Friday, August 05, 2011

பேச்சு என்னும் சக்தி! கருத்துப் பரிமாற்றம் பற்றிய பார்வை!




ஒவ்வொரு மாதிரியாய் ஒவ்வொரு விதமான அதிர்வலைகளை பரப்புபவராக இருக்கிறார்கள். சாந்தமாய் கருணையாய்,எல்லா திறன்களையும் உள்ளடக்கி அமைதியாய் பதிலளிக்க கூடியவராய் ஆழ்ந்த அமைதிக்கு சொந்தக்காரராய் அன்பை பகிர்பவராய் சிலர் இருந்து விடுகிறார்கள். பல நேரங்களில் இப்படிப்பட்ட மனிதர்களைச் சந்திக்கும் பொழுது என் மீது எனக்கு ரொம்பவே வெறுப்பு வருகிறது.

முயற்சிகள் செய்பவனாகவும், அகங்காராம் அழியாதவனாகவும், அதிர்ந்த பேச்சுக்கு சொந்தக்காரனாகவும், எல்லாம் எனக்குத் தெரியும் என்று காட்டிக் கொள்பதில் முனைப்பு உள்ளவனாகவும் அப்படிக் காட்டிக் கொள்வதற்காகவே நிறைய பேசுபவனாகவும் பல நேரங்களில் இருந்து விடுகிறேன். எப்படி மாறுவது என்று சிந்திப்பதில் கூட வந்து அமர்ந்து விடும் கர்வத்தை நான் எங்கே போய் கரைப்பது?

சிலரை ரோட்டில் சந்தித்து அவசர வேலைகளுக்கு நடுவே பேசிக் கொண்டே இருப்போம். அந்த மனிதர் நிறைய அன்பினையும் அமைதியையும், சந்தோசத்தையும் நமக்கு பரப்பிக் கொண்டே இருப்பார். நேரம் போவதே தெரியாமல் இன்னும் ஒரு 5 நிமிடம் பேசலாம் என்று எண்ணி எண்ணி நேரத்தை நாம் நீட்டித்துக் கொண்டே இருப்போம். இதற்கு அந்த மனிதரின் ஆழ்ந்த எண்ணமும் நம் மீது உள்ள விருப்பமும் அகந்தையற்ற மனமும்தானே காரணமாக இருக்க முடியும்.

இதற்கு மாறாக சிலரை பார்த்தால்.. அச்சச்சோ.. இவனா இவன் கிட்ட மாட்டினா போச்சேஎன்று அலறி அடித்துக் கொண்டு ஓடுவோம். அப்படியே அவரிடம் மாட்டிக் கொண்டால் அவரின் சுயதம்பட்டம், மற்றும் அகந்தையான பேச்சு என்று எல்லாமே நம்மை எண்ணை சட்டியில் வைத்து பொறிப்பது போல பொறிக்க எப்போடா போவோம் என்று தோணும். இதற்கு காரணம் எதிராளியின் சுயவிமர்சனம்.. ஒரு ஆல் இந்தியா ரேடியோ விளம்பரம் மாதிரி தன்னைப்பற்றி அவர் அடித்துக் கொள்ளும் தம்பட்டத்தில் நம்மை கீழே தள்ளும் முயற்சிகள் இருப்பதுதான்.

வழியில் ஒரு நண்பரை பார்த்திருக்கிறார் மிஸ்டர் எக்ஸ். மிஸ்டர் எக்ஸ் ஹாய்..! ஹலோ சொன்னதோடு சரி.. மத்த படி வழியில் சந்தித்த அந்த நபர் விடாமல் ஒரு 1 மணி நேரம் அவரைப்பற்றியும் அவரது வீர தீர பராக்கிரமங்கள் பற்றியும் பேசிக் கொண்டே இருந்து இருக்கிறார். நமது நண்பர் எக்ஸின் காதில் ரத்தம் வராதது ஒன்று தான் குறை. ஒரு மணி நேரம் கழித்து பேசி முடித்த அந்த வழிப்பறி நண்பர்.. ( வழியில் சந்தித்து நமது நேரத்தை பறிப்பவரை இப்படித்தானே அழைக்க முடியும்...அவ்வ்வ்வ்வ்வ்) எல்லாம் பேசி விட்டு சொன்னாராம்.. நான் என்னைப் பற்றி பேசி முடித்துவிட்டேன்.. இனி நீங்கள் என்னைப் பற்றி பேசுங்கள் என்று........????!!!! நம்ம நண்பர் மிஸ்டர் எக்ஸ் தலை சுற்றி மயக்கமே போட்டு விழுந்து விட்டாராம்.

நான், நான் என்று அதிர்ந்து அதிர்ந்து தன்னைப் பற்றி பேசிப் பேசி வெற்றிலைப்போட்டுக் கொள்பவர்களுக்கு அதில் பயங்கர சுகம்... ஆனால் பாவம் கேட்பவர்கள் காதுகள் தான் ரத்த பெருக்கெடுத்து ஓடும்.

உலகம் பரந்து விரிந்தது. இதில் நீங்களும் நானும் வெறும் புள்ளிகள். எப்போ  பார்த்தாலும் நம்மை முன்னிலைபடுத்தி வாழும் வாழ்க்கை எல்லோருக்கும் நலம் பயக்காது. எதிரில் காணும் மனிதரின் நலம் விசாரித்தலும் அவர்களின் பிரச்சினைகளை செவி கொடுத்து கேட்டலும் அக்கறையாக பதிலளித்தலும், இயன்ற அளவு அவர்களோடு செய்திகளை பகிர்ந்து கொள்ளுதலும் மேலும் அவர்களின் அனுமதியோடு பேசுதலும் நல்ல பண்பாக இருக்குமென்று நினைக்கிறேன்.

எவ்வளவுதான் பயிற்சி இருந்தாலும் பாழாய்ப்போன இந்த மனசு காலேஜ் கட்டடிச்சிட்டு  தியேட்டர் போயி சினிமா பாக்குற மாதிரி.... நம்மளயே ஏமாத்திட்டு திமிரு பேச்சு பேச ஆரம்பிக்கிது... இப்போ எல்லாம் செம கோவம் வருது சார் எனக்கு...? நானே மனசப்பாத்துகேள்வி கேட்டுக்குறேன்... என்ன அருகதை இருக்கு உனக்கு? இவ்ளோ மமதை உனக்கு? அப்துல்கலாம் மாதிரி பெரிய பெரிய அறிஞர்கள் எல்லாம் அதிர்ந்து கூட பேசுறது இல்லை. ஆனா நாக்கு இருக்குன்றதாலேயே நீ என்ன வேணா பேசுவியா? நீ பேசுறத ரெக்கார்ட் பண்ணி வச்சு கேட்டுப்பாரு... உனக்கு என்னா தெரியும்னு உனக்கே தெரியும்........

ஆமா சார் இப்டி எல்லாம் பேசி பேசிதான் சரி பண்ணிக்க ட்ரை பண்ணிகிட்டு இருக்கேன்........ ! பெரிய மேதை ஆகலேன்னா கூட பரவாயில்லை.... நம்மள பாத்து யாரும் ஓடி ஒளியாம இருந்தா சரிதான்....!

பேச்சு என்பது ஒரு சக்தி மிகுந்த கருத்து பரிமாற்றம், அதை உபயோகம் செய்யும் போது இடம் பொருள் ஏவல் எல்லாம் பார்த்து பகிரும் போது அதன் சுவை வாழ்வில் கூடிப்போகும் என்ற உண்மையை அறிவோம். எதிராளியின் மனோநிலையையும் காலச் சூழலையும் அறிந்து நம் செய்தி பரிமாற்றங்களை செய்வோம்! விழிப்புணர்வுற்ற சமுதாயத்தின் அங்கமாவோம்


கழுகிற்காக
 தேவா 



(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)



2 comments:

தனி காட்டு ராஜா said...

////வழியில் ஒரு நண்பரை பார்த்திருக்கிறார் மிஸ்டர் எக்ஸ். மிஸ்டர் எக்ஸ் ஹாய்..! ஹலோ சொன்னதோடு சரி.. மத்த படி வழியில் சந்தித்த அந்த நபர் விடாமல் ஒரு 1 மணி நேரம் அவரைப்பற்றியும் அவரது வீர தீர பராக்கிரமங்கள் பற்றியும் பேசிக் கொண்டே இருந்து இருக்கிறார்.////

இதை தான் இப்போ நெறைய பேரு பதிவுலகில் செய்வதாய் என்னை ஒன்னு விட்ட சித்தப்பா சொல்லுறாரு :))

பேச்சுக்கு மாற்று வழி(அடுத்த வழி) எழுத்து என்று என்று என் பக்கத்து வீட்டு மாமாவோட வீட்டு காரம்மா ஷகிலா ஆண்டி சொல்லுவ்வாங்க

எழுத்துக்கு அடுத்த வழி செயல்

செயலுக்கு அடுத்த வழி மௌனம்

மௌனதுக்கு அடுத்த வழி சுய மற்று எல்லாவற்றிலும் இருப்பது.... :)

மாற்று வழி என்பதை அடுத்த வழி என்றும் சொல்லலாம்

தனி காட்டு ராஜா said...

warrior -ல் வரவேண்டிய பதிவு கழுகில் வந்துள்ளதே :)

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes