வந்த நேற்றைய கட்டுரயின் முதல் பாதி அனேக பேரால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது அல்லது சரியான செய்தியை கட்டுரை பகிரவில்லை என்பதை தெளிவாய் உணர முடிகிறது.

கட்டுரை தெளிவாகவே எழுதப்பட்டுள்ளது. ஆனால் கட்டுரையை சரியாக புரிந்து கொள்ளவிடாமல் தமிழகத்தில் நடைபெறும் தமிழ் இனவெறி பிரசாரம் பலரின் கண்ணை மறைக்கிறது.

kalimulla said...

தமிழனின் குரல்

தமிழிலன்னையின் மும்முத்துக்கள் உதிராமல் தடுப்போம்
தரணியெங்கும் தமிழ் முழக்கமிடுவோம்
தமிழும் தழைக்கும் தரணியும் (உன்னை) புகழும்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes