Tuesday, August 31, 2010

எங்கே செல்கிறது உலகம் ?







சுற்றி நிகழும் அக்கிரமங்களை பார்த்து மெளனமாய் எத்தனை காலங்கள்தான் பயணிப்பது...! வெகுண்டு எழும் மானுட கூட்டம் ஒன்று சேர்ந்து திரும்பிப் பார்த்தால் எரிந்தே போய் விடாதா தீமைகள். தம்பி ரமேஷின் தீமைக்கு எதிரான் அக்னி அம்பு இதோ...பற்றியெறியட்டும் மனித மனங்கள்....அதில் அழிந்தே போகட்டும் தீமைகள்.....



சென்ற வாரம் அதிர்ச்சியான இரு சம்பவங்கள் படித்தேன் அதுபற்றி இங்கு பார்ப்போம்.....


சம்பவம் 1:


நெடுங்காலம் நோய்வாய்ப்பட்டிருக்கும் ஒருவர் இறந்தாலே நமக்கு மனசு பதறும்...யாரோ ஒருவரின் தவறால்....அங்க அவயங்கள் சீர்குலைந்து ஒருவர் இறந்தால்....நினைக்கவே நடுங்குகிறது மனது.....


சென்னையைச் சேர்ந்த தையல் தொழிலாளியான ராம்நாத்தின் 21 வயது மனைவி குணசுந்தரி இரண்டாவது குழந்தை பிறந்த சில நாட்களில் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்திருக்கிறார்...அதற்காக கொடுக்கப்பட்ட மருந்துகளில் ஒன்று அவருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்த, அவரது உடல் முழுவதும் கொப்புளங்கள் வந்து கண்பார்வை மங்கி....மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி இறந்திருக்கிறார்...பத்திரிகைகளில் வெளியான அவரது புகைப்படங்களைப் பார்த்தாலே பகீரென்றது.


அவருக்கு ஒவ்வாமை வந்து இறந்ததற்கு மருத்துவர்கள் என்ன செய்வார்கள் என்று கேட்காதீர்கள்...அவருக்கு அந்த மருத்துவர் பரிந்துரைந்த "கோம்பி ஃபிளேம்" என்ற மருந்து...1997 ஆம் ஆண்டே இந்தியாவில் தடை செய்யப்பட்ட மருந்து.....அதற்கு சில ஆண்டுகள் முன்பே அமெரிக்காவில் தடை செய்யப்பட்டிருக்கிறது....பொறுப்பான ஒரு மருத்துவர் இப்படி தடை செய்யப்பட்ட ஒரு மருந்தினை பரிந்துரைக்கலாமா...அவர்கள் உயிருக்கு கொடுக்கும் மதிப்பு இவ்வளவுதானா.....21 வயதில் உயிரை இழந்த அவர் செய்த தவறுதான் என்ன?


அவருக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தையும் ஒரு இரண்டு மாத குழந்தையும் இருக்கிறது...அந்தப் பிஞ்சுகள் செய்த தவறுதான் என்ன?


ஆனால் தவறு செய்த மருத்துவர்களைக் குறை கூறக் கூடாதாம்...வரிந்து கட்டிக்கொண்டு அந்த மருத்துவருக்கு ஆதரவாக மருத்துவக்கூட்டம் திரண்டு....இதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று கைவிரித்துவிட்டார்கள்.......


தவறு செய்யும் மருத்துவர்களை விட்டுக்கொடுக்காமல் மற்ற மருத்துவர்கள் ஆதரவு தெரிவித்தால்...அவர்கள் எப்படி பொறுப்பாக வைத்தியம் பார்ப்பார்கள்.....


தயவு செய்து நல்ல மருத்துவர்கள் மோசமான மருத்துவர்கள் பக்கம், அவரும் மருத்துவப்பட்டம் பெற்றவர் என்ற ஒரே காரணத்திற்காக சாயாதீர்கள்...நீங்கள் மருத்துவரானது மக்களுக்குக்காகத்தான்...அவர்களை துச்சமாக நினைத்து நடந்து கொள்ளாதீர்கள்...

சம்பவம் 2:


ஆப்கனில் ஆயிஷா என்ற பெண்ணையும் அவளது தங்கையையும் அவர்களது தந்தையே அடிமை போல இன்னொரு உறவினரிடம் ஒப்படைத்து இருக்கிறார். 12 வயதில் ஆயிஷா பூப்பெய்தியதும் அந்த குடும்பத்தில் ஒருவனுக்கே அவளை கட்டிக் கொடுத்திருக்கின்றனர். அவன் செய்த கொடுமைகளைத் தாளாமல் வீட்டை விட்டு தப்பி வந்தாள். தப்பி வந்தது குற்றம் என அவளைக் கைது செய்து சிறையில் அடைத்தனர் நம் (கலாச்சார) காவல் நண்பர்கள்.


அவளை அவரது தந்தை மீட்டு அவரது வீட்டிற்கு கூட்டிச் சென்றிருக்கிறார்...சிறிது நேரத்தில் அங்கு வந்த அவளது கணவனும் அவனது உறவினர்களும் செய்த செயல்தான் கொடுமையின் உச்சம்...கொஞ்சமும் ஈவு இறக்கமின்றி...அவளது காதையும், மூக்கையும் அறுத்திருக்கிறான் அந்தக் கயவன்...இந்த காலத்திலும் இப்படியா? என்ற கேள்வியை விட...நாம் எவ்வளவு மோசமான கால கட்டத்தில் வாழ்கிறோம் என்ற பயமே அதிகம் வருகிறது.


முகத்தில் ஒரு முகப்பரு வந்தாலே நம்மால் நிம்மதியாக இருக்க முடிவதில்லை...அது சரியாகும் வரை தவித்துவிடுகிறோம்...முகத்தில் மூக்கும் இல்லை காதும் இல்லை என்றால்...எப்படி இருக்கும்...நினைத்தாலே நடுங்குகிறது... பெண்களை கிள்ளுக்கீரையா கருதும் இந்தக் கயவர்களை என்ன செய்யலாம் சொல்லுங்கள்?


அந்தப் பெண்ணுக்கு 18 வயதே பூர்த்தியாகி இருக்கிறது..இந்த சம்பவம் நடந்து 9 மாதங்கள் முடிந்துவிட்டன. காதையும் மூக்கையும் இழந்து தவிக்கும் ஆயிஷா எப்படியும் தனக்கு ஆபரேசன் மூலம் இதற்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார். தொட்டதெற்கெல்லாம் தற்கொலைக்கு முயலும் சிலரிடம் இவரது கதையைச் சொன்னால்..அவர்களுக்கு அந்த எண்ணம் இனி எழுமா?


இப்போது ஆபரேசனுக்காக அமெரிக்கா செல்ல இருக்கும் ஆயிஷா பூரண குணம் பெற பிரார்த்திப்போம்.....எந்த கொடுமைக்கும் இறுதியில் நம்மால் செய்ய முடிவது இது மட்டும்தான் இல்லையா..


பாருங்கள் இந்த விசயத்தில் ஒருவருக்கு மறுவாழ்வு அளிக்கப்போவதும் மருத்துவர்கள்தான்....மருத்துவர்கள் நல்லது செய்தால்...அதையும் உலகம் போற்றவும் தயங்காது..அதே போல அவர்கள் தவறு செய்யும் போது அதைத் தவறு என்று ஏற்றுக்கொள்ளக் கூட மருத்துவ உலகம் தயங்குவது ஏன்? விலை மதிக்க முடியாத உயிர் என்றால் இவர்களுக்கு அவ்வளவு இளக்காரமாகவா இருக்கிறது?

 
 
கழுகிற்காக
பிரியமுடன் ரமேஷ்... 
 

Monday, August 30, 2010

பா.ரா அவர்களுடன்..ஒரு கவித்துவமான பேட்டி....!

கழுகு தோழமையோடு கைகளை நமது தோளில் போட்டது...என்ன என்று ஒரு வித அன்போடு பார்த்தோம்....ஒண்ணுமில்லை மக்கா....வாழ்க்கையில் என்ன மிஞ்சப் போகுது அன்பும் பாசமும்தானே மக்கா மிச்சம்...கழுகின் பேச்சிலேயே ஒரு பாசமும் நெகிழ்வும் இருப்பதை கண்டு நாமும் கொஞ்சம் வித்தியாசமான உணர்வு நிலையில்தானிருந்தோம்.....
இந்த முறை கடல் கடந்த பயணம் மக்கா....என்று சொல்லி நிறுத்திய கழுகு பேட்டி பேப்பரை நம்மிடம் கொடுத்து விட்டு....சொன்னது ஒரு படைப்பாளியை ஒரு மிகச்சிறந்த மனிதனை எவ்வளவு எளிமையாய் பார்த்தேன் தெரியுமா.... நேற்று இன்று வந்தவர்கள் எல்லாம் காலரை தூக்கிவிட்டு பந்தா காட்டும் இதே உலகத்தில்தான் பா.ரா. அண்ணன் மாதிரி படைப்புலக பிரம்மக்கள் தமக்கும் தமது படைப்புகளுக்கும் எந்த வித தொடர்பும் இல்லாத மாதிரி எளிமையாயிருக்கிறார்கள்.
எல்லாவற்றின் ஆணி வேர் அன்புதான் என்று சொல்லாமல் சொல்லி ....பதட்டத்தில் பேட்டி கேட்கவே யோசித்துக் கொண்டிருந்த நமது தோளில் சினேகமாய் கை போட்டு.... போதுமா மக்கா இல்ல இன்னும் கேள்விகள் இருக்கா என்று பார்த்த தொனியில் ஒன்று மட்டும் புரிந்தது.....பா.ரா அண்ணன் என்ற படைப்பாளியை விட...மனிதர்களை நேசிக்கும் அவரது நேயம்...பிரமாண்டமானது என்று.... இதோ பா.ரா அண்ணனின் பாசமிகு பேட்டி உங்களுக்காக....


1)கவிதைகள்....விழிப்புணர்வூட்டுமா? சமகாலத்தில் மக்களின் வாசிப்புத்திறன் எப்படி இருக்கிறது?




முதல் கேள்வியே ரொம்ப கஷ்ட்டமான கேள்வி. என் ரேஞ்சிற்கு கேட்டிருக்கலாம். சரி, என்னளவு பதில், கண்டிப்பா! சமகால வாசிப்பு குறித்து, தெரியலையே



2) வெளி நாட்டு பயணத்திற்காக மண்ணை விட்டு பிரிந்த அந்த கடைசி மணித் துளி எப்படி இருந்தது உங்களுக்கு?


இருட்டி வந்தது மக்கா. குடும்ப பறவை நான். ஆனால் விதி ஏற்றியது. அண்ணாத்துரை சித்தப்பா வீட்டில் இருந்து கிளம்பினோம். சற்றேறக் குறைய, நாற்பது குடும்ப நண்டு சிண்டுகள். k.n.p.ட்ராவல்ஸ் என நினைவு. மதுரையில் இருந்து கிளம்பிய பிறகு, மனநிலை, மூடிக் கொண்டது.


3) முதன் முதலாய் உங்களுக்குள் காதல் பூத்தது எப்போது? எப்படி?( நான் எப்பய்யா...காதல் பூத்துச்சுன்னு சொன்னேனு கேட்க கூடாது...ஹா..ஹா..ஹா)



முதன் முதலாய் காதல் பூத்தது என்றால், சிவகாமி டீச்சரின் மேல். காதல் பூக்க வேண்டிய காலத்தில் பூத்தது, மஹாலக்ஷ்மியின் மேல். அத்தை மகள்.



4) உங்களின் முதல் கவிதை எத்தனை வயதில் எழுதினீர்கள்? அந்த கவிதையையும் எழுதப்பட்ட சூழலையும் கொஞ்சம் கூற முடியுமா?



நினைவு எட்டியது வரையில், "கண்ணே" என தொடங்கியதுதான். எல்லோரையுமே காதல்தானே கவிதைக்கு நீட்டுகிறது



5) மண்ணின் மைந்தர் என்பதால் இந்த கேள்வி....உங்களுக்கு விவசாயம் தெரியுமா? விவசாயம் செய்த அனுபவம் பற்றி..



இல்லை. அப்பாவிற்கு கஞ்சி கொண்டு போனது வரையிலேயே எனக்கும் விவசாயத்திற்கும்
சம்பந்தம். அப்பா, கவர்மென்ட் எம்ப்லாயிதான் என்றாலும், வயலை பார்க்கும் போது ஒரு முகம் வைத்திருந்தார். பூ, பூன்னு பூக்குற முகம். இயலாமையில் எல்லாம் தோற்க நேர்ந்தது அப்பாவிற்கு. ஆனா, அப்பா எங்க யாரையும் தோற்கல. விடுங்க, சம்பந்தமில்லாத பதிலா இருக்கலாம். விவசயாம்னாலே எனக்கு என் அப்பாதான்!ரிட்டயர்மன்ட் காலங்களில் விவசாயம் செய்ய மிகுதி விருப்பம்



6) கல்லூரி வாழ்க்கையில் மறக்க முடியாதது....?

கல்லூரி வாழ்வு முழுக்கவே மறக்க முடியாதுதானே மக்கா. என்றாலும், அப்போ, கணையாழி அகரத்தில்தான் கிடைக்கும். அகரம் பதிப்பகம் கவிஞர் மீராவுடயது. மீரா எனக்கு பிரின்சிபால். கனவுகள் பிளஸ் கற்பனைகள் மீரா! (கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள், புத்தகத்தை காதலிக்கு பரிசளிக்காத காதலன் இருந்திருப்போமா?) கணையாழியில் என் முதல் கவிதை வந்திருந்தது. சந்தோசம் பிடிபடவில்லை.

கல்லாவில் இருந்த மீராவிடம், " கணையாழியில் என் கவிதை வந்திருக்கு சார்" என காட்டினேன். வாங்கி வாசித்தவர், கருத்து ஒன்றுமே சொல்லாமல் கணையாழியை திருப்பி கொடுத்தார். ஏமாற்றம் எனக்கு. பிறகு கல்லூரி ஆண்டு விழாவில், விளையாட்டுப் போட்டிக்கான பரிசு வாங்க மேடை ஏறிய சமயம், " விளையாட்டுக் காரனான இந்த ராஜாராம் கவிதைகளும் எழுதுகிறார். கணையாழியில் வெளி வந்த இவர் கவிதை இது என மேடையில் வாசித்து காட்டினார். அடர்த்தியான, மறக்க முடியாத நாள் அது!

7) ஏதாவது எக்கு தப்பாய் செய்து வீட்டில் மாட்டிக் கொண்டு முழித்த அனுபவம் இருக்கிறதா?



ஏதாவது என்ன? எல்லாமே எக்கு தப்பா செய்து மாட்டிக் கொள்வதுதான். இப்ப வரையில்.



8) பழைய காலங்களோடு ஒப்பிடும் போது தற்போது வளரும் நகர்ப்புறத்து குழந்தைகள்....எந்த மாதிரியான விசயங்களை இழந்து கொண்டிருக்கிறீர்கள்?



உறவுகளை, புத்தக வாசிப்பை, காற்றை, கற்பனையை


9) உங்கள் கவிதைகளில் பெரும்பலும் சூழலே...கரு....இது உங்களின் உள்ளுணர்வா? இல்லை இப்படிதன் எழுத வேண்டும் என்று தீர்மானித்து எழுதுகிறீர்களா?


இப்படித்தான் எழுத வேணும் என fix பண்ணிக் கொள்ளவில்லைதான். ஆனால், சூழலில் எழுதவே வருகிறது. ஒரே மாதிரியான கவிதைகள் மீண்டும் மீண்டும் எழுதுவதாக, என் நன்பன், நல்ல விமர்சகன் ஜ்யோவ் வைக்கிற குற்றச்சாட்டையும் இங்கு பதியனும். ஆனா, என்ன செய்யலாம்? வேணுமென செய்யவா போறோம், எதையும்? ஸ்ட்ரெந்த் அவ்வளவுதான் என எடுத்து கொள்கிறேன். எளிதாக இருக்கிறது.



10) ஒரு வித ஜனக்கட்டு நிறைந்த வாழ்க்கையிலிருந்து விடுபட்டு முதன் முதலில் வெளி நாட்டு மண் மிதித்த அன்றைய தினத்தின் இரவு.......கொஞ்சம் பகிருங்களேன்...?


கண்ணை கட்டி காட்டில் விட்டது போலதான். கூடவே இரண்டு நண்பர்கள் வந்தார்கள். கபில், டேவிட் என்று.எனக்கு தமிழைத் தவிர மாற்று மொழி தெரியாது. ஆங்கிலம் வாசிக்க தெரியம். பேச்சு வராது. ஏர்போர்ட் இறங்கி, அறை அடைந்தது வரையில் அவர்கள் பார்த்துக் கொண்டார்கள். "விடிஞ்சா ஊருக்கு. நை நைன்னு பேசிக்கிட்டு இருக்காம தூங்குங்க" என்கிற வசனத்தை மட்டும் நான் பார்த்துக் கொண்டேன். அப்புறம், ஒவ்வொரு இரவும் இப்படித்தான் போச்சு. இரண்டு வருடம் வரையில் அவர்களுக்கு. மூன்று வருடம் வரையில் எனக்கு

11) வெளி நாட்டில் இருக்கும் நீங்கள் குடும்ப நினைப்பு வந்தால் என்ன செய்வீர்கள் போன் பேசுவதை தவிர...

கருவேலநிழல் தொடங்கும் முன்பு முக்கியமாக, டி.வி.தான். தொடங்கிய பிறகு குடும்ப நினைப்பு பெரிதாக படுத்தவில்லை. குடும்பத்தில் சொல்லிவிட வேணாம். கேட்டீர்களா?


12) கரு வேல நிழலின் பிரம்மா... நீங்கள்....முதல் புத்தகம் இதுதானா? புத்தகமாய் கையில் பார்த்த போது...உங்களின் உணர்வு..?

உண்மையில் தம்பி கண்ணனும் அவர் நண்பரும் மற்றும் நீங்களும்தான் கருவேலநிழலின் பிரம்மாக்கள் என்பேன். நீங்கள் எனில், அப்பா, சித்தப்பா, மாமு, அண்ணா, அண்ணே, என்கிறீர்களே அந்த நீங்கள். அப்புறம் நானும் கூட உண்டு. so, "we the prammaas!

13) வெளி நாட்டு வாழ்க்கை வரமா? சாபமா?


மகன் கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்தான். உயிர் போராட்டமான சிகிச்சை தொடங்கியது.. சற்றேறக் குறைய ஐந்து வருட சிகிச்சை .மகனை
காப்பாற்றியதில், சிவகங்கையின் அனேக தெருக்களில் எனக்கு கடன் கொடுத்தவர்கள் இருந்தார்கள். ஒவ்வொரு தெரு நுழையும் போதும், "இங்கு யார் இருக்கிறார்கள்?" என மாற்று வழியில் பயணித்தது உண்டு. சவுதி வந்து மூன்று வருடத்தில் சகல கடன்களையும் முடித்து, மனசுக்கு பிடித்த என் சொந்த மண்ணில், "இந்த தெருவில் யார்? என்கிற எந்த நினைப்பும் இல்லாமல் சுற்றி வர முடிந்ததே, இது வரமா? சாபமா?


பணி நிமித்தமாக ஜெத்தாவில் இருந்தேன். (அதாவது, 1200 கி.மீ. பணி புரியும் இடத்தில் இருந்து) "ஏங்க, ஒங்க அப்பாக்கு முடியல. ஒடனே கிளம்பி வாங்க." என்ற மனைவியின் அழை பேசியை பறித்து "ராஜாண்ணா அப்பா இறந்துட்டாங்க. வரமுடியுமாண்ணா?" என்ற எதிர் வீட்டு கவிதா சொன்னதும், நான் போய் சேர்ந்ததும், அப்பா ice பெட்டியில் இருந்தாரே. "எதையாவது இழந்துதாண்டா எதையாவது பெற முடியும்" என்று சொல்லிக் கொண்டே இருந்த அப்பா. இது வரமா? சாபமா?


14) சிவகங்கை மண்ணுக்கு சொந்தக்காரர் என்பதால்...இந்த கேள்வி......வானம் பார்த்த பூமியின் மக்களின்.....வாழ்க்கை ஜெயித்திருக்கிறதா?


வானம் பார்த்த மக்களின் வாழ்வு என்று குறிப்பிட்டு கேட்பதால், நான் உணர்ந்தவரையில் தோற்றுத்தான் இருக்கிறார்கள். இது வருத்தம். தோற்றது தெரியாமல் எப்பவும் போல இருக்கிறார்கள். இது மிகுதியான சந்தோசம்

15) உங்களுக்கு பிடித்த.... நீங்கள் அடிக்கடி முனு முனுக்கும் கவிதை வரிகள்....என்ன?


சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று காற்றின் தீராத பக்கங்களில் தன் வாழ்வை எழுதிச் செல்கிறது- பிரமிள்.

16) ஒரு கவிதை எப்படி இருக்க வேண்டும்...?


எப்படி வேணா இருக்கலாம். கண்ணே என தொடங்கியது எனக்கு அப்ப பிடிச்சிருந்தது. இப்ப பிடிக்கல. இல்லையா? அப்படி, பருவம், வாசிப்பு ஒட்டி, கவிதையின் தொணி மாறலாம். அப்பவும், இப்பவும், என்னை மீட்டவென எழுதினால் போதும் என் கவிதைகளை என தோன்றுகிறது.

17) முதல் விமான அனுபவம் எப்படி இருந்தது...?


"ஃப்லைட்லல்லாம் ஏறிட்ட போல ராஜாராமா?" என்று இருந்தது. அப்புறம், ஏண்டா ஏறினோம் என்றும் இருந்தது.

18) பதிவுலகம் பற்றிய ஒரே ஒரு கேள்வி....பதிவுலகில் நீங்கள் பார்த்து வியந்த விசயம் எது? வெறுத்த விசயம் எது?


பதிவருக்கு உயிர் பிரச்சினை என்றதும் கை கோர்த்துக் கொண்ட பதிவர்கள்- வியப்பு! இப்ப வரையில் வெறுப்பு இல்லை. கோபம் தாண்டித்தானே வெறுப்பு? கோபம் நிலையிலேயே பின்னூட்டத்தில் இறக்கி வைக்கிறேன்


19) DVD யில் வீட்டில் பார்க்கும் படம்...அந்தக்கால டூரிங் டாக்கிஸ் படம்.....ஒப்பீடு செய்யுங்கள்.....?

மனைவியை விடுங்கள், மகள் மகன் முன்பு, வீ....வீ... என விசில் அடித்து பார்க்க இயலவில்லை dvd-யில்


(கழுகு இன்னும் ....உயர பறக்கும்
)




Saturday, August 28, 2010

தன்னம்பிக்கையின் வேர்கள்...





எதிர்பாரத திருப்பங்களை கொண்ட வாழ்க்கையின் ஓட்டத்தில் எல்லா நேரங்களிலும் நாம் நினைப்பது நடைபெறுவதில்லை. ஒரு வித புரிதலோடு வாழ்க்கையை நகர்த்த தன்னம்பிக்கை என்ற ஒரு ஆயுதம் எல்லோர் கையிலும் அவசியம் இருக்கவேண்டும்.

தன்னம்பிக்கை பற்றி எழுதிக் கொடுங்கள் என்று நமது தோழர் ஸ்டார்ஜனிடம் கூறினோம்...மகிழ்ச்சியின் மறுபெயரான.....தோழரின் சரவெடி...இதோ...!

மனிதனின் வாழ்க்கை பல விசித்திரங்களை கொண்டது. அவன் பிறந்ததிலிருந்து இறக்கும்வரை பலவிதமான சூழ்நிலைகளை சந்திக்கிறான். ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு செல்லும்போது எதிர்பாராத புதிய சூழ்நிலையை சந்திப்பது அவசியமாகிறது. உதாரணத்துக்கு இப்போது நாம் ஊருக்கு செல்கிறோம்.

அந்த பயணத்தில் பாதைமாறி செல்லும்போது நாம் எதிர்பாராத திருப்பத்தை சூழ்நிலையை அனுபவிக்கிறோம். அது நமக்கு நல்ல அனுபவமாகவோ அல்லது கெட்ட அனுபவமாக இருக்கலாம். இந்த சமயத்தில் நமது மனம் அந்த சூழ்நிலைக்கு தகுந்தவாறு பக்குவப்படுகிறது.



அது போல.. நாம் இதுவரை உபயோகப்படுத்தாத ஒரு பொருளை வாங்குகிறோம். அப்போது அதை எப்படி உபயோகிக்க வேன்டும் என்று தெரியாததால் நாம் கொஞ்சநேரம் திணறுகிறோம். நன்கு அறிந்தபின் அதை உபயோகப்படுத்துவது கைவந்த கலையாகிவிடுகிறது.

உதாரணத்துக்கு கம்பியூட்டர்.... கம்பியூட்டர் வந்தபுதிதில் எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் ஒரு தயக்கம். ஆனால் இப்போது அப்படியா... சும்மா புகுந்துவிளையாடுகிறோம் என்பதுதானே உண்மை.



நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது கணக்கு சார் சீனிவாசன் சார், ஒரு நாள் கணனி பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போதுதான் கணனி பேசிக் மொழி அறிமுகமாகியிருந்தது. அது எங்களுக்கு புரியவில்லை. அப்போது அவர் சொன்னார். "எலேய் தம்பிகளா..

நாம் ஒரு எந்த ஒரு பொருளை முதலில் பயன்படுத்தும்போது அதை பற்றி தெரியாததால் முதலில் தயக்கம் இருக்கும். அது பற்றி தெரிந்தபின் அதை உபயோகப்படுத்துவது மிக எளிதாக இருக்கும். அது எந்த பொருளாகவும் இருக்கலாம். உதாரணத்துக்கு கணனி" என்றார்.



அறிவியல் வளர்ச்சி எப்படி ஏற்படுகிறது. முதலில் நமக்கு அறிமுகம் விசயத்தை/பொருள் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்யும்போது புதுவிதமான சிந்தனைகளும் உருவாகிறது. நமக்கு தேவைகளும் வளர்ச்சியும் தேவைபடுவதால் எண்ணற்ற புதுபுது கண்டுபிடிப்புகள்.. அதன் மூலம் நமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்கிறோம். நாம் எதைபற்றியும் தெரிந்து கொள்ளாமல் இருந்தால் யாருக்கு நஷ்டம்?..முயற்சித்தால் முடியாதது ஒன்றும் இல்லை..



மனிதனின் மனம் ஒரு குரங்கைப்போன்றது. அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். நாம் விரும்பும் ஒவ்வொரு செயலும் நமது மனதை பொறுத்தே அமைகிறது.. அது எதுவாகவும் இருக்கலாம்.. பயணம், பேச்சு,திட்டம், பழக்கவழக்கங்கள், விருப்பம், பொறாமை, கோபம், வேலை, தொழில்.... இப்படி எண்ணற்ற செயல்களை சொல்லிக்கொண்டே போகலாம்.


மனதில், இன்று நாம் செல்லும் காரியம் நல்லபடியாக இருக்கவேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொண்டு நல்ல எண்ணத்தோடு செல்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். போகும்போதே எதாவது தடங்கல் ஏற்பட்டுவிட்டால் உடனே நாம், "சே.. இன்று நேரமே சரியில்லை.. நாளைக்கு போகலாம்" என்று நமது பயணத்தை ஒத்திவைக்கிறோம்.. மனதில் வீணான குழப்பங்களை ஏற்படுத்திக்கொண்டு மேலும் குழம்பிவிடுகிறோம்..

இது ஒரு புது அனுபவம். இப்போது அந்த பயணத்தை தொடருகிறோம் என்று வைத்துக்கொள்வோம்.. அங்கு நல்ல சூழ்நிலை போன காரியம் வெற்றி என்னும்போது அதை அனுபவிக்கிறோமே அது ஒரு புது அனுபவம்..


இந்த பயணத்தில் பாதை மாறி சென்று வேறொரு சூழ்நிலையை சந்திக்கும்போது அது ஒரு புது அனுபவம். நாம் இன்று இந்தஇந்த காரியங்களை எல்லாம் திட்டமிட்டு செயல்படுத்த நினைக்கும்போது சந்தர்ப்ப சூழ்நிலையால் செயல்படுத்த முடியாமல் போகும்போது வருத்தப்படுகிறோம்.


திரைப்படங்களிலும் பலவிதமான சூழ்நிலைகளை சொல்லியிருப்பார்கள். அவற்றில் நல்ல விசயங்களையும் கெட்ட விசயங்களையும் சொல்லி இப்படி இருந்தால் நல்லாருக்கலாம்.. இப்படி இருந்தால் நமக்குதான் பாதிப்பு என்று சொல்லியிருப்பார்கள். அந்த கதைகளில் நமது மனமொன்றி அதேபோல வாழ்க்கையிலும் கடைபிடிக்க எண்ணுவோம்..


தொழில் செய்யும்போதும் பல சூழ்நிலைகளை நாம் சந்திக்கிறோம். இப்படி நிறைய அனுபவங்களை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். அந்த அனுபவங்கள் நமக்கு நிறைய பாடங்களையும் சிந்தனைகளையும் கற்றுத் தருகிறது. அவற்றில் நல்லவை கெட்டவை உண்டு.

எப்போதும் நாம் கெட்ட விசயங்களை மனதில்போட்டு குழப்பிக்கொண்டு மனதை அலைபாய விடக்கூடாது. எந்தஒரு விசயத்தையும் எப்போதும் நல்லதாகவே நினைக்க வேண்டும். சில சமயங்கள் தோல்விகள் ஏற்படலாம்.. ஆனால் அதுதான் நிலையென எண்ணிக்கொள்ளுதல் கூடாது. அந்தமாதிரி எண்ணங்கள் நமது வளர்ச்சிக்கு தடைக்கல்லாக அமைந்துவிடும்



மனதை எப்போதும் தூய்மையாக வைத்திருங்கள்... அது உங்களுக்கு எப்போதும் நல்லவற்றை நாடிச் செல்லவைக்கும். உங்களை என்றும் இளமையாக வைத்திருக்கும் என்று நம்முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
ஆகவே, உங்கள் மனம் எப்போதும் நல்லவற்றையே நாடிச் செல்லவேண்டும். அப்போதுதான் வெற்றியாளர்களில் ஒருவராக இருப்பீர்கள்.. என்றென்றும் வெற்றிகள் தொடரட்டும்..


கழுகிற்காக

ஸ்டார்ஜன்


(கழுகு இன்னும் ....உயர பறக்கும்)

Monday, August 23, 2010

ஈரோடு கதிரின்....EXCLUSIVE பேட்டி...கழுகிற்காக!




அரிமா... அரிமா.. நானோ ஆயிரம் அரிமா...பாடலை முணு முணுத்த படி வந்த கழுகிடம்....என்ன? என்பது போல பார்த்தோம்... ? மீண்டும் ஒரு ஆட்டத்துடன் அருகில் வந்த கழுகு..... இந்த வார பதிவர் பேட்டி யார் தெரியுமா? என்று கேட்டது. அட... சொன்னாதானே தெரியும் என்று.... நாம் இழுக்க...சட்டைக்குள் ஒளித்து வைத்திருந்த பேட்டிப் பேப்பரை காற்றில் ஆட்டிக் கொண்டு.... மீண்டும் பாட ஆரம்பித்தது
...பூம்...பூம்...ரோபோடா..ரோபோடா... கழுகின் ஆட்டத்தை கவனிக்காமல் பாய்ந்து கபளீகரம் செய்தோம் பேப்பரை....பேட்டி...அட நமது கண்கள் விரிய...கத்தினோம்...." கழுகிற்கு சூட ஒரு மசால பால் பார்சல்...."
கழுகை நைசாக கழட்டி விட்டு விட்டு...பேட்டிக்குள் மூழ்கினோம்.....

" ஈரோடு கதிர் "


எண்ணங்களை எழுத்தாக்கி எழுத்துக்களுக்குள் உயிர் பரவவிட்டு வாசிப்பாளனை எழுத்தின் தாளகதிக்கு ஏற்ப ஆட வைத்து பாட வைத்து....ஒரு கோப்பை தேனீர் எப்படி இதமாய் நமக்குள் பரவி சுகமான அனுபவமாக மாறுமோ,.. ஒரு மெல்லிய காற்று எப்படி நம்மை உராய்ந்து விட்டு செல்லும் போது அனுபவத்தைகொடுத்து விட்டுப் போகுமோ...அப்படி ஒரு சுகமாய் வலுவான கருத்துக்களை வாசகரின் மனசுக்குள் ஏற்றி வைக்கும் வித்தை தெரிந்த சூத்திரதாரி.

எழுத வரும் இளம் பதிவர்கள் எல்லாம் கட்டாயம் படித்து தெரிந்து கொள்ளவேண்டியது முதலில் கதிர் என்னும் அற்புத மனிதரை அதற்கு பிறகுதான் அவருடைய எழுத்தை பழக வேண்டும்.
கிராமத்திலிருந்து நகரத்துக்கு பரவிய ஒரு அற்புதமான வேர், கோடியில் இருவரை எல்லோருக்கும் தெரியவைத்த " கோடியில் ஒருவர்....." எல்லாவற்றையும் புன்னகையோடு கடந்து செல்லும்...கதிர் எப்போதும் எல்லாவற்றையும் தலைக்கு எடுத்துக் கொள்ளாமல் எதார்த்தமாய் பெரிய பெரிய செயல்களையெல்லாம்...ஓரமாய் ஒதுக்கி விட்டு....." என்னங்க.. நீங்க.. அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லீங்க.. " என்று ஒதுங்கிக்கொள்ளும் ஒரு ஆலமரம்.
கசியும் மெளனத்தின் மூலம் எல்லோருடைய இதயத்தையும் ஆக்கிரமித்து இருக்கும் "ஈரோடு கதிர்" என்ற சூரியனின் பேட்டி இதோ உங்களுக்காக....
வலைச்சரத்தின் இந்த வார ஆசிரியரான கதிருக்கு வாழ்த்துக்களை சொல்லி தொடருங்கள்



1) வலைப்பூக்களின்
எழுதுவதற்கு முன் உங்களின் எழுத்தார்வம் எப்படிஇருந்தது?


முதன் முதலில் என்னுடைய பள்ளி நாட்களில் ஒரு பழைய நோட்டில் கவிதை போல் முயற்சித்ததாக நினைவு. கல்லூரி காலத்தில் ஆண்டு மலரில் இடம்பெற்றதே பெருமையாக இருந்த ஒன்று. ஜேஸிஸ் / அரிமா சங்கங்களில் பங்கெடுக்க ஆரம்பித்த பின்னர் ஆங்காங்கே அப்படியும், இப்படியும் எதையாவது எழுதுவது வழக்கமாக இருந்தது. சட்டத்துக்குள் அடங்காமல் சிதறிக்கிடந்த ஆர்வத்தின் தொகுப்பே, இப்போது வலைப்பக்கம் எனும் அழகிய சட்டத்துக்குள் ஒரு வடிவாய் தொங்கிக்கொண்டிருக்கிறது.


2) கண்தானம் பற்றி நீங்கள் எழுதிய பதிவு மிகப் பிரசித்தி பெற்றதுபதிவுலகில்....கண் தானம்
செய்வதன்முக்கியத்துவம் பற்றி உங்களின்கருத்து மீண்டும் ஒருமுறை....வாசகர்களுக்காக




பார்வை கிடைக்கத் தகுதியிருந்தும், கருவிழி குறைபாட்டால் பல லட்சக்கணக்கான மனிதர்கள் நம் தேசத்தில் பார்வையிழந்து கிடக்கின்றனர். செயற்கையாய் ஒரு கருவிழியைத் தயாரிக்க சுமார் 4 கோடி ரூபாய் தேவைப்படும் என்ற தகவலும், இறந்து போனவர்களின் கண்களை குறிப்பிட்ட நேரத்தில் தானமாக எடுத்தால் அதன் மூலம் இரண்டு நபர்களுக்கு பார்வையளிக்க முடியும் என்ற எண்ணமும் கொடுத்த ஊக்கமே என்னை கண் தானத்தில் ஆர்வமாக ஈடுபடவைத்தது.


3)ஈரோடு வலைப்பதிவர் குழுமம்...தோற்றுவித்ததின் பின்னனி...என்ன?

ஒவ்வொரு கட்டத்திலும் அமைப்பு, சங்கம் என்று ஏதாவது ஒன்றின் மூலம் குழுவாய் இருந்தே பழக்கப்பட்டதால், சக பதிவர்களை இந்த நகரத்தில் சந்திக்கும் போது, ஒன்றாய் கை கோர்த்து ஏதாவது உருப்படியாய் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை சக பதிவர்களிடம் பகிர, அதைத் தொடர்ந்து ஈரோடு பகுதி பதிவர்கள் அனைவரும் ஒன்றாய் இணைந்து ஏற்படுத்தியது இந்த அழகிய குடும்பம்



நீங்கள் பங்கு வர்த்தகத்தில் இருப்பதால்.....அது பற்றியும் சில கேள்விகள்கேட்கிறோம்

4) ntraday tips ஆலோசனை தருவது பற்றி ஒரு கேள்வி எப்படி ஒரு பங்கு ஏறும் இறங்கும் கணிக்க படுகிறது?

குறிப்பிட்ட துறை / நிறுவனம் குறித்த செய்திகளின் அடிப்படையிலேயே குறிப்பிட்ட பங்கு கவனிக்கப்படுகிறது. தினசரி வர்த்தகத்திற்கான TIPSகள் தடைகளை(Resistance) தாங்குநிலை (support) களை உடைப்பதை அடிப்படையாக வைத்து வாங்க / விற்க அறிவுரைகள் கொடுக்கப்படுகிறது

5)பதிவுலகம் எதிர்கால மீடியாவில் தவிர்க்க முடியாத சக்தியா மாறவாய்ப்புகள் இருக்கா?


மிக நிச்சயமாக. ஊடகங்கள் முழுக்க முழுக்க வியாபார மனோநிலைக்கு மாறிவிட்ட தருணத்தில், வியாபார நோக்கம் இல்லாமல் எழுதிவரும் பதிவர்களின் பங்கு சமூகத்தின் மிக முக்கிய அங்கமாக மாறும்.


6) பங்கு சந்தை 20 ஆயிரம் புள்ளிகள் இருந்த பொழுது உங்கள் அனுபவம்?

அப்போது பங்கு வர்த்தகம் குறித்து அதிகப்படியான அனுபவம் இல்லை. வெறும் வர்த்தரகாக மட்டுமே இருந்து வந்தேன்



7) பிரபல பதிவர் கதிர், குடும்பத் தலைவர் கதிர் கொஞ்ச ஒப்பிடுங்களேன்?

பிரபல பதிவர் என்ற அடைப்புக்குள் வர விருப்பம் இல்லை. நானாக சிலரை இப்படி அடைப்புக்குறி போட்டு நினைத்து, அவர்களிடம் பழக தயங்கியதுண்டு. அந்த தயக்கம் என்பொருட்டு இன்னொருவருக்கு வந்தால் அது எனக்கான தோல்வியே.என்னுடைய தொழில் நிமித்தமாக குடும்பத்திற்கான நேரத்தை மிகச்சரியாக ஒதுக்க முடியாத சூழ்நிலையில் இல்லையென்றே குற்ற உணர்வோடு நினைக்கின்றேன்.



8) மக்கள் டி.வி யின் பேட்டி அனுபவம் எப்படி..இருந்தது?பதிவுலகவாசகர்களுக்கு
அதை பகிருங்களேன்...


முற்றிலும் எதிர்பாராத ஒரு இனிய அனுபவம். மதிக்கத்தக்க தொலைக்காட்சிகளில் மக்கள் தொலைக்காட்சிக்கு முதலிடம் என்றே சொல்லலாம், அதில் வலைப்பூக்கள் பற்றியதொரு சிறப்பு பார்வை பதிவுல நண்பர்களின் செவ்வியோடு வெளிவந்தது மிகுந்த மகிழ்ச்சியான ஒன்றே.
ஊடகங்களால் வலைப்பூக்கள் ஆழமாக கவனிக்கப்படுகின்றன என்பது தெளிவாகப் புரிந்தது. ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும், அதே சமயம் இன்னும் கூடுதல் கவனமாய் இருக்க வேண்டும் என்ற உணர்வையும் கொடுத்தது.



9) ஈரோடு வலைப்பதிவர் குழுமம் என்பது ஈரோடு பகுதியை சார்ந்தவர்களுக்குமட்டுமா?

ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் பதிவர்களுக்கும், ஈரோடு மாவட்டத்தைப் பூர்விகமாகக் கொண்டு வெளியூர், வெளிநாடுகளில் வசிக்கும் பதிவர்களுக்கானது



10) பங்கு சந்தை ஆலோசனை சொல்வதற்கு ஒரு வலைபதிவு தொடங்கலாமே?

ஏற்கனவே அதற்காக ஒரு இணையதளமும், வலைப்பூவும் இருக்கின்றது. தவிர்க்க இயலாத காரணங்களால் அது குறித்து இங்கு குறிப்பிடமுடியவில்லை.





11) நிறைய கருத்தரங்குகளுக்கு சென்று இருக்கிறீர்கள்...மாணவர் உலகத்தில்வலைப்பதிவுகள்
பற்றி என்ன மாதிரி எண்ணஙகள் இருக்கிறது?

மிகப் பெரிய அதிர்ச்சிகரமான, எதிர்பாராத உண்மை, நான் சந்தித்த மாணவ, மாணவியர்கள் மத்தியில் வெறும் 1 சதவிகிதம் மாணவ, மாணவியர்களுக்குக் கூட வலைப்பூக்கள் பற்றி தெரிந்திருக்கவில்லை.


12) உங்களின் பதிவுகளை எப்போது எழுதுவீர்கள்?

இதற்கென குறிப்பிட்ட நேரம் எதுவுமேயில்லை. எழுதிவைத்து சில நாட்கள் இழைத்து வெளியிடும் பொறுமையும், பக்குவமும் சுத்தமாக இல்லை. மனதிற்கு தோணும் நேரத்தில் சட்டென எழுதி, உடனே வெளியிடுவது என் இயல்பு. காலை, மதியம், மாலை, இரவு, பின்னிரவு என எல்லா நேரங்களிலும் வெளியிட்டிருக்கிறேன்



13) கசியும் மெளனம்....கவித்துவமான பெயர் எப்படி கண்டீர்கள்...?

எத்தனைதான் மௌனத்தை அடைகாத்தாலும், ஓயாமல் உள்ளுக்குள் ஏதோ ஒரு குரல் உரக்க ஓங்கி குரல் ஒலித்துக் கொண்டிருப்பது இயல்பு. வெளியில் இருக்கும் மௌனத்தையும் தாண்டி உள்ளுக்குள் வழியும் ஓசைதானே எழுத்து
ஆரம்பத்தில் முனகும் மௌனம் என்று வைத்திருந்தேன், சில நாட்களில் கசியும் மௌனம் என்று மாற்றினேன்




14) பதிவுலகம்...- உங்கள் பார்வையில்...?

மிக மிக ஆரோக்கியமாக இருக்கின்றது, சமூகம் சார்ந்த நல்ல இடுகைகளுக்கு தரமான ஆதரவு இருப்பது பெருமைக்குரிய ஒன்றே. தொடர்ச்சியாக சமரசம் இல்லாமல் எழுதுபவர்களுக்கான இடம் வளமாகவே உள்ளது. தவிர உணர்ச்சி வயப்படலிலும், வெறும் வறட்டு கௌரவத்திற்காகவும், சில சமயம் சண்டைகளைத் தொடர்ந்து வளர்ப்பதை முற்றிலும் தவிர்த்தல் நலம்



15) காதல் கவிதைகள் எழுதிகிறீர்களே...வீட்டில் காண்பிப்பீர்களா?

நானாக காட்டுவதில்லை. அவர்களாக சில நேரங்களில் வாசிப்பதுண்டு





16) உங்கள் கவிதைகளுக்கு எதிர் போடும் போது உங்களின் மனோ நிலை எப்படிஇருக்கும்?

எதிர் கவிதையில் விழும் வார்த்தைகளை கண்டு ஆச்சரியத்தில் வியந்து போவேன்.





17)கிராமத்திலிருந்து நகரத்துக்கு பாய்ந்த வேர் நீங்கள்....ஒரு கிராமத்து மனோநிலையிலிருந்து நகரத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

உலகப் பொதுச் சொத்தில் ஒன்றான தண்ணீரின் ஒவ்வொரு துளியும் விலை பொருளாகப் போனதைப் போன்று, வருத்தங்களோடு பகிர ஆயிரம் இருக்கின்றது. நகர வாழ்க்கை குறித்து மகிழ்ந்ததை விட வருந்திய தருணங்களே அதிகம்



(கழுகு இன்னும் ....உயர பறக்கும்)




 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes