Friday, July 20, 2012

மீண்டும் உயிர்த்தெழுகிறோம்.....! கழுகின் சமூக விழிப்புணர்வு பார்வை....!

இடைவெளிகளும் ஓய்வுகளும் எப்போதும் நம்மை சீர் தூக்கிப் பார்த்துக் கொள்ள உதவும் காரணியாகின்றன. வழமையான தொடர் நிகழ்வுகளையும், பொதுப்பிரச்சினைகளை பற்றிய பார்வைகளையும், நிறைய நிறைய கருத்துக்களையும், நிறுத்தி விட்டு சட்டென்று புறத் தொடர்புகள் அறுத்துக் கொண்டு சப்தமின்றி இருக்கும் நொடிகளில் மூளையின் எல்லா பாகங்களும் புத்துணர்ச்சி அடைகின்றன. முன்னெப்போதும் இல்லாத அளவு வீரியமும், வீரமும் ஒருங்கே உடலுக்குள் பாய மீண்டும் நாம் சீறிப்பாய முடியும்.

கழுகின் நீண்ட நெடிய பயணத்திலும் ஒரு தற்காலிக ஓய்வு தேவைப்பட்டது. அப்படியான ஓய்வு கழுகின் பார்வையை இன்னும் கூர்மையாக்கி அதன் இலக்கினை நோக்கிய பாதையில் மீண்டும் சிறகடிக்க புத்துணர்ச்சியைக் கொடுத்தும் இருக்கிறது. செய்திகளை எல்லாம் செய்திகளாய் வாசிக்கும் மக்கள் கூட்டம் ஒரு புறம், செய்திகளை தமது ஆதரவு மற்றும் எதிர் கட்சிகளுக்கு ஏற்றார் போல உள்வாங்கிக் கொண்டு அது பற்றிய கருத்து தெரிவிக்கும் கூட்டம் ஒரு புறம், தனக்குப் பிடித்த சினிமா நடிகனையும், நடிகையையும் எப்போதும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு மாயக் கனவுகளில் லயிக்கும் இளையர்கள் கூட்டம் ஒரு புறம், மதம், சாதி என்ற கொட்டடிக்குள் அடைந்து கொண்டு தத்தம் மதத்தினையும் சாதியையும் நிறுவ போரடிக் கொண்டிருக்கும் கூட்டம் ஒரு புறம்....

இனத்தின் மானம் காக்கிறேன் என்று ஒரு கூட்டம், மொழியின் மாண்பினைக் காக்கிறேன் என்று ஒரு கூட்டம்...., மண்ணின் மைந்தனென்று இன்னுமொரு கூட்டமாய்.....

சிதறிக்கிடக்கும் மானுடர்கள் அத்தனை பேரும் மனதினால் தத்தமக்குள் சிறைச்சாலைகளை ஏற்படுத்திக் கொண்டு ஏதோ ஒன்றை நிறுவ போரடிக் கொண்டிருக்கின்றனர். சமூக நலம் என்ற பெயரில் இந்த சிதறுண்ட்ட கூட்டங்கள் கையிலெடுத்திருக்கும் வாட்கள் மானுட நலம் பேணுகிறேன் பேர்வழி என்று மனித நேயத்தையும், மக்கள் நலத்தையும்  இன்று வெட்டிச் சாய்த்துக் கொண்டிருப்பதற்குப் பின்னால் சர்வ நிச்சயமாய் இவர்களின் சுயநலம் ஒரு கோர அரக்கானாய் நின்று கொண்டிருக்கிறது.

கட்டுப்பாட்டுக்குள் நின்றுகொண்டு யாரையோ ஆதரிக்கிறேன் பேர்வழி என்று அவர்களின் தீமைகளையும், சமூக பொறுப்பில்லாததனங்களையும் கண்களை மூடிக் கொண்டு கண்டும் காணாமல் செல்லும் ஒரு சப்பைக்கட்டு கூட்டம் இந்த தேசத்திற்கு இனியும் தேவையா? இயல்பாய் சிந்திக்கும், சுதந்திரமாய் கருத்துப் பகிரும், சரிகளை சரிகளென்று கூறி பாராட்டவும், தவறுகளை தவறுகள் என்று கூறி சட்டையை பிடிக்கவும் குறைந்த பட்சம் தன்மானமும், ரோசமும் இருந்தால் போதுமல்லவா தோழர்களே...?

உணவுகளுக்கு எல்லாம் ஒவ்வொரு குணம் உண்டு. இயல்பிலேயே உப்பும் உறைப்பும் அதிகமாய் உண்டு வாழும் தமிழர்களாகிய நமக்கு  உணர்ச்சிகளும் கூடுதல் அந்த உணர்ச்சியினால் ஏற்படும் உணர்வும் கூடுதல். தொட்ட உடனேயே தூக்கி எறியுமே மின்சாரம் அது போல தவறான கோட்பாடுகளையும் கொள்கைகளையும் சமூகத்தில் நயவஞ்சகர்கள் விதைக்கும் போதெல்லாம் பிடறி சிலிர்த்து நாம் எழவேண்டும். முறையற்ற எந்த ஒரு மனிதனையும் நமது தலைவனாகவோ தலைவியாகவோ ஏற்கக்கூடது என்ற கற்பு நெறி கொண்ட காளையர்கள்  நம் மண்ணில் மொத்தமாய் இன்னும் ஒழிந்து விடவில்லைதானே...?

எழுத்துக்களை இணையத்தில் கடை பரப்பி நீங்களெல்லாம் என்ன புரட்சி செய்து விட முடியும் என்று ஏளனச் சிரிப்போடு நம்மை எல்லாம் பார்த்து எள்ளி நகையாட பழம் தின்று கொட்டைப் போட்ட நம் சமூகத்தின் காவலர்கள் எல்லாம் இணையம் வரை ஏறிவந்து நம்மை கேள்வி கேட்கத் தொடங்கியாயிற்று....

ஏதோ ஒரு கட்சியின் அடையாளம் இருக்கும் மனிதன் மட்டுமே தமிழகம் மட்டுமல்ல இந்தியாவிலேயே ஜீவிக்க முடியும் என்னும் பொதுப்புத்திகள் இப்போது மலிவு விலையில் நம்மைச் சுற்றிலும் ஏராளமாக கிடைப்பதோடு அப்படியான ஒரு சமூகச் சூழலும் சராமாரியாக நமக்குள் புகுத்தப்பட்டிருக்கிறது. 

இந்தியா மக்களின் தேசம். ஜனநாயகத்தின் பூமி. பொதுமக்கள் கூடி தன்னை, தனது நிலத்தை நிர்வகிக்க பணியாளர்களை தேர்ந்தெடுக்க வழிமுறைகளை உயர்ந்த உள்ளம் கொண்டவர்கள் வகுத்து சென்ற ஒரு தேசம்.இங்கே மக்களுக்கு மதிப்பில்லை. சாதரண மக்கள், சாதரண மக்கள் என்று சொல்லி சொல்லியே சாதரணமானவனாய் நாம் சித்தரிக்கப்பட்டு விட்டோம்.  

அதோ நீங்கள் தேர்ந்தெடுத்துப் பணி செய்ய அனுப்பிய மனிதர்கள் தத்தமது தலைமைகளுக்கு கூழைக்கும்பிடுகள் போட்டுக் கொண்டும், கால்களில் விழுந்து கொண்டும் இருக்கிறார்களே? இதைபற்றி ஏதேனும் ஒரு சிறு அபிப்ராயமாவது நீங்கள் சொல்ல நினைத்ததுண்டா?

தங்கள் தலைவர்களின் நாக்குகள் கிழக்கை காட்டி மேற்கு என்று சொன்னால் அதை மேற்கு என்று நிறுவவும், மேற்கினைக் காட்டி கிழக்கு என்று சொன்னால் அதையும் நிறுவவும் பொதுவெளிகளில் போராடிக் கொண்டிருக்கும் மனிதர்கள் அதை எதிர்த்து கருத்துக் கூற திராணிகள் இல்லாமல் அதை விசுவாசம் என்று கூறிக் கொள்வதை எல்லாம் எப்படி தோழர்களே நீங்கள் சகித்துக்கொள்கிறீர்கள்...?

சினிமா நடிகனை தலைவன் கூறிக் கொண்டு அவனின் ஊதியத்தையும், அவன் திரைப்படம் பெறும் வெற்றிகளை தனது வெற்றியாகக் கொள்ளும் மாய உணர்வில் தத்தமது வாழ்க்கையை அழித்துக் கொள்ளும் இளையர்கள் எல்லாம் யார்? நமது சகோதரன், அல்லது உறவினன், அல்லது எதிர்வீட்டுக்காரன் இல்லையெனில் பக்கத்து வீட்டுக்காரன் தானே...?

பார்த்து தலையிலடித்துக் கொண்டே நாம் நகர்ந்து போனால் யார் இவர்களுக்கு எடுத்துக் கூறுவது..?


இந்த சமூகம் மாறவேண்டும். இங்கே சமூகம் என்பது நான், நீங்கள்...என்று மனிதர்கள் நிறைந்த ஒரு பெருங்கூட்டம். தனி மனிதர்கள் மாறுவதோடு சுற்றி இருக்கும் ஒவ்வொரு மனிதரிடமும் தொடர்ந்து விழிப்புணர்வுச் செய்திகளை பகிரவும்வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் நமக்கு அனுபவமாகியிருக்கிறது. கழுகின் புரிதல் இன்னும் தெளிவாய் மெருகேறியிருக்கிறது. மனிதர்களின் சூழ்ச்சிகள் எல்லாம் நமக்கு இப்போது அத்துப்படியாகி விட்டன. அரசியல் நகர்வுகள் இணையத்தில் மிகுதியாயிருக்கும்  இக்காலத்தில்.....

இதோ...கழுகு மீண்டும் சிறகடிக்கிறது உற்சாகமாய்...! 

இனி... அநீதிகளின் முகமூடிகளை தயவு தாட்சண்யமின்றி கிழித்தெறிவதோடு, அதற்கு இடையூறாய் இருக்கும் எல்லா செயல்களையும் அறுத்தெறியும் வல்லமையோடு மீண்டும் எமது சிறகினை விரிக்கிறோம்....

இந்த நூற்றாண்டின் இறுதியில் இணையமே உலகை ஆளப்போகிறது!!!! அன்று கன கம்பீரமாய் ஓராயிரம் கழுகுகள் இந்த பூமியை திமிராய் வலம் வரும்....!
  
(கழுகு இன்னும் உயரப் பறக்கும்...)

2 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சமூக விழிப்புணர்வு சேவை தொடரட்டும்.
த.ம 6

Anonymous said...

உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ... !!!

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes