Monday, February 27, 2012

சினிமாத்தனமான போலிஸும் என்கவுண்டர் கொலைகளும்...! ஒரு அலசல்!




மக்கள் பிரச்சினைகள் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டிருக்கும் ஒரு சுற்றுப் புற சூழலில் தமிழத்தின் மிக முக்கிய பிரச்சினையாக சட்டென்ற மழைக்காளான்கள் போல ஆங்காங்கே அதிகரிக்கத் தொடங்கி இருந்த துணிகர கொள்ளைச் செயல்கள் தமிழக மக்களை திடுக்கிடத்தான் செய்தன. விலைவாசி ஏற்றம், மற்றும் கடுமையான மின்வெட்டு , இன்னபிற பிரச்சினைகளுக்கு மத்தியில் பாதுகாப்பற்ற வாழும் சூழலும் மக்களைத் தொற்றிக் கொள்ள ஒரு அசாதரண நிலைக்கு சட்டென்று தமிழகம் தள்ளப்பட்டது.

இப்படியான ஒரு சூழலில் அரங்கேறியதுதான் வேளச் சேரியில் நடந்த என்கவுண்டர் என்று காவல்துறையால் வர்ணிக்கப்படும் 5 கொலைகள். பெருங்குடி பரோடா வங்கியில் கொள்ளையடித்த கொள்ளையர்களின் இருப்பிடத்தை காவல் துறை புலனறிந்து, நள்ளிரவு ஒரு மணி வாக்கில் அவர்கள் தங்கிருந்த வீட்டினைச் சுற்றி வளைத்து அவர்களைச் சரணடையச் சொல்லியதாகவும், கொள்ளையர்கள் சரணடைய மறுத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதால் காவல்துறையினர் மீது குண்டுகள் பாய்ந்து பாதிக்கப்பட்டதாகவும், தங்களின் தற்காப்பிற்காகவும், சுற்றி இருந்த மக்களின் பாதுகாப்பிற்காகவும்..........கொள்ளையர்களை சுட்டுக் கொன்றோம் என்று காவல்துறை கூறுகிறது.

 எந்த ஒரு என்கவுண்டரையும் காவல்துறை நியாயப்படுத்த கூறும் அதே வார்த்தைகள் இந்த கொலைகளுக்கும் பயன்பட்டிருப்பதோடு கூடுதலாய் மக்களை பாதுகாக்கவும் சுட்டோம் என்று அலங்காரமும் செய்யபட்டிருக்கிறது. மேலோட்டமாக பார்த்தால் காவல்துறையினர் மிகப்பெரிய கதாநாயகர்கள் போலவும், அவர்கள் உயிரினைத் துச்சமாக நினைத்து கொள்ளையர்களைக் கொன்றது போலவும் ஒரு போலித்தோற்றம் இருப்பினும்...

 என்கவுண்டர் கொலைகள் சுத்த வன்முறை என்பதையும் அது மனித உரிமை மீறல் மற்றும் காவல்துறை தனது கையில் வைத்திருக்கும் துப்பாக்கியின் தோட்டக்களை வெடிக்கச் செய்தது மூலம் சட்டத்தை  கையிலெடுத்துக் கொண்டது என்பதைவிட காவல்துறையின் திட்டமிடும்திறன்., வியூகம் அமைத்து செயல்படும் திறன் எந்த அளவு மழுங்கிப்போயிருக்கிறது என்பதையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

 கையில் இயந்திரத் துப்பாக்கியோடு கொலை வெறித்தாக்குதலை எதிர்பாரத நேரத்தில் மும்பை ரயில் நிலையத்தில் நடத்திய பாகிஸ்தான் தீவிரவாதிகளைத் திருப்பிச் சுட்டதும், கொன்றதும் தேவையின் அடிப்படையில் என்று சொல்வதில் ஒரு நியாயம் இருக்கிறது. அப்படியான சூழலில் கூட இயன்றவரை போராடி அஜ்மல் கசாப்பினை உயிரோடு பிடித்து இன்று வரை எந்த சிறையில் வைத்து பாலூட்டி சீராட்டி வருகிறோம். கண்ணெதிரே பலபேரைக் கொன்றதை பல பேர் கண்ட சாட்சிகளாகவும், காணொளிக் காட்சிகளின் சாட்சிகளாகவும் இருந்தும்....
    
சட்டம் இன்னும் விசாரித்துக் கொண்டிருப்பதும் இதே தேசத்தில்தான் நிகழ்ந்தேறி இருக்கிறது என்பதை அறிக எம் மக்களே...!

 கொள்ளையர்கள் தங்கி இருந்த வீட்டினை சுற்றி இருக்கும் மக்கள் ஊடகங்களில் தொடர்ச்சியாக தெரிவிக்கும் எதார்த்தமான விவரணைகள் காவல்துறையின் ஜோடனை விவரணைகளோடு ஒத்துப் போகாமல் இருக்கும் இடத்தில் மெல்ல தலை நீட்டி தன் கோரப்பற்களை காட்டிச் சிரிக்கிறது இந்த திட்ட மிட்ட கொலைகளின் கோரவடிவம்.

 சுமார் இரவு பத்தரை மணிக்கே அந்த பகுதிக்கு வந்து விட்டிருந்த காவலர்கள், வெகு சுலபமாக அந்த தெருவில் இருக்கும் மக்களை அப்புறப்படுத்தி அந்த பகுதிக்கே முத்திரை வைத்து மிக பாதுகாப்பாக கொள்ளையர்களை மிரட்டியோ, அல்லது, காத்திருந்து கை கால்களில் சுட்டோ பிடித்திருக்க முடியும். கொள்ளையர்கள் அந்த வீட்டின் சிறிய ஜன்னலின் வழியே சுட்டு காவல்துறையினரைக் காயப்படுத்தி இருக்கிறார்கள் என்று காவல்துறையினர் சொல்வது சிரிப்பைத்தான் வரவேற்கிறது.

 ஒரு இரவு முழுதும் சாதாரண உடையில் அந்த வீட்டினைச் சுற்றி காவல்துறையினர் விழித்திருந்து மக்களை எல்லாம் அப்புறப்படுத்தி விட்டு காலையில் அவர்கள் வெளியே வரும் போது கோழியைப் பிடிப்பது போல பிடித்து அமுக்கி இருக்க முடியும். ஏனெனில் கொள்ளையர்களுக்கு காவல்துறையினர் தங்களை நெருங்கி விட்டனர் என்று தெரியாதுதானே....

 கொடும் காட்டு விலங்குகளை எல்லாம் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் மிருக நேயம் கொண்டவர்களும் வாழும் இந்த பூமியில் மனிதர்களைக் கொன்றுதான் பிடிக்க முடியும் என்பது பல முறைகளில், முயன்று வேறு வழியில்லாமல்  எடுத்த கடைசி ஆயுதமாய் இருந்திருக்க வேண்டும்,  ஆனால் வேளச்சேரியில் காவல்துறை எடுத்த முதல் ஆயுதமே....கடைசி ஆயுதமாய் இருப்பதால் தான் இது மனித உரிமை மீறல் மற்றும் திட்டமிட்டு நியாயம் என்னும் வேடமிட்ட கொலை என்று நாம் கூறுகிறோம்.
  
தொடர்ச்சியான கொள்ளைகளை தடுத்து நிறுத்த கொள்ளையர்களைச் சுட்டாவது பிடித்து விடுங்கள் அது மற்ற கொள்ளையர்களுக்கு ஒரு பாடமாய் இருக்கவும் வேண்டும் மற்றும் மக்களுக்கும் காவல்துறையினர் மீது மரியாதையும் வருவதோடு, இது போன்ற துணிர கொள்ளைகளை இந்த அரசு எப்படி எதிர்கொள்ளும் என்னும் அச்சுறுத்துலை அரங்கேற்றும் விதமாக  இருக்க வேண்டும் என்று சினிமானத்தனமாய் திட்டமிட்ட மூளையின் செயல்பாட்டு விளைவே இந்த என்கவுண்டர் என்னும் கொலைகள்...

இதன் பின்னணியில் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை அறியும் வாய்ப்பை காவல்துறை தன் கையாலேயே அழித்துவிட்டது...வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் கேட்க ஆளில்லை என்ற நினைப்பில் செய்தது போலத்தான் தெரிகிறது. சம்பந்தபட்ட மாநிலமும் எந்த அக்கறையும் கொண்டதாக தெரியவில்லை.  உள் நாட்டிலேயே இப்படி என்றால் வெளிநாட்டில் அந்நாட்டு போலீஸ் நம்மவர்களைக் கொன்றால் எந்த முகத்தை வைத்துக்கொண்டு கேட்பது? நல்லவேளை அப்படி நடப்பதில்லை...

சட்டத்தை யாதொரு தனி மனிதனும் கையில் எடுக்ககூடாது என்பதற்காகவே இந்திய தேசத்தின் சட்ட வடிவமைப்புக்களில் விசாரணைகள், சாட்சிகள் என்ற் இழுத்தடித்து கால அவகாசங்கள் கொடுத்து நீதியை வழங்கும் ஒரு இயல்பான அமைப்பு கட்டியமைக்கப்பட்டிருக்கிறது. இந்த வேளச்சேரி என்கவுண்டர் மக்களுக்கு பாதுகாப்பை கொடுப்பதைவிட மிகப்பெரிய அச்சுறுத்தலைத்தான் கொடுத்திருக்கிறது என்பதை அரசும், காவல்துறையும் உணர வேண்டும்.

காவல்துறையினர் நினைத்தால் என்கவுண்டர் என்னும் அடையாளத்தோடு யாரை வேண்டுமானலும் சுட்டு விட்டு அந்த சூழலை விவரிக்க எப்படியான கதைகளை வேண்டுமானலும் கட்டலாம் என்ற அசாதரணப் போக்கிற்கு இது போன்ற் சம்பவங்கள் ஒரு முன்னுதரணமாய் அமைந்து விடக் கூடாது.

 அரசியல் விளையாட்டுக்களை நிறைவேற்றிக் கொள்ள ஓராயிரம் வழிமுறைகள் இருக்கும் போது இது போன்ற மனித உயிர்களோடு விளையாடும் அதிகார துஷ்பிரயோக ஸ்டண்ட்களை ஒருகாலமும் மக்கள் ஏற்கப்போவது கிடையாது.

 பரமக்குடியில் நடந்த அரச வன்முறையில் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கு இன்னும் பதில்  தெரியாமல் கையைக் கட்டிக் கொண்டு பயந்து கிடக்கும் மக்களுக்கு இந்த வேளச்சேரி என்கவுண்டர் இன்னும் பயத்தை அதிகரித்திருக்கிறது. ஆட்சிப் பொறுபேற்று இன்னும் இரண்டு வருடங்களைக் கடந்திராத அதிமுக அரசின் நிர்வாகச் சறுக்கல்களில்
    
பரமக்குடி துப்பாக்கிச் சூடும்....
 வேளச்சேரி என்கவுண்டர் கொலைகளும்

 சர்வ நிச்சயமாய் நீதிவிசாரணை மேற்கொள்ளப்பட்டு, தவிர்க்க முடியதா சூழலில்தான் காவல்துறையால் அவை நடத்தப்பட்டது என்ற நேர்மையான விளக்கத்தை மக்கள் மன்றத்தில் தெரிவிக்கும் கடமை இந்த அரசுக்கு இருக்கிறது.
 
காவல்துறையினர் என்ன செய்வார்கள் அவர்களுக்கும் உயிர் இருக்கிறதுதானே அவர்களும் மனிதர்கள்தானே என்பன போன்ற வாதங்கள் மேலோட்டமாய் வாதிட அழகானவை, ஆனால் கொள்ளையர்களும், வன்முறையாளர்களும், மக்களை காக்க உறுதி பூண்டவர்கள் அல்ல...! காவல்துறையினர் இயன்றவரை மக்களை காத்து, குற்றவாளிகளைக் சட்டத்தின் முன் பிடித்து நிறுத்தி சட்டத்தின் மூலம் தண்டனையை வாங்கிக் கொடுக்க வேண்டிய ஒரு நெறிமுறையைக் கொண்டவரக்ள். 

நேர்மையாய் இந்த வழக்கினை விசாரித்து, இந்த ஐந்து கொள்ளையர்களையும் சுட்டுக் கொன்றுதான் பிடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதை தெளிவாக மக்களுக்கு  அரசு விளக்க வேண்டும்.
 
இல்லையெனில்.....
 
காவல்துறையினரை வைத்துக் கொண்டு அதிகாரவர்க்கம் எப்போது வேண்டுமானலும் யாரை வேண்டுமானலும் கொன்று விட்டு அதற்கு என்கவுண்டர் சாயமடித்து நியாயப்படுத்தும் ஒரு புதுவழிமுறைக்கு இந்த சம்பவம் நமது சமூகத்தை கூட்டிச் சென்று விடும் என்ற நடுக்கமான உண்மையை அறிவிப்பதோடு இந்தக்கட்டுரை தற்காலிகமாக் வாய்மூடிக் கொள்கிறது.


கழுகு 

(கழுகு இன்னும் உயரப் பறக்கும்...)



Monday, February 20, 2012

மாணவனின் குரூரம்...கொலை செய்யப்பட்ட ஆசிரியை...! ஒரு அலசல்...!

பெற்றோர் ஆசிரியர் மாணவர்கள் என அனைவரையும் மனம் பதற செய்த ஒரு சம்பவம் சமீபத்தில் சென்னையில் நடந்த ஆசிரியை கொலை ! 15 வயது மாணவன் கத்தியை தூக்கினான், கொலை செய்தான் என்பதை ஒரு செய்தி என்றமட்டில் கடந்து செல்ல இயலவில்லை. இதுகுறித்த பலரின் கருத்துக்கள்,  ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்...அதில் சில

* சினிமா , டிவி தான் காரணம்\

* பெற்றோர்களே காரணம்.

*கல்வி நிலையங்கள் பணம் பறிப்பதில் மட்டும் குறியாக இருக்கின்றன...ஒழுக்கத்தை கற்று கொடுப்பதில்லை...?!

* ஆசிரியர்களின் அதிக கண்டிப்பு, பொறுப்பற்றத்தன்மை.

இந்த சிறுவனின் இத்தகைய கொலை பாதக செயலுக்கு இங்கே குறிப்பிட பட்ட மூன்று காரணங்களும் சரிதானா?!!

மாணவனை குறித்த ஒரு பார்வை

ஆசிரியையை கிட்டத்தட்ட 14 இடங்களில் கத்தியால் குத்தியிருக்கிறான் ! எத்தகைய வன்மம் மனதை ஆக்கிரமித்து இருந்தால் இவ்வாறு மாறி மாறி தனது ஆத்திரம் தீரும் வரை குத்தியிருப்பான். சிறு அடியோ ரத்தமோ பார்த்தால் மனம் பதறகூடிய வயதில் ஆசிரியையின் உடலில் இருந்து ரத்தம் கொப்பளித்து வந்ததை பார்த்தும், அவர்கள் அலறி துடித்ததை கண்டும் சிறிதும் தயக்கமோ பயமோ இன்றி தொடர்ந்து குத்திக்கொண்டு இருந்திருக்கிறான். நிச்சயமாக ஒரு நாளில் ஏற்பட்டதாக இருந்திருக்க முடியாது. பல நாட்களாக மனதிற்குள் சிந்தித்து இருக்கிறான், இரண்டு நாட்களாக கத்தியுடன் வகுப்பிற்கு வந்திருக்கிறான். சந்தர்ப்பம் கிடைத்ததும் முடித்துவிட்டான்.ஒருவகையில்  திட்டமிட்ட கொலை !!

சினிமாவே காரணம்

கொலை செய்ய காரணம் தான் அடிக்கடிப் பார்க்கும் வன்முறை காட்சிகள் நிறைந்த தமிழ், ஆங்கிலப் படங்கள் காரணம் அதிலும் 'அக்கினிபத்' படத்தில் ஹீரோ வில்லனை கத்தியால் நெற்றியில் குத்தும் காட்சி தனது நெஞ்சில் ஆழமாக பதிவானது எனவும் கூறியிருக்கிறான்.

இவன் கூறுவதை வைத்துப் பார்க்கும் போது, தனது ஆத்திரத்தை கோபத்தை எவ்வாறு தீர்த்து கொள்ளலாம் என சினிமா வழி காட்டி இருக்கிறது அவ்வளவு தான். ஆனால் இதை வைத்தே சினிமாதான் கொலைக்கே காரணம் என்பது சரியா?!

சினிமா காரணம் என்பதும் அந்த கத்தியை தயாரித்தவன் தான் கொலைக்கு காரணம் என்பதும் ஒன்றுதான். அந்த சினிமாவால் பாதிப்பு என்றால் படம்  பார்த்த அனைவருமே கொலையாளிகளாக மாறியிருப்பார்களே ?! காந்தி படம் பார்த்த அனைவரும் மகாத்மாவாக மாறியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் ?! ஆனால் மனம் என்பதன் இயல்பே எதிர்மறைதான். எதிர்மறை எங்கு இருப்பினும் அதைக்கவனிக்கும். உள்வாங்கி வைத்துக்கொள்ளும். ஆனால் ஆக்கபூர்வமானதை புறந்தள்ளும் என்ற நிதர்சனமான உண்மையினை கவனத்தில் கொள்ளவும்.

இந்த ஆசிரியை என்றில்லை இவனது கோபத்தை தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அழிக்க வேண்டும் என்ற முடிவுதான் எடுப்பான். சொல்லபோனால் இவனை கிண்டல் செய்த சக மாணவர்களும் இதற்கு இலக்காயிருக்கலாம். நல்லவேளை இவனிடம் கத்திக்கு பதில் துப்பாக்கி இல்லை

ஆசிரியை கண்டிப்பது தவறு

ஒரு சாராரின் கருத்து என்னவென்றால் அந்த ஆசிரியையின் அதீத கண்டிப்பு ! தன் மாணவர்களின் படிப்பின் மீது எவ்வளவு அக்கறை இருந்தால் பாடத்தில் வீக்காக இருக்கும் ஏழு பேரை தனியாக வரச்சொல்லி வகுப்பு எடுத்திருப்பார். சரியாக படிக்கவில்லை என்றால் பெயிலாகி விடுவாய் என்று ஆசிரியர்கள் சொல்வது சகஜம். அப்படி சொன்னாலாவது அக்கறைகொண்டு படிப்பான் என்ற விதத்தில் தான்.

ஒருமாணவன் படித்து தேர்ச்சி பெறவேண்டும் என்ற இயல்பான அக்கறையில் கொடுக்கப்படும் கண்டிப்பை குற்றம் சொல்வது எந்தவிதத்தில் நியாயம் ?

இந்த சம்பவத்தால் நம் ஆசிரியர்களின் மனம் பாதிக்கபடக் கூடும்.  யார் படித்தால் என்ன படிக்காவிட்டால் என்ன பாடத்தை நடத்துவதுடன் எங்கள் வேலை முடிந்தது என நம் ஆசிரியர்கள் யோசிக்க தொடங்கிவிடுவார்களோ என அஞ்சுகிறேன். அப்படி யோசிக்க மாட்டார்கள் என நம்புவோம்.

பெற்றோர்களின் பேச்சை கேட்காத பிள்ளைகள் கூட அவர்களின் ஆசிரியர்களின் கண்டிப்புடன் கூடிய வழிகாட்டுதலால் நன்கு படிக்கிறார்கள் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்.

அப்படி இருக்கும் போது மாணவன் செய்யும் தவறுக்கு /குற்றங்களுக்கு ஆசிரியர்களையும், பள்ளிகளையும் குறை சொல்லி கொண்டிருப்பது ஒட்டுமொத்த ஆசிரியர்களை பற்றியும் மக்களின் மனதில் தவறான எண்ணத்தை விதைத்துவிட கூடிய ஆபத்து இருக்கிறது. இது நல்லதுக்கு இல்லை.

பள்ளிகள் என்னதான் செய்யும் ?

வகுப்பில் ஒரு பீரியட் நேரத்தில் பாடத்தை நடத்தவும், கேள்விகள் கேட்டு சந்தேகங்கள் தெளிவு படுத்தவும் நேரம் சரியாக இருக்கும். இதில் வகுப்பில் இருக்கும் 40,50 மாணவர்களை ஒவ்வொருவராக ஆயுதங்கள் வைத்திருக்கின்றனரா என உற்று கவனிப்பது முடிகிற காரியமா?

குடும்பத்தில் இருக்கும் ஒரு பிள்ளையின் நடவடிக்கையை கவனிக்க முடியாத பெற்றோர்கள் தான் இத்தகைய வினாவை எழுப்புகிறார்கள் என்பது எனக்கு கூடுதல் ஆச்சர்யம் !?

 ஒரு மாணவனின் பெற்றோரின் குணாதிசியங்கள், வளரும் விதம், சுற்றுப் புறச்சூழல்கள், மரபு, புறவிசை தாக்கம் இன்னும் பிற. இவ்வளவும் சரியாக இருந்தால்தான் பள்ளிகள் விதைப்பவை பலமுள்ளதாக மாறும். இவைகளில் ஏதாவது முரண்பாடுகள், கோளாறுகள் இருப்பின் பள்ளியும் ஆசிரியர்களும் எவ்வளவுதான் நல்லதை போதித்தாலும் அவை அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர்தான். பள்ளிகளை குறை கூறுபவர்கள் இதனை புரிந்து கொள்ளவேண்டும், தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவேண்டும்.

இன்றைய கல்வி

கல்வி முறையில் இருக்கும் பல குளறுபாடுகள் நம் மாணவர்களை மிகுந்த சோர்வடைய செய்கிறது...10 , 12 ஆம் வகுப்பு மாணவர்கள் படும் பாடுகள் சொல்லி முடியாது...அதுவும் ஒன்பதாம் வகுப்பு பாடத்தை பிப்ரவரிக்கு முன்பே முடித்து தேர்வு வைத்து விட்டு பத்தாம் வகுப்பு பாடத்தை எடுக்க தொடங்கிவிடுகிறார்கள்...கோடைவிடுமுறை கிடையாது. எதற்கு இத்தகைய போராட்டம்...?! புத்தகத்தை மட்டும் மனபாடம் செய்து அப்படியே வெளிக்கொணரும் கல்வி முறை மாற்றி அமைக்கப்படவேண்டும். ஒரு இறுக்கமான சூழல் மாணவர்களிடையே நிலவுகிறது, சுதந்திரமாக படிக்கும் வாய்ப்பு கொடுக்க படவேண்டும்...அதிகரிக்கும் மாணவர்களின் மனஉளைச்சல், மன அழுத்தம் போன்றவற்றை பற்றி அரசு கல்வித்துறை அக்கறை கொள்ளவேண்டும்.

இன்றைய பெற்றோர்கள்

நேற்றைய குழந்தைகள் நாம் என்பதை மறந்து விடுகிறோம்...தான் கற்காத கல்வியை தனது பிள்ளை கற்க வேண்டும் என்பதில் முடிந்துவிடுகிறது ஒரு குழந்தையின் எதிர்காலம்.

எதிலும் தனது குழந்தை முதன்மையாக வர வேண்டும் என ஆசை படுவதில்  தவறில்லை, அதற்காக பெரும் சுமையை வைப்பதுபோல் எப்போது படி...படி என வற்புறுத்தி கொண்டே இருப்பது மன அழுத்தத்தை கொடுத்து விடும். ஒன்றிரண்டு மதிப்பெண்கள் குறைந்து விட்டாலும், வாழ்க்கையே தொலைந்து விட்டது என்று பெற்றோர் கொள்ளும் பதற்றம் அப்படியே அவர்களது பிள்ளைகளையும் தொற்றிக்கொள்கிறது.

இன்றைக்கு பெரும்பாலான வீட்டில் ஒரு குழந்தைதான். ஒரே குழந்தை ஆடவும் செய்யணும், பாடவும் செய்யணும், படிக்கவும் செய்யணும், விளையாட்டிலும் இசையிலும் தேர்ச்சி பெறணும் என்பதெல்லாம் மிக அதிகபடியான எதிர்பார்ப்புகள்.

இங்கே சம்பந்தப்பட்ட மாணவன், மூன்று பெண்பிள்ளைகளுக்கு நடுவில் ஒரே ஆண் , நம் சமூகத்து வழக்கப்படி(?) ஒட்டு மொத்த குடும்பமே போட்டி போட்டு செல்லம் கொடுத்திருக்கிறது...தனி அறை, டிவி, கம்பியூட்டர், செலவுக்கு பணம் இப்படி வளர்க்கப்பட்டவனுக்கு , பள்ளியில் ஆசிரியையின் கண்டிப்பு வெறுப்பை ஏற்படுத்துவதில் ஆச்சர்யம் இல்லையே ?!!

குழந்தையுடன் நேரத்தை செலவு செய்ய முடியாத பெற்றோர்கள் தங்களது குற்றத்தை மறைக்க குழந்தைகள் கேட்டதை உடனே  வாங்கிகொடுத்து பழக்கி  விடுகிறார்கள்...வெளி உலகத்தில் தாங்கள் கேட்டது கிடைக்கவில்லை என்றபோது எதிர்க்க தொடங்குகிறார்கள்...!

இன்றைய குழந்தைகள் என்ன தவறு செய்தாலும் பெற்றோர்கள் உடனே சுட்டி காட்டபடுவது சினிமா டிவியை தான்...! இந்த சினிமா, டிவியை குழந்தைகளிடம் முதலில் அறிமுகம் செய்வது யார் ? இவை இரண்டும் சரியான வழியை காட்டவில்லை என்றால் அவற்றை ஏன் பிள்ளைகளிடம் அறிமுகம் செய்கிறீர்கள்...?! வீட்டில் இருக்கும் டிவியை எடுத்துவிடுங்கள்...சினிமாவிற்கு போவதற்கு எவ்வாறு முடியும், நீங்கள் பணம் கொடுக்கவில்லை என்றால்...ஒரு பதினைந்து வயது பிள்ளையிடம் பணம் எப்படி வருகிறது பெற்றோர்கள் கொடுக்காமல்...

குழந்தைகள் மனம் பாதிக்கபடுவதற்கு சினிமா, டிவி ஒரு காரணமாக இருக்கலாம், ஆனால் அது மட்டுமே காரணம் அல்ல. பெற்றோர் இடையே நடக்கும் கருத்துவேறுபாடு சண்டைகள் ! அவர்கள் இடையே நடக்கும் அடி உதையும் வன்முறைதான். அப்போது பேசப்படும் அவதூறான பேச்சுக்கள் கூட குழந்தைகள் வயதிற்கு ஆபாசம் தான்...!

என்னதான் தீர்வு?!

விருப்பம் போல் விளையாட அனுமதியுங்கள்...படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதை முதலில் உணரவேண்டும், அது வாழ்வில் ஒரு பகுதி மட்டுமே.  ஒழுக்கம், பண்பாடு,விருந்தோம்பல், நன்னடத்தை, பெரியோரை மதித்தல், இப்படி நல்ல விசயங்களை கற்றுகொடுக்க வேண்டிய முக்கிய கடமை பெற்றோருக்கு இருக்கிறது...குழந்தைகளுடன் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள்...! அவர்களுக்காக வாழ்கிறோம் என்று தம்பட்டம் அடிப்பது முக்கியம் அல்ல அருகில் உடலாலும், தூரத்தில் உணர்வுகளாலும் உங்கள் குழந்தையை  தொட்டு கொண்டே  வாழுங்கள்...!!
மேலும் பள்ளிகள், அரசாங்கம், ஆசிரியர்கள், பெற்றோர்கள் இப்படி எல்லா இடத்திலும் இருக்கும் குறைகள் சீர் செய்யப்படவேண்டும்...இன்றைய மாணவர்களின் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு காரணம் அவர்கள் மட்டும் அல்ல என்பதை அழுத்தமாக கூறி இந்தக் கட்டுரையை முடிக்கிறேன்.

(கழுகு இன்னும் உயரப் பறக்கும்...)

கழுகிற்காக
கெளசல்யா



Tuesday, February 14, 2012

பசுமைவாதிகளின் புதிய லேகியம்: சி.எப்.எல் பல்புகள்



பசுமை இயக்க கோமாளிகளின் எதிரிகள் பட்டியலில் லேட்டஸ்டாக சேர்ந்திருப்பது குண்டு பல்பு. நூறாண்டுகளுக்கும் மேலாக பயன்பட்டுவரும் குண்டுபல்பு மேல் இவர்களுக்கு கோபம் வர காரணம் அது அதிகமான மின்சாரத்தை விழுங்குகிறது என்பதுதான். அதற்கு எதிரான பிரச்சாரத்தை துவக்கிய நகைச்சுவை உணர்வாளர்களின் நைட் இன் ஷைனிங் ஆர்மராக வந்து சேர்ந்தது சி.எப்.எல் பல்பு.

அறுபது வாட்ஸ் குண்டு பல்ப் பயன்படும் இடத்தில் 13 வாட்ஸ் சி.எப்.எல் பல்பு பயன்படுத்தினால் போதும் என்ற காரணத்தால் சி.எப்.எல் பல்பு மூலம் மின்சாரத்தை மிச்சமாக்கலாம் என கணக்குபோட்டு அதை ஹீரோவாக்கி, குண்டுபல்பை வில்லனாக்கி பிரச்சாரம் துவக்கினார்கள் பசுமைவாதிகள். குண்டு பல்பை பத்து சென்டு முதல் முப்பது சென்டு விலையில் வாங்கலாம்.சி.எப்.எல் பல்பு விலை மூன்றுடாலர் அல்லது இரண்டு டாலர்.இந்த அதிக விலையை நியாயபடுத்த ஒரு சி.எப்.எல் பல்பை பயன்படுத்தினால் அதன் ஆயுளில் இத்தனை ஆயிரம் ரூபாய் மிச்சமாகும் என புள்ளிவிவரங்களை அள்ளிவிட்டார்கள்

ஏட்டு சுரைக்காய் கூட்டுகுதவாது எனும் கதையாய் இவர்கள் கணக்கு மக்களிடம் எடுபடவில்லை. அதனால் அடுத்து அரசாங்கத்தை நெருக்கி சி.எப்.எல் பல்புகளுக்கு மானியத்தை அள்ளிவிட்டார்கள்.அதுவும் போதாது என கடைசியில் குண்டு பல்பை தடையே செய்யும் சட்டத்தை ஐரோப்பிய நாடுகளில் கொண்டுவந்துவிட்டார்கள்.அமெரிககவில் ரிபப்ளிகன்கள் அந்த சட்டத்தை கடுமையாக போராடி சமீபத்தில் மாற்றினார்கள்.

சி.எப்.எல் பல்பில் என்ன பிரச்சனை?
 
நிறைய..சி.எப்.எல் பல்பில் மெர்க்குரி இருக்கு.மெர்க்குரி என்பது விஷம். மெர்க்குரி மனித உடலில் பட்டால், எக்ஸ்போஸ் ஆனால் கடும் வியாதிகள் வரும்.குண்டு பல்பை நூறு ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்துகிறோம்.அதை எப்படி பயன்படுத்துவது என்பது அனைவருக்கும் தெரியும்.யூசர் மேன்யுவல் தேவை இல்லை.

ஆனால் சி.எப்.எல் பல்பை சாதாரணமாக நினைத்து வாங்கி வருகிறோம்.சி.எப்.எல் பல்பு சாதாரணமனாது அல்ல.யூசர் மேன்யுவல் படிக்காமல் அதை பயன்படுத்த கூடாது.உதாரணமா குண்டுபல்பு உடைந்தால் அதை துடைப்பத்தில் துடைத்து வீசிவிடலாம். ஆனால் சி.எப்.எல் பல்பு உடைந்தால் அதில் உள்ள மெர்குரி அறையெங்கும் சிந்திவிடும், அமெரிக்க இ.பி.ஏ (சுற்றுபுற சூழல் மையம்) சி.எப்.எல் விளக்கு உடைந்தால் என்ன செய்யவேண்டும் என ஒரு மிகபெரிய ப்ரிசீஜர் மேன்யுவலே வைத்து உள்ளது.அதிலிருந்து

1. வேக்வம் க்ளீஇனரில் எடுக்க கூடாது. மெர்க்குரி போய் அடைத்து கொள்ளும்.அப்புறம் வேக்வம் க்ளீனரை தூக்கி தான் வீசணும்.

2. துடைப்பத்திலும் பெருக்க கூடாது. மெர்க்குரி உருனடையாக மாறி அறையெங்கும் ஓடிவிடும். மெர்க்குரி மிக ஆபத்தான கெமிக்கல்.அறைக்குள் எக்ஸ்போஸ்ட் மெர்க்குரி இருப்பது வியாதிகளை வரவழைக்கும்.

2. துணி மேல் சி.எப்.எல் பல்பு உடைந்தால் அந்த துணியை வாசிங் மெஷினில் போட்டால் மெர்க்குரி

3. செப்டிக் டேங்கில் அடைத்துகொள்ளும்.சுத்தம் செய்ய நிரைய செலவு ஆகும்.

இன்னும் ஆயிரத்தெட்டு ப்ரொசீஜரை பின்பற்றி சுத்தம் செய்யணும். இந்த இனைப்பில் பார்க்கலாம்

ஒரு சி.எப்.எல் பல்பு உடைந்தால் இத்தனையையும் செய்யணும். குண்டு பல்புக்கு இந்த சிக்கல் எதுவும் இல்லை.இந்த பிரச்சனைகளால் சி.எப்.எல் பல்புகளை கர்ப்பிணிகள், குழந்தைகள் இருக்கும் அறைகளில் பயன்படுத்த கூடாது என மெயின் மாநில அரசின் பாதுகாப்புதுறை எச்சரிக்கை செய்கிறது.

The law intent on eliminating incandescents flies in the face of the Maine DEP safety recommendation that "homeowners consider not utilizing fluorescent lamps in situations where they could easily be broken, in bedrooms used by infants, small children, or pregnant women, or over carpets in rooms frequented by infants, small children and pregnant women."
சி.எப்.எல் பல்பு மின்சாரத்தை மிச்சமாக்குகிறதா?

இது அடுத்த பொய். லேபில் விஞ்ஞானிகள் மேற்பார்வையில் ஆம் சி.எப்.எல் பல்பு மின்சாரத்தை மிச்சமாக்கும். ஆனால் சி.எப்.எல் பல்பை எப்படி பயன்படுத்தவேண்டும் என பொதுமக்களுக்கு அதிகம் தெரிவதில்லை.

சி.எப்.எல் பல்பு அட்டையில் போட்டிருப்பது போல ஏழரை வருடம் எல்லாம் நீடிப்பதில்லை.நாளாக நாளாக அவற்றில் இருந்து வரும் ஒளி மங்கிவிடும்.உதாரணமா அவற்றின் அட்டையில் போட்டிருக்கும் ஆயுளில் 40% கடந்தபிறகு அதன் ஒளி 58% குறைந்துவிடும். அறையில் போதுமான வெளிச்சம் இல்லை எனும்போது நாம் இன்னொரு பல்பை வாங்கி மாட்டணும்.

சி.எப்.எல் பல்பின் எனெர்ஜி பயன்பாடு குறைவாக இருக்கவேண்டுமெனில் ஆன் செய்து 15 நிமிடத்துக்கு அதை ஆஃப் செய்யவே கூடாது. ஒரு நாளுக்கு பலமணிநேரம் அவை எரியவேண்டும்.தொடர்ந்து நான்கு மணிநேரமாவது அது எரிந்தால் தான் அதில் சொல்லபடும் அளவு மின்சாரம் குறைவாக பயனாகும். இது எத்தனை பொதுமக்களுக்கு தெரியும் என யோசித்து பாருங்கள்.அடிக்கடி பவர் கட் ஆகும் நிலையில் இது எப்படி சாத்தியம் ஆகும்?

அடிக்கடி ஆன் செய்து ஆஃப் செய்யும் இடங்களில் அவற்றை மாட்டினால் (பாத்ரூம், ஷெட்) அவற்றின் ஆயுள் மிகவும் குறைந்துவிடும். குண்டுபல்புக்கு இந்த சிக்கல் இல்லை.

சி.எப்.எல்லின் முக்கிய ஆபத்து

சி.எப்.எல் பல்பின் முக்கிய பிரச்சனை அதை பாதுகாப்பாட டிஸ்போஸ் செய்வதுதான். மெர்குரி என்பது விஷம்.குண்டு பல்பை எடுத்து குப்பைதொட்டியில் வீசலாம். ஆனால் சி.எப்.எல் பல்பை அப்படி டிஸ்போஸ் செய்ய முடியாது. அமெரிக்காவில் பல நகரங்களில் சி.எப்.எல் பல்புகளை பாதுகாப்பாக டிஸ்போஸ் செய்ய ரிசைக்ளிங் மையங்களை துவக்கி உள்ளனர். அதை மற்ற குப்பைகளுடன் டிஸ்போஸ் செய்வது சட்டபடி குற்றம் என மாநகாராட்சிகள் கடுமையான விதிகளை அமுல்படுத்தி உள்ளன.காரணம் சி.எப்.எல் பல்பில் உள்ள மெர்குரி நிலத்தடிநீருடன் கலந்து மாசுபடுத்திவிடும், வியாதிகளை வராவ்ழைக்கும் என்பதுதான்.

நம் ஊரில்  இதெல்லாம் சாத்தியமா என யோசியுங்கள்.?தமிழ்நாடு முழுக்க எத்தனை ஊர்களில் சி.எப்.எல் பல்பு ரிசைக்ளிங் சென்டர்கள் உள்ளன சொல்லுங்கள்.இருந்தாலும் பொதுமக்கள் அதை அங்கே கொண்டுபோய் சேர்ப்பார்கள் என்பது நடக்கும் விஷயமா?இப்படி ஒரு விஷயம் இருப்பதே தெரியாத பாமர மக்கள் அதை தெருவில் அல்லது குப்பைதொட்டியில் தூக்கி வீசுவார்கள். நம் ஊரில் உடைந்த பல்பை குப்பை தொட்டியில் வீசுவார்கள்.சி.எப்./எல் பல்பை இப்படி தமிழ்நாடு முழுக்க வாங்கி கண்டமேனிக்கு தூக்கி வீசினால் நிலத்தடி நீர் மாசுபட்டு கடுமையாக வியாதிகள் பரவும்.

சீலிங் ஃபேனில் சுழலுவது போல சி.எப்.எல் பல்புகளை மாட்ட கூடாது என எத்தனை பேருக்கு தெரியும்?மாட்டினால் பல்பு காலி.

சொல்வது சி.எப்.எல் பல்புகளை உலகில் அதிக அளவில் உற்பத்தி செய்யும் ஜெனெரல் எலெக்ர்டிக் கம்பனி.
http://www.gelighting.com/na/business_lighting/faqs/cfl.htm#2 

Currently it is not recommended to use CFLs in vibrating environments. Vibration can cause the electronics in the CFL to fail.

டிம்மர் ஸ்விட்ச் இருக்கும் இடங்களில் சி.எப்.எல் பல்பை மாட்டகூடாது..அதுக்குன்னு தனியா சி.எப்.எல் பல்பு இருக்கு.அதைதான் வாங்கி மாட்டணும்.

மொத்தத்தில் ஏகப்பட்ட விதிமுறைகளை கையாண்டால் தான் சி.எப்.எல் பல்பு பயன்படுத்த முடியும். குண்டு பல்பு வாங்கும்போது யாராவது யூசர் மேனுயுவல் வாங்கி படிச்ச நினைவிருக்கா?சி.எப்.எல் பல்பு வாங்கினால் அட்டையில் இருக்கும் யூசர் மேன்யுவலை படிப்பது மிக அவசியம்..

ஆக மொத்தத்தில் மின்சாரத்தை மிச்சபடுத்துகிறேன், உலகை காப்பாற்றுகிறேன் என சொல்லி பசுமை இயக்க ஜோக்கர்கள் அடிக்கும் கோமாளிகூத்தில் உலகத்தை கெடுக்க வந்த இன்னொரு புரட்டு லேகியம் தான் சி.எப்.எல் பல்பு. துரதிர்ஷ்டவசமாக இவர்கள் சமூகத்தில் அறிவுஜீவிகளாக மதிக்கபடுவதால் இவர்கள் தூக்கி சுமக்கும் இம்மாதிரி லேகியங்கள் சமூகத்தில் எளிதில் விற்பனையாகிவிடுகின்றன.தமிழ்நாட்டு கிராமங்களில் இதை மாட்டி என்னென்ன அனர்த்தம் ஆகபோகிறது என நினைத்தால் இப்பவே பயமாக இருக்கு.

 
கழுகிற்காக
 
செல்வன்
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

Monday, February 13, 2012

மக்களை ஓட்டாண்டிகளாக்கிக் கொண்டிருக்கும் கழக ஆட்சிகள்...!

ஒவ்வொரு தேர்தலிலும் திமுகவிற்கோ அல்லது அதிமுகவிற்கோ வாக்கினை செலுத்தி விட்டு ஓட்டாண்டிகளாயிருக்கும் எம் தமிழ் மக்களுக்கு அனுதாபங்களைக்கூறி இக்கட்டுரையைத் துவக்குகிறோம். 

திமுகவின் ஆட்சியில் சலிப்புற்று அதிமுகவிற்கு வாய்ப்பு கொடுத்து விட்டு தற்போது என்ன சாதித்து விட்டோம் தோழர்களே? விலைவாசியில் மாற்றம் இருக்கிறதா? வாழும் தினசரிகளில் அபரிதமாய் ஏதேனும் புதிய அனுபவங்கள் ஏற்பட்டிருக்கிறதா? அரசினை ஆளும் கட்சிதான் மாறியிருக்கிறதே அன்றி வேறு ஏதேனும் குறிப்பிட தகுந்த நல்ல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது என்று மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள்?

மின்சாரத் தடையால் தமிழகமே இருண்டு போய் கிடக்கிறது என்று திமுகவைச் சாடிவிட்டு அதிமுகவை அறியணை ஏற்றியதால் மாற்றம் ஏன் ஏற்படவில்லை என்று யோசித்தாவது பார்த்தீர்களா? வரிச்சுமையை ஏற்றி விளையாடிய நமது சகோதரியின் அரசு கொடுக்கும் இலவசங்களை பல் இளித்துக் கொண்டு நாம் வாங்கித்தான் ஆக வேண்டுமா என்று கண நேரமேனும் யோசித்தீர்களா?

இலவச அரசு தொலைக்காட்சியையும், மடிக்கணியையும் வைத்துக் கொண்டு மெழுகுவர்த்திகளோடு சோக மொழி நீங்கள் பேசிக் கொண்டிருப்பதைப் பற்றி யார் கவலைப்பட்டார்கள்...? திமுகவை ஆட்சியை விட்டு இறக்க போதும் போதுமென்ற காரணங்களை நாம் கையிலெடுத்துக் கொண்டிருந்தோம்....சரி இப்போது போதும் போதுமென்ற அளவிற்கு காரணங்களை அம்மையாரின் அரசும் நமக்கு படியளந்து கொண்டிருக்கிறது....

இந்த ஐந்து வருடம் முடிவதற்குள் திமுக அரசின் எல்லா தவறுகளும் காலப்போக்கில் மறந்து வழக்கம் போல அதிமுகவின் தவறுகளும், அந்த தவறுகளால் விளைந்த கஷ்டங்களும் நமது கண் முன் நிற்க....

மறுபடி திமுகவை அரியணை ஏற்றப் போகிறோம் அவ்வளவுதானே நிகழப் போகிறது....அல்லது வேறு ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறோமா மாற்றாக....?

என் அன்பான தமிழ்த் தேசத்தின் மக்களே....! ஏன் இந்த மனோவசியக்கட்டு நமக்கு...? சட்டசபை நிகழ்வுகளில் ஏழரை கோடி ஜனங்களின் பிரதிநிதியான முதலமைச்சர் சினிமாத்தனமாய் பேசி சண்டையிடுகிறார்....! எல்லா விலைவாசியையும் நாங்கள் ஏற்றி விட்டோம்....இருந்தும் சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் நாங்கள்தான் வெல்வோம் என்று சீறிப்பாய்கிறார்...? இது நிர்வாக ரீதியான பேச்சு அல்லவே.? என் கட்சி பலம் வாய்ந்தது என்ற மார்தட்டல்தானே ? 

போன ஆட்சியில் தொடங்கிய மின்வெட்டினை இன்னும் வளர்த்து விட்டு முழுக்க முழுக்க தமிழகத்தை இருள் வெள்ளத்தில் தள்ளி விட்டு தொழில் துறையை முடக்கி வைத்திருக்கிறார்...? தொழில் துறை மட்டுமல்ல., தேர்வுப்பருவம் நெருங்கி வரும் சமயத்தில் இரவில் கடும் மின்வெட்டு., டீசல் பயன்பாடும் மிக அதிகமாகிறதுதானே?

விடுதலைப் புலிகளை வெறுத்த இன்னமும் வெறுக்கும் ஜெயலலிதா அம்மையார், தமிழ் மக்களின் உணர்வுகளோடு விளையாட உச்ச கட்ட ஆயுதமாய் எடுத்திருக்கும் தனித் தமிழ் ஈழம் முழக்க நாடகம் எதுவரையில் என்று என் தமிழ் மக்களுக்கு தெரியுமா? ஈழப்பிரச்சினையைப் பற்றி பேசியதாலேயே தனது ஆதரவைக் கொடுக்கும் சீமான்களுக்கும் புரியுமா?

வண்டி வண்டியாய் தமிழர்களின் பிரச்சினைகளை கையில் வைத்துக் கொண்டு தனது சொந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதில் அவர் மும்முரமாக இருப்பதிலும், சசிகலாவை வெளியே அனுப்பிய கையோடு சசிகலாவைச் சார்ந்தவர்களை நோக்கி ஞானோதயம் வந்த அரசின் இயந்திரங்கள் பாய்வதையும் நீங்கள் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறீர்கள்..? 

கட்சியை பலம் வாய்ந்ததாக மாற்ற அரசு இயந்திரம் செயல்படுகிறதே தவிர எந்த கலெக்டர் அல்லது அமைச்சர் இதுவரை மாற்றப்படாமல் இருக்கின்றனர்? தனது துறையை,மாவட்டத்தை புரிந்து கொள்ளக்கூட நேரம் இருப்பதில்லையே அவர்களுக்கு...!!!!!!!

கூடங்குளத்தில் மக்கள் போராட்டம்...., முல்லைப் பெரியாறுக்கு மக்கள் போராட்டம், இன்று மின்சாரம் வேண்டி ஆங்காங்கே மக்கள் போராட்டம், பரமக்குடியில் துப்பாக்கிச் சூடு, புதிய சட்டசபை மாற்றம், நூலகம் மாற்றம் என அரசின் செயல் பாடுகளை ஒவ்வொரு தடவையும் கண்டித்து நறுக் நறுக் என்று கொட்டு வைக்கும் உயர் நீதிமன்றம்....., சட்டசபையில் கேலிக் கூத்து,

இவையெல்லாம்தானா நாம் எதிர்பார்த்த மாற்றங்கள்...? இவையெல்லாம் தானா புரட்சித் தமிழர்கள் தங்கள் வாக்குகளால் கொண்டு வந்த ஜனநாயகத்தின் விடியல்...?

கருணாநிதியைச் சுற்றி தனது சுய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள திமுக என்னும் கட்சியினர் செய்யும் எல்லா அநீதிகளையும் பொறுத்துக் கொண்டு வாக்களிக்க ஒரு கூட்டம்..

ஜெயலலிதாவைச் சுற்றிலும் அதே போல தனது சுயநலத்துக்காய் அதிமுக கட்சியில் இருக்கும் முரண்பாடுகளையும், அநீதிகளையும் சகித்துக் கொண்டு ஒரு கூட்டம்.....

இவர்களுக்கு மத்தியில் சாதி மற்றும் மத ரீதியிலான சில கட்சிகளுக்குள் தனது சுயநலத்துக்காய் ஒரு கூட்டம்....

முதலமைச்சர் கனவுகளோடு அந்தப் பதவியை மட்டுமே குறி வைத்து அரசியல் களமிறங்கும் கத்துக் குட்டித் தலைவர்கள்...

இப்படி ஒவ்வொரு பிரிவுக்குள்ளும் தமிழர்கள் தங்கள் முகாந்திரங்களை அமைத்துக் கொண்டு மூளைச் சலவை செய்யபப்ட்டது போல தாங்கள் சார்ந்திருக்கும் கட்சிகளுக்காக வாழ்க, ஒழிக கோசம் போடுகிறார்களே....அதுதான் இந்த தமிழ்த் தேசத்தின் சாபக் கேடு.....!

ஸ்பெக்ட்ரம் ஊழலில் திமுகவின் கை எந்த அளவு இருந்தது என்றும் தமிழீழப் பிரச்சினையில் ஆட்சியில் இருந்த போது பாரமுகமாய் அதன் தலைமை நடந்து கொண்டு, காங்கிரசோடு ஏன் தமிழினத்தின் தலைவர் சமரசம் செய்து கொண்டு போக வேண்டும்...? திமுக என்னும் பெரும் கட்சிக்குள் ஏன் தனது குடும்பத்தினரை அடுக்கடுக்காக கொண்டு வந்து ஒரு தன்னிகரில்லாத தலைவன் சிறைப்பட்டுப் போக வேண்டும்....?

இத்தனை கேள்விகளும் திமுகவை ஆதரிக்கும் அத்தனை பேருக்குள்ளும் இருக்கும்....? சத்தியத்தின் கேள்விகள் அவரவர் மனசாட்சிகளுக்குத் தெரியும்...ஆனால் கேட்க மாட்டார்கள்.....காரணம் சுயநலம். 

அதிமுக என்னும் கட்சி 1991ல் இருந்து தமிழகத்தில் செய்த ஊழல்கள் வரலாறு காணாதவை..., இன்னமும் வழக்குகளோடு மல்லுக் கட்டிக் கொண்டிருக்கும் அதன் தலைமை, ஒரு கட்டத்தில் வேறு ஒருவரை முதல்வராய் வைத்து விட்டு பதவி விலக வேண்டியிருந்தது என்பதும், ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையில் சசிகலா என்னும் ஒரு தனிநபர் அவர் மூன்றாம் முறை முதல்வர் ஆகும் போதுதான் தவறானவராக பார்க்கப்பட்டு வெளியே அனுப்பப்படுகிறார் எனில் இதற்கு முன் எல்லாம் ஆளுமை நிறைந்த அவர் மழுங்கிப் போய்தான் இருந்தாரா? எனபது மட்டுமல்ல...

முழுக்க முழுக்க தன்னை ஒரு உயர்சாதிக்காரராய் பரிணமித்துக் காட்டிக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் இந்துத்வா அபிமானம் திராவிடம் பேசும் அதிமுகவின் கட்சித் தொண்டர்களுக்கு தெரியாதா என்ன? 


திமுக மற்றும் அதிமுகவை சார்ந்து இருக்கும் தமிழர்கள் அத்தனை பேருக்குமே தெரியும் தத்தம் கட்சியில் இருக்கும் முரண்கள்...! 

எல்லாம் தெரிந்தும் நாம் சமரசம் செய்து கொண்டு போக சொல்லும் ஒரே ஒரு காரணம் மாற்றாக வேறு யாரும் இல்லை என்பதுதான்...

திமுக, அதிமுக, காங்கிரஸ், பாரதிய ஜனதா இவை கடந்த மாற்று ஒன்று வந்து விடக்கூடாதா அன்பான மக்களே...? ஏன் வரக்கூடாது என்று  சிந்திப்பதே கேலிக்குரிய விடயமாய் இங்கே பார்க்கப்படுகிறது. அதற்கு காரணம் நம்மைச் சுற்றி இருக்கும் நெருங்கிய உறவுகளே பற்பல காரணங்களுக்காக நாம் மேலே கூறியிருக்கும் கட்சிகளுக்குள் குடியிருப்பதுதானே...?

எல்லா கட்சிகளுக்குள்ளும் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டிருக்கும் தமிழர்களளே!!!! உங்களின் மனசாட்சிகளைத் தொட்டு சொல்லுங்கள்... கடந்த 50 வருட அரசியலில் நாம் சாதனைகள் என்று குறிப்பிட்டு காட்டி சொல்பவை எல்லாம் நிஜத்தில் சாதனைகள் தானா>

நீ செருப்பில்லாமல் இருந்தாய் உனக்கு பிய்ந்த செருப்பு வாங்கிக் கொடுத்தோம் என்பதும்...நீ அம்மணமாய் இருந்தாய் உனக்கு கோமணம் கட்டி விட்டோம் என்று கூறுவதும் சாதனைகளா?

தேர்தல் அரசியலை முன்னெடுக்காத தந்தை பெரியார் சாதித்தை விட அவரை பின்பற்றுவதாய்க் கூறும் இந்த திராவிட இயக்கங்கள் சாதித்துக் கொடுத்தது என்ன? செய்த புரட்சிகள் என்ன...? சிந்தித்துப் பாருங்கள் அன்பானவர்களே...!

மூன்று வேளை உண்ணவும், குடியிருக்கவும், திருமணம் செய்யவும், பிள்ளைப் பெற்றுக் கொள்ளவும், ஓசி வேட்டி சேலைகளை வாங்கி உடுத்திக் கொண்டு தேவ தூதர்கள் கொடுக்கப் போகும் வண்ணத் தொலைகாட்சிப் பெட்டிகளையும், மடிக்கணிணிகளையும், செயற்கைக்கோள் தொலைகாட்சி இணைப்புகளையும் பெற....

இருள் சூழ்ந்த தமிழகத்தில் கையேந்தி நிற்பதுதானே...நமது நிலைமை?

இவைதானே...திமுக மற்றும் அதிமுக கட்சிகள் சாதித்துக் கொடுத்தவை....? கடந்த 20 வருடங்களாக மாறி மாறி வாக்களித்து நாம் ஒன்றும் சாதித்து விடவில்லை...., சமூகம்20 வருடத்திற்கு முன்பு இருந்ததை விட இன்னும் கேவலமாக பின்னோக்கித் தான் சென்றிருக்கிறது என்பதை நீங்கள் உணரவில்லையா எம் தோழர்களே...?

அறிவியலும் நவீனமும் காலத்தின் கட்டாயம். அது மட்டுமே மாற்றம் என்று பார்க்கும் ஒரு தெளிவில்லாத தன்மையை விடுத்து பாருங்கள்..நாம் சாதித்திருப்பது எல்லாம் சுயநல அரசியல் தலைவர்களையும் அவர்களின் முதாலாளித்துவ ஏகாதிபத்திய் வாழ்க்கையையும் அதனால் நமக்கு கிடைக்கப் பெற்ற அடக்கு முறைகளையும் அநீதிகளையும்தான்...!

அடுத்த தேர்தலிலாவது.....

திமுக அல்லது அதிமுக இல்லாத, காங்கிரசைச் சாராத, மதவாதம் இல்லாத...

வேறு ஒரு கட்சியை நாம் ஏன் தேர்ந்தெடுக்கக் கூடாது....? என்ற வலுவான கேள்வியோடு இந்தக் கட்டுரையை நாம் நிறைவு செய்கிறோம்...!



கழுகு


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

Wednesday, February 08, 2012

டீக்கடை பெஞ்ச்....! சூடான அரசியல் இங்கு கிடைக்கும்... (8.2.2012)


கனகு நடந்து வர டீ கடை அண்ணாச்சியும் ரெங்குவும் பாட்டை போட...

'ஏலே இமயமலை! எங்க ஊரு சாமி மலை! எட்டு தெச நடுங்க எட்டு வச்சு வாராரு!

கனகு : என்னய்யா ரெங்கு... பாட்டெல்லாம் பலமா இருக்கு... நான் என்ன விசயகாந்தா...?

ரெங்கு : ஆமா கனகு... நீ நாக்கை கடிச்சிட்டே வந்தியா... அதான் டைமிங்க்கு ஏத்த பாட்டு. அவர் நாக்கை கடிச்சதுதான் தமிழ்நாடே பேசிட்டு இருக்கு....என்னா தில்லு... இதே மாதிரி எப்பயும் தெளிவா போனா சரிதான்..

கனகு : என்ன தெளிவா... அவர் அப்படி இருக்க மாட்டாரே...அதெல்லாம் சரி. ஏன் இந்த பழைய நியூஸ சொல்ற...?? 

ரெங்கு : செய்தி பழசு தான். ஆனா அந்த விஷயத்தை வைச்சே நம்ம தலைவர்கள் எல்லாம் அரசியல் பண்றாங்க... எங்க மக்கள் பார்வை விசயகாந்த மேல திரும்பிடுமோன்னு நினைக்குறாங்க போல... 

கனகு : அது என்னமோ சரிதான்... எல்லா அரசியல்வியாதிகளும் அத பத்தியே பேசிட்டு இருக்காங்க... ஒரு எதிர்க்கட்சி தலைவரை பார்த்து மரியாதை இல்லாம பேசினா இப்படிதானே செய்வார் ரெங்கு...  இல்லனா முடிய விரிச்சு போட்டுட்டு வெளிய போகணும்... ஆனா அது அவருக்கு தெரியல... 

ரெங்கு : அட பாவி.. முடிய விரிச்சிட்டு போனது நான் சொன்னதை விட பழைய நியூஸ்ய்யா..  நாலு தேமுதிக எம் எல் ஏகளை தன் பக்கம் இழுத்து எதிர் கட்சி தலைவர் பதவியை பறிச்சு அம்மா கொடுத்த ஆட்டை காத அறுத்த மாதரி விஜயகாந்த காதை அறுக்க போறதா தொண்டர்கள் எல்லாம் பேசிக்கிறாங்க...

கனகு : என்ன அம்மா கொடுத்த ஆட்டை காதை அறுக்குறாங்களா..?? 

ரெங்கு : ஆமா... அம்மா இலவசமா... இல்ல.. இல்ல...விலையில்லாம கொடுத்த ஆட்டை மக்கள் காத அறுத்து வித்துடுறாங்களாம்...

கனகு : ஆமா... மனுஷன் சாப்பிடவே இங்க சாப்பாடு இல்ல... இதுல ஆட்டுக்கு எங்க சாப்பாட்டு போடுறதுன்னு வித்து இருப்பாங்க... விலைவாசி ஏறி போச்சேன்னு சொன்னா அது உலக பொருளாதார மாற்றத்தால வந்த விளைவுன்னு சொல்றாங்க... அதையேதானே அய்யாவும் சொன்னார்... 

ரெங்கு : எல்லாரும் அப்படிதான் கனகு சொல்லுவாங்க... குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு... அரசியல்வாதி பேச்சு மேடையோட போச்சு கனகு... இதெல்லாம் நம்ம முட்டாள் ஜனங்களுக்கு தெரியாது.மாத்தி மாத்தி ஓட்டை போட்டுட்டு புலம்புவாங்க என்ன மாதிரி...

கனகு : உனக்கு என்னய்யா புலம்பல்.. ??

ரெங்கு : என்னத்த சொல்றது..? இவங்க வந்து மின்வெட்டு பிரச்சனையை சரி பண்றேன்னு சொன்னாங்க... ஆனா அதை கொஞ்சம் கூட சரி பண்ணல... கொழந்தைங்க படிப்பு எல்லாம் வீணாப் போவுது...

கனகு : ஹா.. ஹா... இதைச் சொல்றியா..? போன தடவை மின்வெட்டு, விலைவாசி உயர்வுன்னு சொல்லி பேசுன ஆளுங்க எங்கய்யா போனாங்க..? ஒரு வேள கரண்ட் இல்லாததாலே ஆளுங்க இருக்குறதே தெரியலையோ..?? இன்னும் ஐஞ்சு வருசத்துக்கு மின்வெட்டு பிரச்சனை பிரச்சனையாவேதான் இருக்கும்.. நீ புலம்பிட்டே இரு... 

ரெங்கு : ராமதாஸ் தாலியை அறுத்தாராம்..

கனகு : என்னய்யா சொல்ற..? நகைய அறுக்குறவங்க எல்லாம் ஆந்திரா பக்கம் போய்ட்டாங்கன்னு சொன்னாங்களே..?! அந்த வேலைய இவர் பாக்க ஆரம்பிச்சிட்டாரா...??

ரெங்கு : யோவ்.. ஏன்ய்யா.. அவனுங்க கொள்ளை அடிக்குறது போதாதா...? இன்னும் இது வேற வேணுமா..?உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல் வருமானம் மூன்றரை கோடியாம்... 16 ஆயிரம் பேர் தாலிய அறுத்து இம்புட்டு வருமானம் வந்துச்சாம்..

கனகு : என்னய்யா இவர் இம்புட்டு கொள்ளையா அடிக்குறார்..?!

ரெங்கு : அது மட்டும் இல்லாம மரம் வைக்குறேன்னு சொல்லி ஐ.நா சபையிலே ஆட்டைய போட்டு இருக்காங்களாம்... 

கனகு : அட பாவிங்களா... இவனுங்க இத்தனை வருஷமா பசுமை ஆக்குறேன்.. ஆக்குறேன் சொல்லி இவனுங்க மட்டும் பசுமையா ஆகுறானுங்க போல...!!

ரெங்கு : இப்படியே பதவி ஆசை இல்ல இல்லன்னு சொல்லியே.... நம்மளை ஓட்டையாண்டியாக்கிடுறாங்க.. என்னத்த சொல்ல..?! இதுல ஒருத்தருக்கு பிரதமர் ஆசையே இல்லையாம்.

கனகு :  அது யாருய்யா இன்னொரு ராமதாஸ்..??

ரெங்கு : எல்லாம் நம்ம ராகுல்தான்... இவருக்கு மத்தவங்களை மாதிரி பிரதமர் ஆசை இல்லையாம்.

கனகு : மத்தவங்களை மாதிரியா...?? அது என்ன இவர் வேற எதாவது ஐடியா வைச்சு இருக்காரா என்ன..?! இனி நான்தான் நாட்டுக்கு மகாராஜான்னு சொல்வாரோ...??

ரெங்கு : ராஜா சொன்னாலே இவங்க பாட்டி தான் நியாபகம் வருது ..பதவி வேணும் வேணும் சொல்லிதான் தரல... பதவி வேணாம்ன்னு சொல்லி பார்ப்போம்ன்னு சொல்றார் போல....

கனகு : பதவி வேணாம்னா ஏன் தேர்தல்ல எல்லாம் நிக்குறார்...? எங்க பார்த்தாலும் பதவிக்கு சண்டை. என்னய்யா உலகம் இது...?! 

ரெங்கு : வெற்றிகரமா பொது குழுவை கூட்டி முடிச்சு குடும்பத்தோட கோலாலம்பூர் போயிட்டாராம் அஞ்சா நெஞ்சன்...

கனகு : ஆமா.. ஆமா.. பொது குழுவை அவர் நினைச்சா மாதிரி வெற்றிகரமா நடத்தி முடிச்சிட்டார்தான்...
ஆமா.. என்னதான் நடந்தது பொது குழுவில்..?! ஏன் இப்போ பொது குழுவை கூட்டினாங்க..?!

ரெங்கு : தலைவர் பதவி தேர்ந்தெடுக்க இருக்குமோன்னு சொல்லிக்குறாங்க கனகு... இதை கண்டுகிட்ட யாரோ நடுவுல புகுந்து ஆட்டத்தை கலைச்சுட்டாங்க...

கனகு : ஏன் என்ன ஆச்சு..?! அழகிரி ஏதாவது சொல்லிட்டாரா என்ன...??

ரெங்கு :  அவர் எதுவும் சொல்லல கனகு... சாதாரண பிரச்சனை. ஸ்டாலின் பேர சொல்லாம விட்டுட்டாங்க... அதுக்கு பொதுக்குழு கூட்டத்துல கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணிட்டாங்க... 

கனகு :  அடப்பாவமே... அதுக்கு தலைவர் என்னய்யா சொன்னார்...?!

ரெங்கு : முடிஞ்சா நான் தேர்தல்ல நிக்குறேன். என்னை எதிர்த்து நின்னு தலைவரா ஆகுங்கற மாதரி சொல்லிட்டார்... அவர் அப்படி சொன்னதுல ஸ்டாலினுக்கு கவலையாம்..

கனகு : பாருய்யா... இவருக்கும் பதவி ஆசை இருந்து இருக்கும் போல... இவருக்கு அடுத்து தி.மு.க-வுக்கு தலைவர் பதவி எதுக்கு.... அதுக்கு ஒரு பொது குழுவை கூட்டுங்கப்பா... சரி.. சரி.. ஸ்டாலின்கிட்ட போய் சொல்லுங்க... அடுத்த பொதுக்குழுவுல பேசிக்கலாம்ன்னு... 

ரெங்கு : இப்படிதானேய்யா போன பொதுக்குழு முடியும் போதும் சொன்னாங்க... பாவம்ய்யா அவரு...அதுக்குள்ளயே இன்னொரு பொதுக்குழுவா..?! அப்போ அடுத்த வாரம் அங்கயே போய்டலாம். ஹி..ஹி... டீ அங்கேயே கிடைக்கும். 

அண்ணாச்சி : கனகு அண்ணே... என் பொழப்புல மண்ணை போட்டுடாதீங்க... 
இந்தாங்க "டீ

கழுகு


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)


Monday, February 06, 2012

தமிழ் திரட்டி நிர்வாகிகளுக்கு ஒரு வேண்டுகோள்...!



தமிழ் வலைப்பதிவுகளைச் எல்லாம் சங்கமித்து ஒரு இடத்தில் திரட்டிக் கொடுக்கும் மையமாக தமிழ்த்திரட்டிகள் இருக்கின்றன. திரட்டிகள் தமிழ் வலைப்பதிவுகளைச் சேகரித்து உலகமெல்லாம் பரவி வாழும் தமிழர்களின் விழிகளுக்கு நல்ல கருத்துக்களையும் கட்டுரைகளையும் கொண்டு சேர்க்க வேண்டும். 

இதுவே திரட்டிகள் தொடங்கியதின் மையக்கருவாய் இருக்க வேண்டும் என்று நாங்கள் கணித்த போது திரட்டிகள் தங்களின் நிர்வாகச் செலவுகளை மீட்டெடுக்க கொஞ்சம் வியாபார யுத்தியோடு விளம்பரங்களையும் இன்ன பிற திட்டங்களையும் செயல்படுத்தினால் அவை எப்போதும் செழித்து நிற்கும் என்றும் எமக்குள் ஒரு எண்ணம் தோன்றிய காலங்களும் உண்டு.

தமிழின் முன்ணனி திரட்டிகள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் தமிழ்த் திரட்டிகள் இன்று எந்த நோக்கத்துக்காக தங்களின் செயலினைத் தொடங்கின என்பது திரட்டிகளை நடத்தும் முதலாளிகளுக்கே தெரியும்....ஆனால் அவை சர்வ நிச்சயமாய் சமீப காலங்களில் தமிழ்மணம் போன்ற முதன்மைத் திரட்டிகள் நல்ல எழுத்துக்களை மேலெடுத்து வந்து எம் சமூகத்துக்கு நல்ல வாசிப்பனுபவங்களை கொடுக்க கூடிய படைப்புக்களை தங்களின் முன்னணி வரிசையில் வைப்பதில்லை என்ற கடும் குற்றச்சாட்டை இந்தக் கட்டுரை வைக்கிறது.

நாங்கள் திரட்டிகள், எங்களால் இவ்வளவுதான் முடியும், எங்களுக்கு தணிக்கை செய்யவும், நல்ல கட்டுரைகளை மேலெடுத்துக் கொண்டு வந்து காட்டவும் நேரமும், பொருளும் இல்லை என்று வாதிட்டு எமது குற்றச்சாட்டை உடைத்தெறியவும் முயலாலாம்.  பயனில்லாத கூட்டு அரசியலை முன்னிலைப்படுத்திக் கொண்டு எப்போதும் காழ்புணர்ச்சி எழுத்துக்களை கரடு முரடாக எம் சமூகத்து பிள்ளைகளிடம் தங்களின் வலைப்பூக்களின் மூலமும், இணையத்தளங்கள் மூலமாகவும் எடுத்துச் செல்லும் பொறுப்பில்லாத மனிதர்களை கட்டுப்படுத்தவும் தடை செய்யவும் ஏன் இந்த திரட்டிகளால் இயலவில்லை? என்பதுதான் எமது கேள்வி!

உங்களின் வியாபார நோக்கில் எமக்கு எள் முனையளவும் உறுத்தல்கள் இல்லை... பொருளாதாய உலகில் பொருளின் தேவையும் அவசியமும் அதன் சீற்றமும் நாம் அறியாதது இல்லை. ஆனால் தவறான எழுத்துக்களை, மானுட சமூகத்தை உடைத்துப் போட்டு தமிழ் சமூகத்தின் எழுத்துக்களின் களம் இப்படித்தான் இருக்கும் என்று பொதுவாக உலகத்தீர் அடையாளம் சொல்லக் கூடிய கறுப்பு எழுத்துக்களை கூட்டு சேர்ந்து வாக்குகள் அளித்து முன்ணனி வரிசைக்கு கொண்டு வரும் போது...

நிர்பந்தப்படுத்தி வாசிப்பாளனின் விழிகளுக்குள் விசம் பரவி அது மூளையை சிதைக்கிறது என்ற மனோதத்துவ நிகழ்வை எப்படி மறந்தீர் எம் தமிழ்த் திரட்டிகளின் நிர்வாகிகளே...? உமக்கு வசதி இருந்தால் வந்து வாசித்து செல்லுங்கள்.... எமது திரட்டிகள் எமது கொள்கைகள் என்று நீங்கள் எம்மிடம் எதிர்வாதம் செய்வதை எந்தக்காரணம் கொண்டும் எம்மால் ஏற்க முடியாது. 

பொதுவில் வந்த பிறகு சரியான விளைவுகளைக் கொடுக்காத எழுத்துக்களை கடைப்பரப்பி அதை முன்னணி, வைரம், மகுடம் என்று அடையாளம் கொடுத்து, சாதி, இன, மத அரசியல் பாகுபாடுகளும் காழ்ப்புணர்ச்சிகளும் கொண்ட கட்டுரைகளைத் தொடர் பரப்புரை செய்யும் குற்றத்திற்காக இணையத்தையே முடக்குமளவிற்கு நமது தேசத்தில் சட்டமும் நீதியும் இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.

சமீபகாலத்தில் தமிழ் மணத்தின் மகுடத்தை எட்டிப்பிடிக்கும் கட்டுரைகளில் 99% தனிமனித தாக்குதல் நடத்தும், மத உணர்வுகளைப் புண்படுத்தும் சமூக விரோத கட்டுரைகளாக இருப்பதை எப்படி தமிழ் மணம் நிர்வாகம் ஏற்றுக் கொள்கிறது எமக்கு மட்டுமல்ல இன்னும் எத்தனையோ தமிழமணம்  நல விரும்பிகளுக்கும் அது ஆச்சர்யமே...!

குறைந்த பட்சம் மகுடத்தில் ஏறும் கட்டுரைகளையவது தமிழ் மணம் நிர்வாகம் வாசித்து தணிக்கை செய்ய முடியாதா என்ன?

மனித உணர்வுகளைத் தூண்டும் படி ஒருவர் எழுதுகிறான், வக்கிர உணர்வுகளைத் தூண்டுவது போல இன்னொருவர் எழுதுகிறார், மத உணர்வுகளை புண்படுத்தும் படி ஒருவர் எழுதுகிறார், மனிதநேயத்தை வெட்டிச் சாய்க்கும் படி ஒருவர் எழுதுகிறார், எப்போதும் சக பதிவர்களை தனது தொழில்நுட்ப அறிவினை காட்டி மிரட்டி ஒருவர் பகிரங்கமாக எழுதுகிறார்....

இப்படி எழுதுபவர்கள் எல்லாம் ஒன்று கூடி நின்று திரட்டிகளில் வாக்களித்து தன்னை முன்னிலைப்படுத்தி மேலெழும்பி தமிழ்ச்சமூகத்தின் அடையாளக் கொம்புகள் என்று தங்களின் கோரப்பற்களைக் காட்டுவதால் நல்ல எழுத்துக்கள் மேலே எழும்பி வரமுடிவதில்லை என்பதை.வருத்தத்துடன் ஒப்புக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது

இது எமது சமூகத்து வளரும் பிள்ளைகளை சீரழித்து சரியில்லாத ஒரு பாதைக்கு அழைத்துச் செல்கிறது என்பதை எப்படி நாம் கண்டு கொண்டே மெளனித்து நடப்பது?

பூனைக்கு மணி கட்டுவது வேண்டுமானல் எலிகளுக்கு பிரச்சினையாய் இருக்கலாம்......ஏனெனில் எலிகளுக்கு பூனை என்றால் பயம், ஆனால் பூனைகளுக்கு மணி கட்டுவதில் புலிகளுக்கு எந்தப் பிரச்சினைகளும் இல்லை என்பதை பூனைகள் அறிந்து கொண்டால் சரிதான்.

எந்த ஒரு திரட்டிக்கும் நாம் எதிரானவர்கள் கிடையாது... ஏனெனில் திரட்டிகள் கொடுத்த உத்வேகத்திலும் உற்சாகத்திலும் அந்த ஜனநாயகத்தை சரியாகப் பயன்படுத்தி மேலெழும்பிப் பறப்பவர்கள்தான் நாமும்....அந்த நன்றியுணர்ச்சியும்,  அன்பும் எம்மிடம் எப்போதும் உண்டு என்றாலும்....

சமீபகாலங்களில் திரட்டிகளை ஆக்கிரமிக்கும் அத்துமீறல் அடாவடி அனாவசிய கும்பல்களை அடையாளம் கண்டு அவர்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற வலுவான கோரிக்கையை திரட்டி நிர்வாகிகளிடம் இந்தக் கட்டுரை அன்போடு வைக்கிறது.

அதோடு மட்டுமில்லாமல் வேறு இணையப்பத்திரிக்கைகளில் வரும் நல்ல விசயங்களைச் செய்திகளை நகலெடுத்து தங்களின் வலைப்பூக்களில் பகிரும் தோழர்களை எல்லாம் தடுக்காமல், வாசிக்க வாய்ப்பில்லாதவர்கள் வாசிக்க வேண்டி பகிர்கிறார்கள் என்ற நல்நோக்கையும் நாம் உணரவேண்டும். அப்படி பிரதி நகல் எடுத்து வெளியிடும் தோழர்கள், கறுப்பு எழுத்துக்களை எழுதும் பூனைகளை விட எவ்வளவோ மேலானவர்கள் என்பதையும் அறிக;

இவையெல்லாம் கேட்க நீ யார்...? என்று கேட்கும் குரல்வளைகளுக்கு நாம் சொல்வது எல்லாம் ஒன்றே ஒன்றுதான்.......

நன்மையை யார் வேண்டுமானலும் சொல்லலாம்....நீதியைப்பற்றி யார் வேண்டுமானலும் பேசலாம்....! 

பொதுவில் நடக்கும் சமூகதீங்குகளை உணர்தலும் அதன் கறைகளை களைதலும் விழிப்புணர்வு என்னும் உணர்ச்சியின் சீற்றம் என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

செம்மையான சமுதாயத்தின் அங்கமாவோம்...! பொறுப்புள்ள தமிழ் குடிமக்களாவோம்....! செழுமையான சமுதாயத்தைப் படைப்போம்...!
  
 கழுகு

பின் குறிப்பு:  இந்த பதிவினை பகிரவிரும்பும் நண்பகள் தத்தம் வலைப்பதிவுகளில் இதை பகிர்ந்து நிறைய பேரிடம் இதை கொண்டு சேர்க்கவும். நமது வலுவான குரல் சரியான மாற்றத்தை விளைவிக்கும். 

 
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)


 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes