Saturday, September 25, 2010

அழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகள்





நமது மண்ணுக்கென்று சில வாசம் இருக்கிறதே... ! தமிழனுக்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறதே..... இப்படி சொல்லிக்கொண்டிருக்கிறோமே தவிர....அவை எல்லாம் என்ன என்று எண்ணி கூட பார்க்க முடியாத அளவிற்கு.. மேலை நாட்டு கலாச்சாரம் நமது பாரம்பரியங்களைத் தின்று கொண்டிருக்கிறது.
தமிழ் நாட்டில் பூர்வாங்க கலைகள் எல்லாம் அழியும் நிலையில் இருக்கும் நேரத்தில் அது பற்றிய ஒரு விழிப்புணர்வை நமது சமகால தலை முறையினருக்கு எடுத்தியம்ப வேண்டி.... நாம் ஒரு கட்டுரை கேட்டிருந்தோம் தோழி ஜிஜியிடம்......! அவரின் ஆக்கம் இதோ...உங்களுக்காக...


இன்றைய தலைமுறையில், நாட்டுப்புறக் கலைகளைப் பற்றி பலருக்குத் தெரியவில்லை. பலர் பார்த்ததுமில்லை; கேள்விப்பட்டதுமில்லை. எனவே நம்து தமிழகத்தின் சொத்தான அவற்றைப் பற்றி அறிந்து கொள்வோம்.

தமிழகத்தில் இசை, நடனம்,கூத்து போன்ற பல்வேறு கலைகள் செவ்வியல் கலைகள், நாட்டுப்புறக் கலைகள் என்று இரண்டு பிரிவாகப் பிரிந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் செழித்து வளர்ந்து நிற்கின்றன. சங்க இலக்கியம் முதல் இன்றுள்ள இலக்கியம் வரை இக்கலைகளைப் பற்றிப் பேசுகின்றன.

இன்று உலகளவில், நாட்டுப்புறக் கலைகள் பற்றியும்,அதன் வகைகள் பற்றியும் பல்வேறு நாடுகளிலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் பலவற்றில் ஆய்வுகள் நடந்து வருகின்றன. முன்பு இழிவாக மதிக்கப்பட்ட பரதக்கலை, இப்பொழுது பரதம் கற்பது ஒரு சிறப்புத்தகுதி என்றெண்ணும் அளவுக்கு மிக உயரிய நிலையை அடைந்துள்ளது. நாட்டுப்புறக் கலைகளின் சிறப்பு இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆனால் பரதம்போல இன்னும் உயரிய நிலையை அடையவில்லை. இக்காலத்திலும் பெரிய செல்வர்கள் கூடியுள்ள இடத்தில், நாட்டுப்புற நடனங்கள் ஆடப்படுவதில்லை.

பரதநாட்டியமே முதலிடம் பெறுகிறது. கிராம மக்கள் முன்னிலையில்தான் நாட்டுப்புற நடனங்கள் ஆடப்படுகின்றன; ரசிக்கவும் படுகின்றன.நாட்டுப்புற நடனம் என்பதற்கு 'ஓர் இன மக்களின் நடனம்' என்று பொருள். இது யாரால் உருவாக்கப்பட்டது என்று அறியமுடியவில்லை.

வில்லுப்பாட்டு

இக்கலை பத்து நூற்றாண்டுகளுக்கும் மேற்பட்ட பழமைவாய்ந்தது. தமிழகத்தின்
தென்மாவட்டங்களான குமரி,நெல்லை மாவட்டங்களில் ' வில்லிசை ' அல்லது ' வில்லுப்பாட்டு ' மிகப் புகழ்பெற்ற கலையாக உள்ளது. சிற்றூர்களில் உள்ள தெய்வங்களுக்கு வழிபாடு நடத்திக்' கொடை விழா ' எடுக்கும்போது தெய்வங்களின் வரலாறுகள், தெய்வநிலை பெற்ற வீரர்களின் வரலாறுகள் ஆகியவற்றை மக்களிடம் எடுத்துச் சொல்ல இக்கலை பெரிதும் பயன்படுகிறது.

வில்லை முதன்மைக் கருவியாகவும், உடுக்கு, குடம், தாளம், கட்டை ஆகியவற்றைத் துணைக்கருவிகளாகவும் கொண்டு இக்கலை நடத்தப்படுகிறது. இந்த இசைக்குழுவின் முதல்வராக அமர்ந்து கதைபாடுபவர் ' புலவர் ' எனப்படுவார். அவர் கதை சொல்வதிலும், பாட்டுப் பாடுவதிலும், நடிப்பதிலும், காலத்திற்குத் தக்க அரசியல், பொருளாதார, சமூக அடிப்படையிலான் நகைச்சுவைத்துணுக்குகள் சொல்வதிலும் வல்லவராக இருப்பார். மரபு வழியிலமைந்த தென்மாவட்ட வில்லுப்பாட்டுகளில் புகழ் பெற்றது ' ஐயன் கதை ' எனப்படும் ' சாஸ்தா கதை ' யாகும். இதிகாசம், புராணம் தொடர்பான கதைகள், சமூகப் பாங்கான கதைகள் எனப் பல கதைகள் இன்றும் குமரிமாவட்ட சிறுகோயில்களில் வில்லிசை நடைபெறுவதைக் காணலாம்.

கணியான் கூத்து
குமரி, நெல்லை மாவட்டங்களில் சிறந்து விளங்கும் மற்றொரு கலை இந்தக் கணியான் கூத்து. இதற்கு ' மகுடாட்டம் ' என்ற மற்றொரு பெயரும் உண்டு. சுடலைமாடன் பாட்டு முதன்மையாகவும் அம்மன் பாட்டு அடுத்த நிலையிலும் இதில் இடம்பெறுகின்றன. இக்கூத்தில் தலைமைப் பாடகர், உதவிப் பாடகர், மகுடக்காரர் மூவர், பெண் வேடக்காரர் இருவர் என ஏழு பேர் பங்கேற்பர். இதில்
மகுடம், சலங்கை போன்ற இசைக்கருவிகள் இடம் பெறும்.

மகுடம் பெரிதும் வாசிக்கப்படுவதால் இதற்கு மகுடாட்டம் என்ற பெயர் வந்தது. பூவரசு, வேப்பமரக் கட்டைகளைக் கொண்டு செய்யப்படும் இந்த மகுடத்தில் எருமைத்தோல் போர்த்தப்படுகிறது. தலைமைப்பாடகர், பின்பாட்டுக்காரர், மகுடக்காரர்கள் ஓர் அரைவட்டமாகவும், பெண் வேடதாரிகள் ஓர் அரைவட்டமாகவும் அமைந்து ஒரு முழுவட்டம் கூத்தில் உருவாகிறது. இதனை நாடகம் சார்ந்த கூத்து எனவும் கூறுவர்.



பிற கூத்துகள்

நெல்லை மாவட்டத்தில் கரகாட்டம், ஆலி ஆட்டம், ஒயிலாட்டம், களியாட்டம், பெருமாள் ஆட்டம், நால்வர் ஆட்டம், மாடு ஆட்டம், குறவன்-குறத்தி ஆட்டம், காளி ஆட்டம், தோற்பாவைக் கூத்து போன்ற பல கலைகள் நடத்தப்படுகின்றன. அவற்றுள் ஆலி ஆட்டம், பெருமாள் ஆட்டம், தோற்பாவைக் கூத்து ஆகியன மெல்ல அழிந்துவருகின்றன.

அரசு இவற்றை உடனடியாகக் கவனித்து நிதியுதவி செய்து வாழவைக்க வேண்டும். இவற்றில் நாதஸ்வரம், உறுமி, பம்பை, தவில், சுருதிப்பெட்டி, வில், கோல், கிளாரினெட் போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. மதுரை மாவட்டத்தில் கரகம், வட்டத்தப்பு, குறவன்-குறத்தி, ராஜா ராணி, நால்வர் ஆட்டம், மாடு ஆட்டம், பபூன், காவடிஆட்டம், பொய்க்கால்குதிரை ஆட்டம், தேவராட்டம், ஒயிலாட்டம் முத்லியன நடத்தப்படுகின்றன. இவற்றுள் கரகம், காவடிஆட்டம், தோற்பாவைக் கூத்து ஆகியன அழியத்தக்க நிலையிலுள்ளன.



தெருக்கூத்து
தமிழகத்தில், எல்லாக் கிராமங்களிலும் தெருக்கூத்து இன்றும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கோடைப்பருவத்தில் கோவில் விழாக்களில் தெருக்கூத்து நடைபெறுவதை இன்றியமையாத ஒன்றாக மக்கள் கருதுகின்றனர். இரவு நேரங்களில் கோயிலருகே அமைந்திருக்கும் பெரியவெளி அல்லது நாற்சந்திகளில் கூத்து நடத்தப்படும். தெருக்கூத்தில் ஆடுவதற்கு பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. முகத்தில் அரிதாரம் பூசிக் கொண்டு தலை, தோள், மார்பு, கைகள் ஆகியவற்றில் மரக்கட்டையால் ஆன அணிகலங்களை அணிந்து கொள்வர். கூத்தைச் சொல்லிக்கொடுக்கும்' வாத்தியார் ' நடனமுறைகள், ராகதாள வகைகளையும் சொல்லிக்கொடுப்பார்.

தெருக்கூத்தில் மிக முக்கியமான ஒருவர் ' கட்டியங்காரன் ' ஆவார். இவருக்கு ' பபூன், விதூஷகன், சூத்திரகாரி 'போன்ற வேறு பெயர்களும் உண்டு. திரைக்குப்பின்னால் இருந்து தன்னைப் பற்றிப் பாடிய பின், திரை விலக்கப்பட்டு,அன்றைய தெருக்கூத்துக் கதையைச் சொல்லுவது, சிறிய பாத்திரங்களைத் தானே ஏற்பது, கூத்தை முடித்து வைப்பது போன்ற பணிகளை இவர் செய்வார்.

தெருக்கூத்துக் கலைஞர்கள் வெண்பா, விருத்தம், அகவல் போன்ற பாக்களையும்
நாட்டுப்புறச் சிந்து வகைகளையும் பாடவல்லவர்களாய் இருப்பார்கள். இசைக்குழுவில் மிருதங்கம், சுருதிப்பெட்டி, தாளம், முகவீணை போன்ற இசைக்கருவிகள் இருக்கும். தெருக்கூத்து மற்ற நாட்டுப்புறக் கலைகள் போல் பொழுதுபோக்குக்காக ஆடப்படாமல், பக்தியைப் பரப்புவதற்காக ஆடப்படுகின்ற தெய்வீகக் கலையாகும். தமிழகத்தின் தெருக்கூத்து ஆந்திரத்தின் வீதி ' நாடகத்தையும், கர்னாடகாவின் ' யட்ச்கான 'த்தையும் ஒத்திருக்கிறது.

இத்தகைய நாட்டுப்புறக் கலைகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருகின்றன. இருப்பவற்றை அழியாமல் காப்பதற்கு , இப்பொழுது தமிழக அரசு உதவியுடன் , " சங்கமம் " போன்ற விழாக்களைத் தமிழர்த்திருநாள் அன்று நடத்திவருகிறது. அரசுடன் சேர்ந்து நாமும், நமது பாரம்பரியக் கலைகளை அழியாமல் காப்போம்!





கழுகிற்கா
ஜிஜி


(கழுகு இன்னும் ....உயர பறக்கும்)



11 comments:

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//இத்தகைய நாட்டுப்புறக் கலைகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருகின்றன.///

கரெக்ட் தாங்க.. அழியாமல் காப்பது நல்லது..

நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.. பகிர்வுக்கு நன்றி.. :-))

அன்பரசன் said...

சரிதான். இவற்றில் சிலவற்றை தவிர மற்ற கலைகள் அழிவின் விளிம்பில் உள்ளன என்றே நினைக்கிறேன்.

எஸ்.கே said...

தோற்பாவைக் கூத்து இது பொம்மலாட்டம் தானே எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. நம் கலாச்சார அடையாளங்கள் முக்கியமான இவைகள் அழிந்து வருவது மிகவும் வேதனைக்குரியது. இதற்கு அரசும் பொதுமக்களாகிய நாமும் ஏதாவது செய்ய வேண்டும்.

எல் கே said...

அய்யா, அதான் சினிமா பாட்டு நடனம் வந்துருச்சே. அதன் தமிழ் மக்கள் பழச மறந்துட்டாங்க...

என்னது நானு யாரா? said...

நாகரீகப் பாதையில பழைசு எல்லாம் மறைஞ்சிப் போகுது! இந்த கலைகளை அழியாம காப்பாத்தினா வர்ற தலைமுறைக்கும் இந்த கலைகளைத் தெரிஞ்சிக்க பயணா இருக்கும்!

Chef.Palani Murugan, said...

ப‌ல‌ வ‌ருத்த‌மான‌ விச‌ய‌ங்க‌ளில் இதுவும் ஒன்று.இளைஞர்க‌ள் இதைவிட்டு வெகுதூர‌ம் சென்றுவிட்டார்க‌ள்

இம்சைஅரசன் பாபு.. said...

சனிமா குத்து பாட்டுகள் நிறைய வந்து விட்டன ................என்ன செய்ய ?
அப்ப அப்ப பொதிகை மற்றும் மக்கள் தொலை காட்சி இந்த வகை நிகழ்சிகளை ஒளிபரப்புகின்ற.இந்த தொலை காட்சிகளுக்கு இத்தருணத்தில் நன்றி கூறிகொள்கிறேன்

'பரிவை' சே.குமார் said...

அழியாமல் காப்பது நல்லது.

Unknown said...

எனது கட்டுரையைப் பிரசுரித்ததற்காக கழுகாருக்கு நன்றி.

விநாயகதாசன் said...

நல்ல பதிவு
இந்த அறிய பண்டைய கலைகளை காக்க
அரசும் சமூக அமைப்புகளும் சமூக அங்கமான நாமும் செய்ய வேண்டியது அந்த கலைகளுக்கும் அந்த கலை சார்ந்த
கலைஞர்களுக்கும் உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும். ஏன் எனில் கலைஞன் தன் கலைக்கான அங்கீகாரத்தையும்
பாராட்டையும் தான் முதன்மையாக எதிர்பார்ப்பார். பணமும் பசியும் ஓர் உண்மைக்கலைஞனுக்கு இரண்டாம் பட்சம்தான்.

ஏன் எனில் தெருக்கூத்து போன்றவற்றில் வரும் இரட்டை அர்த்த வசனங்களுக்கு நாம் தரும் வரவேற்புதான் அதன் பெருமையை மலிவு படுத்துகிறது. ஒரு சமூக நீதியோ, சமூக அவலங்களோ பண்டைய காலம் போல நவீன காலத்தில் எடுத்தாலப்படுவதில்லை.

மக்கள் தொலைக்காட்சியில் வருவது போன்று வேறெந்த தொலைக்காட்சியிலும் நாட்டுப்புற கலைகள் ஒளிபரப்பபடுவதில்லை. அப்படி ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிக்கும் எத்துனை பார்வையாளர்கள் கிடைக்கிறார்கள் என்பதும் சந்தேகமே!!!

ஏன் எனில் தற்போது
உயிரோடு இருக்கும் கலைகளும் குறைவு
உயிர்ப்போடு இருக்கும் கலைகளும் குறைவு

ஆகவே நாம் தரும் ஊக்கமும் ஆக்கமும் தான் கலைகளையும் கலைஞர்களையும் மேம்படுத்தும்.

Unknown said...

தங்கள் கருத்துகளுக்கு என் நன்றி.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes