Sunday, June 19, 2011

மாவட்ட ஆட்சியருக்கு மகத்தான வரவேற்பு....! மக்களின் மனோநிலை பற்றிய ஒரு பார்வை!

சூழல்கள் ஏதேதோ கதை சொல்லிச் சென்று விடுகிறது. மனித மனங்கள் போகிற போக்கில் மேம்போக்காக அதிலிருக்கும் செய்திகளை எடுத்துக் கொண்டு, ஏதேனும் ஒரு நிலைப்பாட்டிற்கு வந்து விடுகிறோம் நாமும்....!

தமிழகத்தின் தென்கோடியில் ஒரு குப்பு சாமியோ, அல்லது முனுசாமியோ ஊழக்கு எதிரான போர் என்று அறிவித்து விட்டு மதுரையிலோ அல்லது தஞ்சையிலோ உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டால் அது மீடியாக்களால் கவனிக்கப்படுமா? என்டி டிவியும், 24x7 செய்திச் சானலும் அதை போகஸ் செய்யுமா? இந்தியா முழுதும் இந்த செய்தி கவனிக்கப்பட்டு அது அரசின் கவனத்தை ஈர்க்குமா? வலைப்பூக்களும் பத்திக்கைகளும் " ஐ லைக் முனுசாமி"  என்று கூப்பாடு போடுமா?

போடாது...! போடவே போடாது...! என்ன நிகழும் தெரியுமா?

குப்புசாமியோ அல்லது முனுசாமியோ போலிஸ்காரர்களால் அடித்து பொட்டி கட்டப்பட்டு கம்பி எண்ணிக் கொண்டிருப்பார். அதிக பட்சமாகப் போனால் அவருக்கு ஆதரவு தெரிவிப்பவர்களால் ஒரு சிறு சாலை மறியல் ஏற்பட்டு சப்-கலெக்ட்டரோ அல்லது தாசில்தாரோ வந்து ஏதேனும் உறுதி மொழி கொடுத்து இதை நீர்த்துப் போகச் செய்திருப்பார்கள். 

அப்போது இதே அன்னா ஹாசரேவையும், பாபாராம் தேவையும் போற்றிப் புகழ்ந்து கட்டுரைகளாக எழுதி என் சக தமிழனும், அதைத் தனியார் தொலைக்காட்சிகளில் செய்தியாக்கிய ஊடகங்களும் உள்ளே தமது புத்திகளை சுருட்டிக் கொண்டு, இது எல்லாம் முனுசாமி அல்லது குப்புசாமிக்குத் இது தேவையா...? என்று எதிர்பாட்டுக்கள் பாடும்.

இந்த சமுதாயத்தில் நியாயம் பேச வேண்டும் என்றால் கூட அதிகாரமும், பணபலமும், ஒரு அடையாளமும் தேவைப்படுகிறது. அப்படி இருப்பதாலேயே தன்னை எல்லோரிடமும் காட்டிக் கொள்வது அவர்களுக்கு எளிதாக கை கூடுகிறது. எம் மக்களும் ஓ.. இவரே அப்படி செய்து விட்டாரே? அவரே இப்படி செய்து விட்டாரே என்ற ஆச்சர்யத்தில் வாய்பிளந்து நிற்கிறது. 

இவர் செய்து விட்டார். சரி...இதை இவ்வளவு பொதுப்படுத்திக் காட்டுமளவிற்கு ஏன் மீடியாக்கள் இவ்வளவு முனைப்புடன் இருக்கின்றன என்று யோசித்திருக்கிறோமா? இன்னுமொரு செய்தியும் கூட கேள்விப் பட்டேன்... வட இந்திய மீடியாக்களே, இது போன்ற புரட்சிகளை வி.ஐ.பிக்களை வைத்து நடத்துகின்றனவாம். ஏன் தெரியுமா இதைக் காட்சிப்படுத்தி உணர்ச்சிப் பிளம்பாய் அதற்கு இசை இசை அமைத்து வர்ணணைகள் செய்து தமது வியாபரத்தை பெருக்கும் யுத்தியாம் இவையெல்லாம்...! கடவுளே தலை சுற்றுகிறதே.. என்று எண்ணுகிறீர்களா? ஆமாம் நாம் தான் இவர்களுக்கு வாழ்க!  ஒழிக! கோசம் போட்டவர்கள் என்பதை மறக்காதீர்கள்.

சமீபத்தில் வெளிவந்த சானல் 4ன் வீடியோ காட்சிகள் இணையத்தில் உலவி வரும் இவ்வேளையில் இந்திய ஊடகங்கள் இவற்றை ஏன் காட்சிப்படுத்தவில்லை என்று நம்து வாழ்க, ஒழிக மூளைகள் ஏன் யோசிக்க மறுக்கின்றன...?

பாபா ராம் தேவின் போராட்டத்தையும், அன்னா ஹசரேயின் போராட்டத்தையும் விட  எந்த அளவு தாழ்ந்தது ஈழப் படுகொலை...? இவை ஏன் இந்திய ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்டு இந்திய மூளைகளுக்குள் சென்று சேரவில்லை. நடு நிலை ஊடகங்களாக தம்மை வர்ணித்துக் கொள்ளும் இந்திய மீடியாக்கள் சுதந்திரமாய்த் தான் இயங்குகின்றன என்று இன்னமும் நம்புகிறீர்களா?

ஆமாம்.. உங்களை முட்டாள் ஆக்கி நம்ப வைக்க ஒரு சுதந்திரம். உங்களுக்கு அறிவு ஏற்படாமல் இருக்க ஒரு சுதந்திரம்....என்று நம்மை மயக்கி வைத்திருப்பது தெரியவில்லையா....?

இப்படி இயல்புகளை விட்டு நகர்ந்து மிகையான குழப்ப சூழ்நிலையில் இருக்கும் சமுதாயம், இயல்பாய் இருக்கும் மனிதர்களைப் பார்த்து கை தட்டுகிறது வாழ்த்துகிறது. பாராட்டுகிறது. தியாகச் செம்மலே! என்று வியக்கிறது. அசாரண சூழலில் சரியான செயலைச் செய்தவரை பாரட்டும் அதே வேளையில் இப்படிப்பட்ட ஒரு அசாதாரண சூழலுக்கு நாம்தான் காரணம் என்று ஒரு குற்ற உணர்ச்சி கூட இல்லாமல் எப்படி ஒரு ஆச்சர்யம் காட்ட முடியும் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி?

சமீபத்தில் ஈரோடு மாவட்டக் கலெக்டர் தமது பிள்ளையை அரசுப் ஆரம்பப்பள்ளியில் சேர்த்தவுடன் இப்படிப்பட்ட ஒரு சூழலுக்கு எமது தமிழ்ச் சமுதாயமும் தள்ளப்பட்டது. வாழ்த்துக்கள் குவிந்தன; பாராட்டுக்கள் பறந்தன; மீடியாக்களின் வியாபாரக் கண்ணும், ஏற்கனவே தனியார் பள்ளியில் தமது பிள்ளைகளை படிக்க வைத்து கொண்டிருந்தவர்களின் குற்ற உணர்ச்சியும் சேர்ந்து இயல்பாய் இருந்த கலெக்டரை ஒரு சமுதாய புரட்சி செய்தவர் என்ற ஒரு ரேஞ்சில் வைத்து சந்தோசப்பட்டது....

இப்படி வாழ்த்துச் சொன்னவர்கள், அதை தியாகமாய் வர்ணித்தவர்கள், மற்றும் இது பெரிய இன்ஸ்ப்ரேசன் என்று சொன்னவர்கள் சிலரிடம் பேசிய போது அவர்கள் பிள்ளைகள் தனியார் பள்ளியில் பயில பல காரணங்களை கூற கேட்க முடிந்தது. சரி விட்டுத் தள்ளுங்கள் மற்ற உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர் பிள்ளைகளை தனியார் பள்ளிகளை விடுத்து  அரசு பள்ளியில் சேர வலியுறுத்துவீர்களா? என்ற கேள்வியை வைத்த போது இவர்கள் எல்லாம் வாழ்த்த மட்டும்தான் செய்வார்கள், மற்றபடி, எல்லோருக்கும் இதை வலியுறுத்துவதில் எந்த ஆர்வமும் இல்லை என்று அறிய முடிந்தது.

அரசுப் பள்ளியில் தத்தம் பிள்ளைகளை சேர்க்கும் அளவிற்கு ஒரு மனப்பான்மை அற்று அங்கே தரமில்லை என்று கருதிய ஒட்டு மொத்த மானுட கூட்டமும் அதன் தரம் உயர வேண்டும் என்று எந்த வித முன்னெடுப்புகளும் செய்யாமல் சப்தமின்றி தமது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்து விட்டார்கள். இன்று ஒரு மாவட்ட ஆட்சியர் சேர்த்ததும் இந்த் குற்ற உணர்ச்சியை மறைக்கவும் மறக்கவும் இவ்வளவு வாழ்த்துக்கள்.

மாவட்ட ஆட்சியர் என்று இல்லை, மாநில முதல்வரே தமது பிள்ளைகளை சர்வ சாதரணமாக அரசுப்பள்ளிகளில் சேர்ப்பது ஒரு இயல்பான நிகழ்வாய் இருக்கும்படியான ஒரு ஆரோக்கியமான சமுதாயம் எமக்கு வேண்டும். கிரைண்டரையும், மிக்ஸியையும் கொடுப்பது, முதல் குழந்தை பிறந்தால் பணம் கொடுப்பது என்பது போன்ற கேனத்தனமான திட்டங்களை விடுத்து, அரசானது அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கட்டும்.

வரும் காலத்தில் அரசுப் பள்ளிகளில் சேர்க்க இடம் கிடைக்காமல், அதிகாரிகளும், செல்வந்தர்களும் வரிசையில் நிற்குமளவிற்கு மாற்றம் வரட்டும். அப்படி இடம் கிடைத்தவர்கள் தங்களது பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளியில் இடம் கிடைத்த நிகழ்வினை ஒரு சந்தோசமான நிகழ்வாய் கொண்டாடி மகிழட்டும்......அப்படிப்பட்ட ஒரு ஆரோக்கிய தினத்தில் நீங்களும் நானும் கைதட்டி மிட்டாய் கொடுத்துக் கொண்டாடுவோம்....!

அதுவரையில் இது போன்ற மாவட்ட ஆட்சித்தலைவர்களின் செயல்களை பாராட்டிக் கொண்டிருங்கள்.....! வாழ்த்துங்கள்...உண்மையான மற்றம் ஏற்பட வேண்டும் என்ற பிரார்த்தனையும் செய்யுங்கள்...! நீங்களும் மாறுங்கள்....அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும் போராடுங்கள்....

இதுதான் ஆரோக்கிய நிகழ்வு....! யாரோ எதோ செய்தார்கள் என்று மிட்டாய் கொடுத்து கொண்டாடி விட்டு மீண்டும்  எப்போதும் போல இருக்காதீர்கள் என்ற கோரிக்கையை மக்களிடம் வைப்பதோடு....... அரசுப் பள்ளிகளில் சேர்வதே ஒரு தியாக மனப்பான்மையான செயல் என்று பார்க்குமளவிற்கு, பள்ளிகளின் தரத்தை வைத்திருக்கும் அரசுக்கும் கடும் கண்டங்களை இந்த கட்டுரை தெரிவிக்கிறது.


(கழுகு இன்னும் உயரப் பறக்கும்...)

37 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தனது வீம்பிற்காக மகனின் எதிர்காலத்தை வீணடிக்கும் விதமாக செயல்பட்டிருக்கும் கலக்டரின் செயல் கண்டனத்திற்குரியது!

Anonymous said...

1.இந்த சமுதாயத்தில் நியாயம் பேச வேண்டும் என்றால் கூட அதிகாரமும், பணபலமும், ஒரு அடையாளமும் தேவைப்படுகிறது.

2.கலெக்டர் அவர்கள் செய்தது ஒரு இயல்பான செயல்.

3. அரசுப் பள்ளிகளில் சேர்வதே ஒரு தியாக மனப்பான்மையான செயல் என்று பார்க்குமளவிற்கு, பள்ளிகளின் தரத்தை வைத்திருக்கும் அரசுக்கும் கடும் கண்டங்களை இந்த கட்டுரை தெரிவிக்கிறது.

இவைகள் தாம் இந்த கட்டுரையின் சாராம்சமாக என் புரிதலுக்குள் வந்தது.

நீங்களாவது, அதை ஒரு இயல்பான செயல், என்று சொல்கிறீர்கள். ஆனால் சில ஊடகங்களும், பொதுவெளியில் பகிரப்பட்ட கருத்துக்களும், கலெக்டர் அவர்கள் தன் பப்ளிசிடிட்டிக்காக செய்கிறார் என்ற ஊகங்களைத் தாமாகவே எடுத்துக் கொண்டும், பகடி செய்து கொண்டும், அதில் குற்றங்கள் கண்டுபிடித்துக் கொண்டும் இருக்கும் இந்த சூழ்நிலையின் மத்தியில், எங்களைப் போன்றோரின் மனநிலையையும் இங்கு பதிவதற்கு அனுமதி தர வேண்டும்.

ஈரோடு மாவட்ட கலெக்டர் அவர்கள் தன் குழந்தையை அரசுப் பள்ளியில் சேர்த்தார் என்பதைக் கேள்விப்பட்டவுடன் மிகுந்த மகிழ்ச்சியாய் இருந்தது. பாராட்டப்பட வேண்டியதாய் இருந்தது. இதை ஒட்டி எழுந்த எண்ணங்களைப் பட்டியல் போட்டு பார்த்த போது…

1. முதலில் கலெக்டர் அவர்களைப் பாராட்டியே தீர வேண்டும் நிச்சயமாக, ஏனென்றால் இது ஒரு ரோல் மாடலாய் இருக்கும் மற்ற பேரண்ட்ஸ்க்குனு தோணுது. இருப்பினும் இந்த பெர்செண்டேஜ் அளவு என்னவாக இருக்கும் என்று நம் மனதிலே.. நம்மையே உளவியல் ரீதியாக யோசித்துப் பார்த்தோமானால், குறைவாகவே இருக்கும் எனத் தோன்றுகிறது. இன்னும் பயம் இருக்கிறது பெரும்பாலான பெற்றோர்களுக்கு அரசுப் பள்ளியில் தன் குழந்தைகளை சேர்ப்பதற்கு… இந்த நிலையும் மாற வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. பெற்றோரின் மனநிலையும் சரி, இன்னும் சிறப்பாக செயல்படாத அரசுப்பள்ளிகளும் சரி, இரண்டும் தான்.

2. இரண்டாவதாக, நிச்சயம் கலெக்டர் அவர்களின் துணைவியாரைப் பாராட்டியே தீர வேண்டும். ஏனென்றால், இன்றைய தலைமுறை இளம் தாய்மார்கள் அனைவரும் நினைப்பது, எப்படியாவது, நம்ம குழந்தையை, கஸ்டப்பட்டு அந்த பெரிய பள்ளிக்கூடத்தில் சேர்க்கனும் என்று தான். கடன் வாங்கினாலும் பெரிய பெரிய பள்ளிகளின் அட்மிஸனை வாங்கத்தான் நினைக்கிறவர்கள். இவர்கள், மத்தியில், கலெக்டர் துணைவியார், அவர்கள் இதற்கு இசைந்திருப்பது ஆச்சரியத்தையும் அளிக்கிறது. சல்யூட் டூ போத் அஃப் யூ.. ரியலி அமேசிங்…

3. மூன்றாவதாக, அந்த குழந்தையின் ஸ்தானத்தில் இருந்து யோசித்துப் பார்த்தோமானால், கண்டிப்பாக 100% எல்லாம் இதற்காக வருத்தப்படவோ, நம் தந்தை இவ்வளவு வசதிஉடையவராய் இருப்பினும், இங்கு சேர்த்து விட்டரே என்றெல்லாம் வருத்தப்பட வாய்ப்புக்கள் மிகக் குறைவே என்று தொன்றுகிறது. ஏனென்றால், ஒரு சாதாரண தகப்பன் நேர்மையாக, இருந்ததனால் சிலவற்றை இழக்க நேர்ந்தது என்றாலும் பிற்காலத்தில் பெருமையாகவே இருக்கும். கண்டிப்பாக பெரியதாக அந்தக் குழந்தைக்கு இழப்பு இருக்க வாய்ப்பேயில்லை என்றே தோன்றுகிறது. ஏனென்றால், குழந்தையின் பெற்றோர் படித்தவர்கள், தேவையான அளவுக்கு வசதியானவர்களே… ஸோ, குழந்தை நன்றாகவே வருவாள். வரவேண்டும் என்றும் வாயார வாழ்த்துவோம்.

4. கடைசியாக, கலெக்டர் அவர்கள் எடுத்த இந்த முடிவின் பலன் கிடைக்க வேண்டும். கடவுளே, அதன் பாதிப்பு இந்த சமூகத்தில் ஏற்பட வேண்டும். கலெக்டர் அவர்களின் இந்த செய்கையினால் உண்டாக வேண்டிய பலனாக, எதிர்பார்க்கப்படுவது என்னவென்றால்…
அரசுப்பள்ளியில் சேர்ந்து படிக்கும் பிள்ளைகளுக்கும், பெற்றோர்களுக்கும் பெருமை என்றதோடு அல்லாது, அநேகர் மனதில் உந்துதல் வர வேண்டும் இதே மாதிரி செய்வதற்கு. இப்படி மட்டும் சொல்லிவிட்டால் போதுமா? அரசே… மக்கள் மனதும் தயாராகவே இருக்கிறது மாற்றத்திற்கு… அனைத்து அரசுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்துங்கள். சிறந்த கட்டிட வசதிகள், தரமான சிலபஸ், டெடிகேட்டாக உழைக்கும் ஆசிரியர்கள் என அரசுப் பள்ளிகளின் தேவைகளை சரி செய்யுங்கள். கலெக்டர் அவர்கள்,நிச்சயமாக 100% பப்ளிசிட்டிக்காக இதை செய்திருக்க மாட்டார், ஏனென்றால் அவற்றையெல்லாம் வேறு வேறு வழிகளில் அடையலாம் என்றே தோன்றுகிறது. குழந்தையின் எதிர்காலத்தில் ரிஸ்க் எடுக்க மாட்டார்கள். ஆதலால், வாழ்த்துக்கள் சார்… நீங்கள் எதை எல்லாம் மனதில் இருத்தி இந்த செயலை செய்வதற்கு முன் வந்தீர்களோ, அவை எல்லாம் நிறைவேறட்டும் என்றே உள்மனம் வாழ்த்துகின்றது.

By
Maheswari

Anonymous said...

@ராம் சார்,

தனது வீம்பிற்காக மகனின்//

1.மகன் அல்ல மகள்
2.அவர் வீம்பிற்காகத்தான் செய்தார் என்பதை எப்படிச் சொல்கிறீர்கள்?
இது உங்கள் ஊகமா?

By
Maheswari

Anonymous said...

கலெக்டர் அவர்களின் செய்கையைப் பாராட்டுவதில் என்ன தவறு இருக்கிறது? அதே சமயத்தில் இதை அனைவரும் செய்ய வேண்டும் என்பதும் அவசியமில்லை. அது அவரவர் மனநிலையைப் பொறுத்தது. எனக்குப் பாராட்ட வேண்டும் என்று தோன்றியது. அதற்கு காரணங்களாக எனக்குப் பட்டதை வகைப்படுத்த விரும்புகிறேன். அதற்கு இங்கு எனக்கு அனுமதி இருக்குமென்று நம்புகிறேன்.

கலெக்டர் அவர்களின் செய்கையைப் பார்த்து, அனைவரும் அரசுப்பள்ளியில் தன் குழந்தைகளைச் சேர்க்க முன்வருவார்கள் அதனால் கண்டிப்பாக பாராட்ட வேண்டும் என்று சொல்லமாட்டேன். ஏனென்றால் இதை நான் எனக்கே சோதித்துப் பார்த்துக் கொண்டேன். என்னிடமிருந்து இல்லையென்ற பதிலே வருகிறது. ஆனால், அதற்கு என்னிடம் தகுந்த காரணம் இருக்கிறது. எனது நோக்கம் வேறு என்று சொல்லி தப்பித்துக்கொள்ளவும் விரும்பவில்லை. ஏனென்றால் ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களுக்கும் தமிழ்நாட்டுக் குழந்தைகள் போகும்படியான பாடத்திட்டம் தேவை என்பது என் வாதம். ஸோ, தற்போதுள்ள பாடத்திட்டத்திபடி போகமுடியுமா என்பதை என்னால் அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் படியோ அல்லது அப்க்ரேடட் செய்யப்பட்ட பாடத்திட்டத்தின்படியோ, போகமுடியும் என்று எனக்குத் தோன்றினால், நிச்சயமாக என் குழந்தையை அரசுப் பள்ளியில் சேர்ப்பேன். கரும்பு தின்னக் கூலியா? அரசுப் பள்ளியில் நான் என் பிள்ளையைச் சேர்ப்பதனால் என்னவோ, என்னால் அரசுக்கு லாபம் என்றில்லை. நான் தானே பயன்படப் போகிறேன். அரசுப்பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்க சொன்னால் அதை என்னவோ தியாகமா நினைக்கிறார்கள். நான் பயனாளியாகத் தான் ஆவேன். நானே இவ்வளவு யோசிக்கும் போது நிச்சயம் கலெக்டர் அவர்கள் யோசித்திருப்பார்கள், அதனால் அவர் செய்தது சரி என்று வாதாடவோ, பாராட்டவோ வரவில்லை. இன்னும் நமக்கு யார் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்று அறிந்து கொள்ளும் அளவுக்கு நான் திறனாளி இல்லை. அதே சமயத்தில் ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். மேதாவிகள் தவிர்த்து, பொதுப்புத்தி பொதுவாக எப்படி இருக்கிறது என்று பார்த்தோமானால், விளம்பரங்களாலே நாம் கவரப்படும் போது, இது போன்ற, அதாவது, சாதாரன மக்கள் மனதில் உயர்ந்த மனிதர்கள் செய்யும் செயல்கள் கண்டிப்பாக விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

நீங்கள் சொல்வது போல், இது ஒரு இயல்பான செயல் என்று எடுத்துக் கொண்டாலும், இயல்பு நிலைக்குத் திரும்புகிறோம் என்பதிலாவது மகிழ்ச்சி தானே...

By
Maheswari

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// sachin amma கூறியது...
@ராம் சார்,

தனது வீம்பிற்காக மகனின்//

1.மகன் அல்ல மகள்
2.அவர் வீம்பிற்காகத்தான் செய்தார் என்பதை எப்படிச் சொல்கிறீர்கள்?
இது உங்கள் ஊகமா?
//////////

1. எழுத்துப்பிழை, வருந்துகிறேன்!

2. நேர்மையை காட்டுவதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கும் போது இதை ஏன் செய்ய வேண்டும்? இன்னும் விபரம் அறியாத மகளின் வாழ்க்கையில் இப்படியான முடிவை எடுப்பது நியாயம்தானா? என்னதான் மகள்/மகள் என்றாலும் அது இன்னொருவர்தானே? ஒருவேளை பிற்காலத்தில் மகளுக்கு அது பெரிய வருத்தத்தை தரலாம், அப்போது எல்லாத்தையும் மாற்றிவிடமுடியுமா?
கல்வி என்ன டீவியா இல்ல லேப்டாப்பா, சரியில்லேன்னா தூக்கிப் போட்டுவிட்டு வேறு வாங்கிக் கொடுக்க?

Anonymous said...

பார்வையின் கோணத்தை மாற்றுவோம்....

ஊர்த்தலைவர் ஊர் மக்களிடம் வரி வசூலித்து விருந்து வைக்கிறார். அந்த விருந்தில் அவர் பிள்ளையும் உணவு உட்கொள்ள வேண்டி இருப்பதால், ஏனோ தானோ என்று விருந்தை நடத்தாமல், அதிக சிரத்தையுடன், பணியாட்களை ஏவி, சிறந்த பதார்த்தங்கள் உருவாக்க முயற்சிப்பார். அதனால் வரிக் கொடுத்த அனைத்து மக்களும் நன்மையே அடைவர்.

இல்லை இல்லை... நான் செல்வந்தன்... இந்த ஊர் மக்களோடு என் பிள்ளைகளை உட்கார வைத்து சாப்பிடவும் விட மாட்டேன். தலைக்கட்டு வரியாக மட்டும் என் பணத்தை செலுத்தி விடுகிறேன். உங்களுக்கு தலைவராக மட்டும் என் பணியை செய்து கொள்கிறேன், ஊர்த்தலைவர் என்ற பதவியின் பலனை மட்டும் அனுபவித்துக் கொள்கிறேன் என்று ஒதுங்கிக் கொள்பவர்களின் மத்தியில் கலெக்டர் அவர்கள் செய்ததை ஏன் பகடி செய்ய வேண்டும்?

அரசாங்கம் நம் பணியாள். நம் நன்மைக்காக... நாம் ஏற்படுத்திக் கொண்டது.. எனவே அப்பணியாளின் வேலையை நாம் கவனிக்க வேண்டும். நமக்கான பணிகளைச் சிறந்து செய்யுமாறு நாம் பணிக்க வேண்டும். ஒன்று அப்பணியாளின் திறமையை மேம்படுத்துவது பற்றி யோசிக்க வேண்டும், இல்லையேல்அப்பணியாளை நாம் நீக்க வேண்டும்.

அரசுப் பள்ளிகள் பெருவாரியாய் நம் நாட்டில் இருக்கின்றவர்களின் குழந்தைகளும் கல்வியைப் பெற வேண்டும் என்ற நோக்கில் நம் வரிப் பணத்தால் ஏற்படுத்தப் பட்டவை. இன்று சிதைந்துள்ளது. செல்வந்தனான நான், காசு இருப்பதால், தனியார் பள்ளியில் என் பிள்ளையைக் கொண்டு போய் விடுவதோடு மட்டுமல்லாமல், புற்றீசல் போல இத்தகைய பள்ளிகளை உருவாகுவதற்கும், மூன்று வேளை நல்ல சாப்பாடு சாப்பிடக் கூட வழியில்லையென்றாலும் பரவாயில்லை, கந்து வட்டிக்கு கடன் வாங்கியாவது, இவர்களிடம் கொண்டு போய் பணத்தைக் கொட்டும்படியான மோகத்திற்கும் என் செய்கை காரணமாகிறது.

இத்தகைய செயல்களுக்கு காரணாமாயிருக்கின்றோர் மத்தியில், நலிந்துள்ள என் ஊரைச் சேர்ந்த அரசுப்பள்ளியை எப்படி நான் செம்மைப்படுத்துவது, என்று யோசித்த பொழுது, உருவான என் எண்ணங்களைப் பட்டியலிடுகிறேன்.

1. நான்,என் ஊர்ப் பள்ளிக்குச் சென்று, எல்லாம் சீராக நடைபெறுகிறதா, என்பதை சீரான இடைவெளியில் கவனித்து, என்ன என்ன தேவைகளும் இருக்கிறது, என்பதனை குறித்துக் கொண்டு ஆவன செய்யலாம் என்பதைக் கவனத்தில் கொண்டு, பின்பு, இத்தகைய உதவிகளை அரசிடம் இருந்து என் ஊர்ப் பள்ளிக்குப் பெற்றுத் தருவதற்கு யாரை அணுக வேண்டும்,என்பதை யோசித்தேன். இதற்கு சராசரியான குடும்பத்தைச் சேர்ந்த நான் மட்டும் போதுமா, இல்லை என் கைகளோடு, என் எண்ணங்களை ஒத்தவர்களை இணைக்க வேண்டுமா? என்பதை யோசித்து, வெறு.. வேறு சித்தாங்களைக் கொண்டவர்களை இணைப்பதற்குள் என் ஆயுள் பாதி முடிந்து விடுமோ என்ற அச்சமும் எழுந்தது. சரி, ஒரு குழு சேர்ந்து விட்டோம், அடுத்த காரியாமாக நான் அந்த பள்ளிகளுக்குத் தேவையான வசதிகளை வாங்கி கொடுப்பதில் எடுக்கப்போகும் நடவடிக்கைகளுக்கும், சரியான பதிலும், உதவியும் அரசிடமிருந்து கிடைக்குமா என்ற யோசனையில் ஆழ்ந்து விடுகிறேன்..

இதற்கிடையில் என் குடும்ப அலுவல்கள்.. என் பிள்ளையின் படிப்பு என்று, என் கூட்டிற்கே என் மனம் திரும்பி சோர்ந்து வந்து விடுகிறது. இது நான். ஆனால் கலெக்டர் அவர்கள், தன் பிள்ளையையும் அங்கு சேர்த்து, அப்பள்ளிக்கும் ஆவன செய்கிறார் என்று கேள்விப்பட்டவுடன் என் உள்முனைப்பு மகிழ்ச்சியடந்தது. என் கனவின் செயலாக்கத்தின் முதல் படியை அவர் செய்திருக்கிறார். அவர் கலெக்டர் என்பதால் அதோடு என் ஆச்சரியமும் ஒட்டிக் கொண்டது.

By
Maheswari

Anonymous said...

@ராம் சார்,
நேர்மையை காட்டுவதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கும் போது இதை ஏன் செய்ய வேண்டும்? //

கலெக்டர் அவர்கள்,நிச்சயமாக 100% பப்ளிசிட்டிக்காக இதை செய்திருக்க மாட்டார், ஏனென்றால் அவற்றையெல்லாம் வேறு வேறு வழிகளில் அடையலாம் என்றே தோன்றுகிறது. குழந்தையின் எதிர்காலத்தில் ரிஸ்க் எடுக்க மாட்டார்கள்.இது பொது புத்தியில் உண்டான என் ஊகம் தான்.

இன்னும் விபரம் அறியாத மகளின் வாழ்க்கையில் இப்படியான முடிவை எடுப்பது நியாயம்தானா? என்னதான் மகள்/மகள் என்றாலும் அது இன்னொருவர்தானே? ஒருவேளை பிற்காலத்தில் மகளுக்கு அது பெரிய வருத்தத்தை தரலாம், அப்போது எல்லாத்தையும் மாற்றிவிடமுடியுமா?
கல்வி என்ன டீவியா இல்ல லேப்டாப்பா, சரியில்லேன்னா தூக்கிப் போட்டுவிட்டு வேறு வாங்கிக் கொடுக்க?//

அந்த குழந்தையின் ஸ்தானத்தில் இருந்து யோசித்துப் பார்த்தோமானால், கண்டிப்பாக 100% எல்லாம் இதற்காக வருத்தப்படவோ, நம் தந்தை இவ்வளவு வசதிஉடையவராய் இருப்பினும், இங்கு சேர்த்து விட்டாரே என்றெல்லாம் வருத்தப்பட வாய்ப்புக்கள் மிகக் குறைவே என்று தொன்றுகிறது. ஏனென்றால், ஒரு சாதாரண தகப்பன் நேர்மையாக, இருந்ததனால் சிலவற்றை இழக்க நேர்ந்தது என்றாலும் பிற்காலத்தில் பெருமையாகவே இருக்கும். கண்டிப்பாக பெரியதாக அந்தக் குழந்தைக்கு இழப்பு இருக்க வாய்ப்பேயில்லை என்றே தோன்றுகிறது. ஏனென்றால், குழந்தையின் பெற்றோர் படித்தவர்கள், தேவையான அளவுக்கு வசதியானவர்களே… ஸோ, குழந்தை நன்றாகவே வருவாள். வரவேண்டும் என்றும் வாயார வாழ்த்துவோம்.

By
Maheswari

கழுகு said...

கலெக்டரின் செய்கையை பாரட்டும் தனிப்பட்ட மனித உணர்வுகளை புண்படுத்த வேண்டுமென்ற நோக்கிற்கு கழுகு அப்பாற்பட்டு நிற்கிறது. மேலும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் என்று வரும் போது அதை பற்றிய கருத்து சொல்வது நாகரீகமில்லையென்றும் கருதுகிறோம்.

ஒரு மாவட்டக் ஆட்சியர் சேர்த்து விட்டார் என்ற எண்ணமே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது என்ற கூற்றையும் தாண்டி ஆரோக்கியமாக அரசு பள்ளிகளின் தரம் எல்லா பிள்ளைகளின் வாழ்க்கைக்கும் உதவும் படி இருக்கவேண்டும் என்பதே கழுகின் பார்வையாக இருக்கிறது.

மேலும் கட்டுரையின் நோக்கு வாழ்த்து சொல்பவர்களை விமர்சிக்க விரும்பாமல் அரசுப் பள்ளிகளின் தரம் ஆரயப்பட்டு மிகைப்பட்ட பேர்களுக்கு விழிப்புணர்வு கொடுத்து பள்ளிகளின் நிலை செம்மையாக இருக்கிறது உங்கள் பிள்ளைகளை ஏன் சேர்க்க கூடாது என்ற கேள்வியை ஆழமாக பதிய விரும்புவதிலேயெ இருக்கிறது.

நன்றிகள்!

கழுகு said...

ஆனால்...

அரசுப் பள்ளிகளின் நிலை செம்மையாக இருக்கிறதா? என்ற கேள்வியை வாசகர்களின் மனசாட்சிக்கே விட்டு விட விரும்பும் கழுகு....! இது போன்ற யாரேனும் வி.ஜ.பி க்கள் தங்கள் பிள்ளைகளை சேர்ப்பதோடு இல்லாமல்....அரசுப் பள்ளிகள் எல்லோராலும் மறு எண்ணங்களின்றி விரும்பப்படும் வகையில் இருக்க ஏதெனும் நடவடிக்கை எடுப்பார்களா..? என்ற கேள்வியையும் விட்டுச் செல்கிறது.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////sachin amma கூறியது...
அந்த குழந்தையின் ஸ்தானத்தில் இருந்து யோசித்துப் பார்த்தோமானால், கண்டிப்பாக 100% எல்லாம் இதற்காக வருத்தப்படவோ, நம் தந்தை இவ்வளவு வசதிஉடையவராய் இருப்பினும், இங்கு சேர்த்து விட்டாரே என்றெல்லாம் வருத்தப்பட வாய்ப்புக்கள் மிகக் குறைவே என்று தொன்றுகிறது.//////

இதை எப்படி நாம் சொல்ல முடியும்? அந்த பெண் அல்லவா சொல்ல வேண்டும்? பிற்காலத்தில் ஒருவேளை கலக்டரும் சேர்ந்து வருத்தப்பட்டாலும் என்ன செய்ய முடியும்? எல்லாவற்றையும் அழித்துவிட்டு திரும்ப ஆரம்பிக்க முடியுமா?

தன் செயல்பாடுகளால் பிள்ளைகளும் மனைவியும் கஷ்டப்படுவார்கள் என்றால் அதை தவிர்த்துக் கொள்வதுதானே சரி?
அரசு மருத்துவமனை, பள்ளிகள் அரசு ஊழியர்களுக்கு என்று யார் சொன்னது? அதில் என்ன நேர்மை உள்ளது?


அரசாங்க பள்ளிகளிலும், மருத்துவமனைகளிலும் இலவச சேவை கிடைக்கிறது. அதை அத்தியாவசியமானவர்கள் மட்டுமே பயன்படுத்துதான் சரி. வசதி உள்ளவர்கள் பயன்படுத்துவது அரசாங்க சலுகையை துஷ்பிரயோகம் செய்வதற்கு ஒப்பாகும். வீட்டுக்கு வீடு அனைவரும் இலவச டீவி வாங்கி வைத்ததை போல!
அரசு தனியார் பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் ஏன் அனுமதிக்கிறது? வசதி உள்ளவர்கள் அரசாங்க சேவையை பயன்படுத்த வேண்டாம் என்பதாலேயே. அந்த வகையில் கலக்டர் அரசு பள்ளியில் தனது மகளைச் சேர்த்தது கண்டிக்க வேண்டிய ஒன்று!
அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட வேண்டுமென்றால் ஏராளமான நடமுறைச் சீர்திருந்தங்கள் செய்ய வேண்டி வரும்!

இம்சைஅரசன் பாபு.. said...

இந்த பதிவு மீடியாவ குறை சொல்லி எழுதி இருக்கா ...இல்ல கலெக்டர் அவர்கள் செய்தது தப்பு என்று சொல்லுகிறதா ..?தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இல்லையே ..

சரி விசயத்துக்கு வரேன் ..

கலெக்டர் பாராட்டுக்கு உரியவரே மாற்றம் இல்லை .அவரோட தகுதிக்கும் திறமைக்கும் அவர் எங்கே சென்றும் படிக்க வைக்கலாம் ..ஆனால் அவர் ஊராட்சி பள்ளியில் படிக்க வைப்பது அவரின் மன உறுதியை கான்பிக்குது ..அதை மீடியா பகிர்ந்துகிட்டது ..மற்றவர்களும் இதே மாதிரி வரணும் என்பது தான் மீடியாவின் குறிக்கோள் .
யாரும் செய்ய துணியாத ஒரு காரியத்தை ஒருவர் செய்தால் பாராட்ட வேண்டுமே தவிர .மீடியாவை குறை கூறுவது தவறு
எல்லோரும் ஆங்கில மோக கல்விக்கு மாறி கொண்டு இருக்காங்க .இந்த மாதிரி செய்திகள் வருவதால் மக்களுக்கு இன்னும் அரசு பள்ளிகளின் மீது கவனம் திரும்ப அதிக வாய்ப்பு .

மற்றவர்கள் பாராட்டினால் ஏன் பொறாமை ?

மீடியா எல்லாம் ரேட்டிங் கூட்டுது அப்படின்னு சொல்லி இருக்கு ..நீங்க எதிர் மறையா கூறி உங்க ஹிட்ஸ் ஏற்றி கொள்ளவா ?இந்த பதிவு ..

கலெக்டர் என்பவர் சாதாரண மனிதர் இல்லை ..எங்கள் தமிழ் நாட்டை பொறுத்த வரை ..அவர் நல்ல இருந்தால் ஒரு மாவட்டம் நன்கு வளர்ச்சி பெரும் .அப்படி பட்ட ஒருவரை முன் உதாரணமாக கொள்ளலாம் ..

அன்ன ஹசாரே பத்தி மீடியா சொல்லு ன்னு சொல்லுறீங்க ..ஆனா அவர் முதலில் பல பிரச்சனைகளுக்கு உண்ண விரதம் இருக்கும் போது மீடியா கண்டுகொள்ளவில்லை இப்போது ஊழல மலிந்து விட்டது அதனால் மீடியா இதை கான்பிக்குது ..
இதே மாதிரி தான் இப்போ ஆங்கில வழி கல்விக்கு எல்லோரும் மாறி நிறைய பள்ளிகள் மூடி கொண்டு இருக்கின்றன ..அந்த மாதிரி சமயத்தில் ஒருவர் அது உயர் பதவியில் இருக்கும் ஒருவர் இப்படி செய்ததால் .எனக்கே மனம் விட்டு பாராட்டனும் தான் தோணுது .(நானும் என் குழந்தையை ஆங்கில வழி கல்விக்கு தான் அனுப்புறேன் ..)

கழுகு இடையில் போட்ட கமெண்ட்ஸ் குழப்புது ..முதலில் பதிவுக்கும் தலைப்புக்கும் சம்பதம் இல்லை ..அப்புறம் கழுகு கமெண்ட்ஸ் .இதுவும் சம்பத்தம் இல்லை ..

ஏன் இந்த குழப்பம் ...?


இப்படி வேணும்ன சொல்லலாம் ..அனைத்து பள்ளிகளும் அரசு உடமை ஆக்க வேண்டும் ..எந்த மொழியிலும் பயிலலாம் என்று வேணும்னா சொல்ல லாம் ..

வினவு மாதிரி எல்லாத்துக்கு எதிர்கருத்து சொல்ல வேண்டாம்
ஹிட்ஸ் கிடைக்கும் என்பது தான் கழுகின் நோக்கமாக உள்ளது ..

கழுகின் வாசகன் என்ற முறையில் இதை பகிரங்கமாக கூறுகிறேன் ..

கழுகு மேலே பறக்கட்டும் ..இம்மாதிரி பதிவை தவிர்த்து

கழுகு said...

கட்டுரையின் முதல் பாதியில்.....குறிப்பிட்ட அதிகார வரம்பில் இருப்பவர்களின் போராட்டத்தையும் அதனை காட்சிப்படுத்தி தன்னின் டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்திக் கொண்ட மீடியாக்களையும் சாடுகிறது....! சாதாரண குடிமகனுக்கு இத்தகைய அந்தஸ்தை மீடியாக்கள் அதுவும் வட இந்திய மீடியாக்கள் கொடுக்காது என்பதையும் பகிர்கிறது.

சரி இது எப்படி பின்பாதியோடு தொடர்புள்ளது.

நாமெல்லாம் திரும்ப திரும்ப மாவட்டக் கலெக்ட்டரின் செயலைப் பாராட்ட காரணமாயிருப்பது அவரின் அதிகார உச்சம் மற்றும் அவரது சமூக அந்தஸ்து. அவரைப் பாராடுவதே சமூக மாற்றத்திற்கு வித்திடாது....பாராட்டும் மனங்கள் தங்களது பிள்ளைகளையும் உறவுகளையும் அரசுப் பள்ளியில் சேர உறுதிகள் மேற்கொள்ள வேண்டும் என்றுதான் கழுகு வலியுறுத்துகிறது.


மேலும் யாரும் செய்யத் துணியாத ஒரு காரியமாய் நீங்கள் எல்லோரும் பார்க்கும் லட்சணத்தில் அரசுப் பள்ளிகள் இருப்பதும் அப்படிப்பட்ட பள்ளிகளில் எமது பிள்ளைகள் காலம் காலமாய் படிப்பதும்....சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள சீர்கேடு.

துணிந்து இந்த செயலைச் செய்துள்ளார் என்ற கூற்றுக்குப் பின்னால் அரசுப் பள்ளிகளின் எப்படி இருக்கிறது என்ற் உங்களின் பயம் சர்வ சாதரணமாய் வெளிப்பட்டு இருக்கிறது.

எல்லோரும் பயில வேண்டும் என்ற அளவில் பள்ளிகள் தரம் செம்மையாக்கப் பட்டு யாருமே துணிய அவசியமில்லாமல் இயல்பாகவே நன்மைகள் கிடைகக் வேண்டும்.

மற்ற படி கழுகின் கட்டுரைகள் ஹிட்ஸ் நோக்கி செல்கிறதா? அல்லது கழுகின் பார்வைகள் உண்மையிலேயே சத்தியத்தை ஆராய்கிறதா? என்று மனசாட்சிகள் உரக்க ஒலித்து உண்மையை கூறிக் கொண்டுதானிருகும்.

முரண்பட்ட பாதையில் கழுகு எப்போதும் பயணிக்காது என்ற சத்தியத்தை உங்களிடம் விட்டுச் செல்கிறோம் மேலும் தங்களைப் போன்ற நேர்மையான வாசகர்களைக் கொண்டிருப்பதில் பெருமிதமும் அடைகிறோம்.

பாபு @ நன்றிகள் தோழமை!

Anonymous said...

அரசாங்க பள்ளிகளிலும், மருத்துவமனைகளிலும் இலவச சேவை கிடைக்கிறது. அதை அத்தியாவசியமானவர்கள் மட்டுமே பயன்படுத்துதான் சரி. வசதி உள்ளவர்கள் பயன்படுத்துவது அரசாங்க சலுகையை துஷ்பிரயோகம் செய்வதற்கு ஒப்பாகும்.//

@Ram sir

இது எந்த வகையில் என்று எனக்குப் புரியவில்லை. குறைந்தபட்சம், தினம் வாங்கும் ஒவ்வொரு மளி்கைப் பொருட்களின் மூலம், இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் வரியைக் கட்டுகிறான். வசதி உள்ளவர்கள் பயன்படுத்துவது அரசாங்க சலுகையை துஷ்பிரயோகம் செய்வதற்கு ஒப்பாகும். இது எப்படி ஒப்புக் கொள்ள முடியும். ஒருவேளை வசதியுள்ளவர்கள் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று சொல்ல வருகிறீர்களா? அப்படித் தெரியவில்லை. ஏனென்றால் நீங்கள் குற்றமல்லவா சாற்றுகிறீர்கள். ஒருவேளை அரசுக்கொள்கைகளில் இப்படி உள்ளதா? எனக்குப் புரியவில்லை.

By
Maheswari

Anonymous said...

நம் வரிப்பணத்தில் உருவாக்கப் பட்ட, நசிந்து கிடக்கும் நம் சொத்துக்களான அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்கு, இந்த அரசு இன்னும் என்னவெல்லாம் செய்தால் நலம் அல்லது

இணையத்தில் இவ்வளவு பொதுநலம் பேசுகின்ற நண்பர்கள், நம்மால் என்ன பங்களிப்பை அளிக்க முடியும் என்பதை யோசித்து, அவரவர் ஊர்களில் உள்ள பள்ளிகளுக்குத் தேவையான, அடிப்படை வசதிகளை உருவாக்கிக் கொடுப்பதற்கு, முயற்சிகள் எடுத்தால் மாறும். மாற்றமும் நம்மிடத்திலிருந்து தானே பிறக்க வேண்டும்.

By
Maheswari

Anonymous said...

அரசுப் பள்ளிகளில் சேர்வதே ஒரு தியாக மனப்பான்மையான செயல் என்று பார்க்குமளவிற்கு, பள்ளிகளின் தரத்தை வைத்திருக்கும் அரசுக்கும் கடும் கண்டங்களை இந்த கட்டுரை தெரிவிக்கிறது.//

கழுகின் இந்த வரிகளுக்காக வாழ்த்துக்கள்...
ஹாட்ஸ் ஆஃப் கழுகு...
கழுகு நேர்மையான பாதையில் பயணிக்கிறது.. கழுகு விழிப்புணர்வு என்னும் பாதையில் இன்னும் உயரப்பறக்கட்டும்...

By
Maheswari

Anonymous said...

இதை எப்படி நாம் சொல்ல முடியும்? அந்த பெண் அல்லவா சொல்ல வேண்டும்? //

நன்று சொன்னீர்கள்... இதைத்தான் கலெக்டரும் சொல்கிறார், இது அவர் தனிப்பட்ட சொந்த விசயம் என்று... கழுகும் இதைத்தான் சொல்கிறது, இது ஒரு இயல்பான நிகழ்வாக இருக்க வேண்டிய விசயம்.. அந்த அளவில் அரசுப்பள்ளிகள் இருக்க வேண்டிய நாள் வர வேண்டும் என்று.கலெக்டர் அவர்களின் செய்கையை நாம் நமது அனுமானங்களின் படி எடுத்துக் கொண்டு, அவரவர் ஊகங்களின்படி எடுத்துக் கொண்டு பாராட்டுக்களையும், கண்டனங்களையும் தெரிவித்துக் கொண்டிருக்கிறோம்.
இதைதான் கழுகு தன் தலைப்பில் சொல்லியிருக்கிறது போலும்...

இப்பொழுது புரிந்தது..
நன்றி கழுகு...


By
Maheswari

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// sachin amma கூறியது...
அரசாங்க பள்ளிகளிலும், மருத்துவமனைகளிலும் இலவச சேவை கிடைக்கிறது. அதை அத்தியாவசியமானவர்கள் மட்டுமே பயன்படுத்துதான் சரி. வசதி உள்ளவர்கள் பயன்படுத்துவது அரசாங்க சலுகையை துஷ்பிரயோகம் செய்வதற்கு ஒப்பாகும்.//

@Ram sir

இது எந்த வகையில் என்று எனக்குப் புரியவில்லை. குறைந்தபட்சம், தினம் வாங்கும் ஒவ்வொரு மளி்கைப் பொருட்களின் மூலம், இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் வரியைக் கட்டுகிறான். வசதி உள்ளவர்கள் பயன்படுத்துவது அரசாங்க சலுகையை துஷ்பிரயோகம் செய்வதற்கு ஒப்பாகும். இது எப்படி ஒப்புக் கொள்ள முடியும். ஒருவேளை வசதியுள்ளவர்கள் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று சொல்ல வருகிறீர்களா? அப்படித் தெரியவில்லை. ஏனென்றால் நீங்கள் குற்றமல்லவா சாற்றுகிறீர்கள். ஒருவேளை அரசுக்கொள்கைகளில் இப்படி உள்ளதா? எனக்குப் புரியவில்லை./////////

அரசின் கொள்கைகளில் அப்படி எதுவும் இருப்பதாக தெரியவில்லை. எனினும் ஒரு ஜனநாயகநாட்டில் அப்படியெல்லாம் செய்ய முடியாது.

இலவச தொலைக்காட்சியும் நமது வரிப்பணத்தில்தான் கொடுக்கப்படுகிறது. ஒரு ரூபாய் அரிசியும் நமது வரிப்பணத்தில்தான் கொடுக்கப்படுகிறது. வசதியுள்ளவர்கள் இதையும் அனுபவிப்பதால் அரசுக்கு எவ்வளவு இழப்பு?
ஏகப்பட்ட நிதிப்பற்றாக்குறை மற்றும் கடனை வைத்துக் கொண்டு அரசு இத்தனையும் செய்யும் போது, நல்ல சம்பளத்தில் இருப்பவர்கள் அரசின் இலவச சேவைகளை உரிமையோடு அனுபவிப்போம் என்று கூறுவது சரியா? அப்படிச் செய்வது ஒரு முன்மாதிரி நடவடிக்கையாகுமா?

கலக்டர் மகளை அரசாங்க பள்ளியில் சேர்த்ததாக கூறுவது, கலக்டர் வீட்டில் ரேசனில் கொடுக்கப்படும் ஒரு ரூபாய் அரிசிதான் பயன்படுத்துகிறார் என்பது போல உள்ளது. அதனால்தான் கண்டித்தேன்.

பற்றாக்குறைகள் அதிகமுள்ள நாட்டில் மக்களும் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும்!

வைகை said...

இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் வரியைக் கட்டுகிறான். வசதி உள்ளவர்கள் பயன்படுத்துவது அரசாங்க சலுகையை துஷ்பிரயோகம் செய்வதற்கு ஒப்பாகும். இது எப்படி ஒப்புக் கொள்ள முடியும். ஒருவேளை வசதியுள்ளவர்கள் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று சொல்ல வருகிறீர்களா? அப்படித் தெரியவில்லை. ஏனென்றால் நீங்கள் குற்றமல்லவா சாற்றுகிறீர்கள். ஒருவேளை அரசுக்கொள்கைகளில் இப்படி உள்ளதா? எனக்குப் புரியவில்லை.///


இதில் நான் ராம் அவர்களின் கருத்தோடு ஒத்துப்போகிறேன்... உதாரணமாக ஐம்பது படுக்கை கொண்ட அரசு மருத்துவ மனையில் தனியாரிடம் சிகிச்சை எடுக்க வசதி உள்ளவனும் வந்து பகிர்ந்துகொண்டால் வசதி இல்லாதவனுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய சிகிச்சை அங்கு மறுக்கப்படுகிறது.. அவனுக்கு வேறு வழியும் இல்லாமல் நோயோடு போராட வேண்டியதுதான்... அதே போல்தான் அரசு பள்ளிகளும் வசதி உள்ளவர்களும் இங்கு வரும்போது உண்மைலே அரசின் சலுகை கிடைக்கவேண்டியவனுக்கு அது மறுக்கப்படுகிறது.. இந்த கலெக்ட்டரின் மகளின் இடம் கூட ஏதோ ஒரு ஏழைக்கு மறுக்கப்பட்டதாக இருந்தால்? அந்த ஏழைக்கு இந்த கலெக்ட்டரின் பதில் என்னவாக இருக்கும்?

ஷர்புதீன் said...

நான் போகும் வழியில் தெருநடுவில் கிடந்த கல்லை எடுத்துபோட்டால் கீழ்காணும் மூன்று விமர்சனங்கள் வரலாம் -

அந்த கல் 'இவன்' காலில் இடரக்கூடாது என்பதற்காக..

யாரோ இவன் செய்யும் இந்த செயலை டிவியில் படம் பிடிக்கிறார்கள் ,அதனால்தான் ...

அந்த கல் வெறும் கல் அல்ல, அது ஏதாவது மாணிக்க கல்லாக இருக்கும்போல...

கூடிய விரைவில் கல்லை எடுத்துபோட ஆளே வராது, அது மட்டும் நிச்சயம்

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// அரசாங்க பள்ளிகளிலும், மருத்துவமனைகளிலும்
இலவச சேவை கிடைக்கிறது. அதை அத்தியாவசியமானவர்கள்
மட்டுமே பயன்படுத்துதான் சரி. வசதி உள்ளவர்கள்
பயன்படுத்துவது அரசாங்க சலுகையை துஷ்பிரயோகம்
செய்வதற்கு ஒப்பாகும். //

அரசு பேருந்து., தனியார் பேருந்துன்னு
ரெண்டு இருக்கு.. அப்ப வசதியுடையவங்க
எப்பவும் தனியார் பேருந்தை மட்டுமே
பயன்படுத்தணுமா..? # டவுட்டு

ஒதிகை மு.க.அழகிரிவேல் said...

மாவட்ட கல்வி அதிகாரி:கலெக்டர் பொண்ணு படிக்குதுய்யா....வாரத்துக்கு ஒருமுறையாவது பள்ளியை சோதனை செய்யவேண்டும்.

தலைமையாசிரியர்:கலெக்டர் பொண்ணு படிக்குதுய்யா....நேரம் தவறாமல் வகுப்பு எடுங்கய்யா

பெற்றோர்:கலெக்டர் பெண்ணே இங்கதான் படிக்குதாம்.கண்டிப்பா இந்த பள்ளியின் தரம் நன்றாகத்தான் இருக்கும்.

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// அரசாங்க பள்ளிகளிலும், மருத்துவமனைகளிலும்
இலவச சேவை கிடைக்கிறது. அதை அத்தியாவசியமானவர்கள்
மட்டுமே பயன்படுத்துதான் சரி. வசதி உள்ளவர்கள்
பயன்படுத்துவது அரசாங்க சலுகையை துஷ்பிரயோகம்
செய்வதற்கு ஒப்பாகும். //

எங்கள் பக்கத்து ஊர் அரசுபள்ளியில்
எப்போதும் கல்விதரம் பிரமாதமாக
இருக்கும்.. இந்த வருடம் கூட 10th Std-ல்
மாவட்டத்தில் இரண்டாம் இடம் 491 மார்க்
எடுத்தார் அப்பள்ளி மாணவி ஒருவர்..

அப்பள்ளியில் படிக்கும் பெரும்பால
மாணவ/ மாணவியர் வசதிபடைத்த
குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான்..

தங்கள் குழந்தைகள் நல்ல ஆசியர்களிடம்.,
தரமான கல்வி கற்க வேண்டும் என்றே
பெற்றோர் அவர்கள் பிள்ளைகளை
விரும்பியே அந்த பள்ளியில் சேர்க்கின்றனர்..

இது தப்பா..?

Anonymous said...

@வைகை

உதாரணமாக ஐம்பது படுக்கை கொண்ட அரசு மருத்துவ மனையில் தனியாரிடம் சிகிச்சை எடுக்க வசதி உள்ளவனும் வந்து பகிர்ந்துகொண்டால் வசதி இல்லாதவனுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய சிகிச்சை அங்கு மறுக்கப்படுகிறது.. அவனுக்கு வேறு வழியும் இல்லாமல் நோயோடு போராட வேண்டியதுதான்... அதே போல்தான் அரசு பள்ளிகளும் வசதி உள்ளவர்களும் இங்கு வரும்போது உண்மைலே அரசின் சலுகை கிடைக்கவேண்டியவனுக்கு அது மறுக்கப்படுகிறது..//

ஆமாம்... மனிதநேயம் எப்பொழுதும் அவசியமே... ஆனால் நடப்பில்?


அடிப்படை வசதிகள் அனைவருக்குமே வேண்டும்.


இந்த கலெக்ட்டரின் மகளின் இடம் கூட ஏதோ ஒரு ஏழைக்கு மறுக்கப்பட்டதாக இருந்தால்? அந்த ஏழைக்கு இந்த கலெக்ட்டரின் பதில் என்னவாக இருக்கும்?//

இந்தக் கேள்வி ஆச்சரியப்படும்படித் தான் இருக்கிறது.அநேகப் பள்ளிகள் மூடப்படும் தருவாயில் உள்ளது என்பதையும் அதற்கான காரணம் என்ன என்பதையும் அறியாதவர்களா நாம்?

By
Maheswari

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வெங்கட் கூறியது...
@ பன்னிகுட்டி.,

// அரசாங்க பள்ளிகளிலும், மருத்துவமனைகளிலும்
இலவச சேவை கிடைக்கிறது. அதை அத்தியாவசியமானவர்கள்
மட்டுமே பயன்படுத்துதான் சரி. வசதி உள்ளவர்கள்
பயன்படுத்துவது அரசாங்க சலுகையை துஷ்பிரயோகம்
செய்வதற்கு ஒப்பாகும். //

அரசு பேருந்து., தனியார் பேருந்துன்னு
ரெண்டு இருக்கு.. அப்ப வசதியுடையவங்க
எப்பவும் தனியார் பேருந்தை மட்டுமே
பயன்படுத்தணுமா..? # டவுட்டு/////

அரசு பேருந்து சேவைகள் இலவசமா என்ன? அதுவும் லாபநோக்கத்தில்தானே ஏற்படுத்தப்பட்டிருக்கு? (சீர்கேட்டினால் நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருப்பது வேறு விஷயம்!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெங்கட் கூறியது...
@ பன்னிகுட்டி.,

// அரசாங்க பள்ளிகளிலும், மருத்துவமனைகளிலும்
இலவச சேவை கிடைக்கிறது. அதை அத்தியாவசியமானவர்கள்
மட்டுமே பயன்படுத்துதான் சரி. வசதி உள்ளவர்கள்
பயன்படுத்துவது அரசாங்க சலுகையை துஷ்பிரயோகம்
செய்வதற்கு ஒப்பாகும். //

எங்கள் பக்கத்து ஊர் அரசுபள்ளியில்
எப்போதும் கல்விதரம் பிரமாதமாக
இருக்கும்.. இந்த வருடம் கூட 10th Std-ல்
மாவட்டத்தில் இரண்டாம் இடம் 491 மார்க்
எடுத்தார் அப்பள்ளி மாணவி ஒருவர்..

அப்பள்ளியில் படிக்கும் பெரும்பால
மாணவ/ மாணவியர் வசதிபடைத்த
குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான்..

தங்கள் குழந்தைகள் நல்ல ஆசியர்களிடம்.,
தரமான கல்வி கற்க வேண்டும் என்றே
பெற்றோர் அவர்கள் பிள்ளைகளை
விரும்பியே அந்த பள்ளியில் சேர்க்கின்றனர்..

இது தப்பா..?/////

அருகே நல்ல தரமான தனியார் பள்ளிகள் இருக்கும் போது வசதியானவர்கள் அரசுப் பள்ளியில் சேர்வது நியாயமற்றதுதான்....! அவர்கள் ஒரு ஏழை மாணவனின் இடத்தை தேவையில்லாமல் எடுத்துக் கொள்கிறார்கள் என்றுதான் சொல்ல முடியும்.
மீண்டும் நினைவுறுத்துகிறேன், நம் நாடு போன்று பற்றாக்குறைகள் நிறைந்த நாட்டில் மக்களுடைய பொறுப்புணர்வு மிக அவசியம்.

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// அரசு பேருந்து சேவைகள் இலவசமா என்ன?
அதுவும் லாபநோக்கத்தில்தானே ஏற்படுத்தப்பட்டிருக்கு? //

இலவசம் இல்லைதான்.. ஆனால்
தனியாரை விட குறைந்த கட்டணம்..!

// நம் நாடு போன்று பற்றாக்குறைகள் நிறைந்த
நாட்டில் மக்களுடைய பொறுப்புணர்வு மிக அவசியம். //

அரசுக்கு அந்த பொறுப்புணர்வு வேண்டாமா..?1

எல்லா பள்ளிகளியும் அரசு உடைமை
ஆக்கி.. எல்லா குழ்ந்தைகளுக்கும் அரசே
ஏன் கல்வி தரக்கூடாது..

இலவச டி.வி, மிக்ஸி, கிரைண்டர்
தருவதை விட இது உருப்படியான
விஷயம் இல்லையா.?!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வெங்கட் சொல்வதைப் பார்க்கும் போது கலக்டர், தன் நேர்மையை நிரூபிக்கவோ, வீம்புக்காவோ அல்லது பாராட்டு பெறவோ மகளை அரசாங்க பள்ளியில் சேர்த்ததாக தெரியவில்லை. அங்கு நல்ல கல்வி கிடைப்பதை அறிந்து அதற்காகவே சேர்த்திருக்கிறார். அருகில் வேறு நல்ல தனியார் பள்ளிகளும் இருக்காத பட்சத்தில், கலக்டர் செய்தது பாராட்டவோ, கண்டிக்கவோதக்கது அல்ல.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெங்கட் கூறியது...
@ பன்னிகுட்டி.,

// அரசு பேருந்து சேவைகள் இலவசமா என்ன?
அதுவும் லாபநோக்கத்தில்தானே ஏற்படுத்தப்பட்டிருக்கு? //

இலவசம் இல்லைதான்.. ஆனால்
தனியாரை விட குறைந்த கட்டணம்..!

// நம் நாடு போன்று பற்றாக்குறைகள் நிறைந்த
நாட்டில் மக்களுடைய பொறுப்புணர்வு மிக அவசியம். //

அரசுக்கு அந்த பொறுப்புணர்வு வேண்டாமா..?1

எல்லா பள்ளிகளியும் அரசு உடைமை
ஆக்கி.. எல்லா குழ்ந்தைகளுக்கும் அரசே
ஏன் கல்வி தரக்கூடாது..

இலவச டி.வி, மிக்ஸி, கிரைண்டர்
தருவதை விட இது உருப்படியான
விஷயம் இல்லையா.?!///////

இலவசங்களை விட கல்வி நிச்சயமாகச் சிறந்ததே. ஆனால் மற்ற அவசிய தேவைகளும் ஏராளம் உள்ளன. உதாரணத்திற்கு, சுத்தமான குடிநீர், மருத்துவ வசதிகள்..! இலவசங்களை நிறுத்திவிட்டு அந்தப் பணத்தில் இவற்றுக்கு செலவிடலாம்!

எல்லாப் பள்ளிகளையும் அரசுடைமையாக்குவது எளிதல்ல. ஆனால் சரியாக நடக்கும் பட்சத்தில் அதைவிட சிறந்த விஷயம் கிடையாது.

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// அருகே நல்ல தரமான தனியார் பள்ளிகள்
இருக்கும் போது வசதியானவர்கள் அரசுப் பள்ளியில்
சேர்வது நியாயமற்றதுதான்....! //

பெரும்பாலான தனியார் பள்ளிகளில்
ஆசிரியை வேலைக்கு வருபவர்கள்
புதியவர்களே.. அதுவும் சொற்ப சம்பளம்.
அதிலும் பெரும்பாலானோர் 2-3 வருடத்தில்
கல்யாணம் ஆன உடன் வேலையை விட்டு
விடுகின்றனர்..

So., எப்படி பார்த்தாலும் தனியார் பள்ளிகளில்
அனுபவமிக்க ஆசிரியர்/ஆசிரியைகள்
குறைவு..

ஆனால் அரசு பள்ளியில் திறமையானவர்களுக்கு
தான் வேலை கிடைக்கிறது.. அதுவும் 10 -15
வருடம் அனுபவமிக்க ஆசியர்கள் நிறையவே
உண்டு.. அவர்கள் வாங்கும் அதிக சம்பளத்தில்
வசதிபடைத்தவர்களின் வரிப்பணம் உண்டுடல்லவா..

அப்புறம் அவர்களுக்கு அங்கு கற்க
உரிமை இல்லையா..?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// வெங்கட் கூறியது...
@ பன்னிகுட்டி.,

// அருகே நல்ல தரமான தனியார் பள்ளிகள்
இருக்கும் போது வசதியானவர்கள் அரசுப் பள்ளியில்
சேர்வது நியாயமற்றதுதான்....! //

பெரும்பாலான தனியார் பள்ளிகளில்
ஆசிரியை வேலைக்கு வருபவர்கள்
புதியவர்களே.. அதுவும் சொற்ப சம்பளம்.
அதிலும் பெரும்பாலானோர் 2-3 வருடத்தில்
கல்யாணம் ஆன உடன் வேலையை விட்டு
விடுகின்றனர்..

So., எப்படி பார்த்தாலும் தனியார் பள்ளிகளில்
அனுபவமிக்க ஆசிரியர்/ஆசிரியைகள்
குறைவு..

ஆனால் அரசு பள்ளியில் திறமையானவர்களுக்கு
தான் வேலை கிடைக்கிறது.. அதுவும் 10 -15
வருடம் அனுபவமிக்க ஆசியர்கள் நிறையவே
உண்டு.. அவர்கள் வாங்கும் அதிக சம்பளத்தில்
வசதிபடைத்தவர்களின் வரிப்பணம் உண்டுடல்லவா..

அப்புறம் அவர்களுக்கு அங்கு கற்க
உரிமை இல்லையா..?//////

ஜனநாயகநாட்டில் நாம் யாருக்கும் உரிமை இல்லை என்று சொல்லமுடியாது. ஆனால் இப்போதுள்ள கட்டமைப்பு மற்றும் நிதிநிலையில் அனைவருக்கும் கல்வி அளிப்பது அரசால் சாத்தியமா?

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// வெங்கட் சொல்வதைப் பார்க்கும் போது கலக்டர்,
தன் நேர்மையை நிரூபிக்கவோ, வீம்புக்காவோ
அல்லது பாராட்டு பெறவோ மகளை அரசாங்க பள்ளியில்
சேர்த்ததாக தெரியவில்லை. அங்கு நல்ல கல்வி
கிடைப்பதை அறிந்து அதற்காகவே சேர்த்திருக்கிறார். //

நிச்சயமாக...

ஒருவேளை இதுவரை கிடைக்காமல்
இருந்தாலும்.. இனிமேல் கிடைக்கும்
அல்லவா..!

ஒவ்வொரு அரசு பள்ளியிலும்
ஒவ்வொரு வகுப்பிலும் கலெக்டர்,
எம்.எல்.எ, எம்.பி, டாக்டர், குழந்தைகள்
படித்தால்.. அந்த பள்ளியின் தரம்
உயரும் தானே..!

அது மற்ற ஏழைக்குழந்தைகளுக்கும்
தரமான கல்வி கிடைக்க உதவியாக
இருக்கும்..

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// ஜனநாயகநாட்டில் நாம் யாருக்கும் உரிமை இல்லை
என்று சொல்லமுடியாது. ஆனால் இப்போதுள்ள
கட்டமைப்பு மற்றும் நிதிநிலையில் அனைவருக்கும்
கல்வி அளிப்பது அரசால் சாத்தியமா? //

1100 கோடி ரூபாயில் கட்டிய கட்டிடம்
பூட்டப்பட்டு சும்மா இருக்கிறது..

4 நாளில் பழைய கட்டிடம் 200 கோடி
ரூபாயில் தயார் ஆகிறது..

200 கோடி ரூபாய் செலவில் அச்சிடப்பட்ட
புத்தகங்கள் குடோனில் தூங்குகின்றன..

So., இப்போது இங்கு பணம் பிரச்னை
இல்ல.. மனம் தான் பிரச்னை..

வெங்கட் said...

@ கழுகு.,

வழக்கமா கட்டுரையாளர் பெயரிட்டு
பதிவு போடும் கழுகில்.. இந்த பதிவுக்கு
எழுதியவர் பெயர் இல்லையே.. ஏன்.?

// அநாமதேய கருத்துரைகளை இந்த
வலைப்பதிவு அனுமதிக்கவில்லை. //

அப்ப அநாமதேய பதிவுகளை மட்டும்
இந்த வலைப்பதிவு அனுமதிக்கிறதா..?!!

சர்ச்சைக்குறிய பதிவுகளை பெயர்
போட்டு போட தைரியம் இல்லாவிட்டால்..
அதை போடாமல் இருப்பது நலம்..

dheva said...

அன்பின் வெங்கட்....

கழுகில் வெளியிடப்படும் எல்லா கட்டுரைகளும் கழுகின் பெயரால்தான் வெளியிடப்படுகின்றன.

பெரும்பாலும் எங்களது குழுமத்தோழமைகள் எழுதும் கட்டுரைகளுக்கு அவர்களின் பெயரை விருப்பத்தின் பெயரில் போடுவோம்.

இந்தக் கட்டுரையை எழுதியது நான் தான்....

தைரியமின்மை என்ற உங்களது கூற்று தவறானது. கட்டுரை எழுதியவர் யாரென்று கேட்ட மறு நிமிடம் தங்களிடம் பதில் கொடுக்கப்படாமல் இருந்தால் அதற்கு பெயர் தைரியமின்மை என்று கொள்ளலாம்.

கட்டுரையில் ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால் தங்களுக்கு மறு மொழி கொடுக்க காத்திருக்கிறேன் தோழமை.

எனது வாழ்த்துக்களும் நன்றிகளும் வெங்கட்!

வெங்கட் said...

@ தேவா.,

தகவலுக்கு நன்றி..!

// கழுகில் வெளியிடப்படும் எல்லா கட்டுரைகளும்
கழுகின் பெயரால்தான் வெளியிடப்படுகின்றன.
பெரும்பாலும் எங்களது குழுமத்தோழமைகள்
எழுதும் கட்டுரைகளுக்கு அவர்களின் பெயரை
விருப்பத்தின் பெயரில் போடுவோம். //

சில கட்டுரைகளில் கட்டுரையாளர்
பெயரும்., சில கட்டுரைகளில் பெயர்
இல்லாமலும் போடுவது புதிய வாசகர்களை
குழப்பும் அல்லவா..?

// தைரியமின்மை என்ற உங்களது கூற்று தவறானது.
கட்டுரை எழுதியவர் யாரென்று கேட்ட மறு நிமிடம்
தங்களிடம் பதில் கொடுக்கப்படாமல் இருந்தால்
அதற்கு பெயர் தைரியமின்மை என்று கொள்ளலாம். //

நான் கேட்டுவிட்டேன்.. பதில் கிடைத்தது..

இதே போல் ( தைரியமின்மை என்று )
பல பேர் தங்கள் மனதில் நினைத்து கொண்டு.,
அதை இங்கே கேட்காமல் இருக்கலாம்
அல்லவா..?

dheva said...

ஏற்றுக்கொள்கிறேன்...வெங்கட்... நன்றிகள்!

தனி காட்டு ராஜா said...

நல்ல விழிப்புணர்வுடன் கூடிய தெளிவான கட்டுரை..

இப்படித்தான்பா நம்ம ஈரோட்டு கலெக்டர் கணக்கா மகாத்மா எல்லாம் அங்கே அங்கே உருவாகுறாங்க...

இன்றைய சமுதயாதுள்ள இயல்பா இருந்தாவே அது ஒரு மிக பெரிய செயல்-நு சொல்லுறாங்க..

40 வயசுல சக்கரை வியாதி வருவது இயல்பு என்று ஆகும் போது...அந்த வியாதி இல்லாதவனை சமுதாயம் அதிசய மாக பார்க்கிறது.....இதுக்கு பேரு தான்பா சமுதாய வியாதி..சமுதாய வியாதிக்கு ஒரே மருந்து விழிப்புணர்வு...அந்த விழிப்புணர்வு மருந்த கொடுத்தா நெறைய பேரு கசக்குது-நு சொல்லுறாங்கபா...

இப்படி எல்லாம் நாம பேசுனா ....வந்துட்டான்பா ஈரோடுட்ல இருந்து புரட்சி ஆனியன் அப்படின்னு சொல்லுவாங்க.....நமக்கெதுக்கு வம்பு.....வந்தமா ....இரண்டு முனு பிட்டு படம் விமர்சனம் படிச்சமா......அப்புறம் நமீதா..போதும் போதும் இதோட என் கருத்த நிப்பாடிக்கறேன் :)

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes