Tuesday, September 27, 2011

விழித்து எழுக எம் தோழர்களே...! சமூக பிரஞை பற்றிய ஒரு பார்வை!


 
 
 
 
எந்த கணமும் தாக்குதல் நடத்தப்படலாம்,உடலின் எங்கே வேண்டுமனாலும் அம்புகள் தைக்கலாம், எதிரியின் வாள் வீச்சில் எப்போது வேண்டுமானாலும் கழுத்தறு படலாம், உறக்கத்தையும் பசியையும், உறவுகளையும் கடந்து...இரவையும், பகலையும், வெயிலையும் குளிரையும் பொருட்படுத்தாது எந்நேரமும் வாள் வீசிக் கொண்டு இருப்பவன் தான் போராளி.....

கூச்சலுக்கும்,அலறலுக்கும் சுற்றி கிடக்கும் பிணங்களுக்கும் நடுவே..இருப்பவனுக்குத் தெரிவதெல்லாம் ஒன்றேதான் லட்சியம்....! தம்முடைய சோர்வு தமது சகாக்களுக்கு வந்துவிடக் கூடாது என்று எப்போதும் தன்னை முன்னிறுத்தி.....முன்னேறி.. முன்னேறி தனது உற்சாகத்தையும் உத்வேகத்தையும் சுற்றியுள்ள தோழர்களுக்கு பரவச் செய்கிறானே...அவனின் புத்தியில் வேறு என்ன இருந்து விடப் போகிறது....?

கொள்கையும் லட்சியமும்தானே?

வாள்களின் வீச்சு..
கேட்டு… கேட்டு மரத்துப் போயின
எமது செவிகள்!
சோர்ந்து போன எதிரிகளின்
யுத்திகள் எல்லாம்...
எம்மை அழிக்கு உ பாயம் அறியாது...
கலங்கச் செய்கின்றன..புத்திகளை!
பட்ட இடமெல்லாம்...
பரவும் நெருப்பினை தோட்டாக்களும்
அம்புகளும் வாள்களும்...
என்னதான் செய்ய முடியும்?
ஒன்று நீர் நெருப்பாய் மாற வேண்டும்
அல்லயேல்... நீர் நீராய்...மாறி...
எம்மை குளிர்விக்க வேண்டும்...
குளிர்விக்கும் உபாயம்..அறிந்திலீர்;
வாரும் நெருப்பாய் மாறூம்...
எம் உக்கிரத்தினை ...
கற்று.. திக்கெட்டும் பரவி...
கொடுமைகளை..எரித்துப் போடும்!

ஒரு டாக்டர் தொழில் நடத்தி வாழத்தெரியாதவரா சேகுவாரா....? மூன்று வேளை உண்டு,பொருள் தேடிச் சேர்த்து, பிள்ளை குட்டிகளுடன் சுகவாசியாய் வாழ்ந்து மரிப்பதில் என்ன பிரச்சினை இருக்கிறது?

பிறகு எதில் செளகரியம் அவருக்கு வீட்டை விட்டும்,பிள்ளைகளை விட்டும் பிரிந்து செல்ல அவரை உந்தியது எது? அர்ஜென்டினாவில் பிறந்து கியூபாவிற்காக அவர் போராடவேண்டிய அவசியம் என்ன? ஒரு நாட்டின் தொழில்துறை அமைச்சராய் இருந்து சுக போகங்களை அனுபவிக்கத்தெரியாதவரா சே....?

கியூபாவிற்கு பிறகு, காங்கோ, பொலிவியா என்று அந்த மனிதன் நகர்ந்து கொண்டே இருந்த நோக்கம்தான் என்ன? உள்ளே எரிந்த “ தீ ” தானே? அத்தனை பெரிய தீ எரியாவிட்டாலும் கூட பரவாயில்லை தோழர்களே..வாழ்வின் போக்கு போகிற போக்கில் இயன்றதை செய்வோம் என்ற நெருப்பு ஏன் நம்மிடம் இல்லை?

இன்னும் ஒற்றை ஓட்டுக்கு கையில் பணம் திணிக்கும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். வாங்கும் நிலையில் வைத்திருப்பதால்தான் கொடுக்கமுடியுமென்ற மிகப்பெரிய சதிதானே ஓட்டரசியல்? சகித்து சகித்து எப்படி தோழா வாழ்வது...? பேசிப் பேசி தீர்த்துவிட முடியுமா எல்லா பிரச்சினைகளையும்! 

" தெருவோர குப்பைகளைக் கூட மதித்து ஒரு குப்பைத்தொட்டி கட்டிவிடுகிறார்கள். குடியிருக்க வீடில்லாதா எம்மக்களை எப்படி ரோட்டோரம் விட்டு வைத்தார்கள்? "

முடியுமா? சாத்தியமா? நடக்குமா என்று கோடிகுரல்கள் கேட்கின்றனவே...ஐயகோ! கேட்கின்ற குரல்கள் எல்லாம் உரக்க சப்தம் செய்தல் கோட்டை கொத்தளங்கள் எல்லாம் பொடிப்பொடியாய் ஆகதா? மேலும் மேலும் எம்மக்களை ஆட்டு மந்தைகளாக்கி சுய நல சேற்றில் தள்ளிவிட்டு சுகம் காணும் அதிகார வர்க்கங்கள் தூள் தூள் ஆக வேண்டாமா?


சாலையோரத்தில் சிறு நீர் கழித்துக்கொள்ளுங்கள், தெருவெங்கும் காறி உமிழுங்கள், குப்பை கூளங்கள் போடுங்கள்.ஒத்த பிள்ளைக்கு உடையில்லாவிட்டாலும் பத்துப் பிள்ளைகள் பெற்றுக்கொள்ளுங்கள், சண்டையிடுங்கள், சாதியாய் பிரிந்து நில்லுங்கள், மதமாய் மாய்த்துக் கொள்ளுங்கள். அரசு அதிகாரங்களுக்கு அதுதானே வேண்டும்...! நாம் எல்லோரும் வெற்று வயிறோடு பசி.....பசி என்று கத்திக் கொண்டே.....வாக்குகள் அழித்து விட்டு துரைமார்களைப் பார்த்து தலைவா…… என்று கும்பிட்டுக் கொண்டே இருப்போம்....அவர்களும் வெள்ளை வேட்டி சட்டையோடு அம்பாஸிடர் கார்களில் பவனி வரட்டும்!

தேர்தலில் இதைச் செய்கிறேன் அதைச்செய்கிறேன் என்று சொல்வது பார்த்தும், செய்து விட்டேன் எமது இதுதான் சாதனைப் பட்டியல் என்று பல்லிளித்துக் கொண்டு வருபவர்களைப் பார்த்தால் எப்போது நமக்கு ஆத்திரம் வருமோ அந்த ஒரு நாள் தான் இந்தியாவின் ஒரு உண்மையான சுதந்திர நாள்.. ஏகாதிபத்தியம் மனதளவில் ஒழியும் நாள்....

" நீவீர் ஆட்சிக்கு வந்தால் எம்மக்களுக்கு செய்துதான் ஆகவேண்டும்...அது உமது பணி ஒவ்வொரு தொகுதியிலும் இருந்து எமது பிரதி நிதியாகத்தானே நீங்கள் செல்கிறீகள்...? ஒட்டு மொத்த மக்களாகிய நாங்கள் வரமுடியாது...என்று எமது பிரச்சினைகளை பிரதிபலிக்கும் எமது கோரிக்கைகளை கோட்டையில் சொல்லும் பிரதி நிதிகள் நீங்கள், அதற்காகத்தான் வாக்களித்து உம்மை தேர்ந்தெடுத்தோம்...!

மக்களை அதிகாரம் செய்ய அல்ல அரசு, அது மக்களையும் மக்களின் பிரச்சினைகளையும் நிர்வாகம் செய்ய.....! இங்கே எப்படி வந்தது முதாலாளித்துவமும், கூளைக் கும்பிடுகளும்? கேள்விகளை நமக்குள்ளேயே கேட்டு கேட்டு ......வெறுமனே மண்ணில் அடிமைகளாய் அழுகிபோவாதா எமது மூளைகள்....?இப்போது சொல்லுங்கள் போர் எங்கே நடக்க வேண்டும் என்று...?

ஒரு தெருவிளக்கு விடியல் தாண்டியும் எரிகிறதென்றால்....அங்கே நமது வரிப்பணம் விரயமாகிறதென்ற எண்ணம் ஏன் நமக்கு உதிப்பதில்லை? இலவசாமாய் நாம் பெறும் பொருளெல்லாம் கொடுப்பவர்களின் சொத்திலிருந்தா கொடுக்கப்படுகிறது.....வள்ளல் பட்டம் எதற்கு...? விருத்திக்கு வரும் தொழிற்சாலைகளையும் வேலை வாய்ப்புகளையும் கேட்க மறந்து இலவசங்களின் மீது ஆசைப்பட்டதில் என்ன தோழா நியாயம் இருக்கிறது....?


மாறாக வேளாண்மை செய்யும் உரத்தின் விளையை குறைத்திருக்கலாம்....எல்லா பிள்ளைகளின் கல்லூரி வரையான கல்வியை இலவசமாக்கியிருக்கலாம்.ம்ம்ம்ம்ம்ம் அறிவு விருத்தி வேண்டாமென்று தானே எம்மக்களை அழிவு விருத்திக்கு ஆளாக்கியிருக்கிறீர்கள்...?

சமூக பிரஞ்ஞை எல்லாம் யாரோ ஒரு அரசியல் கட்சி தலைவனுக்கும், ஒரு நடிகனுக்கும், அல்லது பத்திரிக்கையாளனுக்கும், தொலைக்காட்சி வைத்திருப்பவருக்கும் மட்டும் வரட்டும்....மீதியுள்ள ஜனங்கள் எல்லாம் வாய் பிளந்து காத்திருக்கட்டும்....

கடவுள் என்று ஒருவர் வருவார்... பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பாரென்று…!

கடவுள் இதுவரை வந்ததில்லை இனியும் வரப்போவது இல்லை செயல்படவேண்டியது எல்லாம் மனிதர்களாகிய நாம்தான்…

இதை யார் உணர்வார்? (இந்தக் கேள்வியைக் கூட மாற்றிதான் கேட்க வேண்டும்)

யார் உணர்த்துவார்?(யாரோ ஒருவர் வருவார் என்று காத்திருப்போம் ஜனநாயக அடிமைகளாக......)

மேலே உள்ள புகைப்படம் சினிமா சூட்டிங் அல்ல இந்திய வீதிகளில் எடுக்கப்பட்டதுதான்...!
 
 
 
கழுகிற்காக

(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
 
 
 

2 comments:

வெளங்காதவன்™ said...

விழிக்கவும் மாட்டோம், உழைக்கவும் மாட்டோம்!

இலவசமே எங்கள் லட்சியம்...

- வெகுசனம்....

#நெத்தியடிப் பதிவு அண்ணே!

Unknown said...

அழகான ஆக்ரோஷமான, யதார்த்தமான உண்மையான அனைவரும் உணரவேண்டிய பதிவு.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes