Wednesday, May 30, 2012

குழந்தைகளின் உயிரோடு விளையாடும் அதிகாரிகள்! பெற்றோர்களே உஷார்...

 
 
 
கோடைவிடுமுறைகள் முடிந்து குழந்தைகள் பள்ளிக்கு திரும்பும் காலம் வந்துவிட்டது! நேற்றுவரை வீட்டில் ஆடி ஓடிக் கொண்டிருந்த பிஞ்சுகளை கூட பள்ளிகளில் சேர்க்க மும்மரமாய் இருப்பார்கள் பெற்றோர்கள்! கால்கடுக்க வரிசையில் நின்று பல பெரிய மனிதர்களின் சிபாரிசினைப் பிடித்து,ஆயிரக்கணக்கில் நன்கொடைகொடுத்து எப்படியாவது நல்ல பள்ளியில் சேர்ப்பது ஒன்றே அவர்களது நோக்கமாகக் இருக்கும்! கவனிக்கவும் இங்கே பெற்றோர்களை பொருத்தமட்டில் நல்ல பள்ளி என்பது குழந்தைகளை வறுத்தெடுத்து அவர்களை மதிப்பெண் வாங்க வைக்கும் தொழிற்கூடம்தான்! 

ஆனால் அந்த பள்ளியில் அவர்களது குழந்தைகள் பாதுகாப்பாக படிக்கிறார்களா என்றால் அவர்களுக்கு பதில் சொல்லத் தெரியாது! இந்த அறியாத்தனம் மெத்தப்படித்தவர்களிடம் இருந்து கடைக்கோடி மக்கள் வரை ஒரே மாதிரி இருப்பதுதான் வேதனை! அரசாங்க அதிகாரிகளுக்கும் உங்கள் குழந்தைகளை பற்றி கவலைப்பட நேரம் இல்லை! குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன் கீழே உள்ள இரண்டு சம்பவங்களை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்!
 
ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் பிறக்கும் போதும் அந்த கருப்பு ஜூலையின் பதினாறாம் தேதி வந்து கண்முன்னே காட்சியாகின்றது! ஒன்றா? இரண்டா? 94 பிஞ்சு மொட்டுக்கள் கரிக்கட்டையானதை யாரால் மறக்கமுடியும்? கும்பகோணத்தில் நடந்த தீ விபத்தில் பலியான குழந்தைகளை பற்றி சொல்லுகிறேன்! அதுவும் ஆயிற்று... எட்டு  வருடங்களை கடந்து வந்து விட்டோம்! ஒவ்வொரு வருடமும் அஞ்சலி செய்திகளை பகிர்ந்துவிட்டு.. அதிகபட்சம் இரண்டு மெழுகுவர்த்திகளை ஏற்றி விட்டு அந்த நாளை அமைதியாக கடந்து சென்று விடுகிறோம்! ஆனால் அந்த பலியான குழந்தைகளின் பெற்றோர்கள் இதயத்தில் வருடம் முழுதும் எரிந்து கொண்டிருக்கும் தீயை யார் அணைப்பது? அதுகூட வேண்டாம்... அந்த விபத்தில் இருந்து அரசாங்கம் என்ன பாடம் கற்றது? நம் குழந்தைகளுக்கு என்ன பாதுகாப்பு செய்து கொடுத்திருகிறது இந்த அரசாங்கம்?

அரசாங்கத்தின் அலட்சியத்தையும் பண முதலைகளின் பணப்பசியையும் நமக்கு எடுத்துச்சொல்ல தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட நம் தெய்வங்கள் அந்த குழந்தைகள்! சம்பவம் நடந்த கொஞ்சநாட்களுக்கு பரபரப்பாக இருந்த பத்திரிக்கைகளுக்கும் அரசாங்கத்திற்கும் ஏனோ அதற்குப் பிறகு அவர்களை பற்றி நினைவே வரவில்லை? இது விபத்து இல்லை..படுகொலைகள்! ஆனால் செய்தவர்களை ஏனோ இதுவரை தண்டிக்க முடியவில்லை நம் அரசாங்கத்தால்! அல்லது மனமில்லை!

புதிதாக ஒரு பள்ளி துவக்க வேண்டுமெனில் கட்டடத்துக்கு ப்ளான் அப்ரூவல், காற்றோட்டம், இடவசதி, குடிநீர்,சுகாதாரம் என பல்வேறு அரசு துறைகளில் அனுமதி பெறவேண்டும்! அதுபோக தீயணைப்பு துறையில் இருந்து தடையின்மை சான்றிதழ், பொதுப்பணித்துறை பொறியாளரிடமிருந்து கட்டட உறுதி சான்றிதழ் மற்றும் தாசில்தாரிடம் இருந்து  பொது கட்டிட உரிமம் இப்படி அனைத்துமே இருந்தால்தான் அந்த பள்ளிக்கு கல்வித்துறை அதிகாரிகள் அனுமதி வழங்க முடியும்! அதுமட்டும் இல்லை.. உரிமம் வாங்கியதற்கு பிறகு நடக்கும் முறைகேடுகளை களைய உதவி தொடக்க கல்வி அலுவலர் கண்காணிக்கவேண்டும்! 

மேலும் சுகாதார அலுவலர், தாசில்தார், தீயணைப்புத்துறை அதிகாரி இப்படி அனைவருக்குமே கண்காணிக்கும் பொறுப்பு உள்ளது! பள்ளியில் ஒரு குழந்தைக்கு ஒன்பது சதுர அடி இடம் இருக்கவேண்டும்! இது நம்மில் எத்தனை பேர் கவனிக்கிறோம்? அதிகாரிகள் கவனிக்கிறார்களா? இத்தனையும் அந்த பள்ளியில் சரியாக கடைபிடிக்கப்பட்டதா? இல்லையென்றால் ஏன் அந்த அதிகாரிகளையும் தாளாளரையும் தண்டிக்க முடியவில்லை? 94 குழந்தைகளை தங்கள் அலட்சியத்தால் கொலை செய்தவர்களை ஏழு வருடங்களாக தண்டிக்க முடியவில்லை என்றால் உங்கள் அரசாங்கமும் நீதிமன்றமும் எங்களுக்கு எதற்கு?

சரி..இறந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு அரசு அறிவித்த நிவாரண தொகையாவது கிடைத்ததா? அதுவும் இல்லை பத்து லட்சம் என்று அறிக்கை விட்டு கருணை தொகையாக ஒரு லட்சம் மட்டுமே கொடுக்கப்பட்டது! காயமடைந்த பிள்ளைகளுக்கு ரூபாய் 25 ஆயிரம் மட்டுமே கொடுக்கப்பட்டது! எது எதற்குதான் நாங்கள் போராடவேண்டும்? குழந்தைகளை கொன்றவர்களை தண்டிப்பதற்கா? இல்லை அரசாங்கத்தின் அலட்சியத்துக்கு கொடுக்கும் நஷ்டஈட்டை கூட போராடித்தான் வாங்க வேண்டுமா? 

நீங்கள் கொடுக்கும் பணம் எங்கள் குழந்தைகளுக்கு ஈடாக்காதுதான்..ஆனால் எங்கள் குழந்தைகள் விட்டு சென்ற கனவுகளை நனவாக்கவாது அது உதவட்டுமே? இப்போதுக்கூட பல ஊர்களில் வீதிதோறும் நர்சரி பள்ளிகள்! இதையெல்லாம் யார் அனுமதிக்கிறார்கள்? பெற்றோர்களும் இதை கவனிக்கவேண்டும்! நம் குழந்தைகளின் உயிர் இந்த அரசாங்கத்திற்கு தேவை இல்லை! ஏனென்றால் அவர்கள் அவர்களுக்கு வாக்களிக்க போவதில்லை.. ஆகவே கூடுமானவரை நாம்தான் கவனமாக இருக்கவேண்டும்!

இந்த கொடூரம் அரங்கேறியதும் நீதிபதி சம்பத் தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் வைத்தார்கள்! கண்துடைப்போ...என்னவோ? ஆனால் அந்த கமிட்டி தன் விசாரணையின் முடிவில் சில பரிந்துரைகளை வைத்தார்கள்! அதையாவது இந்த அரசு காப்பாற்றியதா? அதிகாரிகள் கவனித்தார்களா? இல்லை..இல்லை..... அப்படி அதை நடைமுறைப்படுத்தியிருந்தால்.. சில வருடங்களிலே வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினத்தில் அந்த வேன் விபத்து நடந்திருக்குமா? யாருக்கேனும் ஞாபகம் இருக்கிறதா? 20 குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியரை ஏற்றி சென்ற வேன் ஒரு குட்டையில் கவிழ்ந்தது! ஒன்பது குழந்தைகளும் குழந்தைகளை காப்பாற்ற முயற்சி செய்த ஆசிரியரும் இறந்தனர்! இதுவும் அனைவரின் அலட்சியத்தால் செய்யப்பட்ட படுகொலைகள்தான்!

இப்படி ஒரு சம்பவம் நடந்த பிறகுதான் அந்த பள்ளிக்கு ஆங்கீகாரம் இல்லையென்றே கண்டுபிடித்தார்கள்! என்ன ஒரு கண்டுபிடிப்பு?  அதுபோக அரக்கபரக்க வேலை செய்த அதிகாரிகள் மாவட்டத்தில் இதைத் தவிர அங்கீகாரம் பெறாமல் செயல்படும் பத்துப் பள்ளிகளை கண்டுபிடித்தனர்! அதன்பிறகுதான் அவற்றை மூடுவதற்கு உத்தரவிட்டார் நாகை கலெக்டர் முனியநாதன்! இந்த சம்பவத்தில் மேலோட்டமாக பார்த்தால் ஓட்டுனர் போனில் பேசிக்கொண்டு ஒட்டியது தவறு எனலாம்..

ஆனால் குற்றம் செய்தவனை காட்டிலும் குற்றத்திற்கு காரணமாக இருந்தவனுக்குதான் தண்டனை அதிகம் கொடுக்கவேண்டும்! அப்படி பார்த்தால் அந்த பள்ளியின் தாளாளர் பேர்தான் முதலில் வர வேண்டும்! ஏன் என்று கேட்டால்? அந்த கலைவாணி மெட்ரிக் பள்ளி அதற்க்கு முன்பு தேவி மழலையர் பள்ளி என்ற பெயரில் செயல்பட்டு வந்திருக்கிறது. அங்கீகாரம் இல்லாத பள்ளி...மேலும்... பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துவரும் பொறுப்பை தனியாரிடம் கொடுத்திருக்கிறார் அந்த தாளாளர்! இதனால் வேன் எப்படியிருக்கிறது என்பதை அவர் கவனித்ததே இல்லை. 

பத்தாண்டு அனுபவம் மிக்க டிரைவர், வேனில் இரண்டு அவசர வழிகள், மஞ்சள் பெயின்ட், சரியான உரிமம் என அரசின் அத்தனை நிபந்தனைகளும் மீறப்பட்டிருக்கின்றன. வேனின் அனைத்து டயர்கள் கூட  மொழுமொழுவென இருந்ததாக அந்தச் சமயத்தில் மக்கள் கூறினர்! ஆக...எல்லாவற்றுக்கும் காரணம் அந்த பள்ளியின் தாளாளர்தான்!

ஆனால் அரசாங்கம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததே வேறுமாதிரி!.இந்தக் கொடூரத்தை திசை திருப்பும் வகையில்... வேன் டிரைவர் முதல் குற்றவாளி, வேன் உரிமையாளார் இரண்டாவது குற்றவாளி, பள்ளி தாளாளர் மூன்றாவது குற்றவாளி என வழக்குப் பதிந்திருக்கிறார்கள். அரசியல் செல்வாக்கு மற்றும் அதிகாரிகளை காப்பாற்றும் முயற்சியின் காரணமாக இப்படி கீழே உள்ளவர்களைத் தண்டித்து மேலே உள்ளவர்களைக் காப்பாற்ற முயற்சி நடக்கிறது. இத்தனைக்கும் அந்தப் பள்ளியின் தாளாளர் ஆசிரியராகப் பணியாற்றும்போது தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர். இந்த அரசாங்கத்திற்கும்  அதிகாரிகளின்  அலட்சியங்களுக்கும் புரியவைக்க இன்னும் எத்தனை பிஞ்சுகள் தங்கள் உயிரை விடவேண்டும்? படித்த பாடங்கள் போதாதா?

ஒவ்வொரு துயரக் கொடூரம் நடந்த பிறகும்... அதிலும் அனைத்து ஊடகங்களாலும் அம்பலப்படுத்தப்பட்டால் மட்டுமே கவனிப்பதும் பெயருக்கு நடவடிக்கைகள் அறிவிப்பதும் அரசு மற்றும் அதிகாரிகளின் வழக்கமாகிவிட்டது. அந்த நேரத்தில் நாகை மாவட்டத்தில் மட்டுமே பத்துப் பள்ளிகள் அங்கீகாரம் அற்றவை என கலெக்டர் கண்டுபிடித்திருக்கிறார். அப்படியென்றால் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் அங்கீகாரமற்ற பள்ளிகளே இல்லையா? அனைத்து மாவட்டங்களிலும் இதுபோல் கொடூரங்கள் நிகழ்ந்து மழலைச் செல்வங்கள் பறிபோன பிறகுதான் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? ஒரு பக்கம் தீயை அணைக்க நீரில்லாமல் மடிந்த குழந்தைகள்.. இன்னொரு பக்கம் தண்ணீரிலே மடிந்த குழந்தைகள்! 

அதிகாரிகளே நீங்கள் விழித்துக்கொள்வதற்க்கு இன்னும் எதில் எதிலெல்லாம் எம் பிள்ளைகள் மடியவேண்டும்? இந்த உலகத்தில் நீங்களும் உங்கள் குழந்தைகள் மட்டும் வாழ்ந்துவிட்டு எதைக்கொண்டு செல்லப்போகிறீர்கள்? ஒவ்வொரு பள்ளியிலும் உங்கள் குழந்தைகளோ அல்லது உங்கள் உறவுகளோ படிக்கிறார்கள் அல்லது படிப்பார்கள் என்று நினைத்து பார்த்து நடவடிக்கை எடுங்கள்!

நன்றி : வைகை

(கழுகு இன்னும் உயரப் பறக்கும்...)
 

Monday, May 28, 2012

வெடிக்கட்டும் கருத்துப் புரட்சி....! ஒர் கழுகு பார்வை...!


சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் பெரும்பாலான பிரச்சினைகளின் தீர்வுகள் முடங்கிக் கிடப்பது மனித மனங்களில் என்று நாம் உணர்ந்த போது ஜனித்த குழந்தைதான் கழுகு. வலைப்பூக்களில் கழுகின் மூலம் என்ன செய்ய முடியும் என்ற ஒரு சந்தேகமோ கேள்வியோ நம்மிடம் எப்போதும் எழவில்லை என்றாலும் எழுதி என்ன செய்து விட முடியும் என்ற கேள்வியை நம்மிடம் தொடுத்துப் பார்க்காத ஆட்களும் இல்லை..

வரலாற்றின் மிகப்பெரிய புரட்சிகள் எல்லாம் முதலில் ஜனித்த இடம் ஒரு தனி மனித மூளை. அவை எழுத்து வடிவமாகவோ அல்லது பேச்சு வடிவமாகவோதான் பரவி ஆக வேண்டும். மீண்டும் மீண்டும் அறிவிக்கப்படும் கருத்துக்கள் கேட்பாரற்றுக் கிடக்கலாம் அல்லது ஏளனப்படுத்தப்பட்டுப் பார்க்கலாம்? யார் நீங்கள் என்று ஓராயிரம் கேள்விகள் எம்மை துளைத்தே எடுக்கலாம்..? சலனங்களைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் சென்றடைய வேண்டிய இலக்கின் தூரங்கள்தான் அதிகப்பட்டுப் போகும்...

கடந்த 50 வருட சமூக அரசியலால் என்ன சாதிக்க முடிந்தது? ஜனநாயகப் போர்வையில் நாம் சுழன்று கொண்டிருந்தாலும் அதிகாரம் எல்லாம் ஒரு இடத்தில் குவிந்துதானே கிடந்து போகிறது. அதிகார வர்க்கம் எப்போதும் தனது ஆக்கிரமிப்பு கால்களை கொண்டு நம்மை நசுக்கி மிதிக்கத்தானே செய்கிறது.

மாறி மாறி வாக்களித்து வாழ்க்கையில் என்ன செழிப்பினை நாம் இதுவரையில் கண்டிருக்கிறோம். நம்மைச் சுற்றி இருக்கும் எல்லா அவலத்திற்கும் ஏதோ ஒரு காரணத்தை கையில் பிடித்த படி நாளுக்கு நாள் இறுகிப் போய்க் கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்தின் அங்கத்தினன் என்பதை விட வேறு என்ன மிகப்பெரிய மாற்றங்களை நாம் சந்தித்து விட்டோம்.?

மாற்றங்கள் என்று நாம் சுட்டிக் காட்டுவது எல்லாம் உலக வளர்ச்சியில் ஒரு சதவீதம் கூட கிடையாது என்பதை வசதியாய் மறந்து போய்விடுகிறோம். வாழ்க்கையில் எப்போதும் நம்மை உயர்த்திக் கொள்ள நமக்கும் மேலே இருப்பவர்களை நாம் பார்த்து அந்த அளவிற்கு நம்மை உயர்த்திக் கொள்ள நாம் உழைக்க வேண்டும், கஷ்டங்கள் வரும் போது நமக்கு கீழே இருப்பவர்களைப் பார்த்து நாம் திருப்திப் பட்டுக் கொள்ள வேண்டும்.

வளர்ந்த நாடுகளில் இருக்கும் தொழில் நுட்பரீதியான அணுகுமுறையையும், மனநலத்தையும், சுத்தத்தையும், ஒப்பிட்டுப் பார்த்து அந்த நிலைமைக்கு எம் மக்களைக் கொண்டு செல்ல வேண்டிய அரசாங்கம் நம்மை விட வளர்ச்சியில் குறைவாக இருக்கும் நாடுகளோடு ஒப்பிட்டு நம்மை திருப்திப் பட்டுக் கொள்ளச் சொல்கின்றன. ஆக்கப்பூர்வமான திட்டமிடல்களை ஒருபோதும் செய்யாத மத்திய, மாநில அரசுகளுக்கு எல்லாம் தத்தம்கட்சிகளை எப்போதும் காட்சிப் படுத்தி வைத்துக் கொள்ள வேண்டியே ஒரு கவர்ச்சி அரசியலைத்தான் எப்போதும் செய்து கொண்டிருக்கின்றன.

இந்த நாட்டில் இனியும் அரசியல்வாதிகள் மாறுவார்கள் என்று நாம் எண்ணிக் கொண்டிருப்பதும் அவர்கள் மாற வேண்டும் என்று தெருவில் இறங்கி கோசங்கள் போடுவதும், போராட்டங்கள் என்ற பெயரில் சாமனியர்களின் அன்றாட வேலைகளைத் தடைப்படுத்திக் கொண்டு தெருவில் நின்று வாழ்க, ஒழிக கோசம் போடுவதும் தோற்றுப் போன வழிமுறைகளானாலும் ஆட்சேபணையை தெரிவிக்கும் வழியாக இதை செய்யத்தான் வேண்டி இருக்கிறது.

உதவிகளைப் பொருளாகச் செய்து, செய்து ஒரு சோம்பேறித்தனமான சமுதாயத்தை உருவாக்கி விட்டது அரசியல்வாதிகளுக்கு வசதியானதாய் இருக்கலாம் ஆனால் சமுதாயத்திற்கு? கடந்த தலைமுறையான நமது பெற்றோர்கள் மற்றும் தாத்தா பாட்டிகள் எல்லாம் ஏதோ ஒரு சமப்பட்ட வாழ்க்கை முறையில் வாழ்ந்து சென்று விட்டனர். அப்படியான ஒரு சூழலை கடந்த தலைமுறை தலைவர்களும், வழிகாட்டிகளும், சூழல்களும் செய்துவிட்டிருந்தனர்.

சரியாய் நமது காலத்தில் புரையோடத் தொடங்கியிருக்கும் இந்த குருட்டு அரசியலையும், அதன் விளைவுகளையும், புறச்சூழல் பற்றிய தெளிவுகளையும் கைக்கொண்டு நாம் நகர வேண்டியது, அதுவும் போர்க்கால அடிப்படையில் நாம் இயங்க வேண்டியதின் அவசியத்தின் பின்னால் யார் நிற்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?

" நமது பிள்ளைகள்....."

நமது பிள்ளைகளுக்கு அரசியலும், அதன் சுயநல போக்குகளும், மக்களின் பொறுப்பில்லாத சுயநலங்களும் கூடி கொடுக்கப்போகும் பரிசு என்ன தெரியுமா?

தண்ணீர் பற்றாக்குறை
மின்சாரமின்மை
சாதி & மத அரசியல்
வறுமை
நெரிசல்
சுகாதாரமின்மை
பெயரிடப்படாத நோய்கள்
வறட்சி

இப்படியாக தொடர்ந்து கொண்டே போய் சுவாசிக்க நல்ல காற்று இல்லாமலும், மாரல் வேல்யூஸ் என்றால் என்ன என்று அறியாமலும், கடவுள், சாமியார், மூடநம்பிக்கைகள் என்றெல்லாம் தொடர்ந்து சின்னா பின்னப்பட்டு வறுமை சூழ அந்த வறுமையைப் போக்க, பணம் சேர்க்க பல வழிகளையும் கையாண்டு அப்படியான ஒரு ஓட்டத்தில் உறவுகள், பாசம், என்று எல்லாவற்றையும் தொலைத்து ஒவ்வொரு மனிதனும் தனித்தனியாய் தனிமைப் பட்டுப் போய்....

நினைத்துப் பார்க்கவே கொடூரமாய் இருக்கும் விளைவுகளை பற்றி நாம் மேற்கொண்டு பேசபோவதில்லை...நீங்கள் கற்பனை செய்து பாருங்கள்.

இவற்றுக்கெல்லாம் எங்கே போய் போராடுவீர்கள்? யாரைக் குறை சொல்வீர்கள்? தெருவிலே குப்பையைக் கொட்டுவதும், அதை அள்ளிச் சென்று துப்புரவு செய்யமால் இருப்பதும் அரசாங்கத்தின் பிரச்சினை என்று எடுத்துக் கொண்டோமானால்.....விளைவுகள் எல்லாம் யாரின் பிரச்சினைகள்?

பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடுவதால் வரும் விளைவுகளைக் கொண்டு நொந்து கொள்கிறீர்களே அந்த பிரச்சினைகளின் மூலகர்த்தா நீங்கள்தான் என்று உங்களுக்குத் தெரியுமா? வாகனத்தினை பழுதுபார்க்காமல் காசு கொடுத்து தேர்ச்சி செய்து வாகனத்தினை ஆர்.டி.ஓ ஆபிசில் புதுப்பித்துக் கொள்கிறோமே....எவ்வளவு பெரிய தீமையினை சமுதாயத்தில் விதைக்கிறோம் என்று அறிந்துதானே செய்கிறோம்...?

சமூகம் என்பது மனிதர்களின் கூட்டம். மனிதர்கள் எல்லாம் நீங்களும் நானும்...நம்மைச் சுற்றியிருப்பவர்களும்....! நம்மைச் சுற்றியிருப்பவர்களிடம் நம்மால் ஆன கருத்துக்களைப் பரப்புரை செய்வதும், ஏதோ ஒரு கட்சிக்கு விசுவாசமாய் இருக்கும் போக்கினை விட்டு சமுதாயத்திற்கு நல்லவை செய்யும் கட்சியையும், மனிதர்களையும் சூழலுக்கு ஏற்றார் போல ஆதரிக்கும் சுதந்திர மனப்பான்மையை விதைப்பதும்....

நம்மையும் நம்மைச் சுற்றியும் எப்போதும் சுகாதரத்தை பேணுவதின் அவசியத்தையும், பிள்ளைகள் பெற்றுக் கொள்வதிலும் அவர்களை வளர்ப்பதிலும் இருக்கும் மிகப்பெரிய கடமை உணர்ச்சியையும், பொருள் ஈட்டுவதில் காட்ட வேண்டிய நேர்மையினையும், தனக்கு வசதி என்று லஞ்சம் கொடுத்து வேலைகளை முடித்து விடுவதால் அதை வழமையாகக் கொள்ளும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் உருவாகி விடுகிறார்கள் அதனால் அதனை முறித்துப் போடுங்கள் என்ற உண்மையினையும்,

சட்டத்தை மதிக்க வேண்டியது அரசு மட்டுமல்ல பொதுமக்களாகிய நாமும்தான் என்றும், மதங்கள் எல்லாம் மனிதனை வழிநடத்த மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட வழிமுறைகள்தான், தனியே கடவுளர் என்று யாரும் கிடையாது உங்களின் மன வலிமையும், கருணையும்தான் கடவுளர்கள் என்ற கடவுள் தன்மைகள் பற்றிய உண்மையையும், சாமியார்கள் என்று பணம் கேட்பவர்கள் எல்லாம் சாகடிக்கப்பட வேண்டியவர்கள் அவர்களால் உங்கள் வாழ்க்கையை எள் அளவும் மாற்ற முடியாது என்றும்....

திரும்ப திரும்ப கூறுங்கள். இப்படியெல்லாம் கூற பணம் தேவையில்லையே...? பொருள் தேவையில்லையே....? கூட்டம் தேவையில்லையே....? இயக்கம் தேவையில்லையே....?இப்படியெல்லாம் நாம் நகர்கையில் பெரியவர்கள் சொல்லிச் சென்ற எல்லா நல்ல கருத்துக்களையும் நமக்குள் தேக்கி நகர்கையில் தனிப்பட்ட நமது சித்தாந்தம் இதுவென்று நாம் சொல்லிக் காட்ட வேண்டியதும் இல்லையே....

எங்கே எப்போது யார் நல்லது பகின்றாலும், எந்த புத்தகம் உண்மை சொன்னாலும் எந்த மதம் சத்தியம் பகின்றாலும் எடுத்துக் கொண்டு நகர்கையில் நாம் வலுவானவர்களாகத்தானே ஆவோம்...?

எந்த செயலையும் செய்யும் போது ஏன் செய்கிறோமென்ற உணர்வோடு உணர்ந்து செய்வதுதானே விழிப்புணர்வு....? ஆமாம் கழுகு இதைத்தான் இப்போது எழுத்து வடிவில் செய்து கொண்டிருக்கிறது. கழுகு என்பது ஏதோ பத்தோடு பதினொன்றாவது வலைப்பூ அல்ல, கழுகு குழுமமும் அப்படியே....

கழுகு என்பது ஒரு அமைப்பு அல்லது தனி நபர் வலைப்பூ என்பதெல்லாம் கிடையாது. கழுகு சமூக விழிப்புணர்வு கொண்டவர்கள் மேலும் அவற்றை எல்லோருக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரையும் கழுகாகத்தான் பார்க்கிறது. சமுதாயத்திற்கும் சுற்றியிருப்பவர்களுக்கும் ஏதோ ஒன்றைப் பகிரவேண்டும் என்று எண்ணுபவர்களை எல்லாம் ஒருமித்து கருத்துக்களை பகிரும் ஒரு களமாகத்தான் அது இருக்கிறது.

கழுகு வலைத்தளத்தினை நீங்கள் வாசியுங்கள்.....! கழுகு பற்றி அறியுங்கள்....! கழுகோடு இணைந்திருங்கள்....! உங்களின் மனசாட்சிகள் சரி என்று சொன்னால்...கழுகு குழுமம் என்னும் விவாதக் களத்தில் இணையுங்கள்....!

சமுதாயத்திற்கான சேவை என்பது பொருள் கொடுப்பது மட்டுமல்ல.. தோழர்களே....! நமது அறிவைக் கொடுப்பதும், அனுபவத்தை பகிர்வதும் மிகப்பெரிய சேவைகளே....! இந்தச் சேவை முதலில் சிந்திக்கும் நண்பர்களுக்கு  திருத்தத்தையும் பலனையும் கொடுத்து பின் சமூகத்திற்கு பங்களிப்பாக திகழ்கிறது!

ஒன்றிணைவோம்...செயல்படுவோம்....தெளிவான, செழுமையான சமுதாயத்தின் அங்கமாவோம்!!!!

கழுகுடன் இணைந்து கொள்ளவும், தொடர்பு கொள்ளவும் - kazhuhu@gmail.com



(கழுகு இன்னும் உயரப் பறக்கும்...)



Wednesday, May 23, 2012

தேர்ச்சி என்னும் எமன்........! +2 தேர்வு முடிவுகள் மற்றும் பொதுப்புத்திகளுக்கு ஒரு சவுக்கடி..!


ஒட்டு மொத்த சமூகத்தின் ஓட்டமும் ஏதோ ஒன்றை ஆதரிப்பதற்கும், எதிர்ப்பதற்கும் எப்போதும் ஒரே திசையை நோக்கி தான் ஓடிக் கொண்டிருக்கிறது. வாழ்வியலில் எதை முதன்மைப்படுத்துகிறோம்? ஏன் முதன்மைப்படுத்துகிறோம் என்று தெரியாமலும், தெரிந்து கொள்ள முயலாமலும் பொது புத்திலிருந்து தீர்மானங்களை பொறுக்கி எடுத்துக்கொள்ளும் மிகைப்பட்ட மனிதர்களுக்கு கடும் கண்டனங்களைக் கூறிக் கொண்டு இக்கட்டுரையை தொடர்கிறோம்.

நேற்று வெளியான +2 தேர்வு முடிவுகள் என்றில்லை, காலம் காலமாக தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதும் மாநில, மாவட்ட, வட்ட, ஊராட்சி, கிராமப்பஞ்சாயத்து என்று தொடங்கி பள்ளிகள் தோறும் முதல் மூன்று மதிப்பெண்கள் எடுப்பவர்களை சீராட்டியும் பாரட்டியும் புளகாங்கிதம் அடையும் நமது சமூகமும் ஊடகங்களும், மிகைப்பட்ட குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருக்கும் மற்றும் தேர்வு பெற்றிராத மாணக்கர்களை மனோதத்துவ ரீதியான ஒரு தாக்குதலுக்கு உட்படுத்தி சமூகத்தை விட்டு நிரகாரிக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

999.99% பெற்றோர்கள் பிள்ளைகளை அவர்களின் விருப்பப்பாடங்களை எடுத்து பயிலச் சொல்வது கிடையாது. எதுவுமே விருப்பமில்லாத பிள்ளைகளை எது அவர்கள் விருப்பம் என்று கண்டறிய நாம் மருத்துவ ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும் அறிய முற்படுவதுமில்லை. பத்தாம் வகுப்பு தாண்டியவுடன் மிகைப்பட்ட பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் மருத்துவராகவும், பொறியாளாராகவுமே பெரும்பாலும் பார்க்க விரும்புகின்றனர். 

இது சமூகத்தை பிடித்திருக்கும் மிகப்பெரிய பிணி.

தமிழகத்தில் இருக்கும் ஒட்டு மொத்த மருத்துவர்களையும், பொறியாளர்களையும் ஒரு ஆய்வுக்கு உட்படுத்தி அவர்கள் எப்படியான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று ஒரு கணக்கீடு எடுத்து பாருங்கள் வாழ்க்கைத் தரம் என்பது எப்போதும் பள்ளியிலும் கல்லூரியிலும் பெற்ற மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து நிர்ணயம் செய்யப்படுவதில்லை என்ற உண்மை நமக்கு உரைக்கும்.

+2வில் 650 மதிப்பெண் பெற்று தேர்வு பெற்ற ஒரு மாணவனையோ மாணவியையோ இந்த சமூகம் பார்க்கும் பார்வை இருக்கிறதே அது ஓராயிரம் முறை தீயிட்டுக் கொளுத்தப்பட வேண்டியது. ஒரு மாணவன் நன்றாகப்படிக்கிறான் என்பதற்கு நாம் வைத்திருக்கும் அளவீடு மனோதத்துவ ரீதியில் பார்த்தோமானால் சர்வ சாதரணமானது....

மனப்பாட சக்தி அதிகமாயிருக்கும் மாணக்கர்ளையே நமது கல்விமுறை எப்போதும் முதல் மாணவன் என்று கூறி சிறப்பித்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் மனப்பாட சக்தி அதிமாயிருந்தாலும் 95% பாடங்களை தெளிவாக நெட்டுரு போட்டிருக்கும் ஒரு மாணவனுக்கு கிடைத்திருக்கும் கேள்வித்தாளில்  மிச்சமுள்ள 5% பகுதியிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருப்பின் தர்க்க ரீதியாக அவன் தோல்வியைத் தழுவுகிறான். இப்படியான சிக்கலான கல்வி முறையும், சிக்குப் பிடித்த மனிதர்களின் மனோநிலையையும் வைத்துக் கொண்டு குறைந்த  மதிப்பெண் பெற்ற மாணவர்களையும், தேர்வு பெறாத மாணவர்களையும் அங்கீகரிக்காமல் போவது மிகப்பெரிய சமூகக் குற்றம்.

கல்வியைக் கற்பிக்கும் கூடங்கள் எல்லாம் தற்போது ஏதோ இயந்திரங்களை தயாரித்து வெளியிட்டு அதன் வெற்றியை பறைசாற்றி மேலும் தங்களைக் கெளவரப்படுத்திக் கொள்ளவோ அல்லது மாணவர்கள் சேர்க்கையின் மூலம் வருமானத்தை பார்க்கவோ தான் முயன்று கொண்டிருக்கின்றன. கல்வி என்பது கற்பிக்கப்படும் போதே ஒரு குறிப்பிட்ட பாடம் ஏன் கற்பிக்கப்படுகிறது? என்றும் அப்படி கற்பதால் வாழ்வியலில் அது எங்கு பயன்படும்? என்றும் எத்தனை ஆசிரியர்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள்...?

ட்ரிக்னாமேட்ரியையும், அல்ஜிப்ராவையும் விவாசாயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு வாழ்க்கை முறைலிருந்து வரும் பிள்ளை பயிலும் போது அதை ஏன் பயில வேண்டும் என்ற கேள்வி அடிமனதில் ஒளிந்துதான் கிடக்கிறது. நம்மில் மிகைப்பட்டவர்கள் பள்ளியிலும் கல்லூரியிலும் எடுத்து படித்த பாடங்கள் நமது விருப்பத்தின் பேரிலா நிகழ்ந்தது நண்பர்களே...?

இல்லையே...!

நமது கல்வி என்பது பெரும்பாலும் நமது சமூகப் பொதுப்புத்தி நமக்குள் கட்டாயமாய் ஏற்றி விட்டது. இங்கே புத்திசாலிகள் என்று கூறிக் கொண்டு முதல் மாணக்கர்களைப் புகழ்ந்து அவர்களைப் பற்றிய செய்தியைப் பேசிப் பேசி மிச்சமுள்ள பிள்ளைகளின் மனதில் தாழ்வு மனப்பான்மையை நாம் விதைக்கிறோமா இல்லையா?

நமது தேசத்தில் குறிப்பாக தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு முடித்து விட்டு மருத்துவமும், பொறியியலும் பயில முடியாமல் அறிவியல் மற்றும் கலைக் கல்லூரிகளுக்குள் செல்லும் மாணவர்களில் 90% சதவீதம் பேர் குற்ற உணர்ச்சிகளோடும் தாழ்வு மனப்பான்மைகளோடுமே செல்கிறார்கள். இதை நமது சமூகம் அறிந்தோ அறியாமலோ குறைவரச் செய்து விடுகிறது.

மனப்பாடத் திறன் அதிகமாயிருப்பது சிறப்பு என்றும் மனப்பாடத் திறன் அறவே இல்லாதது சிறப்பு இல்லை என்றும் எவன் சொன்னது...? ஒவ்வொரு வருடமும் ஆகச்சிறந்த அறிவாளிகளாக அறியப்படும் அதிக மதிப்பெண் எடுத்த பிள்ளைகள் அடுத்த, அடுத்த வருடங்களின் என்னவாகிறார்கள்..? அவர்களின் மனப்பாடத் திறன் வாழ்க்கைக்கு எந்த அளவில் உதவுகிறது என்பதை பற்றியெல்லாம் நம் சமூகம் எப்போதும் கவலைப்பட்டதே இல்லை.

ஒரு மாணவன் தான் அதிக மதிப்பெண் பெறவில்லை என்பதற்காக குற்ற உணர்ச்சியைக் கொள்கிறான் அல்லது தற்கொலை முயற்சியைச் செய்கிறான் என்று சொன்னால் அதற்கு சரியான புரிதல் இல்லாத சிதிலமடைந்த மனம் கொண்ட நமது சமூகம்தான் காரணம்.

மிகைப்பட்ட கிராமப்புறங்களைக் கொண்ட தமிழகத்தின் மாணவர்கள் வயலுக்குச் சென்று தன் தாய், தகப்பனுக்கு உதவி செய்து விட்டும், பால் பண்ணையில் பாலை ஊற்றி விட்டும், வெறும் காலோடு சைக்கிள் மிதித்து அரசுப்பள்ளிகளுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். இவர்களின் தேர்ச்சி என்பது எதைச் சார்ந்து இருக்கவேண்டும் என்று தீர்மானிக்க வேண்டியது அரசின் தலையாயக் கடமையாக இருக்கிறது என்ற கருத்தினை இங்கே ஆழமாகப் பதிகிறோம்.

வாழ்வியலின் அடிப்படைச் சூழல்கள் எப்படியான தாக்கத்தைக் கொடுக்கிறதோ அல்லது எதை முக்கியத்துவப்படுத்துகிறதோ அதைப் பொறுத்தே மனித மனதின் விருப்பங்கள் அமைகின்றன. பள்ளி செல்லும் மாணவர்களின் தனித்திறனை ஆசிரியர்கள் மனோதத்துவ ரீதியாக அறிந்து அவர்களின் ஈடுபாட்டினைக் கேட்டு அதற்கேற்றார் போல கல்வி கற்கும் முறைகள் நமது தேசத்தில் வடிவமைக்கப்பட வேண்டும்.

நன்றாகப் பாடத் தெரிந்த ஒரு மாணவனுக்கு உற்சாகமாய் பேசவராது, உற்சாகமாய் பேச வரும் மாணவனுக்கு அருமையாய் ஓவியம் வரையத் தெரியது, நன்கு ஓவியம் வரையத் தெரிந்த மாணவனுக்கு விளையாட்டில் விருப்பம் இராது, விளையாட்டில் வெற்றி வாகைகள் சூடும் மாணவனுக்கு சுத்தமாய் படிக்க வராது. படிக்கும் மாணவனுக்கும் இதே கதைதான் ஒருவனுக்கு வரலாறு பிடிக்கும் மற்றையவனுக்கு அறிவியல் பிடிக்கும் இன்னொருவனுக்கு  மேலாண்மை நிர்வாகம் பிடிக்கும்....இப்படியாய் விருப்பங்கள் என்பது தனி மனித ஆழ்மனதில் இருக்கும் தனித்திறனில் இருந்தே பிறக்கிறது.

அதிக மதிப்பெண் எடுத்திருக்கும் மாணவர்களை அவர்களின் மனப்பாட திறனுக்காக நாம் பாராட்டும் அதே நேரத்தில் குறைந்த மதிப்பெண் பெற்றிருக்கும் மாணவர்களை குறை சொல்லி தாழ்மைப்படுத்தும் போக்கினை வன்மையாக கண்டிக்கவும் செய்கிறோம்

இதைச் சரிவர புரிந்து கொண்டு நமது சமூகம் கட்டியமைக்கப்படாததால்தான்....ஒரு ஆகச் சிறந்த அரசியல்வாதி கம்ப்யூட்டர் ஆப்பரேட்டராகவும், ஒரு வழக்கறிஞன் டீக்கடை முதலாளியாகவும், ஒரு அறிவியல் விஞ்ஞானி இன்சூரன்ஸ் ஏஜெண்டாகவும் நமது சமூகத்தின் வளர்ச்சிக்கு முனை மழுங்கிப் போன ஒரு பங்கெடுப்பினை செய்து கொண்டிருக்கிறார்கள்.

தேர்வு முடிவுகளைக் கொண்டு மாணவனை பாரட்டவோ, இகழவோ செய்யாமல் சரியான துறையை தேர்ந்தெடுக்க அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு பெற்றோர்களும், ஆசிரியர்களும் அவர்களுக்கு பக்க பலமாய் நின்று வழிகாட்ட வேண்டும்.

மேலும் ஆகக் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை அடையாளம் கண்டு இதே ஊடகங்கள்..அவர்களிடம் பேட்டிகள் எடுத்து அவர்களின் பெரு விருப்பங்களைக் கேட்டறிந்து அதற்கு உதவிகள் செய்வதோடு அவர்களின் நோக்கங்களுக்காய் பாரட்டப்படவும் வேண்டும்.

மற்றபடி தேர்வு என்பது வெற்றி, தோல்விகளுக்கான ஒரு இடமல்ல அது தேவைகளைத் தேர்ந்தெடுக்கும் ஒரு களம் என்பதை உணர்ந்து சரியான சமூகத்தை கட்டியமைப்போம்....இந்த தேசத்தின் ஒப்பற்ற குடிமக்களாவோம்...!

(கழுகு இன்னும் உயரப் பறக்கும்...)
 

Monday, May 21, 2012

சோதனையான ஒரு வருட அதிமுக ஆட்சி....மிரட்சியில் மக்கள்...! ஒரு அலசல்!

 
 
 
ஒரு வருடத்தை கடந்து போகையில் செய்ய வேண்டியவைகளை செய்யாமலும், செய்தவைகளை விளம்பரப்படுத்தி தம்மைத் தாமே பாராட்டிக் கொள்வதும்தான் சரி என்னும் மனப்போக்கினை இனி எக்காலத்தில் அரசியல்வாதிகள் கடைப்பிடிக்காமல் இருக்கிறார்களோ அன்றுதான் அது மக்களின் சாதனையாகும். ஆட்சியில் இருக்கும் கட்சி... மக்களைப் பற்றி கொஞ்சமேனும் சிந்திக்கின்றது என்று பொருள்.

குருட்டாம் போக்கில் அடித்த அதிர்ஷ்டத்தில் மாற்றுக்கு வழியில்லாமல் வாக்குப் பெட்டியில் அதிமுகவின் பொறி அழுத்தப்பட்டதை ஜெயலலிதா அவர்கள் இன்றும்கூட உணரவில்லை என்பது போலத்தான் தெரிகிறது. கருணாநிதியின் ஆட்சி நல்ல ஆட்சியோ, கெட்ட ஆட்சியோ ஆனால் சாமானிய சடுகுடுகளால் கூட எந்த கருத்தினையும் கூறி விமர்சிக்க முடியும் என்ற ஒரு சூழல் இருந்தது. ஆட்சி மாறி அம்மா அரியணை ஏறியவுடன் ஓங்கி, ஓங்கி கருணாநிதி அன் கோ-வை விமர்சித்த நடுநிலையாளர்கள், அதே வேகத்தோடு அம்மாவை எதிர்க்க முடியாமல் போயிருப்பதின் பின்னணியில் ஒளிந்திருப்பது கையாலாகாதத்தனமும் அம்மையார் மீதிருக்கும் பயமும்தான் காரணம் என்று நாம் கூறும் அதே நேரத்தில் இந்த ஆட்சியில் ஏதாவது நல்லது நடந்துவிடாதா என்ற ஏக்கத்திலும் பலர் மெளனமாய்  இருப்பதாகவே படுகிறது.

நிறைகளைச் சொல்லி அதைச் சாதித்த ஜான்சி ராணியாய் ஜெயலலிதாவைத் துதிபாடும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் விசுவாசிகளுக்கும், அமைச்சர்களுக்கும், அறிஞர் அண்ணாவைப் பற்றியும் திராவிடத்தைப் பற்றியும் இது வரையில் யாரும் சரியாக பாடம் நடத்தாதின் விளைவு....இன்று சட்டசபையில் துதி பாடும் பஜனைக்காட்சிகளாக விரிந்து கொண்டிருக்கிறது.

ஆட்சியிலேறிய நாள் முதலாய் அதிரடி என்ற பெயரில் அம்மாவின் ஆட்சி எடுத்த முடிவுகள் எல்லாம் நீதிமன்றங்களால் நறுக் நறுக் என்று குட்டப்பட்டு மட்டுப்படுத்தப்பட்டதை எல்லாம் சாதனைப்பட்டியலில்  ஏன் சேர்க்கவில்லை என்று அதிமுகவினரைப் பார்த்து கேளுங்கள் தோழர்களே...! சட்டமன்ற கட்டிடத்தையும், நூலகத்தையும் முந்தைய ஆட்சியில் உள்ளவர் கட்டிவிட்டாரே என்று அதனை மாற்றியமைக்க ஆணையிட்ட காழ்ப்புணர்ச்சிகள் கொண்டவரை எப்படி பரந்த மனப்பான்மை கொண்டவராக ஏற்றுக் கொண்டீர்கள் எம் மக்களே....?

இலவசத்தின் பெயரை விலையில்லாதது என்று மாற்றி கடந்த ஆட்சி அடித்த அதே ஜல்லியை வர்ணமடித்து விற்பனையை தன்னுடைய கண்டுபிடிப்பாக செய்தவர் இன்னமும் செய்ய முயன்று கொண்டிருப்பவர், இவர் எப்படி மாற்றத்தினை உண்டு பண்ணியவராவார்? மின்சாரப் பிரச்சினையை நாகரீகமாக நாம் ஒதுக்கி விடுவோம்...அது கடந்த காலத் தவறுகளின் நீட்சி.. அதற்கு யார் காரணமென்ற பஞ்சாயத்தை பிறகு வைத்துக் கொள்வோம். எது எப்படியாயினும் மின்சாரப் பற்றாக்குறைக்கு தீர்வு கூடங்குளங்களின் மூலமும் இன்ன பிற திட்டங்கள் மூலமாகவும் தீர்க்கத்தான் பட்டுவிடும். 

இதை முழுமையாக அறிந்து வைத்திருந்த ஜெயலலிதா மூன்று மாதத்தில் மின் பற்றாக்குறையை சரி செய்வேன் என்று தனது தேர்தல் பரப்புரையில் கூறியதை  ஏற்கனவே இருளில் விரக்தியில் கிடந்த நாம் இவர் ஏதேனும் செய்து விடமாட்டாரா என்று நம்பி நமது நம்பிக்கைகளை வாக்குகளாக மாற்றிப் போட்டோம், ஆனால் என்ன நிகழ்ந்தது...? ஆட்சி மாற்றத்தில் தலையாய மாற்றமாய் தமிழ் மக்கள் எதிர்ப்பார்த்த மின்சாரப் பிரச்சினையை தீர்க்க போர்க்கால நடவடிக்கைகளை எடுத்ததா அதிமுக அரசு...? 

இல்லையே....!!!!

மின்வெட்டு இன்னமும் அதிகரித்துப் போனதை விட.. அறிவிக்கப்படாத மின்வெட்டுக்களால் வெகுண்டெழுந்த மக்கள் தொழில் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டு வீதிகளில் இறங்கி போராடவேண்டிய சூழல்தான் ஏற்பட்டது. நியாயமாய் மின்பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி வைக்க செயல் திட்டங்களை தீட்டுவது மற்றும் மக்களுக்கு தாங்கள் பிரச்சினையை தீர்க்க என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை விளக்கத் தவறிய அரசு, விலைவாசிகளை கூட்டியதோடு இல்லாமல், எப்படி தங்களின் விலையில்லாத பொருட்களை கொடுத்து மக்களை வளைப்பது என்றும் யோசித்துக் கொண்டிருந்தது.

இதைக் கொடுத்தேன்,அதைக் கொடுத்தேன் என்று அம்மா சொல்வதும் அதற்கு  அமைச்சர் பெருமக்கள் விடாமல் ஜிங்...சாங் தட்டுவதும் ஏழரை கோடி தமிழ் மக்களை முட்டாளாக்கும் செயல்தானே..? இன்னும் சொல்லப் போனால் எப்படி இப்படி எல்லாம் வாய் கூசாமல், மனம் கூசாமல் வாழ்த்துப் பா பாட முடிகிறது என்பன போன்ற கேள்விகள் நியாயவான்களின் தொண்டைகளில் விரக்தியாய் அடைபட்டுக் கிடக்கின்றன.

அரசு என்பது லாப நஷ்டம் பார்க்கும் ஒரு தனியார் நிறுவனம் அல்ல என்று ஒருகாலத்தில் அறிக்கைகள் விட்ட அம்மையார் அரசின் லாபத்திற்காக இன்று மக்களின் கோவணங்களையும் பிடுங்கிக் கொண்டு விட்டு சாதனைகள் படைத்தேன் என்று கூறுவது வேடிக்கையிலும் வேடிக்கை தானே? அத்தியாவசியப் பொருட்களின் விலையை ஏற்றி விட்டு அதன் மூலம் வருவாயைப் பெருக்குகிறேன்.... என்று அம்மையார் சொல்வது நாலாவது படிக்கும் மாணவனின் நிர்வாகத்திறனுக்குச் சமமானது.

கஜானா காலி மற்றும் போன ஆட்சியில் எல்லாவற்றையும் கருணாநிதி செலவிட்டு விட்டார் என்று மூக்கை உறிஞ்சிக் கொண்டு மக்களிடம் தானே நான் வரவேண்டும், நான் எங்கு செல்வேன்.... ? இது உங்கள் சகோதரியின் அரசு என்று  அம்மையார் பேட்டி கொடுத்ததில் ஒரு நியாயம் இருந்தது....என்றே வைத்துக் கொள்வோம், ஆனால் இப்படி எங்களின் அடிமடியில் கை வைத்து விட்டு உங்களை யார் இப்படி விலையில்லா பொருட்களை எங்களுக்கு கொடுக்கச் சொன்னது என்று யாரேனும் ஒரு மானமுள்ள தமிழன் நாக்கை பிடுங்கிக் கொள்வதைப் போல கேட்க என்ன வழி உண்டு நமது தேசத்தில்...?

பேருந்து கட்டணத்தை உயர்த்தி விட்டு மடிக் கணிணி கொடுக்கிறார், பால் விலையை ஏற்றி விட்டு மிக்ஸியும் கிரைண்டரையும் கொடுக்கிறார், மின்சார கட்டணத்தை உயர்த்தி விட்டு ஆடுமாடுகள் கொடுக்கிறார், இது என்ன கொடுமை என்று யோசித்தாவது பார்த்திருக்கிறோமா நாம்?

இதுதான் புரட்சியா? இதுதான் மாற்றமா?

சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பேன் என்ற அம்மையாரின் ஆட்சியில்தான் என்கவுண்டர் கொலைகள் நடந்தேறின என்பதை எம் மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். என்கவுண்டர் சரியா இல்லையா என்பதை விட்டு விடுவோம்...ஆனால் கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும், செயின் பறிப்பு திருடர்களும் கடந்த ஒரு வருடத்தில் ஆங்காங்கே எந்த பயமுமின்றி சிக்சர் அடித்துக் கொண்டிருக்கிறார்களே.....

சட்டம் ஒழுங்கு என்ன சம்மணமிட்டு தியானத்தில் இருக்கிறதா?

நிதானமில்லாத ஒரு நிர்வாகிதான் சரியில்லாத வேலையாட்களை எப்போதும் நியமிக்கிறான். தடுமாற்ற புத்தியால்தான் தனது செயல்களில் தானே நம்பிக்கை அற்றுப் போய் அவர்களை அடிக்கடி மாற்றவும் செய்கிறான். ஆட்சிப் பொறுப்பில்  ஏறியதிலிருந்து எத்தனை முறை அதிகாரிகளையும் அமைச்சரவையையும் அம்மையார் மாற்றியிருக்கிறார் என்பதையும் சாதனைப்பட்டியலில் நாம் சேர்த்தே ஆகவேண்டும்.

அன்பான தோழமைகளே.....!!!!

இந்தக்கட்டுரையைக் கூட கடந்த ஒரு ஆண்டில் அம்மையாரின் ஆட்சியில் இருக்கும் குறையை எடுத்துரைக்கும் ஒரு நேர்மையான பார்வையாக கருதாமல் எமக்கும் ஏதோ ஒரு கட்சியின் கரைவேட்டியை கட்டிவிட்டு விமர்சிக்க சிங்கநிகர் கூட்டம் அலைமோதும்.... ஆனால் தத்தம் மனசாட்சியை தொட்டுப்பார்த்து நாம் சுட்டிக்காட்டியிருக்கும் விடயங்களை கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பரிசீலித்துப் பார்க்கட்டும்.... அப்போது சர்வ நிச்சயமாய் எமது கருத்துக்களோடு அவர்களும் உடன்பட்டுத்தான் ஆக வேண்டும்.

பெரும்பான்மை வாக்குகளை பெற்று ஆட்சி பொறுப்பேற்ற ஒரு முதலமைச்சர் ஒரு வருடத்திற்குள்ளாக வந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற பாகீரத பிரயத்தனம் செய்கிறார், அமைச்சர்களை எல்லாம் தொகுதிக்கு அனுப்பி அங்கேயே வாசம் செய்யச் சொல்லி தனது ஆள், அம்பு பரிவாரங்களின் மூலம் வெற்றியை எப்படியேனும் எட்டிப்பிடித்து விடவேண்டும் என்று அரசு இயந்திரங்களையும் துணைக்கு வைத்துக் கொண்டு முயன்று வெற்றிப் பெறுகிறார் என்றால்....

அவரின் திராணி என்னவென்று மக்களாகிய நமக்கு சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

அ.தி.மு.க. அரசு ஓராண்டு கடந்து விட்ட நிலையில் எந்த மாதிரியான தாக்கங்கள் கொடுக்கும் மாற்றத்தையும் மக்களிடம் கொடுக்கவில்லை என்று மக்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புக்கள் தெளிவாய் கூறுகின்றன. பொருளாதாரமும் இன்ன பிற சுகாதார, மற்றும் மருத்துவ தேவைகளும் இன்னமும் பூர்த்தி செய்யப்படாமலேயே கண்ணீர்க் கதையாக எம் மக்களின் வாழ்க்கை தொடர்ந்து கொண்டிருக்கையில் கொடநாடு எஸ்டேட்டுக்களை தீக்கிரையாக்கினால் என்ன என்றுதான் சமூக கோபம் கொண்ட ஒவ்வொரு மனிதனும் சிந்திப்பான்.

மேம்போக்கான மக்களைக் கவரும் கவர்ச்சிகர திட்டங்களை ஆங்காங்கே செய்து விட்டு அது தமிழக மக்களின் விடியல் என்று கூறுவதும், 2023ல் ஏழைகளே தமிழகத்தில் இருக்க மாட்டார்கள் என்று கூறுவதும் சுத்த வடிகட்டின முட்டாள்தனம் என்று நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மக்களின் தேவைகளை மக்களோடு மக்களாக நின்று தீர்க்க முடியாத எந்த ஒரு தலைவனும் சமூகத்தின் நலனுக்கு அப்பாற்பட்டவனே... இதற்கு ஜெயலலிதாக்கள் விதிவிலக்கு அல்ல...!

தமிழனின் பூர்வாங்கத் தொழிலான விவசாயத்தை வளப்படுத்தவும், நீர்ப்பிடிப்புகளை அதிகமாக்கவும், உற்பத்தியைப் பெருக்கவும் போர்க்கால அடிப்படையில் அரசு செயல்பட்டிருக்க வேண்டும்...ஆனால் அப்படியான அதிரடி மாற்றங்கள் இந்த ஆட்சி மாற்றத்தால் நமக்கு கிடைத்திடவில்லை.

ஏற்கெனவே மின்சாரப்பற்றாக்குறையால் நலிந்து போயிருக்கும் எல்லா தொழில்களும் இன்னமும் பொருளாதாரத்தை அதல பாதாளத்தில் தள்ளி விட்டிருக்கின்றன. நியாயமான மக்கள் நலம் விரும்பும் முதலமைச்சர் சசிகலா & கோ-வை வைத்து நாடகங்களை நடத்தி மக்களை திசை திருப்பாமலும், எப்போதும் தமது அமைச்சரவை ஜால்ராக்களின் ஜிங் ஜாங்க்களில் குளித்துக் கொண்டிருக்காமலும்....

தமிழக மக்கள் நலன் என்னும் எதார்த்தத்துக்கு வந்து இனி வரும் வருடங்களிலாவது போலியான கவர்ச்சி அரசியலை விட்டு விட்டு..... மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்துக்கு வழி வகைகள் செய்வதோடு ஆடம்பர அரசியல் போக்கிற்கும் ஒரு முற்றுப் புள்ளி வைக்கவும் வேண்டும்.

அரசின் செயல்பாடுகளும், அதன் விளைவுகளும் இயல்பான ஒரு அரசு செய்யும் கடமையாக பார்க்கப்படவேண்டுமே அன்றி அது ஒரு தனி நபர் செய்த சாதனையாக பார்க்கப்படக் கூடாது.  மாற்றம் விரும்பி வாக்களித்த மக்களின் வாழ்க்கையில், மனோநிலையில் இன்னமும் மாற்றம் ஏற்படவில்லை என்பதை புரட்சித் தலைவிகள் உணர்ந்தால் மீண்டும் அரியணை ஏறலாம்....

இல்லையேல்.......கொடைநாடுகளும், கோர்ட் வாசல்களுமே....தீர்ப்புக்களாய் நாளை மாற்றி எழுதப்படும்...!
 
 
(கழுகு இன்னும் உயரப் பறக்கும்...)
 
 
 

Tuesday, May 15, 2012

பேஸ்புக் மற்றும் வலைப்பூக்களில் நடக்கும் அத்துமீறல்கள்...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்...!




இந்நேரம் கழுகு போன்ற சமூக விழிப்புணர்வு தளங்கள் யாரேனும் பெண்களால் நடத்தபெற்று இருக்குமெனில் எத்தனை சமூக நல கொம்புகள் சேவை செய்ய வந்திருக்குமென்று நாம் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியது இல்லை. 

மேலே நாம் கூறியிருக்கும் வரிகள் சட்டென்று கடந்த நொடியில் எமது புத்தியில் உதயமாகி இந்த நொடியில் எழுதப்பட்டது அல்ல. கடந்த மூன்றாண்டுகளாக சமூக வலைத்தளங்களினூடே தொடர்ந்து பயணித்து, கவனித்து அந்த கவனிப்பை கிரகித்து ஆராய்ந்து, அந்த தெளிவிலிருந்து வந்து விழுந்தவை. மொக்கையாய் எழுதும் பெண்களின் வலைத்தளத்திற்கு பின்பற்றுபவராய் சேருவதில் இருந்து, எவ்வளவு கேவலமாய் எழுதி இருந்தாலும் அதை ஆகா ஓகோ  என்று கருத்துரை வழங்குவது, வழிய, வழிய சென்று பாரட்டுவது, அம்மா என்று கவிதை எழுதி விட்டால் அழுது புரண்டு கண்ணீர் விடுவது, 

தெருவில் கிடந்த முள் குத்திவிட்டது என்று ஒரு பெண்மணி எழுதி விட்டால் அதை வாசித்து விட்டு சமூகத்தின் மீது வஞ்சம் கொண்டு வசை பாடி தீர்ப்பது என்று.....எதிர் பாலின ஈர்ப்பு, குறையில்லாமல் இன்றைய இணைய உலகில் வெவ்வேறு வடிவங்களில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

பசித்திருப்பவனுக்கு உணவு கொடுக்கவும், தவித்திருப்பவனுக்கு தாகம் தீர்க்கவும் எவரது கைகளும் நீள்வது என்பது இப்போது நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு போய்விட்டது, கூடவே கூட்டணி அரசியலும் ஒன்று கூடி நின்று நியாயங்களுக்கு அநீதியை வழங்கிக் கொண்டிருக்கின்றன. சமூகத்தில் பொறுப்புடன் இருக்கிறார்கள் என்று நாம் மதிக்கும் பெரிய மனிதர்கள் கூட வலைப்பூக்களிலும், பேஸ் புக்கிலும் ஏன் எப்போதும் பெண்களின் வாசல்களில் விழுந்து கிடக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை.

வலைப்பூக்கள் எல்லாம் பழங்கால நாடக மேடைகள் என்றால் பேஸ்புக்கில் அல்ட்ரா மாடர்ன் சினிமாவையும் தூக்கிச் சாப்பிட்டு விடும் அளவிற்கு அஜால் குஜால் விசயங்களுக்கு குறைவே இல்லாமல்தான் இருக்கிறது. ஒரு பெண் பேஸ் புக் புரபைலில் ஏதேனும் ஸ்டேட்டஸ் மெசேஜ் போட்டுவிட்டால் அங்கே நான் முந்தி, நீ முந்தி என்று போட்டி போட்டுக் கொண்டு கருத்திடுபவர்களில் பெரும்பாலானவர்கள் கருத்தை விட அதை வெளியிட்ட பெண்ணை கவரவே முயலும் கேவலம் தினந்தோறும் நிகழ்ந்தேறிக் கொண்டுதானிருக்கிறது.

ஆண்கள் என்றால் எப்போதும் பெண்கள் எதை எழுதினாலும், எந்த புரபைல் பிக்சர் மாத்தினாலும் நம்மிடம் வளைய வளைய வருவார்கள் என்று நினைக்கும் சில பெண்கள் தங்களின் க்ளோசப் சாட்களை பேஸ்புக்கிலேற்றி விட்டு....எத்தனை பேர் தன்னை வர்ணிக்கிறார்கள் என்று கவனித்து உள்வாங்கிக் கொண்டு உள்ளுக்குள் புளகாங்கிதம் அடைந்து கொண்டுமிருக்கிறார்கள். நீங்கள் அழகாயிருக்கிறீர்கள்....என்பது தொடங்கி இன்னும் ஐ...லவ் யூ வரைக்கும் கருத்துரைகள் நீண்டு கொண்டே செல்ல 351 வது கருத்தில் அப்புகைப்படத்தை ஏற்றிய அம்மணி  வந்து லவ் யூ ஆல் என்று ஒற்றை வரியில் போட்டு விட்டு....ஒரு ஸ்மைலியை தட்டிச் செல்வார்.....

அதற்கு பின் தான் 350 கருத்துக்கள் இட்ட எம் மறத்தமிழர் கூட்டம் ஜென்ம சாபல்யங்கள் தீர்ந்து நிம்மதி பெருமூச்சு விடும். 

போதாக் குறைக்கு ஏதேனும் ஒரு குழுமப் பக்கத்தை பேஸ்புக்கில் உருவாக்கி விட்டு அதில் நம்மை கேட்காமலேயே இணைத்து விடுவதும், கவிதைகள், கட்டுரைகள், புகைப்படங்களை ஏற்றி விட்டு ஒரு 4000 பேரை டேக் செய்து விட்டு நடுவில் நம்மை நிற்கவைத்து ஒவ்வொரு பிடிக்காத விசயத்தால் விலாசவும் செய்கிறர்கள். இவர்களுக்குப் பயந்து கொண்டு நாம் செக்கியூரிட்டி செட்டிங்கில் போய் அதை இதை செய்து நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

முன் அனுமதி என்னும் வார்த்தைக்கு இணயத்தில் அர்த்தமே கிடையாது என்பதோடு மட்டுமில்லாமல் அர்த்தங்களை விளங்கிக் கொள்ளாமல் கருத்திடும் இயந்திர மனிதர்களும் இயங்கும் இடமாய் பேஸ் புக் ஆகி விட்டது. ஒரு குழந்தை இறந்து விட்டது என்று வருத்தம் தெரிவித்து வெளியிடப்பட்ட முதல்நிலை செய்திக்கு....மிகவும் அருமை....வாழ்த்துகள் என்ற ரீதியில் கருத்திடுபவர்களை எந்தக் கணக்கில் நாம் சேர்ப்பது...?

இது ஒரு பக்கம் என்றால் இணயத்தின் அசுர வளர்ச்சியை கணக்கிட்ட அரசியல் கட்சிகளின் அதிவேக ஊடுருவலால் ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கும் தனிப்பட்ட அரசியல் பக்கங்கள் தொடங்கப்பட்டு, செவிகள் கிழிந்து போகும் அளவிற்கு பிரச்சார வியூகங்கள் வரிசைகட்டி நிற்பது ஒருபக்கமும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

எந்த கட்சியையும் சாராமல், அந்த அந்த சூழலை மனதிலாக்கிக் கொண்டு தேவை மற்றும் அவசியத்தின் பொருட்டு முடிவு எடுப்பவர்களை எல்லாம் பச்சோந்திகள், நடுநிலை நாய்கள் என்றெல்லாம் விமர்சித்து பொது வெளி என்ற நாகரீகத்துக்கு எல்லாம் பாடை கட்டும் ஒரு கூட்டமும் மனிதர்கள் என்ற பெயரில் உலாவிக் கொண்டிருக்கிறது.

ஒரு மனிதன் ஏதோ ஒரு கட்சியைச் சார்ந்துதான் இருக்க வேண்டும் என்பதுதான் இந்தக் கட்சிக்காரர்களின் நியாயம். அப்படி சாரமல் இருந்தால்........அ என்னும் கட்சியை நீங்கள் விமர்சித்தால் நீங்கள் ஆ என்னும் கட்சியின் ஆதரவாளர் என்றும்....., ஆ என்னும் கட்சியை விமர்சித்தால் நீங்கள் இ என்னும் கட்சியின் ஆதரவாளர் என்றும்....முத்திரை குத்தப்படுவீர்கள். எது எப்போது எனக்கும் இந்த சமூகத்துக்கும் தேவையோ அப்போது நான் அதன்படி முடிவெடுத்துக் கொள்வேன் என்று சத்தியம் பேசினீர்களேயானால்....நீங்கள்...நடுநிலை சொம்பு என்ற முத்திரை குத்தப்படுவீர்கள்....

இதில் என்ன கொடுமை என்றால்.....தமிழர்களுக்காக போராடும் எந்த ஒரு கட்சியும், சாதி அரசியலையும், மத அரசியலையும் விட்டு இன்னமும் வெளியே வராததுதான்...., சீமான் போன்ற தமிழ்ச் சிங்கங்கள் ஏன் நித்தியானந்தா போன்ற சமூக விரோதிகளைப் பற்றி பேசி கடும் போராட்டங்களை முன்னெடுப்பதில்லை....? சமூக அநீதிகளைக் கூட தங்களின் வசதிக்கு ஏற்றார்போல பார்ப்பவர்களைத்தான் இன்று நம்மைச் சுற்றி நாம் வைத்திருக்கிறோம்.

பெரியாரோடு எல்லாம் முடிந்து போய் விட்டது போலும்.....? கழகங்களுக்கு கூட திராவிடம் என்னும் வார்த்தை அரசியல் என்னும் காத்தாடி பறக்க தடவப்படும் வெறும் மாஞ்சாதான் போல....

மொழியைக் காக்க, இனத்தை காக்க, வேறு நாட்டுக்காரனையும், வேறு மாநிலத்துக்காரனையும் இழுத்துப் போட்டு உதைப்பேன் என்பதும், அறிக்கைகள் விடுவதும், மேடையில் நரம்பு புடைக்க பேசுவதுமாய் அரங்கேறிக் கொண்டிருக்கும் இந்த அவலங்கள்.....இப்போது இணையவெளியிலும்...! 

நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய கால கட்டம் இது.

சிந்திக்கவே இடம் கொடுக்காமல் கருத்து திணிப்புச் செய்யும்....இப்படியான அரசியல் கூட்டங்களும், எப்போதும் பெண்கள் பின்னால் திரியும் மறவர் கூட்டம் ஒரு பக்கமும், காதல் வரிகளை எழுதுகிறேன் பேர்வழி என்று ஏதேதோ எழுதி இளைஞர்களை தடுமாறச் செய்தும் அல்லது எப்போதும் ஆண்களை திட்டி ஆணாதிக்கம் என்று விமர்சிக்கவும் செய்யும் பெண்களுமாய்.....

பயணித்துக் கொண்டிருக்கும் இன்றைய இணைய உலகம்....நாளை நம் பிள்ளைகள் எல்லாம் வந்து அமரப் போகும் ஒரு ஒரு சக்தி வாய்ந்த இடம் என்பதை எப்போதேனும் நாம் எண்ணிப் பார்த்திருக்கிறோமா....?

குறையாய் இருக்க வேண்டியவை எல்லாம் மிகையாய் இருப்பதால், மிகையாய் இருக்க வேண்டிய நல்லவைகள் குறையாய் இன்று ஆங்காங்கே கவனிப்பாரற்று கிடக்கின்றன......அதை கவனிக்க வேண்டியதும், கவனிக்கச் சொல்லி பரப்புரைகள் செய்வதும் ஒவ்வொரு மனிதரின் சமூகக் கடமை என்ற கருத்தினை வலுவாக பதிந்து கட்டுரையை நிறைவு செய்கிறோம்.


(கழுகு இன்னும் உயரப் பறக்கும்...)

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes