Wednesday, January 19, 2011

திக்கெட்டும் கொட்டு முரசே..! பெண்கள் பற்றிய ஒரு பார்வை...



பெண்களைப் பற்றிய சமுதாயத்தின் பார்வை எப்படி இருக்கிறது ? மேலும் நவீன யுகத்தில் பெண்களிடம் ஏற்பட்டிருக்கும் சில மாற்றங்களின் எல்லா வழிமுறைகளும் சரியானதுதானா? ஊடகங்களில் பெண்களின் நிலை என்ன? கழுகுக்கு தோன்றிய கேள்விகளுக்கு ஒரு பெண் பதிவர் பதிலளித்தால் அல்லது கட்டுரை சமைத்தால் சரியாக இருக்குமே என்று எண்ணிய போது நமது எண்ணத்தில் சட்டென்று வந்தவர் திருமதி. கெளசல்யா.....

கட்டுரை என்றவுடன் அதுவும் விழிப்புனர்வு கட்டுரை என்றவுடன் சளைக்காமல் உடனே எழுதி கொடுத்த தோழி கெளசல்யாவுக்கு நன்றிகளை கூறியபடி கட்டுரைக்குள் போவோமா....

பெண்

இயற்கையில் நாம் பார்க்கும் நல்லவை அனைத்தும் பெண் வடிவிலேயே பார்க்க படுகிறது. எந்த இடத்தில் ஒரு பெண் மதிக்கப்படுகிறாலோ அங்கே அமைதியும், சாந்தமும் தவழுகிறது. பெண் எங்கே வஞ்சிக்கப்பட்டு கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறாலோ அங்கே மனிதமே  செத்துவிடுகிறது. உண்மையில் பெண் எப்படி எல்லாம் மாறுகிறாள் அல்லது மற்றவர்களால் எப்படியெல்லாம் மாற்ற படுகிறாள்?


அழகு

காலங்காலமாகவே ஒரு பெண் என்பவள் ஒரு ஆச்சரிய பிம்பமாகவே பார்க்கப்பட்டு வருகிறாள். ஏதோ ஒன்று அவளிடம் இருப்பதாகவே எண்ணி பலராலும் அதிகமாக உற்று நோக்கப்படுகிறாள். இது நன்மையை ? தீமையா? என்றால் இன்றைய காலகட்டத்தில்   நன்மையைவிட தீமையே அதிகமாக இருக்கிறது என்பது என் கருத்து.


பெண் என்றாலே அழகு என்ற கண்ணோட்டத்தில் தான் முதலில் எல்லோராலும்  பார்க்கபடுகிறது. அழகை விட அவளிடம் கொட்டிக்கிடக்கும் திறமைகளை யாரும் முதலில் கவனிப்பது இல்லை. அவளது வெளித்தோற்றமே அதிகமாக கவனிக்கபடுகிறது. இந்த கவனிப்பு  மாற்ற படவேண்டும்.

ஆனால் ஆண்களால் மட்டும் தான் இவ்வாறு கவனிக்கபடுகிறது என்பது மிக பெரிய தவறு. ஒரு சில பெண்கள் திறமைகளை விட தங்களது புற அழகிற்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதை வைத்தே தங்களை முன்னிலைபடுத்துகிறார்கள். தொலைகாட்சிகளில் வரும் விளம்பரங்களே இதற்கு ஒரு உதாரணம்.

விளம்பர உலகம் 

ஒரு கார் விளம்பரம் என்று பார்த்தோம் என்றால் எரிபொருள் சிக்கனம், அதிகபடியான மைலேஜ் , இருக்கை வசதி, இயந்திரங்களின் வடிவமைப்பு இவற்றைப்பற்றி சொன்னால் வாங்க நினைப்பவர்கள் கூர்ந்து நோக்குவார்கள். ஆனால் இதைவிடுத்து நான்கைந்து மாடல் அழகிகள் அரைகுறை ஆடையுடன் பல கோணங்களில் காட்சியளிப்பதற்க்கும், காருக்கும் என்ன சம்பந்தம் என்று தான் புரியவில்லை...??!!

இதில் யாரை குறை சொல்வது ?? 

மக்களின் ரசிப்புத்தன்மை இப்படிப்பட்டதுதான் என்று எண்ணி விளம்பரம் தயாரிப்பவர்களையா  ?? அல்லது அதில் நடிப்பவர்களையா ?? அல்லது அந்த விளம்பரம் வெளியிட்ட தொலைக்காட்சியையா ??ஆண்கள் உபயோகிக்கக்கூடிய பொருட்களுக்கும் கூட பெண் மாடல்கள்தான் தேவைபடுகிறார்கள்.  அவ்வாறு நடிக்கவேண்டிய அவசியம் அந்த பெண்களுக்கு ஏன் ? பணத்திற்காகவும், புகழுக்காகவும் தங்களை கூச்சம் இன்றி வெளிகாட்டுகிறார்கள் அல்லது  அப்படி  காட்ட  வைக்கபடுகிறார்கள் ...?! மீறி கேட்டால் நாகரிக உலகில் இது சகஜம் என்கிறார்கள். அரைகுறை ஆடை அலங்காரம்தான் நாகரீகத்தின் அளவுகோலா...? 

திரை படங்களில் ஆபாசம் 

திரைப்படங்களில் முன்பெல்லாம் கதாநாயகியை தவிர கூட நடனம் ஆடும் பெண்கள் தான் குறைவாகவும் கவர்ச்சியாகவும் உடை அணிந்து வருவார்கள். தவிரவும் கவர்ச்சி நடனம் ஆடுவதற்கு என்று ஒரு பெண் இருப்பார். ஒரு பாடலுக்கு அந்த பெண் வருவதுடன் அந்த கவர்ச்சியும் முடிந்து விடும். ஆனால் இப்போது தலை கீழ் மாற்றம் எல்லா வேலைகளையும் எந்த குறையும் இன்றி நாயகியே செய்து விடுவார் கவர்ச்சிக்கு ஒரு நடனம் என்று இல்லை, வரும் அத்தனை பாடல்களுமே கவர்ச்சியாகத்தான் இருக்கும். பாடல்களில் தான் அரைகுறை உடை என்று இல்லை, அந்த நாயகி வீட்டில், காலேஜில் எங்கேயும் அதே உடையில் தான் வலம் வருவார்.

பனி பிரதேசத்தில் காட்சிகள் இருந்தாலும், அங்கேயும் நாயகன் கோட் அதுக்கு மேல ஸ்வெட்டர், எல்லாம் போட்டு ஜம்முனு இருப்பார்....!! நாயகி அந்த குளிரிலும் அதே அரைகுறை உடையில் தான் இருப்பார்.....!!?

சென்சாரின் அலட்சியம் !?

பெண்ணை இப்படி உரித்து தான் நடமாட விடணுமா ?? ஒரு ஆபாச சுவரொட்டி ஒரு இடத்தில் ஒட்டி இருந்தால் உடனே ஒரு கூட்டம் போய் போராடி கிழித்து போட்டு விடுகிறது, நல்லா விஷயம் தான். ஆனால் இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய திரைப்படத்தில் இப்படி ஒரு உடை அநாகரீகம் இருப்பதற்கு எதிராக ஏன் யாரும் கொடிபிடிப்பதில்லை. சென்சாரின் கண்களுக்கு இந்த அரைகுறைகள் ஆபாசமாக தெரியாதா ?? அவர்கள் படத்திற்கு சர்டிஃபிகேட் கொடுப்பதின் மூலம் இந்த கவர்ச்சியான உடையை சரி என்று முத்திரை குத்தி சொல்கிறார்கள். ஆபாசத்தை அங்கீகரிக்க ஒரு குழு...!!? இதில் பெண்கள் வேறு இடம் பெற்று இருப்பார்களாம்...கேவலம். வசனம் ஆபாசமாக இருந்தால் அதை கட் செய்ய தெரிந்தவர்களுக்கு அதைவிட கண்கள் பார்க்கும் ஒரு காட்சி மனதில் எளிதில் பதிந்துவிடும் என்பது ஏன் புரியவில்லை...?? 

நம் வீட்டு வரவேற்பறையில் ??! 

இப்போது வரும் எந்த படங்களையாவது குழந்தைகளுடன் சென்று பார்க்க முடியுமா?? 

தியேட்டர் சென்று பார்க்க வேண்டாம், சரி விடுங்கள். வீட்டினுள் இருக்கும் தொலைக்காட்சியை என்ன செய்வது...? இங்கே தொகுப்பாளர்கள் எந்த நிலையில் வருகிறார்கள் ?!  பாடலை நமக்கு வழங்குபவர்கள்  போட்டு வரும் உடை பார்க்க சகிக்காது. வீட்டினுள் காலை பரபரப்பில் பலர் வீட்டிலும் பாடல் காட்சிகள் தான் ஓடி கொண்டிருக்கும். இறுக்கமான உடையுடன் அவர்கள் பேசும் விதம் மிக மோசமாக இருக்கும். நடு வீட்டில் நடந்து கொண்டிருக்கும் இந்த ஆபாசத்தை என்ன செய்ய போகிறோம்? 

இப்படி திரைப்படம் , தொலைக்காட்சி, விளம்பர உலகம் எங்கும் உடை அநாகரீகம் சீரழிந்து போய் கொண்டிருக்கிறது. 

* இவர்களுக்கு என்று உடை வரைமுறை, அளவு, குறியீடு   ஏதும் கிடையாதா?? 
*   மக்களின் ரசனை இதுதானா ? இதைதான் விரும்புகிறார்களா ?? 
*  இது போன்ற உடைகளை  நம் வீட்டு பெண்களும் அணிவதையும் நாம் ரசிக்கத்தான் போகிறோமா??

கேள்விகள் மட்டுமே கேட்க முடிகிறது பதில்கள் யாரிடம் .....??!!


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)


கழுகிற்காக
கௌசல்யா

15 comments:

மாணவன் said...

இன்றைய காலகட்டத்தின் பெண்களின் மீது தெளிவான பார்வை... நாகரீகம் என்ற பெயரில் வெறும் ஆபாசங்களை மட்டுமே அரங்கேற்றுகின்றனர்

இது போதாதென்று மீடியாவும் சினிமாவும் தன் பங்குக்கு போட்டிபோட்டுகொண்டு ஆபாசங்களை விதைக்கின்றனர்...

நீங்கள் சொல்வதுபோன்று கேள்விகள் மட்டுமே கேட்க முடிகிறது பதில்கள் யாரிடம் .....??!!

வேற என்னத்த சொல்ல...

கவிநா... said...

//அரைகுறை ஆடை அலங்காரம்தான் நாகரீகத்தின் அளவுகோலா...? //

நல்ல கேள்வி... ஆனால், பதிலென்னவோ ஆமாம் என்பதாகத்தான் சொல்கிறார்கள்.. ம்ம் :(((

//பாடல்களில் தான் அரைகுறை உடை என்று இல்லை, அந்த நாயகி வீட்டில், காலேஜில் எங்கேயும் அதே உடையில் தான் வலம் வருவார்.//

அதுதான் எனக்கும் புரியல.!!!???

//* இவர்களுக்கு என்று உடை வரைமுறை, அளவு, குறியீடு ஏதும் கிடையாதா?? //

அளவு, வரைமுறை எல்லாம் இருக்கிறது. எந்த அளவுக்கு மேல் உடை உடுத்தக்கூடாது என்பதில் இருக்கிறது போல. :((

//* மக்களின் ரசனை இதுதானா ? இதைதான் விரும்புகிறார்களா ?? //

மக்களின் ரசனை இதுவா, இல்லை, இவர்கள் செய்வதை மக்கள் ரசிக்கப்பழகிவிட்டார்களா என்பதைத் தெரிந்துகொள்ள பட்டிமன்றம் வைத்தாலும் முடிவெடுக்க முடியாது நிச்சயமாக...

* இது போன்ற உடைகளை நம் வீட்டு பெண்களும் அணிவதையும் நாம் ரசிக்கத்தான் போகிறோமா??//

அக்கா, இப்போதே பல வீடுகளில் இந்த உடைகள் வந்துவிட்டன [முன்னேறிய நகரங்களில் :( ]அல்ட்ரா மாடர்ன், செல்வச்செழிப்பு, அதிகப்படிப்பு என இத்தகுதிகளை நிரூபிக்க, இந்தமாதிரியான உடைகள் தான் குறியீடு... உங்களுக்குத் தெரியாமல் போனது வருத்தமே...

ம்ம்ம்... சொல்லவந்ததை சரியா சொல்லிமுடிச்சுட்டீங்க. கேட்டும் முடிச்சுட்டீங்க. யார் வந்து பதில் சொல்லப் போறாங்கன்னு பார்ப்போம் அக்கா....

R.Gopi said...

இது போல் பலப்பல அசிங்கமான நிகழ்வுகள் உலகெங்கும் இந்த நொடி கூட நடைபெறுகிறது...

பெண் என்றுமே போகப்பொருளாகவே பார்க்கப்படுகிறாள்...

அந்த பார்வை விரைவில் மாறினால் உலகுக்கே நல்லது...

மாறும் என்று நம்புவோம்...

sathishsangkavi.blogspot.com said...

//உண்மையில் பெண் எப்படி எல்லாம் மாறுகிறாள் அல்லது மற்றவர்களால் எப்படியெல்லாம் மாற்ற படுகிறாள்?//

சூழ்நிலையைப் பொறுத்து...

மனிதன் ஆவதும் பெண்ணாலே... அழிவதும் பெண்ணாலே...

//
பெண் என்றாலே அழகு என்ற கண்ணோட்டத்தில் தான் முதலில் எல்லோராலும் பார்க்கபடுகிறது.//

இது உண்மை தான்... ஆனால் தற்போது நிறைய பேர் அவர்களின் திறமையை பார்த்து வியக்கிறார்கள்..

//ஒரு சில பெண்கள் திறமைகளை விட தங்களது புற அழகிற்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்//

புற அழகிருந்து கொஞ்சம் வட திறமை இல்லை என்றால் அவர்கள் வெற்றி பெறுவது மிக கடினம்..

விளம்பரத்தில் வரும் பெண்கள் புற அழகுடன் அவர்களது முகபவானைகளை அழகாக வெளிப்படுத்துவதால் தான் அடுத்த விளம்பரத்தில் நடிக்க முடியும்.. அங்கே நடிப்பு என்னும் திறமை நிச்சயம் வேண்டும்... உங்களுடைய இக்கருத்தில் எனக்கு உடன் பாடு இல்லை..

கழுகு said...

அன்பின் சங்கவி...

கருத்துக்கு நன்றி தெரிவித்து கொள்ளும் அதே நேரத்தில் உங்களின் முரண்பட்ட கருத்துக்கு பதிலளிக்கும் தார்மீக பொறுப்பினை யாம் கொண்டிருப்பதால் பதிலளிக்க விளைகிறோம்..

விளம்பரபடங்களில் வரும் நடிப்பாகட்டும், சினிமாவில் வரும் நடிப்பாகட்டும் அதை யாம் அதை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளும் அதே நேரத்தில் மேற்சொன்ன இரண்டிலும் ஆபாசத்தை முதலீடாக கொள்வதை வன்மையாக ஏற்க மறுக்கிறோம் என்பதே கட்டுரையின் ஆழத்தில் உள்ள எண்ணக் கிடக்கை....!

கணேஷ் said...

நீங்க சொன்ன மாதிரி பெண்களின் திறமையையும் சரியான விதத்தில் பார்த்தால் இன்னும் நிறையா உருப்பட வழியிருக்கின்றது..

நல்ல விஷயம் ....

கவிநா... said...

@ சங்கவி

//அங்கே நடிப்பு என்னும் திறமை நிச்சயம் வேண்டும்...//

நடிப்பு என்னும் திறமையை அங்கீகரிக்கவே, புற அழகு தான் முக்கியம் தேவைப்படுகிறதே. இதை என்னவென்று சொல்ல சகோ.!?

செல்வா said...

// பாடல்களில் தான் அரைகுறை உடை என்று இல்லை, அந்த நாயகி வீட்டில், காலேஜில் எங்கேயும் அதே உடையில் தான் வலம் வருவார்//

இதுல என்ன கொடுமை அப்படின்னு பார்த்தா காலஜ் போற பொண்ணு மாதிரி காட்டுவாங்க , ஆனா அதுல அவுங்களோட உடை அலங்காரம் கேவலமா இருக்கும் .. எந்த காலேஜ்ல இப்படியெல்லாம் இருக்கு அப்படின்னு தெரியல

Harinarayanan said...

//இந்த கவர்ச்சியான உடையை சரி என்று முத்திரை குத்தி சொல்கிறார்கள். ஆபாசத்தை அங்கீகரிக்க ஒரு குழு...!!? இதில் பெண்கள் வேறு இடம் பெற்று இருப்பார்களாம்...கேவலம். வசனம் ஆபாசமாக இருந்தால் அதை கட் செய்ய தெரிந்தவர்களுக்கு அதைவிட கண்கள் பார்க்கும் ஒரு காட்சி மனதில் எளிதில் பதிந்துவிடும் என்பது ஏன் புரியவில்லை...?? //
சாட்டையடி.....ஆனா என்ன செய்ய? நம்மால இப்படி பதிவெழுதி மட்டும்தான் அடிக்க முடியும்! ஏன்னா, சினிமா கோடிகள் புரளும் ஒரு களம்! அதன் அங்கமாய் இருக்கும் சென்சாரும், அவர்களது சான்றிதழ்களும் அவர்களாலேயே தீர்மானிக்கப்ப்படுகிறது. அங்கு அங்கம் வகிக்கும் பெண்கள் வெறும் (ஆட்டுவிக்கக்கூடிய)பொம்மைகளே என்பதுதான் யதார்த்தம். சினிமா சீர்பட அதை நுகரும் நாம் (நம் அணுகுமுறை)முதலில் மாற வேண்டும். ஒரு பெண்ணை நாம் எப்படி பார்க்கிறோம் என்பதில் ஆரோக்கியம் வேண்டும். அந்த ஆரோக்கியத்துக்கான முதல்படி பாலியல் கல்வி! நம்ம ஊர்ல பாலியல் கல்வின்னாலே அதுவும் ஷகீலா மாதிரியானவர்களை வைத்து நடத்தும் ஒரு கல்வி (?)அப்படீங்கிற மாதிரியான ஒரு அறியாமை (?)கலந்த அணுகுமுறைதான் இருக்கு. ஆக, நல்ல பாலியல் கல்விக்கான முயற்சியை அரசாங்கம் (இலவச ஆட்சி அரசாங்கமல்ல!)எடுக்க வேண்டும். இதெல்லாம் எப்போ நடக்குதோ அப்போதான் பெண்கள் பற்றிய பார்வையும் மாறும். சினிமாதான் பெண்களைப் பற்றிய சமகால பார்வைக்கான 80% காரணமென்பது அடியேனின் புரிதல்! மத்தபடி பதிவு மிக நன்று. வாழ்த்துக்கள் திரு.கௌசல்யா அவர்களுக்கு!
பத்மஹரி
http://padmahari.wordpress.com

sathishsangkavi.blogspot.com said...

கழுகு நண்பருக்கு..

..விளம்பரபடங்களில் வரும் நடிப்பாகட்டும், சினிமாவில் வரும் நடிப்பாகட்டும் அதை யாம் அதை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளும் அதே நேரத்தில் மேற்சொன்ன இரண்டிலும் ஆபாசத்தை முதலீடாக கொள்வதை வன்மையாக ஏற்க மறுக்கிறோம் என்பதே கட்டுரையின் ஆழத்தில் உள்ள எண்ணக் கிடக்கை....!

உங்கள் கருத்தை ஏற்கிறேன் ஆனால் நடைமுறைக்கு இது சாத்தியமில்லை...

sathishsangkavi.blogspot.com said...

கவிநா..

..நடிப்பு என்னும் திறமையை அங்கீகரிக்கவே, புற அழகு தான் முக்கியம் தேவைப்படுகிறதே. இதை என்னவென்று சொல்ல சகோ.!?..

புற அழகில்லாமல் நடிப்பில் முன்னேறியவர்களும் இருக்கிறார்கள்.. அழகாக இருந்து ஆபாசமாக நடித்து சீக்கிரம் காணமல் போனவர்களும் இருக்கிறார்கள் சகோ...

Anonymous said...

சங்கவி கருத்துக்களை ஆதரிக்கிறேன்..கட்டுரை பள்ளி க்கூட பாட புத்தகத்தில் பெரியார் இளைஞனாக இருந்த காலத்து பார்வையாக இருக்கிறது இப்போதெல்லாம் பெண்கள் தண்ணி அடிப்பது தம் அடிப்பது..பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வது என ஆண்களுக்கு நிகராக வலம் வருகிறார்கள்

Anonymous said...

பெண்கள் நல்லா படிக்கிறாங்க...நல்லா சம்பாதிக்கிறாங்க...தனியா வசிக்கிறாங்க..அவங்க சம்பாதிக்க தனிப்பட்ட முறையில் தன் உடலை காட்டுறாங்க..இதில் ஆண்கள் என்ன தப்பு செஞ்சாங்க?..அவங்க அப்படித்தான் காட்டுவாங்க அவங்களை ஆன்கள் ஊக்குவிக்க கூடாது காசு கொடுக்க கூடாதுன்னு சொல்றீங்களா..உடம்பை காட்டி படம் எடுக்கத்தான் செய்வாங்க..மக்கள் பார்க்கத்தான் செய்வாங்க..நீங்க இப்படி குழந்தையாட்டம் எழுதத்தான் செய்வீங்க..இது எதார்த்தம்...இனிமேல் அதை பத்தி பேசி என்ன பிரயோஜனம்...?விபச்சாரம் செய்து முக்காடு போஈட்டு அலையும் நடிகைகள் பார்க்கும்போதும் ஆன்கள் தான் இதற்கு காரணம் என்பீர்களோ

கவிநா... said...

@ சங்கவி...

//புற அழகில்லாமல் நடிப்பில் முன்னேறியவர்களும் இருக்கிறார்கள்.. அழகாக இருந்து ஆபாசமாக நடித்து சீக்கிரம் காணமல் போனவர்களும் இருக்கிறார்கள் சகோ... //

நீங்கள் சொல்வதை மறுக்கமுடியாது சகோ.

ஆனால், கருத்து என்பது பெரும்பான்மையை வைத்து மட்டுமே சொல்லப்படுவது. விதிவிலக்குகளை வைத்து சொல்லப்படுவதல்ல என்பது என் எண்ணம்.

கவிநா... said...

@ ஆர்.கே.சதீஷ்குமார்

திருமதி.கௌசல்யா அவர்கள், ஆண்களை மட்டுமே குறைசொல்லி இந்த கட்டுரையை எழுதவில்லை சகோ.

அதில் நடிப்பவர்களையும், நடிக்கவைப்பவர்களையும், அதனை ரசிப்பவர்களையும் தான் சாடியிருக்கிறார்.

பொதுவான ஒரு சமுதாயப் போக்கைத்தான் எழுதியிருக்கிறார் என்பது என் தாழ்மையான கருத்து.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes