Showing posts with label ஆதார். Show all posts
Showing posts with label ஆதார். Show all posts

Monday, October 17, 2011

இந்தியர்களுக்கான 12 இலக்க அடையாளம்...! ஆதார் எண் பற்றிய ஒரு பார்வை!






ஆதார் என்றால் என்ன?

ஆதார் என்பது 12 இலக்க அடையாள எண்.அது இந்திய அரசால் இந்தியர்களுக்கு வழங்கப்படும். 


இந்த எண் உங்களுடைய முகவரிக்கான அடையாளமாக இந்தியா முழுவதும் செல்லுபடியாகக்கூடியது.



ஆதார் பெயர்க்காரணம்: 


அது என்ன ஆதார் ? அதாவது இந்தியாவில் உள்ள மக்கள் அதிகமாக பேசக்கூடிய ஒரு சில மொழிகளில் ஆதார் என்ற வார்த்தை கிட்டத்தட்ட ஒரே அர்த்தத்துடனும், உச்சரிக்கவும் எளியதாக உள்ளதால் 


உருவானதுதான் இந்த ஆதார். ஆதார் என்றால் ஆதாரம் என்று அர்த்தம்.   



ஆதாரில் அடங்கியுள்ளவை:

இதில்  16kb மெமரி சிப் ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். அதில் உங்களது ரத்த வகை, விழி அமைப்பு, இடது கை மற்றும் வலது  கை விரல்களின் ரேகை,  போன்ற உங்களின் அனைத்து அடிப்படை தகவல்களும் சேமித்து
வைக்கப்படும்.



தனித்துவம்:

இந்த 12 இலக்க எண் உங்களுக்கே உரித்தானது. ஒருமுறை வழங்கப்பட்டுவிட்டால் வாழ்நாள் முழுவதும் அது உங்களுடையதே வேறு எவருக்கும் இந்த எண் வழங்கபட மாட்டா.

இது ஒரு ரேண்டம் எண், இந்த எண் நீங்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் தரப்படும் .



எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்:

இந்த ஆதாரை பயன்படுத்தி வங்கியில் கணக்கு துவங்கலாம்.புதிய தொலைப்பேசி இணைப்பு பெறலாம். அரசு மற்றும் அரசு சாரா அனைத்து சேவைகளைப் பெறுவதற்காகவும் இதை அடையாள சான்றாக பயன்படுத்தலாம். 


எப்படி வாங்குவது:

கிட்டதட்ட அனைத்து மாவட்டங்களிலும் ஆதார் முகாம் உள்ளது. எனவே தத்தம் மாவட்ட முகாம்களுக்கு ஆதார் அட்டை தேவைப்படுவோர் கீழ்க்கண்ட ஆவணங்களை எடுத்துச்செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1.புகைப்பட அடையாள சான்று ( பான் கார்டு,வாக்காளர் அடையாள அட்டை போன்றவை)

2.முகவரிக்கான சான்று (மின்  கட்டண ரசீது ,தொலைபேசி ரசீது, குடும்ப
அட்டை,வீட்டு வரி ரசீது போன்றவை )

 

அங்கு சென்றவுடன் உங்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு பதியப்படும். பின்பு உங்களின் விழி அமைப்பு, கைரேகை,புகைப்படம் போன்றவை பதியப்படும் அவ்வளவுதான். உங்களுக்கான தற்காலிக எண் வழங்கப்படும் (ஒரு அத்தாட்சி சான்று).

நமது வங்கி கணக்கு தொடர்பான அடிப்படை விடயங்களும் தரவேண்டும் (அவரவர் விருப்பத்தை பொருத்து).



தற்காலிக எண் :

அதாவது நீங்கள் பதிவு செய்த நாளிலிருந்து 60 -90 நாட்களுக்குள் ஆதார் உங்கள் வீடு தேடி வந்துவிடும்.

இல்லையெனில் இந்த தற்காலிக எண்ணை வைத்து உங்களின் ஆதார் விவரங்களை நீங்கள் கேட்டு தெரிந்துக்கொள்ளலாம்.

இந்த எண் 28 இலக்கங்களை கொண்டது . முதல் 14 இலக்கம் அத்தாட்சி எண் மீதமுள்ள 14 இலக்கம் நீங்கள் பதிந்த தேதி மற்றும் நேரத்தை குறிப்பதாகும்.      

வயது வரம்பு உண்டா:

இந்த திட்டதிற்கு வயது வரம்பே கிடயாது . பிறந்த குழந்தை முதல் மூத்த குடிமக்கள் வரை அனைவரும் பெறலாம் .

இன்னாப்பா காமெடி பண்ற ? பொறந்த குழந்தைக்கு எதுயா டிரைவிங் லைசென்ஸ் ?

பொறுங்கள்... குடும்பத்தில் ஒருவரிடம் அனைத்து ஆவணங்களும் இருந்தால் போதும். அனைவரும் அதை வைத்து பதியலாம். (கைரேகை,விழியமைப்பு,புகைப்படம் போன்றவை போலிகளை அண்டவிடாது என்பதால் தான் இந்த வசதி)

குழந்தைகளுக்கு கைரேகை வளர சில ஆண்டுகள் ஆகுமே? அதற்க்குதான் விழித்திரையும் பதியப்படுகிறது.



செலவு :

இந்த திட்டதிற்கு முழு செலவையும் அரசே ஏற்றுக்கொள்கிறது. எனவே இது ஒரு இலவச திட்டம்.



ஆதார் சந்தேகங்களுக்கு :

அழையுங்கள் =             1800-180-1947      
ஃபேக்ஸ் = 080-2353 1947
கடிதங்களுக்கு = தபால் பெட்டி எண் 1947, GPO பெங்களூர்-560001
மின்னஞ்சல் = help@uidai.gov.in



நிறுவனங்கள்:

ஆதார் எண் வழங்கும் பணியில் இன்போஸிஸ் நிறுவன உரிமையாளர்களில் ஒருவரான நத்தன்நீலேகனி தலைமையில் சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா,பாங்க் ஆஃப் பரோடா,இந்தியன் பாங்க்,இந்தியன் ஓவர்சீஸ் பாங்க்,டீம் லைஃப் கேர் இண்டியா பிரைவேட் லிமிடட்,ஸ்ரீஷிகாஜ் போன்ற நிறுவனங்கள் இணைந்து பணியாற்றுகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை கார்வி என்ற நிறுவனம் இந்த பணியில் ஈடுபட்டுள்ளது. நம்முடைய விவரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலதில் பெறப்படுகின்றன.



ஆதார் பற்றிய பொதுவான சந்தேகங்களும் அதற்கான பதில்களும்:

*ஆதார் என்பது குடும்ப அட்டையை போல்,வாக்காளர் அடையாள அட்டையை போல் மற்றுமொரு அட்டையா? .

கிடையவே கிடையாது ஆதார் என்பது 12 இலக்க எண்.மற்றவற்றில் எளிதாக போலி என்று ஒன்று உருவாக்கலாம் இதில் முடியாது.

* குடும்பத்திற்கு ஒன்று இருந்தால் போதுமா? இது ஒவ்வொரு தனி     மனிதருக்கும் வாங்க வேண்டும்.

* இது இந்திய குடிமகன்/மகள் என்பதற்கா சான்றா? கிடையவே கிடையாது இது உங்களுக்கான அடையாளம். பிறநாட்டவரும் பெறலாம்(நிபந்தனைகளுக்கு உட்பட்டு )

* கண்டிப்பாக வாங்கவேண்டுமா?. இல்லை, விருப்பப்படுபவர்களுக்கு மட்டும்.

* ஒருவர் பல ஆதார் வாங்கலாமா? ஒருவருக்கு ஒரு எண் மட்டுமே .

* எனக்கு ஃபேன்சி நம்பர் வேணும். இது செல்போன் இணைப்பு எண் கிடயாது.

* பாஸ்போர்ட்,குடும்ப அட்டைகளுக்கு மாற்றாக பயன்படுத்தலாம். அவற்றை வாங்க வேண்டுமானால் பயன்படுத்தலாம். மாற்றாக பயன்படுத்த இயலாது.
       
       
சர்ச்சைகள்:

1. இந்த திட்டதிற்கான செலவு 3ஆயிரம் கோடி என்றார்கள் ! ஆனால் உண்மை என்னவென்றால் இது வெறும் 10 கோடி பேருக்கு மட்டுமே!  இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்த 15 ஆயிரம் கோடி தேவைப்படும் 2017-ல் தான் முடியும்( ஒரு வேல அடுத்த 2g யோ?)

2. நம்முடைய அனைத்து தகவல்களும் அரசாங்க டேட்டா பேஸில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் நம்மை பாதுகாப்பு என்ற பேரில் கண்காணிக்க வாய்ப்பு உண்டு!

3. இந்த திட்டத்தின் மூலம் போலிகளை முழுமையாக ஒழிக்க முடியாது என மான்டெக் சிங் அலுவாலியா கருத்து தெரிவிதுள்ளாரே.

4. இதற்கான மென்பொருள் வெளிநாட்டில் இருந்து வாங்கப்பட்டுள்ளதாகவும் நம்முடைய தகவல்களை அவர்கள் எளிதில் பயன்படுத்தலாம் எனவும் ஒரு சாரார் கூறுகின்றனர்.          
ஆதார் பற்றிய மேலும் சில விவரங்களுக்கு http://naalroad.blogspot.com/
 
 

கழுகிற்காக
  சூர்யா

(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
 



 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes